jaga flash news

Sunday 3 November 2013

யார் கற்றுத்தருவது?

யார் கற்றுத்தருவது?

எழுத்தின் அளவு :
கற்றல் என்ற வார்த்தைக்கு இருக்கும் வீரியமானது வேறு எந்த வார்த்தைக்கும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் மனிதன் பிறந்தது முதல் தனது இறுதி காலம் வரை ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டே இருக்கிறான். கற்றலானது தானாக சென்று அறியாவிட்டாலும், சூழ்நிலைகளானது வாய்ப்புகளை ஏற்படுத்தி ஏதேனும் ஒன்றை அறிந்துகொள்வதற்கான சிறு சிறு வாய்ப்புகளையும் அளித்துவிடுகிறது.
தாயிடமிருந்து கற்க ஆரம்பிக்கும் கல்வியானது தந்தை, மூத்தோர், ஆசிரியர்கள், நண்பர்கள், சந்தித்த நிகழ்வுகள், புத்தகங்களில் இருந்து படித்தது என பல்வேறு வகைகளில் வாய்ப்புகள் தானாகவும், நாமே விரும்பியும், விரும்பாமல் சென்றும் கற்றுக்கொள்வதற்கான நிகழ்வுகள் நடந்துவிடுகிறது.
பள்ளியிலும், கல்லூரியிலும் ஆசிரியர்கள் பாடங்களை கற்றுத்தந்தாலும், மாணவர்கள் அதனை பெரியவிதமாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் கல்லூரி வாழ்க்கை முடிந்த பின்னர் கற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தங்கள் வேலை உருவத்தில் வந்து கற்றலுக்கான கட்டாயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு வேலைக்கு சென்றவுடன் அந்தப்பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதற்காக பெரிய நிறுவனங்கள் குறந்த கால பயிற்சியை அளிக்கின்றன. சிறிய நிறுவனங்கள் பயிற்சி என எதுவும் தனிப்பட்ட முறையில் அளிக்காவிட்டாலும், ஓவ்வொரு வேலையாக கற்றுக்கொடுக்கப்பட்டு நன்கு பழகிய பின்னர் குறிப்பிட்ட பணி ஒதுக்கப்படுகிறது.
வேலை தேடி களைத்திருந்த மனமானது புதிய வேலை கிடைத்தவுடன் சோர்வுகள் நீங்கி புதிய உற்சாகத்தில் இருக்கும். அந்த உற்சாகம் மறைந்து போகும் வகையில் தான், வேலைக்கு சேர்ந்த புதிய நாட்கள் பலருக்கும் அமைகிறது. ஏனெனில் பணிச்சுழலுக்கு புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் புதியவராக இருப்பதால், ஏற்கனவே இருந்தவர்கள் புதியவரின் குணம், பழக்க வழக்கம், திறன்கள் குறித்து ஏற்கனவே இருப்பவர்கள் சந்தேகத்துடனேயே பார்ப்பர்.
அதுவும் ஒரு சில நிறுவனங்களில் புதியதாக சேர்ந்தவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணிகள் ஒப்படைத்தாலும், பணியில் வரக்கூடிய அடிப்படைச் சிக்கல்கள், நடைமுறைகள் குறித்து கற்றுத் தருவதற்கு ஒரு சில பணியாளர்கள் முன் வருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில் யார் கற்றுத் தருவது?
பணி குறித்த குழப்பமான நிலையில் புதிய பணியாளர் தயக்கமின்றி சக பணியாளர்களிடம் கேட்டு சந்தேகத்தை தீர்ப்பது நல்லது. ஒரு சில நேரங்களில் தாமாகவே முடிவெடுப்பது கெட்ட பெயரை உருவாக்கி விட வாய்ப்பிருக்கிறது. அதே போன்று ஆரம்பத்தில் செய்யும் சிறு சிறு தவறுகளை வருத்தத்திற்குரிய நிகழ்வாக பாராமல் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக கருதினால் தான் மகிழ்ச்சி தொடரும்.
அதற்காக அனைத்து தவறுகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒவ்வொன்றின் சூழ்நிலைகள் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தெளிவு இருப்பது அவசியம். ஏனெனில் ஒரு பணி அதற்கான பொறுப்பாளர்கள், அந்த பணியாளர்களின் நிலை போன்றவையும் ஒரு நிகழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வேலைக்கு தயாராகும்பொழுது இளைஞர்கள் இது போன்ற நிலைகளையும் நினைவில் கொண்டு மனதினை தயார்படுத்த வேண்டும். வேலை தான் ஒரே நோக்கம் என்று இருக்கும் இளைய சமுதாயம் வேலை கிடைத்தவுடன் அதற்கடுத்த விஷயங்களை பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பான்மைதான் அதிகமாக இருக்கிறது.
ஏனெனில் பொதுவாக மாணவப்பருவமாக இருந்தாலும், வேலை தேடும் காலங்களாக இருந்தாலும், அதற்குப் பின்னதான வாழ்க்கை எதுவாக இருந்தாலும் "பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்ற மனப்பான்மை பெரும்பாலோரிடம் மேலோங்கி இருக்கிறது. இந்த மனப்பான்மைதான் கற்றலுக்கு இருக்கும் பெரும் இடையூறு.
சிறிய விஷயங்களில் கவனத்தை செலுத்துவதன் மூலம் நமக்குள் இருக்கும் உற்சாகத்தையும், சுறு சுறுப்பையும் வெளிக்கொண்டு வர முடியும். கவனம் என்பது பதட்டமாகவோ, படபடப்பாகவோ மாறிவிடக்கூடாது. நிதானமும், தெளிவும் தீர்க்கமான பார்வையும் சிறப்பான பணிக்கும், வெற்றிகரமான வாழ்க்கை பயணத்திற்கும் அடிப்படையாக இருக்கும்.
எனவே கற்றல் என்பது மற்றவர்கள் நமக்கு கற்றுத் தந்த காலங்களைக் கடந்த பின்னர், நமக்கான முன்னேற்றத்திற்கு நாமாகவே முன் வந்து கற்றல் என்பது அவசியமாகிறது. கற்றல் தொடரவில்லையென்றால் மனித வாழ்வு இயந்திரத்தனமானதாக மாறிவிடும். ஏனெனில் கற்றல் என்பது உற்சாகம், புதிய தொடக்கம் மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கு அடித்தளமிடும் வளர்ச்சியுமாகும்.
நமக்கான உற்சாகத்திற்கு நாம்தான் தயாராக வேண்டும். எனவே கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுப்பதற்கான சூழ்நிலைகளையும் ஏற்படுத்த நாமே நம்மை தயார்படுத்த தயாராவோம்.

No comments:

Post a Comment