jaga flash news

Friday 15 July 2022

அறுபதாம் கல்யாணம் ஏன் எப்படி செய்யவேண்டும் தெரியுமா?

குடும்ப தலைவருக்கு 60 வயது அல்லது 60 ஆண்டுகள் மற்றும் தமிழ் வருட சுழற்சியை கடந்து 61-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது ஒரு வரமாக கருதுகின்றனர். இதனாலேயே 61-ஆம் வயதில் அந்த ஆண் சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ளும் சம்பிரதாயம் போற்றப்படுகிறது.
வயதான தங்களின் பெற்றோர்களின் திருமணத்தை அவர்களின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் தற்போது காணும் பாக்கியத்தையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் மற்றும் அவர்களின் சுற்றமும், நட்பும் வயதில் மூத்த தம்பதிகளின் ஆசிகளை பெற்று நலம் பெறவும் இந்த  சஷ்டியப்தபூர்த்தி சடங்கை செய்கின்றனர். 
 
சஷ்டியப்தபூர்த்தி சடங்கு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியரிடம் நல்ல நாள், நேரம் ஆகியவற்றை குறித்து கொள்வது முறையான தொடக்கம் ஆகும். இச்சடங்கை கோயிலிலோ, திருமண மண்டபங்களிலோ அல்லது உங்கள் வீட்டிலோ செய்து கொள்ளலாம். பிறகு அந்த  தம்பதிகளின் பிள்ளைகள் உறவினர்களையும், நண்பர்களையும் முறைப்படி சென்று தங்கள் பெற்றோரின் சஷ்டியப்தபூர்த்தி அல்லது மணிவிழாவிற்கு அழைக்க வேண்டும். 
 
சஷ்டியப்தபூர்த்தி செய்யும் நாள் அன்று அந்த வயதான தம்பதிகளுக்கு அவர்களின் திருமணத்தின் போது செய்த சடங்குகளை வேதியரின் அறிவுறுத்தலின் படி, குலதெய்வ பூஜை செய்த பின்பு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம், அமிர்த ம்ரித்துஞ்சய ஹோமம்,  தன்வந்திரி ஹோமம் முதலிய ஹோமங்கள் செய்யப்பட்டு, கலச பூஜை செய்யப்படும். பிறகு முகூர்த்த நேரத்தில் குடும்பத்தின் 61 வயதை தொடும் ஆண்மகனான மணமகன்புது தாலியை தனது மனைவியின் கழுத்தில் கட்டி சஷ்டியப்தபூர்த்தி சடங்கை நிறைவு செய்வர். 
 
நமது பெற்றோருக்கு சஷ்டியப்பூர்த்தி சடங்கை செய்வதால் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும் ஹோமங்களின் பலன்களால் அத்தம்பதியருக்கு நோய், ஆரோக்கிய குறைவு  ஏற்படுவதை தடுத்து, நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலத்தையும், அவரின் மனைவிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை தருகிறது.

Monday 11 July 2022

60-ம் கல்யாணத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்


அற்புத நிகழ்வான 60-ம் கல்யாணத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்?


கல்யாணம், நம் இல்லத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல்  நம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி மகிழும் தருணம். ஆனால், அதில் இருந்து இன்னும் மேம்பட்டவிதமாக,  தங்களுக்கு திருமணம் செய்துவைத்த பெற்றோருக்கு பிள்ளைகளெல்லாம் சேர்ந்து  திருமணம் செய்துவைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்வே அறுபதாம் கல்யாணம். தந்தையின் அறுபதாவது வயதில், பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி பெற்றோருக்கு இந்த வைபவத்தை நடத்துவதால், இதை 'அறுபதாம் கல்யாணம்', 'மணிவிழா', 'சஷ்டியப்த பூர்த்தி' என்றெல்லாம் சொல்வார்கள்.    

இந்த நிகழ்வானது 60  வயது முடிந்து, 61-வது வயது தொடங்கும்போது நடத்தப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? ஒரு  மனிதரின் பிறந்த தமிழ் மாதம், தேதி, நட்சத்திரம், வருடம் இவையனைத்தும் அவருடைய 60-வது வயது நிறைவு பெற்றதற்கு அடுத்த நாள் வருகிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சி மீண்டும் 60  வருடங்கள்  ஆன பிறகுதான் வரும். அதாவது 120 -வது வயதில்தான். நடைமுறையில் இது சாத்தியம் இல்லை.

ஒருவர் தன்னுடைய குடும்பத் தேவைகளுக்காக பணத்தை சம்பாதிக்கக் கடுமையாக உழைக்கிறார். மேலும் சம்பாதித்த பணத்தை எப்படி சேமிப்பது, தன் குடும்பத்துக்கு எப்படி ஆக்கப்பூர்வமான முறையில் சேமிப்பது, பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றை எப்படி சிறப்பாக அமைத்துக்கொடுப்பது என்கிற சிந்தனையிலேயே காலத்தைக் கடத்திவிடுகிறார்.  

இப்படி 60  வயது வரை தனது கடமைகளை எல்லாம் நிறைவேற்றிய பிறகு, சாதாரண வாழ்க்கையில் இருந்து  விடுபட்டு முழுமையாக தன்னை ஆன்மிகச்  செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்ளும் வயதாக இந்த 61-ம் வயது பார்க்கப்படுகிறது. 

தங்களின் நலனுக்காக உழைத்த தாய்-தந்தையரின் மனம் மகிழும் வண்ணமாகவும் நன்றி பாராட்டும் விதமாகவும் அவர்களது பிள்ளைகள்

எல்லாம் சேர்ந்து, இந்த மணவிழாவை நிகழ்த்துவார்கள். 

பெரும்பாலும் அறுபதாம் கல்யாணம், கோயில்களிலேயே நடத்தப்படுகிறது.பல்வேறு ஹோமங்களும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. அதிதேவதைகளுக்கு பூரண கும்பங்கள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன .மேலும் கலச பூஜையும் செய்யப்படுகின்றது. தங்கள் வசதிக்குத்  தகுந்தவாறு கலசங்கள் முறையே 16, 32, 64  எண்ணிக்கையில் வைத்து பூஜிக்கப்படுகின்றன.    

பூஜை முடிந்ததும், கலசங்களில்   பூஜிக்கப்பட்டு இருக்கும் புனித நீரானது அவர்களின் பிள்ளைகளால், உறவினர்களால், நண்பர்களால் மணமக்களின் மீது ஊற்றப்படுகிறது. மணமக்களின் பாதங்களில்  விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது மிகுந்த பாக்கியமாகக் கருதப்படுகிறது. 

மணமக்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அல்லாமல், ஆலயத்தில் இறைவனை தரிசிக்க வருவோர் அனைவருமே மணமக்களின் மீது கலச நீரை ஊற்றி, ஆசீர்வாதம் பெறலாம்.

மணமக்களும் தங்களிடம் ஆசீர்வாதம் பெற்றவர்களுக்கு  சேலை, ஜாக்கெட், மஞ்சள், மாங்கல்யச் சரடு போன்ற பொருட்களை தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு வழங்குகின்றனர். இத்திருமண  நிகழ்வைக் காண்பது என்பது சொர்க்கத்தைக் காண்பது போன்றது என்பதாலேயே பலரும் இத்திருமண வைபவத்தில் தவறாமல் கலந்துகொள்வார்கள். 

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூரில் உள்ள சிவாலயத்தில்தான்  அறுபதாம் கல்யாணம் அதிக அளவில் நடைபெறுகிறது. அங்கு செல்ல முடியாதவர்கள், தாங்கள் வசிக்கும்  இடங்களுக்கு அருகாமையில் உள்ள  ஆலயங்களில் செய்துகொள்ளலாம்.

அறுபதாம் கல்யாணம் செய்வதென்பது,ஒரு  மனிதன், தான் இதுவரை தனக்கு  அளிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றிய மன நிறைவுக்காகவும், இதுநாள்வரையிலும் யாருக்கும்  ஏதேனும் தெரிந்தோ, தெரியாமலோ தீங்கு செய்திருந்தால், அதற்கு இறைவனிடம் மனமுருகி மன்னிப்பு கேட்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகின்றது.

தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, இறை வழிபாட்டிலும் ஆன்மிகச் சாதனைகளிலும்   தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்ளும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றது.