jaga flash news

Tuesday 15 October 2024

தாய்ப்பால் நிறுத்த ஆலோசனைகள்



பொதுவாக, ஒரு குழந்தை தத்தி நடக்க முயலும் போதே, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது பற்றி முடிவெடுப்பது அவசியம். தாய்ப்பால் பழக்கத்தை நிறுத்த, சில ஆலோசனைகள்: எப்படி சில உணவு முறைகளால் தாய்ப்பாலை அதிகரிக்கலாமோ, அதே போல் குறைக்கவும் செய்யலாம். புரோட்டீன் உணவுகளை தாய் குறைப்பதன் மூலம், இயற்கையாகவே தாய்ப்பால் குறையும். திடீரென பால் நிறுத்தப்படுவதால், ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். இதனால் தாயின் உடல் சிறிது பாதிக்கப்படலாம். சிலநேரங்களில் பால் கொடுக்காமல், தாயின் மார்பக பகுதியில் வலி ஏற்படும். குழந்தையின் மனநிலையும் பாதிக்கும்.

இதனால் தாய்ப்பால் நிறுத்தும் போது, கவனத்துடன் செயல்பட வேண்டும். திட்டமிட்டு, மெதுவாக குழந்தையை தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். இதுவே இருவருக்கும் நல்லது. ஏனெனில் திடீரென நிறுத்துவதால் குழந்தை மற்றும் அம்மா இருவருக்கும், உடலில் சில உபாதைகள் ஏற்படும். முக்கியமாக திடீரென நிறுத்தினால், தாயின் மார்பக குழாய் அடைபட்டு, வீக்கம் அடையும். மார்பக வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

ஆகவே குழந்தைகளுக்கு முன்பு அடிக்கடி பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, மதிய வேளையில் இருமுறை கொடுத்தால், அந்த நேரம் ஒரு முறை வேறு ஏதாவது உணவு கொடுத்தும், மறுமுறை தாய்ப்பால் கொடுத்தும் வர வேண்டும். இதை செய்யும்போது, போக, போக தாய்ப்பாலை நிறுத்திவிட்டு, மறக்க வைக்கலாம்.

மார்பகங்களைப் பார்க்க குழந்தையை அனுமதிக்க வேண்டாம். அவர்கள் முன்னிலையில் உடை மாற்றுவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது.

குழந்தையுடன் சேர்ந்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் தாயின் மார்பகத்தை பார்ப்பதால், மீண்டும் அவர்களுக்கு தாய்ப்பால் நினைவுக்கு வரும் வாய்ப்புள்ளது. குழந்தையை தூக்கி நடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் மார்பக பகுதியை தொடாதவாறு பார்த்து கொள்ளவும். அவ்வாறு தூக்கும்போது குழந்தையிடம் ஏதாவது பேசிக் கொண்டு, அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும். உங்கள் குழந்தைகளை திசை திருப்புவதால், அவர்களை எளிதில் தாய்ப்பால் மறக்க செய்யலாம்.

அதிலும் வெளியே அழைத்துச் செல்வது, அவர்களுக்கு பிடித்த பாடல்களை கேட்க வைப்பது, பிடித்த செயல்களை செய்யத் தூண்டுவது போன்ற செயல்களால், தாய்ப்பாலை மறந்துவிடுவர். இரவில் படுக்கும்போது, அவர்களை வெளியே வாக்கிங் அழைத்து செல்வது, கதை சொல்லி அதில் அவர்களின் ஆர்வத்தை தூண்டுவது என்றெல்லாம் செய்து மறக்க வைக்கலாம்.

பால் கொடுக்கும் போது, அழகான பாட்டிலில் கொடுக்கலாம். அந்த பாட்டிலை, தாயானவள் குழந்தைக்கு கொடுக்கும் போது அதனை வர்ணித்தோ அல்லது வேறு யாரிடமாவது கொடுத்துவிடுவோம் என்று பயமுறுத்தியோ கொடுக்கலாம். ஏனெனில் பொதுவாக சில குழந்தைகள், அவர்களுக்குரிய பொருளை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். சில குழந்தைகள் தாயின் அரவணைப்பில் இருந்தால்தான் பால் குடிப்பார்கள், அப்போது தாயானவள் குழந்தையை மடியில் போட்டு அரவணைத்து, பாட்டிலின் மூலம் பாலைக் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment