jaga flash news

Sunday 14 January 2024

அவ்வையாரின் ஆத்திசூடி...



அவ்வையாரின் ஆத்திசூடி

1.அறம் செய விரும்பு

அறம் - ( விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல்- நல்ல செயல்களை செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச் செய்யாமல் இருப்பது ) செய - செய்வதற்கு,

விரும்பு -நீ ஆசைப்படு.

·      தருமம் செய்ய நீ விரும்புவாயாக

·         நல்ல செயல்களைச்  செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.

2. ஆறுவது சினம்

ஆறுவது- தவிர்க்க வேண்டியது,

சினம் - கோபம்.

·         கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

·         கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அது எல்லோருக்கும் நல்லது அல்ல.

3. இயல்வது கரவேல்

இயல்வது - நம்மால் முடிந்ததை கொடுப்பதற்கு

கரவேல் -  வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( "கரவல்" கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)

·         உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல்

ஈவது - தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை

விலக்கேல் - நீ தடுக்காதே

·         ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

5.உடையது விளம்பேல்

உடையது - உனக்கு உள்ள பொருளை

விளம்பேல் - நீ பிறர் அறியும்படி  சொல்லாதே

·         உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

·         உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி பெருமையாக பேசாதே.

·         உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.

6. ஊக்கமது கைவிடேல்

ஊக்கமது– செய்தொழிலில் மனஞ்சோராமை, உள்ளக் கிளர்ச்சியை

கைவிடேல்– நீ தளர்ந்து போக விடாதே.

·         எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்

எண் – கணித நூலையும்

எழுத்து - அற நூல்களையும், இலக்கண நூலையும்

·         எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

8. ஏற்பது இகழ்ச்சி

ஏற்பது – ஒருவரிடத்திலே போய் இரப்பது  பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – பழிப்பாகும் (அல்லது) இழிவு தரும்.

·         இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்

ஐயமிட்டு – உன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்து

உண் - பிறகே நீ உண்ண வேண்டும்.

·         யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு

ஒப்புரவு – உலக போக்கிற்கு எற்றவாறு;

ஒழுகு – நட

·         உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்

·         நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்

·         ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்

·         அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

உயிர்மெய் வருக்கம்[தொகு]

14.கண்டொன்று சொல்லேல்.

·         கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.

15.ஙப் போல் வளை.

·         'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.

·         "ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16.சனி நீராடு.

·         சனி(குளிர்ந்த) நீராடு.

17.ஞயம்பட உரை.

·         கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.

18.இடம்பட வீடு எடேல்.

·         உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19.இணக்கம் அறிந்து இணங்கு.

·         ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

20.தந்தை தாய்ப் பேண்.

·         உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21.நன்றி மறவேல்.

·         ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22.பருவத்தே பயிர் செய்.

·         எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

23.மண் பறித்து உண்ணேல்.

·         பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)

·         நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24.இயல்பு அலாதன செய்யேல்.

·         நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

25.அரவம் ஆட்டேல்.

·         பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26.இலவம் பஞ்சில் துயில்.

·         'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு

27.வஞ்சகம் பேசேல்.

·         கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே

28.அழகு அலாதன செய்யேல்.

·         இழிவான செயல்களை செய்யாதே

29.இளமையில் கல்.

·         இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30.அறனை மறவேல்.

·         கடவுளை (அறன் = சிவபெருமானை) மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்

31.அனந்தல் ஆடேல்.

·         மிகுதியாக தூங்காதே

ககர வருக்கம்[தொகு]

32.கடிவது மற

·         யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33.காப்பது விரதம்

·         தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)

·         பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34.கிழமை பட வாழ்

·         உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்

35. கீழ்மை யகற்று

·         இழிவான குணஞ் செயல்களை நீக்கு

36. குணமது கைவிடேல்

·         நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்

·         நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே

38. கெடுப்ப தொழி

·         பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்

·         கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்

40. கைவினை கரவேல்

·         உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்

·         பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

42. கோதாட் டொழி

·         குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)

43.கௌவை அகற்று

·         வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

சகர வருக்கம்[தொகு]

44. சக்கர நெறி நில்

·         தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )

45.சான்றோ ரினத்திரு

·         அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசேல்

·         பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே

47. சீர்மை மறவேல்

·         புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்

·         கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்

49. சூது விரும்பேல்

·         ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்

·         செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்

51.சேரிடமறிந்து சேர்

·         நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சையெனத் திரியேல்

·         பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே

53. சொற்சோர்வு படேல்

·         பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே

54. சோம்பித் திரியேல்

·         முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

தகர வருக்கம்[தொகு]

55. தக்கோ னெனத்திரி

·         பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்

56. தானமது விரும்பு

·         யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்

·         நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்

58. தீவினை யகற்று

·         பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59.துன்பத்திற் கிடங்கொடேல்

·         முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினைசெய்

·         ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்

61. தெய்வ மிகழேல்

·         கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோ டொத்துவாழ்

·         உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்

63. தையல்சொல் கேளேல்

·         மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்

·         பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை  விட்டு கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)

65. தோற்பன தொடரேல்

·         ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

நகர வருக்கம்[தொகு]

66. நன்மை கடைப்பிடி

·         நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்

67. நாடொப் பனசெய்

·         நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்

68. நிலையிற் பிரியேல்

·         உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. நீர்விளை யாடேல்

·         வெள்ளபெருக்கில்  நீந்தி விளையாடாதே

70. நுண்மை நுகரேல்

·         நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே

71. நூல்பல கல்

·         அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி

72.நெற்பயிர் விளை

·         நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட வொழுகு

·         ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட

74. நைவினை நணுகேல்

·         பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே

75. நொய்ய வுரையேல்

·         பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கிடங் கொடேல்

·         மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

பகர வருக்கம்[தொகு]

77. பழிப்பன பகரேல்

·         பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.

78. பாம்பொடு பழகேல்

·         பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்

·         குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெறநில்

·         பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

·         உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்

82. பூமி திருத்தியுண்

·         விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்

83. பெரியாரைத் துணைக்கொள்

·         அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்

84. பேதைமை யகற்று

·         அறியாமையைப் போக்கு

85. பையலோ டிணங்கேல்

·         அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருடனைப் போற்றிவாழ்

·         பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த்தொழில் புரியேல்

·         யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே

மகர வருக்கம்[தொகு]

88. மனந்தடு மாறேல்

·         எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

89. மாற்றானுக் கிடங்கொடேல்

·         பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்

·         சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்

·         மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்

·         எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே

93. மூர்க்கரோ டிணங்கேல்

·         மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே

94. மெல்லினல்லாள் தோள்சேர்

·         பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொற்கேள்

·         நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

96. மைவிழியார் மனையகல்

·         விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்

97. மொழிவ தறமொழி

·         சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்

98.மோகத்தை முனி

·         நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு

வகர வருக்கம்[தொகு]

99. வல்லமை பேசேல்

·         உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே

100. வாதுமுற் கூறேல்

·         பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே

101. வித்தை விரும்பு

·         கல்வியாகிய நற்பொருளை விரும்பு

102. வீடு பெறநில்

·         முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து

103. உத்தமனாய் இரு

·         உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.

104. ஊருடன் கூடிவாழ்

·         ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்

105. வெட்டெனப் பேசேல்

·         யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே

106. வேண்டி வினைசெயேல்

·         வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே

107. வைகறை துயிலெழு

·         நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு

108. ஒன்னாரைத் தேறேல்

·         பகைவர்களை நம்பாதே

109. ஓரஞ் சொல்லேல்

·         எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.

  


11 comments:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அருமை அய்யா தங்கள் பதிவு.

    ReplyDelete
  2. Mon. 19, Feb. 2024 at 1.35 pm.
    *சைவ சித்தாந்தம் :*
    *சைவ சித்தாந்தத்தின் அடிப்படை பயிற்சி :*

    *சிவ அன்பர்கள் யாவரும் ஆவலோடு கற்று உணர ஒரு எளிமையான வினா − விடையைத் தங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.*
    *இவ்வினாவிற்கான விடையை அறிந்தவர்கள் கூறலாம் :*
    1) ஆணவம் எத்தகைய பொருள் ?
    2) ஒளியானது பொருளா அல்லது ஆற்றலா ?
    3) பிரபஞ்சத்தின் அடிப்படைப் பொருள்கள் ?
    4) உயிர்கள் மொத்தம் எத்தனை ?
    5) அறிவுடைய பொருள்கள் ?
    6) முற்றறிவு உடைய பொருள்கள் ?
    7) அநாதியான பொருள் ?
    8) இறைவனின் குணம் ?
    9) உயிர்களின் அறிவை மயக்கும் பொருள் ?
    10) சொரூப நிலையில் இறைவன் செய்யும் தொழில்கள் எத்தனை ?
    11) நாம் விரும்பும் ஒரு செயலை, எவ்வாறு செய்து முடிக்க வேண்டும் என்கிற வழி முறையை கூறும் சக்தி ?
    12) இறைவனின் அருவுருவ நிலை ?
    13) பிரபஞ்சம் உருவாவதற்குக் காரணமான மூலப் பொருள் ?
    14) பிரபஞ்சம் மொத்தம் ?
    15) ஆன்ம தத்துவங்களின் எண்ணிக்கை ?
    16) ஆணவம் கலந்துள்ள பொருள்கள் எவை எவை ?
    17) கருவிகள் என்பது, தாமதமா ? இராசதமா ? சாத்வீகமா அல்லது மனமா ?
    18) மறைத்தல் தொழிலை மேற்கொள்பவர் ?
    19) ஆன்மாவின் இயற்கை நிலை ?
    20) உயிர்களுக்கான அகக் கருவி அதாவது அந்தகரணம் கை, கண், காலம், புத்தி இதில் எவை ?
    *அடியேன், இதுவரை அனுப்பிய சைவ சித்தாந்தம் பதிவில் இருந்தே இக்கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. எனவே, தெரிந்தவர்கள் பதில் அளிக்கலாம்.*
    *மீண்டும் சந்திக்கலாம் !*
    sivajansikannan@gmail.com

    ReplyDelete
  3. Mon. 19, Feb. 2024 at 7.05 pm.
    *திருமந்திரம் :*
    *திருமந்திரம் பார்த்து வருகிறோம் !*
    *இன்று "திருமந்திரத்தின் சாரம்" பற்றிப் பார்க்கலாம்.*
    *சாரம் என்றால், சிறந்தது, பயன், வடிவெடுத்தது, சாறு, மருந்து என்றெல்லாம் பல பொருள் உண்டு.*
    *நாம் திருமந்திரத்தின் "சிறப்பு" என்று பொருள் கொள்வோம் !*
    எனவே, திருமந்திரத்தின் சாரம், உடலில் உள்ள குண்டலினிச் சத்தியை விழிப்படையச் செய்து, மூலாதாரக் கனலைச், சுழுமுனை நாடி வழியாகக் கழுத்தில் உள்ள விசுத்தி என்ற ஆதாரம் வரை ஏற்றி, அருட்சத்தியின் அருளால், அதைக் குளிரச் செய்து, தலையில் உள்ள பராசத்தியுடன் சேர்ந்து, அங்குப் பெருகும் அமுதத்தைப் பருகி, இன்பம் அடைதல் பற்றி திருமூலர் குறிப்பிடுவது, திருமந்திர சாரம்சமாகும்.
    *பின்னும் கூறப்போனால்... "யோக சாதனை நெறியைச் சிவயோக" நெறியாக வளர்த்துத் திருமூலர் கூறுகிறார்.*
    *இதுவே, திருமந்திர சாராம்சம்.*
    *குண்டலினி என்றால், கருவாய்க்கும், எருவாய்க்கும் நடுவே இருப்பதாகக் கருதப்படும் மூலாதாரம்.*
    *பின்னும் திருத்தமாகக் கூறப் போனால், மூலாதாரத்திலுள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு ஆற்றல் எனலாம். அதாவது, மகா மாயை என புரிந்து கொள்ளுங்கள்.*
    *குண்டலிக்கு மேலும் சில பொருள் உண்டு. அவை, சீந்தில் கொடி, சங்கஞ் செடி, பாம்பு, மயில், மான், சுத்த மாயை என்றெல்லாம் பொருள் உண்டு.*
    *மீண்டும் சந்திக்கலாம் !*
    sivajansikannan@gmail.com

    ReplyDelete
  4. Tue. 20, Feb. 2024 at 5.59 pm.

    *சிவஞான சித்தியார்− சுபக்கம் :*
    *கடந்த பதிவில், அளவைகள் பற்றியும், காட்சியின் வகைகள் பற்றியும், பிரமாணங்களால் அறியப்படும் பிரமேயங்களின் இயல்புபற்றியும் அவை, (சிறப்பு இயல்பு, பொது இயல்பு ) எனவும் பார்த்தோம்.*

    *இன்று, தொடர்ந்து பார்க்கலாம் !*

    *பிரமேயங்களின் இயல்பு என்றால், காரணம் என்று பொருள். அல்லது நியாயமாய் அளந்தறியப்பட்டது என்று பொருள்.

    * ஒரு பொருளுக்கு, அதற்கு மட்டுமே உரித்தான தன்மை சிறப்பு இயல்பு ஆகும்.

    * அதனுடைய இனத்தைச் சேர்ந்தவற்றுக்கெல்லாம் சேர்ந்த தன்மை, "பொது இயல்பு" ஆகும்.

    அடுத்து, காண்டல் அளவையிலுள்ள நான்கு காட்சிகளையும் தனித்தனியாகப் பார்க்கலாம்...!

    *வாயிற்காட்சியின் இயல்பு *

    *வாயிற்காட்சி (இந்திரியக் காட்சி ) :*
    வாயிற்காட்சி என்றால் என்ன ?*
    * இந்திரியங்கள் வாயிலாகவும், தன்மாத்திரைகள் வாயிலாகவும் உணர்வது, "வாயிற்காட்சி" ஆகும்.

    *மானதக்காட்சி (மனக்காட்சி, மானசக் காட்சி, ) :*
    * வாயிற்காட்சியில் கூறியதுபோல், உணர்ந்ததை சிந்தித்து, புத்தியில் வைத்துப் பின் உணர்வது மானதக் காட்சி ஆகும்.

    *தன் வேதனைக் காட்சி :*
    * இன்ப துன்பங்கள் மற்றும் அராகம் முதலிய தத்துவங்களை, *உயிர்களோடு உணர்வு* தெரிந்து கொள்வது, *தன் வேதனைக் காட்சி*ஆகும்.

    *உயிர்களோடு உணர்வு என்பதற்கான விளக்கம், நமது சித்தியார் நூலில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் :*

    *உயிர் என்பது பிரமாதா. பிரமாதா என்றால் அளப்பவன்.*

    *உணர்வு என்றால் பிரமாணம். பிரமாணம் என்றால் அளவை.*

    *விடயங்கள் என்றால், பிரமேயப் பொருட்கள்(காரணப் பொருட்கள்).*

    *பிரமேயப் பொருட்கள் என்றால், அளக்கப்படும் பொருட்கள்* எனக் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளுங்கள்.

    *யோகக்காட்சி :*
    * மலங்களைக் கெடுத்து, முக்காலத்துப் பொருள்களையும் காண்பது, "யோகக் காட்சி" ஆகும்.

    *இன்று நாம் பார்த்தது காட்சி. அதாவது பிரத்தியட்சம் பற்றிப் பார்த்துள்ளோம்.*

    *தங்கள் ஞாபகத்திற்காக..கடந்த பதிவில், அளவை பற்றி பார்த்தோம் அல்லவா ? அதில், பிரத்தியட்சம் (காண்டல்), அநுமானம் (கருதல்), ஆகமம் எனக் கூறினேன். அதில் இன்று நாம் பார்த்து வந்தது பிரத்தியட்சம் .

    நூல் வைத்திருப்போர் பாடல் 11−13 வரை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.*

    *சந்தேகம் இருந்தால் அடியேனிடம் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.*
    *மீண்டும் சந்திக்கலாம் !*
    sivajansikannan@gmail.com
    *-*-*-*-*-*-**-*-*-


    ReplyDelete
  5. Wed. , 10, Apl. 2024 at 8. 29 pm.

    *திருமந்திரம் :*

    *பாடல் : 8*

    தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
    ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
    சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்கு
    தாயினும் நல்லன் ; தாழ்சடை யோனே.

    இப்பாடலின் விளக்கம் .. *இறைவன் வெம்மையன். ஆனால் குளிர்ந்தவன்.*

    * தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தீயைவிட, வெம்மை உடையவன்.

    ஆனால், அடியார்க்கு நீரைவிடக் குளிர்ந்தவன். மட்டுமல்ல, குழந்தையை விட நல்லவன். பக்கத்தே விளங்குபவன்.

    நல்ல அடியார்க்கு தாயை விட அருள் செய்பவன்.

    இவ்வாறாக இருந்தும் *அப் பெருமானின் அருளை அறிபவர் எவரும் இல்லை.*

    இதன் பொருள் :

    வெய்யன் என்றால், வெப்பமானவன். அதாவது, தீயர்க்கு கொடியவன் என்று பொருள்.

    தண்ணியன் என்றால், குளிர்ச்சியானவன். அதாவது, அடியார்க்கு அருள் செய்பவன் என்று பொருள்.

    சேய் என்றால் குழந்தை. அதாவது, இறைவனின் எளிமையை "சேயினும் நல்லன்" என்கிறார்.

    அணியன் என்றால், பக்கத்தில் இருப்பவன் என்று பொருள். அதாவது, நெருக்கமானவன் என்று பொருள்.

    பின்தாழ்சடை என்றால், பின்பக்கமாகத் தாழ்ந்து தவழும் சடைமுடி.

    தாயினும் நல்லன் என்றால், தாயைவிட மிக்க அருள் உடையவன். அதாவது, மிகுந்த கருணை உடையவன் என்று பொருள்.

    இதன் கருத்து... இறைவன் இவ்வாறாக இருந்தும், அப்பெருமானின் அருளை, அறிபவர் எவரும் இலர்.. என்பதே இப் பாடலின் கருத்து.

    *மீண்டும் சந்திக்கலாம் !*

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete

  6. Thu. 11, Apl. 2024 at 9.32 pm

    *திருமந்திரம் :*

    *பாடல் − 9*

    பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
    பின்னால் பிறங்க இருந்தவன்; பேர் நந்தி;
    என்னால் தொழப்படும் எம்இறை; மற்று அவன்
    தனனால் தொழப்படு வார்இல்லை தானே.


    புரிதல் என்றால், முறுக்கப்பட்ட, அதாவது இயற்றப்பட்ட (செய்தல்) என்று பொருள்.

    பொன்சடை என்றால் பொன் போன்ற நிறம் பொருந்திய சடை.

    பின்னால் என்றால், பிற்பக்கத்தின்

    பிறங்க என்றால், விளங்க என்று பொருள்.

    நந்தி என்பது, இறைவனின் திருப்பெயர்.

    என்னால் தொழப்படும் எம் இறை என்றால், சிவபெருமானுக்கு மேற்பட்ட தெய்வம் இல்லை.

    *இப்பாடல் கூறுவது :*

    அதாவது, இறைவனானவன், பொன்னால் இயற்றப்பட்டாற் போன்ற அழகிய சடை எனச் சொல்லும்படி, பின்புறம் விளங்க விளங்குபவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும்.

    என்னால் அவன் வணங்கத் தக்கவன். உயிர்கட்கெல்லாம் தலைவன். ஆயினும் அவனால் வணங்கத் தக்கவர் எவரும் இலர் என்பதே.



    *இப் பாடலின் கருத்து , "சிவபெருமான் மற்ற தேவர்க்கு மேலானவன்"* அதாவது, சிவபெருமானுக்கு மேற்பட்ட தெய்வம் இல்லை என்பதே இப்பாடலின் கருத்து. (ஆகவே தான் தன்னால் "தொழப்படுவார் இல்லை" என்றார்.

    அதாவது, வணங்கக் கூடியவர் எவரும் இல்லாதவன். இதன் பொருள்... நான் மட்டுமல்ல.. எல்லோரும் வணங்கத் தக்கவனாக இருக்கிறானேயன்றி, இவன் வணங்கும் இறைவன் எவரும் இலர். என்ற கருத்தாகும்.

    *மீண்டும் சந்திக்கலாம் !*

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  7. திருச்சாற்றம்பலம் அய்யா வெ.சாமி அவர்களுக்கு.

    அய்யா, இந்த ஆத்திசூடி விளக்கம் இன்னும் சுருக்கமாக அளிக்கலாம் அய்யா

    விநாயஹ வணக்கப் பாடல் :

    * ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
    ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

    இதன் விளக்கம் : ஆத்தி என்றால், ஆத்திமாலையை; சூடி − அணிந்த வரான சிவபெருமான்; அமர்ந்த − விரும்பின; தேவனை − விநாயஹரை; ஏத்தி ஏத்தி − துதித்துத் துதித்து; யாம் − நாம்; தொழுவோம் − கும்பிடுவோம்.

    கருத்தானது.... சிவபெருமானுக்கு விருப்பமான பிள்ளயாகிய , விநாயஹக் கடவுளை வணங்குவோம் என்பதே.

    *ஆத்திசூடி :*

    1. அறஞ்செய விரும்பு : தருமம் செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். (அறம் − தருமம்; செய − செய்வதற்கு; விரும்பு − ஆசைப்படு).

    2. ஆறுவது சினம் ": கோபத்தை அடக்க வேண்டும். (ஆறுவது − தணிய வேண்டியது,; சினம் − கோபம்)

    3. இயல்வது கரவேல் : உன்னால் முடிந்ததை மறைக்காமல் உதவி சூய். (இயல்வது − உன்னால் முடிந்ததை; கரவேல் − மறைக்காதே).

    4. ஈவது விலக்கேல் : ஒருவர் செய்யும் தருமத்தைத் தடுக்கக் கூடாது. (ஈவது − ஒருவர் மற்றொருவருக்குக் கொடுப்பதை; விலக்கேல் − தடுக்காதே).

    5. உடையது விளம்பேல் ": இரகசியத்தை வெளியிடக் கூடாது. (உடையது − இரகசியமாக இருப்பதை; விளம்பேல் − சொல்லாதே.

    ReplyDelete
  8. 6. ஊக்கமது கைவிடேல் : எப்பொழுதும் முயற்சியைக் கைவிடக் கூடாது. ( ஊக்கமது − முயற்சியை; கைவிடேல் − விட்டுவிடாதே).

    7. எண்ணெழுத் திகழேல் : கணக்கையும், இலக்கணத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். (எண் − கணக்கையும்; எழுத்து − இலக்கணத்தையும்; இகழேல் − கேவலமாகப் பேசாதே.)

    8. ஏற்பது இகழ்ச்சி : இனாமாக யாரிடத்திலும் ஒன்றையும் பெறக் கூடாது. (ஏற்பது − ஒருவரிடத்திலிருந்து இனாமாக ஒன்றைப் பெறுவது; இகழ்ச்சீ − குறைவாகும்.)

    9. ஐய மிட்டுண் : ஏழைகளும், வேலை செய்ய முடியாதவர்களுமாகிய குருடர், முடவர், நோயாளி, முதலியர்களுக்குக் கொடுத்து நாமும் சாப்பிட வேண்டும். (ஐயம் − பிச்சை; இட்டு − கொடுத்து; உண் − பிறகு சாப்பிடு.)

    10. ஒப்புரவு வொழுகு : அறிவுள்ள பெரியோர்கள் நடக்கின்றபடி நாமும் நடந்து கொள்ள வேண்டும். (ஒப்புரவு − உலகத்தில் உள்ளவர்கள் நடக்கின்றபடி; ஒழுகு − நீயும் நடந்து கொள்).

    11. ஓதுவ தொழியேல் : எப்பொழுதும் நல்ல புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். ( ஓதுவது − படிப்பதை; ஒழியேல் − எப்பொழுதும் விட்டு விடாதே.)

    12. ஒளவியம் பேசேல் : பொறாமையுள்ள வார்த்தைகளைப் பேசக் கூடாது. ( ஒளவியம் − பொறாமைப் பேச்சுக்களை; பேசேல் − பேசாது இரு.)

    13. அஃகஞ் சுருக்கேல் : அளவைக் குறைக்காமல் சரியாக அளந்து, தானியத்தை விற்க வேண்டும். (அஃகம் − விற்கும் தானியத்தின் அளவை ; சுருக்கேல் − குறைத்து விற்காதே.)

    14. கண்டொன்று சொல்லேல் : எதையும் கண்ணால் பார்த்தபடியே சொல்ல வேண்டும். (கண்டு ?− ஒன்றைப் பார்த்து; ஒன்று − மற்றொன்றை; சொல்லேல் − பொய்யாகச் சொல்லாதே.)

    15. ஙப்போல் வளை : ங −கர எழுத்து ஒன்று தான் அதன் வரிசையில் பயன்படுகிறது. இருந்தாலும் அது தனது இனமாகிய ஙா, ஙி முதலிய எழுத்துக்களை தன்னோடு தழுவிக் கொண்டு இருக்கிறது அல்லவா. அதைப்போல ... நீ சிறந்தவனாய் இருந்து, பயன் இல்லாதவர்களாக இருந்தாலும், ஊன்னைச் சேர்ந்தவர்களைத் தழுவிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே. ( ஙப்போல் − ங−கர எழுத்தைப் போல்; வளை − உன் உறவினர்களைத் தழுவிக் கொள்.)


    ReplyDelete
  9. 16. சனி நீராடு : சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து, தலை முழுக வேண்டும். ( சனி − சனிக்கிழமை தோறும்; நீராடு − எண்ணெய் தேய்த்துத் தலை முழுகு.

    17. ஞயம் படவுரை : பிறரிடம் பேசும் பொழுது, அவர்களுக்கு இன்பம் உண்டாகும்படி பேச வேண்டும். (ஞயம்பட − இனிமை உண்டாகும்படி; உரை − பேசு.)

    18. இடம்பட வீடிடேல் : வேண்டிய அளவுக்குமேல் பெரிதாக வீட்டைக் கட்டக் கூடாது. ( இடம்பட − இடம் அதிகமாய் இருக்கும்படி; வீடு − வீட்டை; இடேல் − கட்டாதே.)

    19. இணக்கமறிந் திணங்கு : ஒருவருடைய குணத்தை ஆராய்ந்து, அவர் நல்லவராயிருந்தால்தான் அவருடன் பழகலாம். ( இணக்கம் − நம்முடன் சேருகிறவர்களுடைய குணத்தை; அறிந்து − தெரிந்துகொண்டு; இணங்கு − நல்லவர்களாய் இருந்தால் அவர்களுடன் பழகு.)

    20. தந்தை தாய்பேண் : இளம் பருவத்தில் உன்னைக் காப்பாற்றிய தாய், தந்தையரை, அவர்களுடைய கிழப் பருவத்தில், நீ காப்பாற்ற வேண்டும். (பேண் − காப்பாற்றுவாய்).

    21. நன்றி மறவேல் : ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது. ( மறவேல் − நீ எப்பொழுதும் மறவாதே; நன்றி − ஒருவர் உனக்குச் செய்த உதவியை.)

    22. பருவத்தே பயிர்செய் : ஒவ்வொரு பயிரையும், அவற்றிற்கு ஏற்ற காலத்திலேயே பயிரிட வேண்டும். ( பருவத்தே − பருவ காலத்திலேயே; பயிர் செய் − பயிரிடு.)

    23. மண்பறித் துண்ணேல் : பிறரது நிலத்தினால் நீ வாழாதே. (மண் − பிறருடைய நிலத்தை; பறித்து − அபகரித்து; உண்ணேல் − நீ சாப்பிடாதே.)

    24. இயல்பலா தனசெயேல் : தமக்குத் தகாத காரியத்தை ஒருவர் செய்யக் கூடாது. ( இயல்பு − தகுதி; அலாதன − இல்லாத காரியங்களை; செயேல் − செய்யாதே.)

    25. அரவ மாட்டேல் : நஞ்சுள்ள பாம்புகளைப் பிடித்து விளையாடாதே. (அரவம் − பாம்பு (பாம்பைப் பிடித்து); ஆட்டேல் − ஆட்டாதே.(விளையாடாதே.) )


    ReplyDelete
  10. 26. இலவம் பஞ்சிற் துயில் : இலவம் பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தையில் தூங்குவது நல்லது என்பதாம். துயில் − தூங்கு. எதில் ? இலவம் பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தையின் மீது.

    27. வஞ்சகம் பேசேல் : மோச வார்த்தைகளை; பேசேல் − பேசாதே.
    மனதிலே மோசத்தை வைத்துக் கொண்டு, வெளியிலே இனிமையாகப் பேசக் கூடாது.

    28. அழகலாதன செயேல் : ஒழுங்கு இல்லாத வேலைகளைச் செய்யக் கூடாது. அழகு − ஒழுங்கு; அலாதன − இல்லாத செய்கைகளை; செயேல் − செய்யாதே.

    29. இளமையிற் கல் : சிறுவயதிலேயே கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும். இளமையில் − சிறுவயதிலேயே; கல் − கல்வியைக் கற்றுக் கொள்.

    30. அறனை மறவேல் : தருமத்தை மறவாமல், முடிந்த வரையில் செய்ய வேண்டும். அறனை − தருமம் செய்ய வேண்டும் என்பதனை; மறவேல் − மறவாதே.

    31. அனந்த லாடேல் : அதிகமாகத் தூங்கக் கூடாது. அனந்தல் − நித்திரை (தூக்கம்); ஆடேல் − அதிகமாகக் கொள்ளாதே.

    32. கடிவது மற : எப்பொழுதும் கோபத்துடன் பேசக் கூடாது. மற − மறந்து விடு. எதை ? கடிவது − எப்பொழுதும் கோபமாகப் பேசுவதை.

    33. காப்பது விரதம் : ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பதே சிறந்த நோன்பு. காப்பது − ஒரு உயிரையும் கொல்லாமல் பாதுகாப்பது; விரதம் − நோன்பு

    34. கிழமைப் படவாழ் : உன்னிடத்தில் மற்றவர்களுக்குச் சொந்தம் உண்டாகும்படி நீ வாழ வேண்டும் என்பதே. கிழமை − உறவு, நட்பு, மாட்சிமை, குணம். எனவே, கிழமைபட என்பது, சொந்தம் உண்டாகும்படி அதாவது, உன் செல்வம் பிறருக்கு உபயோகப்படும்படி; வாழ் − நீ வாழ்வாயாக.

    35. கீழ்மை யகற்று : கேவலமான குணம் உள்ளவர்களை விலக்கிவிட வேண்டும். கீழ்மை − கீழான குணம் உடையவர்களை (இழிவு. தாழ்மை, ) நம்மை இழிவுபடுத்துபவர்கள் அல்லது நம்மைத் தாழ்த்தி பேசுபவர்கள், அல்லது நம்மை அடிமைப்படுத்துபவர்கள் என்ற கீழ்மையான குணம் உள்ளவர்களை; சேர்க்காமல் − விலக்கி விடு என்பதாம்.

    ReplyDelete