jaga flash news

Saturday, 27 June 2026

அநாதை ஒரே துணை!

அநாதை ஒரே துணை!

          விடுமுறையில் வீட்டிற்கு வந்த தன்மகனிடம் தங்களையும் அழைத்துப்போகச் சொல்லிய பெற்றோர்களிடம் நாங்கள் சுற்றுலா சென்று அப்படியே செல்ல இருக்கின்றோம். நீங்கள் அப்புறமாக வாருங்கள் எனக் கூறிச் சென்றுவிட, தங்களின் செல்ல மகள் வீட்டிலாவது சென்று தங்கலாம் எனக் கிளம்பினர். நாட்கள் செல்லச் செல்ல மகளின் பேச்சுகளும், உபசாரங்களும் திசைமாறவே, ஆண் என்ற முறையில் வேலைத்தேட ஆரம்பித்தார். ஒரு கல்யாண உதவி அமைப்பில் பணியாளராக வேலை கிடைக்கவே, அங்கு கிடைக்கும் எல்லா வேலைகளையும் தலைமேற்கொண்டு கிடைக்கும் பணத்தை தன் மகளிடம் கொடுத்துவந்தார். வேலையில்லா நாளில் ஒன்றும் கிடைக்காமலும் இருப்பதுண்டு. அப்படி ஓர்நாள் வேலையின்றி மனம் வருந்தி வீடுசென்றவருக்கு அவரின் மகள், மனைவியிடம் பேசியது கேட்கவே சிறிது தயக்கத்திற்குப்பின் உள்ளே சென்றார். சோர்ந்து படுத்தார்.
           அடுத்தநாள் காலை வேலைதேடிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பலநாட்கள் சென்றும் அவரைப்பற்றிய தகவல் ஏதுமில்லை. ஒரு வருடம் சென்றபின் பக்கத்து ஊரின் ஆசிரமத்திலிருந்து உடன் வரச்சொல்லித் தகவல் வரவே அங்கு சென்ற அந்த அம்மாளுக்கு அவரின் கணவரின் பெயரைச் சொல்லி அவர் இறந்து பலநாட்கள் ஆகிவிட்டன எனக்கூறினர். இங்கு வரும்போது நான் அநாதை எனச் சொல்லித்தான் சேர்ந்தார். தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் ஆசிரம அன்பர்களே காரியங்கள் அனைத்தும் செய்யச் சொல்லி கடிதம் கொடுத்துள்ளார். எனவே அவர் இறந்ததும் அடக்கம் செய்துவிட்டோம். பின்னர் அவர் பெட்டியை திறந்து பார்த்தபோது ஒரு டைரி இருந்தது. அதில் உங்கள் பெயரும் விலாசமும் இருந்தது. ஆகவே உங்களுக்கு தகவல் அனுப்பினோம். இந்தாருங்கள் அந்த டைரி எனக் கொடுத்தனர்.
அன்புள்ள மனைவிக்கு, நான் உன்னை விட்டு ஓடி வந்துவிட்டேன் என நினைக்காதே! அன்று நம் மகள், அம்மா நீ சமையல்வேலை, துணி துவைத்தல் என வீட்டு வேலைகளில் மிகவும் ஒத்தாசையாக இருக்கின்றாய், ஆனால் உங்களிருவருக்கும் சேர்த்து எங்களால் செலவு செய்யமுடியவில்லை, அப்பாவை எங்காவது ஆசிரமத்தில் சேர்ந்துக்க சொல், என்ற வார்த்தைகளைக் கேட்டபின், நீயாவது அங்கு நன்றாக இருப்பாய் என்ற எண்ணத்தில்தான் இப்படி வந்துவிட்டேன். என்னை மண்ணித்துவிடு. நமக்கு மகன், மகள் என்ற ஆதரவு அற்றுப் போய்விட்டது. நமது குலதெய்வம் அங்காளபரமேஸ்வரிதான் உனக்கு துணை. உன்னிடம் ஒர் வேண்டுகோள். இதைப் படித்தப்பின் எனக்காக ஒன்றுசெய். அந்த அம்மையின் வாயிலில் பிச்சை எடுத்தாவது ஜீவி. பிள்ளைகள் வாசலை மிதிக்காதே. என எழுதியதைப் படித்தபின் மனம்பிசைந்தது. அழுகை நிறைந்த கண்கள் குளமாயின.
        கணவரின் விருப்பப்படி அந்த அம்மாள் கோவிலின் வாயிலில் பிச்சை எடுத்து வாழத் தொடங்கினார். ஓர் நாள் அவரது மகன் அந்த கோவிலுக்கு வந்து சென்றபோது காலத்தின் கோலத்தால் சிதைந்து போயிருந்த அந்தமூதாட்டியை அடையாளம் தெரியாமலே, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் அனைவரும் பிச்சையிட்டு சென்றனர். அந்த அம்மனே இறுதிவரை துணை என வாழ்ந்து இறந்தார். அவர் யாருமில்லா அநாதையா!

No comments:

Post a Comment