jaga flash news

Friday 19 December 2014

ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி
ஞாயிற்றுக்கிழமை
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி
மீயுயர் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி
திங்கட்கிழமை
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதம் போற்றி
செவ்வாய்க்கிழமை
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி
தெவ்வாதனை இல்லாத பரையோகியர் சிவதேசிக போற்றி
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி
புதன்கிழமை
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி
வியாழக்கிழமை
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி
தயாளசீலா தணிகை முதல் தளர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி
வெள்ளிக்கிழமை
அள்ளி வழங்கும் ஆறுமுகத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே
வெள்ளிமலைநேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி
சனிக்கிழமை
கனிவாய் வள்ளி தெய்வயானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி
இவ்வாறு கிருபானந்த வாரியார் இயற்றிய தினம் ஒரு துதியைக் கூறுவதன் மூலம் இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம்

No comments:

Post a Comment