jaga flash news

Thursday 13 February 2014

மாத்திரைகளை உடைத்துத் துண்டாக்கி உட்கொள்வது என்பது

மாத்திரைகளை உடைத்துத் துண்டாக்கி உட்கொள்வது என்பது பரவலான ஒருபழக்கமாக இருக்கிறது. ஆனால் இது நல்லதல்ல என அண்மைய ஒரு ஆய்வு கூறுகிறது.
நோயாளிகள் மட்டுமல்ல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உடைத்துக் கொடுக்கிறார்கள். மருத்துவமனைகளில் கூட மாத்திரைகளை உடைத்துத் துண்டாக்கி கொடுப்பது வழக்கம்.
ஜேர்மனியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பரிகாரம் கொடுக்கப்படும் மருந்துகளில் சுமார் 25% உடைத்தே பாவிக்கப்படுகிறது என்பது தெரிய வந்தது.
ஏன் உடைக்கிறார்கள்.
பலரும் வெவ்வேறு காரணங்களுக்காக மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கிறார்கள். 
  • பெரும்பாலான குழந்தைகளும் சில பெரியவர்களும் மாத்திரை பெரிதாக இருப்பதாக எண்ணி அதை உடைத்தால் சுலபமாக விழுங்க முடியும் என்பதற்காக உடைத்து உட்கொள்கிறார்கள்.
  • சில மாத்திரைகள் நோயாளரின் தேவைக்கு ஏற்ற அளவில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. அதனால் உடைத்து விழுங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. உதாரணமாக உயர் இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் HCT என்ற மாத்திரை 50 mg அளவிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆனால் இலங்கையில் பெரும்பாலும் 25 mg அளவே நோயாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் உட்பட எவருமே 50 mg மாத்திரையை இறக்குமதி செய்வதில்லை. இதனால் எல்லா நோயாளிகளும் அதை உடைத்தே உபயோகிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதே போல கொலஸ்டரோலுகக்கு உபயோகிக்கும்Atrovastatin மாத்திரை 10 அல்லது 20 mg அளவிலேயே கிடைக்கிறது. 5 அல்லது 15 mg உபயோகிக்க வேண்டிய அனைவரும் அதை உடைத்தே உபயோகிக்க வேண்டியிருக்கிறது.
  • பொருளாதாரக் காரணங்களுக்காகவும் பலர் உடைத்து உட்கொள்கிறார்கள். ஒருவருக்கு 20 mg  Atrovastatin  தேவையெனில் அதை 5mg மாத்திரையாக வாங்கும் செலவை விட 10 mg மாத்திரையை பாதியாக உடைக்கும்போது குறைவாகவே இருக்கும். இக் காரணத்திற்காகவும் பலர் மாத்திரையை உடைத்து உபயோகிக்கிறார்கள்.
பாதிப்புகள் என்ன?
ஆனால் மாத்திரைகளை உடைக்கும்போது
  • அவை சரிபாதியாக உடைபடுவதில்லை.
  • அத்துடன் உடைக்கும் போது துகள்களாக சற்று உதிரவும் செய்கின்றன. 
  • உடைக்கவே கூடாத மருந்துகளும் உள்ளன. Slow release, Extended releaseபோன்றவை படிப்படியாக அல்லது நீண்ட நேரம் எடுத்து உணவுக் கால்வாயில் கரைவதற்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டவை. இவற்றை உடைத்தால் அதன் நோக்கமே சிதறிவிடும்.
Slow release, Extended release போன்றவற்றை உடைக்கவே கூடாது
உடைக்கும் முறைகள்
மாத்திரைகளை உடைப்பதற்கு பலரும் வெவ்வேறு வேறான முறைகளை உபயோகிக்கின்றனர்.
இந்த ஆய்வின் போது மாத்திரையை
  • அதை உடைப்பதற்கான Pilomat device மூலம் உடைப்பது. சமையலறைக் கத்தி மூலம் உடைப்பது, 
  • கத்தரிக்கோலால் வெட்டுவது, 
  • மற்றும் உடைப்பதற்கான அடையாளம் இடப்பட்ட மாத்திரைகளை எதையும் பயன்படுத்தாது கையால் உடைப்பது ஆகியனவே அவையாகும். 
எல்லா முறைகளின்போதும் மருந்தின் அளவு குறைந்திருந்தபோதும் Pilomat deviceமூலம் உடைக்கும்போது சேதம் குறைவு எனத் தெரியவந்தது.
இவ்வாறு சேதம் உறுவதால், நோயாளி ஒரு வேளைக்கு உபயோகிக்கும் மருந்திற்கும் அடுத்த நேரம் உபயோகிக்கும் மருந்திற்கும் இடையே அளவில் மாற்றம் ஏற்படும். பெரும்பாலும் உபயோகிக்க வேண்டியதிலும் பார்க்கக் குறைந்த அளவு மருந்தே கிடைக்கும் என நம்பலாம். 
இது ஆய்வுபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் Journal of Advanced Nursing என்ற சஞ்சிகையின் ஜனவரி 2011 இதழில் வெளியாகியுள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தியபோது உடைத்தவற்றில்
  • 31 சதவிகிதமானவை சரியாக உபயோகிக்க வேண்டிய மருந்தின் அளவை விட 15 சதவிகிதம் குறைந்திருந்தது காணப்பட்டது. 
  • மேலும் 14 சதவிகிதமானவை 25 சதவிகிதம் குறைந்திருந்தது. அதாவது மருந்தின் அளவு 1/6 -  மூ ¼ குறைந்திருந்தது. 
  • வேறொரு விதத்தில் சொன்னால் ஒருவருக்கு 100 மி.கி மருந்து சிபார்சு செய்திருந்தால் உடைத்து உபயோகிக்கும் போது 75 மிகி முதல் 85 மிகி மட்டுமே கிடைக்கும் எனலாம்.
இவ்வாறான மருந்து அளவுகளின் மாற்றம் நோயின் தாக்கத்தில் பாரிய மாற்றங்களை உண்டு பண்ணலாம் என்பதை விளக்க வேண்டியதில்லை. அத்துடன் பாவிக்கும் மருந்தானது பக்கவிளைவுகள் அதிகம் உள்ளதாயின் மருந்தின் அளவில் சிறுமாற்றம் கூட உடலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
நீங்கள் செய்யக் கூடியது என்ன?
எனவே முடிந்தவரை மருந்துகளை சரியான அளவுகளில் வாங்குங்கள். 
மாத்திரையாக வேண்டிய அளவில் கிடைக்காவிடின், திரவ வடிவில் மருந்து கிடைக்குமாயின் சரியான அளவை எடுக்க அது உதவலாம்.
சரியான அளவைப் பெறுவதற்கு இரண்டு மாத்திரைகளை சேர்த்து உபயோகிக்க முடியுமாயின் அவ்வாறு செய்யுங்கள். உதாரணமாக 75 மிகி மாத்திரை கிடைக்காவிட்டால் 50 மிகி மாத்திரையை உடைப்பதற்குப் பதிலாக 50 மிகி மாத்திரையுடன் 25 மிகி மாத்திரையைச் சேர்த்து உபயோகிக்கலாம்.
பி.கு.
நண்பர் suryajeeva அவர்களது கருத்துரை மற்றும் வேறு சிலரது கருத்துக்களைக் வைத்து நோக்கும் போது இக் கட்டுரை சில தவறான எண்ணங்களைக் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த குறிப்பை எழுதுகிறேன்.
மாத்திரைகளை உடைத்து உபயோகிப்பது பற்றிய ஆய்வை ஒட்டியது இக் கட்டுரை. உடைக்காமல் உபயோகிக்க முடியுமாயின் நல்லது என்பதையே வலியுறுத்தியுள்ளேன். ஆயினும் உடைக்காமல் உபயோகிக்க சாத்தியம் இல்லாதவிடத்து உடைப்பது அவசியம்தான்.
அவசியமான மருந்தை உபயோகிக்காமல் விடுவதுதான் மிகுந்த ஆபத்தானது. அதை விட உடைத்து உபயோகிப்பதில் எந்த வித தவறும் இல்லை.. 

No comments:

Post a Comment