jaga flash news

Sunday 14 January 2024

கொன்றை வேந்தன்....



கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் அவ்வையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். . இதில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன.

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - தாய், தந்தையர் கண்கண்ட தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று - கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவது மிகவும் நல்லது
3. இல்லறமல்லது நல்லறமன்று - இல்லறவாழ்வே மிகவும் நன்மை பயக்கக் கூடியது
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் - பிறருக்கு உதவி செய்யாதோர் பொருளைத் தீயவர் பறித்துக் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு - குறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் - ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் அழிந்து விடும்
7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - அறிவியலுக்கு ஆதாரமான எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நமக்குக் கண் போன்றவை
8. ஏவா மக்கள் மூவா மருந்து - செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் அம்ருதம் போன்றவர்கள்
9. ஐயம் புகினும் செய்வன செய் - பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல கார்யங்களை செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு - ஒருவனை மணந்து புகுந்த வீட்டிலே வசிக்க வேண்டும்
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் - ஒழுக்கமானது வேதம் ஓதுவதை விட மிக நல்லது
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு - பொறாமைப் பேச்சு வளர்ச்சியை அழிக்கும்
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு - சிக்கனமாயிருந்து தான்யத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.
14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை - கணவன் சொல்லுக்கு மாறாக நடவாதிருத்தலே கற்பு
15. காவல்தானே பாவையர்க்கு அழகு - காவல், கட்டுப்பாட்டோடு இருத்தலே பெண்களுக்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற - நமக்குக் கிடைக்காது என்ற ஒன்றை மறந்து விடு
17. கீழோராயினும் தாழ உரை - உன்னை விடத் தாழ்ந்தோராயினும் நயமாகப் பேசு
18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை - பிறர் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், சுற்றத்தார் என்று எவருமே இருக்க மாட்டார்கள்
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் - பலவானாக இருந்தாலும், கர்வப் பேச்சு பேசாதே
20. கெடுவது செய்யின் விடுவது கருமம் - நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால், அதை அப்படியே விட்டு விடுதலே உயர்ந்த செயல்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை - தாழ்வு வந்த போதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லாவற்றையும் சேர்க்கும்
22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி - கையில் இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்
23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி - தேவையிருக்கும் இடம் சென்று உதவி செய்தலே, ஆட்சி செய்வோர் அறிய வேண்டியது
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு - கோள் மூட்டி கலகம் செய்வோர் காதில் கோள் சொல்வது காற்றுடன் கூடிய நெருப்பு போன்றது
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை - எவரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் அவன் பகையாளி ஆவான்
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை - மலடின்றி வாழ்தலே, குடும்பம் தழைப்பதற்கு அழகு
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு - பெற்றோருக்குப் பெருமை, அவர் பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுவதே
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு - தவத்திற்கு அழகு இறை நினைவோடு இருப்பதே
29. சீரைத்தேடின் ஏரைத் தேடு - புகழோடு வாழ விரும்பினால், பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் - எந்த நிலையிலும் கூடி இருத்தலே சுற்றத்திற்கு அழகு.
31. சூதும் வாதும் வேதனை செய்யும் - சூதாட்டமும், தேவையில்லாத விவாதமும் துன்பத்தையே தரும்
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் - தவம் செய்வதை விட்டு விட்டால் அறியாமை (கைதவம்) ஆட்கொண்டு விடும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு - காவல் வேலைக்கு சென்றாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும்
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் - பொருள் கொடுக்குமளவு இருந்தால், பிறருக்கு உணவிட்டு உண்ண வேண்டும்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் - பொருளுள்ளவர், மீதமுள்ள அறம், இன்பம், வீட்டை பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் - சோம்பெறிகள் வறுமையில் வாடித் திரிவர்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - தந்தை சொல்லெ உயர்ந்த மந்திரம் போலாகும் 
38. தாயிற் சிறந்த ஒரு கோயிலு மில்லை - தாயே சிறந்த தெய்வமாகும்
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - கடல் கடந்தாவது பொருள் தேட வேண்டும்
40. தீராக் கோபம் போராய் முடியும் - கோபம் சீக்கிரமாகப் போய் விட வேண்டும்.  இல்லையேல் அது சண்டையில் போய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு - கணவனுக்குத் துன்பம் வந்த போது, கவலைப் படாத பெண்கள், மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டதற்கு ஒப்பாவர்.
42. தூற்றம் பெண்டிர் கூற்றெனத் தகும் - எப்போதும் அவதூறுக் கூறிக் கொண்டே இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு எமன் போன்றவர்.
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும் - தெய்வம் கோபித்துக் கொண்டால், நம் தவமும் அழிந்து போம்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும் - பொருளைத் தேடிச் சேர்க்காது, இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு - தை, மாசி (வெயில் காலம்) மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊன் இனிது - பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல் - நெருங்கிய நண்பனிடத்தும் நம் வறுமை பற்றிப் பேசக் கூடாது
48. நல்இணக்கம் அல்லது அல்லல் படுத்தும் - நல்லோர் நட்பு இல்லையேல், அல்லல் படுவோம்
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை - நாடு செழித்திருக்குமானால் எவருக்கும் இன்பமே.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை - சொன்ன சொல் தவறாது இருத்தலே, நிலையான கல்வி கற்றதற்கு அழகு
51. நீர்அகம் பொருந்திய ஊர்அகத்திரு - நீர் நிறைந்த ஊரில் வசிக்க வேண்டும்
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி - சிறிய கார்யமாக இருந்தாலும், யோசித்து செயல் பட வேண்டும்
53. நூன் முறை தெரிந்து சீலத் தொழுகு - நல்ல நூல்களைப் பயின்று, ஒழுக்கத்தோடு நடந்து கொள்
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை - நமக்குத் தெரியாமல் ஒருவருக்கு வஞ்சனை செய்ய முடியாது.
55. நேரா நோன்பு சீர் ஆகாது - மனம் ஒப்பி செய்யாத எந்த விரதமும் சிறப்பாக முடியாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல் - சக்தியற்றவர் இடத்தும் மனம் நோகுமாறு பேசக்கூடாது
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் - சிறியவர்களும் செய்யும் கார்யத்தால் சிறந்தவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை - உயிரைக் கொன்று அதை உண்ணாமல் இருப்பதே விரதமாகும்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் - ஒருவர் புண்ணியம் அவர் அடைந்த விளைச்சலில் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் - சிறந்த உணவாக இருந்தாலும், காலமறிந்து உண்ண வேண்டும்
61. பிறன்மனை புகாமை அறம் எனத்தகும் - அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும் - தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால், அந்தக் குழந்தை பலம் பெறும், நிர்வாக சுமைகளைத் தாங்கும்
63. புலையும், கொலையும் களவும் தவிர் - புலாலுண்ணுதல், கொலை, திருடு இம்மூன்றையும் செய்யாதே
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் - கொடியவர்களிடம் சிறந்த ஒழுக்கங்கள் இருக்காது
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் - ஞானம் பெற்றோர்க்கு சுற்றம் என்ற பந்தமும், கோபமும் கிடையாது
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் - அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன்
67. பையச் சென்றால் வையந் தாங்கும் - நிதானமாகச் செய்யும் கார்யங்களில் வெற்றி நிச்சயம்
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் - அனைத்துத் தீங்குகளையும் விட்டு விடு
69. போனகம் என்பது தானுழுது உண்ணல் - தான் முயன்று உழைத்து சம்பாதித்ததே உணவு என்பதாகும்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் - தேவாம்ருதமே கிடைத்தாலும், பிறரோடு சேர்ந்து உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை - மழையின்றி ஒன்றும் இல்லை
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை - மழை வரப்போவதற்கு அறிகுறியே மின்னல்
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது - மாலுமி இல்லாத ஓடம் செல்லாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகள் பின்பு நமக்கே வரும்
 
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - முதியோர்கள் அறிவுரை அமிர்தம் போன்றது
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு - மெத்தையில் படுத்து உறங்குதலே தூக்கத்திற்கு சுகம்
77. மேழிச் செல்வம் கோழைப் படாது - கலப்பையால் உழைத்துச் சேர்த்த செல்வம் ஒரு போதும் வீண் போகாது
78. மைவிழியார் தம் மனைஅகன்று ஒழுகு - விலை மாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம் - பெரியோர் சொல்லை கேளாமல் மறுத்தால் அந்த காரியங்கள் கெட்டுவிடும்
80. மோனம் என்பது ஞான வரம்பு - மௌனமே மெய்ஞ்ஞானத்தின் எல்லை
81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண் - சோழ வளவனை ஒத்த 
செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும் - மழை குறைந்து விடுமானால் பல தான தர்மங்கள் குறைந்து விடும்
83. விருந்தில்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் - விருந்தினரை உபசரித்தறியாத இல்லத்தில் தேவையான ஒழுக்கம் இருக்காது
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும் - வீரனுடன் கூடிய நட்பு, கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல் - யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு - உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை - தூய்மையான மனமுள்ளோருக்கு, வஞ்சக எண்ணம் இல்லை
88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை - அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு - தினமும் காலையில் தெய்வத்தை வணங்கு
90. ஒத்த இடத்து நித்திரை கொள் - பழக்கப்பட்ட, சமமான இடத்தில் படுத்து உறங்கு
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் - படிக்காதவர்களிடம் மனமறிந்த ஒழுக்கம் இருக்காது.
 
.

3 comments:

  1. அய்யா. வெ.சாமி அவர்களுக்கு திருச்சிற்றம்பலம். கொன்றைவேந்தன் அருமை அய்யா. ஆனால், 91−வது பாடல்.. கருத்து, நல்ல நூல்களைப் படிக்காதவனுக்கு நல்ல ஒழுக்கம் கிடையாது. ஆகவே, நாம் நல்ல நூல்களைக் கட்டாயம் படிக்க வேண்டும்..என்று வர வேண்டும். காரணம், படிப்பறிவு இல்லாதவனுக்கு, அனுபவ அறிவு அதிகம். வெறும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது தானே !

    அடுத்து, கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
    என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

    விளக்கம் + பொருள் :
    கொன்றை − கொன்றைப் பூவினால் கட்டப்பட்ட மாலையைத் தரித்த

    வேந்தன் − சிவபெருமானுடைய

    செல்வன் − விநாயஹக் கடவுளின்

    அடி − பாதம்

    இணை − இரண்டையும்

    என்றும் − எந்தக் காலத்திலும்

    ஏத்தி − துதித்து

    யாம் − இந்தக் கொன்றை வேந்தனைப் படிக்கிறவர்களாகிய நாம்

    தொழுவோம் − வணங்குவோம்

    கருத்து : மற்றவர்களைப் போலவே, நாமும், துன்பத்தைப் போக்கும் விநாயஹக் கடவுளை எப்பொழுதும் வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கினால் கொன்றை வேந்தனில் நாம் படிக்கின்றபடி நடப்பதற்கு, அவர் துணை செய்வார் என்பதே.

    இவ்வாறு ஆரம்பித்து... பாக்களுக்குள் செல்லுங்கள் அய்யா. பலரும் அறிந்து கொள்ள ஏதுவாக அமையும். திருச்சிற்றம்பலம். அடியேன் பிழை பொறுத்தருள்க...இவ்வாறு எழுதியமைக்கு.

    ReplyDelete
  2. Mon. 15, Apl. 2024 at 8.45 am.

    *சக்கரங்கள் :*

    *இன்று நாம் பார்க்க இருப்பது, நமது உடம்பிலுள்ள பிரதான சக்கரங்கள் பற்றி...!*

    © *ஸகஸ்ராரம் அதாவது உச்சந்தலை சக்கரம். :* இதனது பணி நம்மை ஆன்மீக இருப்புடன், நானுடன் (self) இணைக்கிறது.

    © *ஆக்ஞா அதாவது நெற்றிக்கண் :* இதன் பணி : இது உள் உணர்வு மையம். அதாவது இறையறிவு மையம். திண்ணிய எண்ணம் மற்றும் தொலைவிலுணர்தலின் இருப்பிடம்.

    © *விசுத்தி அதாவது தொண்டைச் சக்கரம் :* இதன் பணியானது, ஆன்மாவை வெளிப்படுத்துதல், தகவல் தொடர்பு மற்றும் தொலை ஒலி உணரல். இதனின் *பூதம் : ஆகாயம்.*

    © *அனாகதம் அதாவது இருதயச் சக்கரம் :* இதன் பூதம் : காற்று. இதன் பணி : அன்பு, கருணை

    © *மணிபூரகம் அதாவது நாபிச் சக்கரம் :* பூதம் : நெருப்பு; பணி விவேகம் மற்றும் ஆற்றலின் மையம்.*

    © *ஸ்வாதிஷ்டானம் அதாவது மண்ணீரல் சக்கரம் :* பூதம் : நீர். பணி : உணர்ச்சிகளின் மையம் (உணர்வு) . அதாவது பாலுணர்வு ஆற்றலின் மையம்.

    © *மூலாதாரம் அல்லது மூலச் சக்கரம் :* பூதம் : மண். முக்கியமான பணிகள் மூலாதாரத்திற்கு. *வாழ்க்கைப் பிரச்சினைகள், உடல் பெலன், குண்டலி இருப்பிடம், கழிவுகளை அதிக அளவு வெளியேற்றுதல், படைப்பாற்றலை வெளிப்படுத்துதல்.*

    *அடுத்து, இவைகள் ஒவ்வொன்றின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம்...!*

    © *சகஸ்ராரம் :* (Crown Chakra) தலையின் உச்சியில் உள்ளன. ஆன்மீக சுயத்துடன் நம்மை இணைப்பது. ஒரு உணர்வு ரீதியான சக்தியை வெளிப்படுத்தும்.

    * இந்த சக்திக்குத் தடையாக இருப்பது : தனிமை, உணர்வு தடைபடுதல்.

    * இந்த சக்திக்கு உட்பட்டவை : *பைனியல் சுரப்பி.*

    *எனவே, நோய்களாவன : அதிர்ச்சி, கடுமையான மன நோய்கள், யதார்த்த நிலையை சந்திக்கும் திறன் இன்மை.*

    © *ஆக்ஞா ( Third eye) :*
    இதன் இருப்பிடம் : புருவ மத்திக்கு ஓர் அங்குலத்திற்கு மேல். பணி : ஞான திருஷ்டி. அதாவது உள்ளுணர்வு மையம்.

    உணர்வு ரீதியான சக்திகள் யாவும். அதாவது, மன உறுதி, நோக்கம், கட்டுப்பாடு & சுய கட்டுப்பாடு, கலை உணர்வு, பகுத்தறிவு, ஏற்புத் தன்மை, அதாவது மென்மை இம்மாதிரி உணர்வு ரீதியான சக்திகள் உண்டு.

    © *

    ReplyDelete

  3. © *விசுத்தி (Throat Chakra ) :* தொண்டைப் பகுதி. தகவல் தொடர்பு மையம்.

    இது, சுயம்களை வெளிப்படுத்துதல், தன்னையும், பிறர் மீதும் நம்பிக்கை கொள்ளுதல். படைப்பாற்றல், உற்பத்தி திறன் செயல்பாடு. சமாதானத்தை விரும்புதல் போன்ற உணர்வு ரீதியான சக்திகளை உடையது.

    இச் சக்திக்கு தடைகளாவன : மேற் கூறிய யாவற்றையும் அடக்கி வைத்தல். சமாதானத்தை விரும்பாது..மனம் ஒத்து போக இயலாது. ஒரு rigidity.

    *இந்த சக்தியின் கட்டுப்பாட்டுக்குள்ளவை :* குரல், உணவுக் குழாய், கழுத்து, கீழ்த்தாடை, தைராய்டு சுரப்பி, சுவாதிட்டானத்துடன் தொடர்பு.

    *நோயானது :* தொண்டை மற்றும் நுரையீரல் நோய்கள்.

    © *அனாகதம் ( Heart Chakra ) :*
    இருப்பிடம் : நெஞ்சின் நடுப்பகுதி. அதாவது மார்பெலும்பு.

    பணி : அன்பு, கருணை.

    இதன் உணர்வு ரீதியான சக்தி : முழுச் சிந்தனை, பொறுப்பு, பொறுமை, இரக்கம், நல்ல எண்ணம், எல்லையில்லா அன்பு, அடக்கம் போன்றவை.

    இச் சக்திக்கு தடையாக அமைவது : பாதுகாப்பற்ற உணர்வு.

    இச் சக்திக்கு உட்பட்டவை : *இருதயம், இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம், நுரையீரல், நோய்த் தடுப்பு சக்தி, தைமஸ் சுரப்பி* போன்றவை.

    *நோய்கள் : இரத்த அழுத்தம், இருதய நோய், எய்ட்ஸ், இரத்த ஓட்டத்தில் பிரச்சினை போன்ற நோய்கள்.*

    © *மணிபூரகம் (Solar Plexus) :
    இதனின் இருப்பிடம் : விலா எலும்புக் கூட்டுக்கும், தொப்புளுக்கும் மத்தியில் உள்ளது.

    *இது சக்தி மற்றும் அறிவு மையம்.*

    அழுத்தத்தை அகற்றுதல், சுற்றுப் புறத்துடன் உள்ள தொடர்பு, பொருள்களிடமும், மக்களிடமும் ஒட்டுதல், உறவு பந்தப் பாசம், பிறரை சார்ந்திருத்தல் போன்ற உணர்வு ரீதியான சக்திகள் உண்டு.

    இச் சக்திக்கு தடையாக இருப்பது : பயம், மேலும் எதைப் பற்றியும் கவலை.

    சக்திக்கு உட்பட்டவை பார்த்தீங்கன்னா.... *அட்ரீனல், ஈரல், பித்த நீர்ப்பை, வயிறு, சீரண மண்டலம்.

    *உயிர் அணுக்களின் மட்டத்தில் உணர்வுகளை அடக்குவதால் வரும் நோய்கள்.... "புற்று நோய், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, மூட்டுவலி, குடல் புண், ஒற்றைத் தலைவலி, ஜீரணக் கோளாறுகள், இருதய நோய் போன்றவை.

    © *சுவாதிட்டானம் (Sacral Chakra) :*
    இதன் இருப்பிடம் : பருவ எலும்புக்கும், தொப்புளுக்கும் இடையில் உள்ளது.

    *உடலுறவுக்கான சக்தி மையம். அதாவது, உணர்வுகளின் மையம்.*

    * சிற்றின்ப வேட்கை, படைப்பாற்றல்,"குடும்ப உறவுகள், நுட்ப உணர்வு, சமூகத்திற்குரிய நடத்தைகள், உடலுறவுத் திறன் போன்ற உணர்வு ரீதியான சக்தி உள்ளது.

    இச் சக்திக்குரிய தடைகள் : மேற்கூறியனவற்றில் அச்சம், சுய ஏற்புத் தன்மை, சுய மேம்பாடு குறைந்து காணப்படும்.

    இச் சக்திக்கு உட்பட்டவை : விதைகளும், சினையகமும்.


    இன விருத்திக் கோளாறுகள், மாத விலக்கிற்கு முன் ஏற்படும் இறுக்கம், மாதவிலக்கு ஒழுங்கற்ற முறையில் போதல், இயலாமை ,அதாவது ஆண், பெண் இருபாலரின் இயலாமை போன்ற தன்மை இதன் நோய்களாம்.

    © *மூலாதாரம் (Root Chakra) :*
    இதன் இருப்பிடமாவது : முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் உள்ள "காக்ஸிஸ்" என்ற பாகமும், திரிகமும் சேருமிடத்தில் உள்ளது.

    இது குண்டலி சக்தியின் அமைவிடம். படைப்புத் திறனை வெளிப்படுத்துதல், உணர்ச்சி மிகுதல்.

    மண்ணுடன் தொடர்பு, கிளர்ச்சி உருவாக்குதல், வாழ்விற்கான மனோ சக்தி. சுறுசுறுப்பாக இயங்குதல், வலிமை, ஆற்றல், தன்னம்பிக்கை, தாக்கப்படுவோம் என்ற பயம் அல்லது பயத்தின் காரணமாக பிறரைத் தாக்குவது போன்ற உணர்வு ரீதியான சக்தி உடையதாகும்.

    இச் சக்திக்குத் தடைகள் : அச்ச உணர்வு தான்.

    இச் சக்தியின் கட்டுப்பாட்டுக்குள்ளவை பார்த்தீங்கன்னா... *சிறுநீரகம், சிறுநீர்ப்பை, அட்ரினல் சுரப்பிகள், நரம்பு மண்டலம்* போன்றவை.

    *கால், இடுப்பு, புட்டப் பகுதிகளில் பிரச்சினை போன்ற நோய்கள் ஏற்படும்.*

    *மேலும் சந்திக்கலாம் !*

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete