jaga flash news

Saturday 29 April 2017

அகல் விளக்கு

அகல் விளக்கு, எப்படி நமக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறது என்பதை, நாம் இருளில் இருக்கும்போதுதான் உணரமுடியும். அதுபோல், தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறார் என்பதை, அவர்கள் இல்லாதபோதுதான் உணரமுடியும். அதனால், தாய்மையை எப்போதும் போற்றுங்கள்.
* உன்னை, மற்றவர்கள் போற்றும்போது மகிழ்ச்சி அடையாதே..! அது போல், உன்னை மற்றவர்கள் தூற்றும்போது மனம் வருந்தாதே..!
* ஆசை ஒருவனை அழிக்கும் குணம் கொண்டது. ஆனால், மாறாக நாம் மற்றவரின் மேல் செலுத்தும் 'அன்பு' அவர்களை வளர்க்கும் குணம் கொண்டது. எனவே, நீங்கள் எப்போதுமே மற்றவர்களை வளர்க்கும் குணம் உடையவர்களாக இருங்கள். தேவையற்ற ஆசைகளால் துன்பம் வருமே தவிர, நன்மை விளையாது.
* நன்கு வசதியாக வாழும் நாட்களிலேயே துன்பமான விஷயங்களையும் பழகக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறி, மாறி வருவது இயல்பு. ஆகையால், அனைத்து சூழல்களுக்கும் நம்மை தயார்ப்படுத்திக்கொள்வது நல்லது.
* தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தைப் பயிற்றுவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுணுக்கங்களை மேலும் கூறி, புரியவைக்கலாம். ஆனால், இது நல்லது, இது கெட்டது என்று பகுத்து உணராதவனை... அந்த ஆண்டவனாலும் திருத்தமுடியாது.
* குடும்பம் என்பது பசுமையான மரத்தைப் போன்றது. அதில் மனைவி என்பவர் 'வேர்'. கணவன் என்பவர் ' அடிமரத்தண்டு'. பிள்ளைகள் என்பவர்கள் 'இலைகளும் மலர்களும்'. அந்த மரத்தில் விளையும் சுவைமிகுந்த பழங்கள்தான் 'அறச்செயல்கள்'. மரமானது பல்வேறு விதமான ஜீவராசிகளுக்கும் பயன் அளிப்பதுபோல், நமது குடும்பம் என்னும் மரம் மற்றவர்களுக்குப் பயன் தரவேண்டும்.
* பாலுக்குள் இருக்கும், நெய் நம் கண்களுக்கு எளிதில் தெரிவதில்லை. அவ்வாறே, உண்மையான, பக்தியானால் மட்டுமே இறைச் சக்தியை உணரமுடியும்.
கிருபானந்த வாரியார்
* நெருப்பு எரியும் இடத்தில்தான், புகை கிளம்பிக் கொண்டு இருக்கும். நெருப்பினால், நமக்குத் தேவையானவற்றை சூடுபடுத்திக்கொள்ளலாம். மற்றதேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், புகையினால் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை.
* வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்கு பயிர்களை திருப்பித் தருகின்றன. அதைப்போலவே, ஒருவர் செய்யும் நன்மையும் தீமையும் அவர்கள் செய்ததற்கு ஏற்றவகையில் பல மடங்காகப் பெருகி, அவரிடமே திரும்ப வந்துசேரும்.
* சிலர் எதற்காகப் பேசுகிறோம், சிலர் எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பேசுகிறோம் என்று வரைமுறையில்லாமல் பேசி விடுகிறார்கள். இதனால் எந்த ஒரு நன்மையும் உண்டாகப்போவதில்லை. ஆகவே, முடிந்தவரை அமைதியாக இருங்கள்.
* நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் செப்புப் பாத்திரத்தித்தில் களிம்பு ஒட்டியிருந்தால், அதை நாம் நன்றாகத் துலக்கிப் பயன்படுத்த வேண்டும். இதுவே நெல்லாக இருந்தால், உமியை விலக்கி, சமைக்கப் பழகவேண்டும். அதுபோல், மனிதர்களாகிய நாம் தீமைகளை விலக்கி, நன்மைகளைச் சிந்தித்து வாழவேண்டும்.
* பறவைகளுக்கு இரு சிறகுகள், புகைவண்டிக்கு தண்டவாளங்கள், மனிதனுக்கு இரு கால்கள் மற்றும் இரு கண்கள் இருப்பது போல், மாணவர்களுக்கு இரு குணங்கள் நிச்சயம் இருக்கவேண்டும். ஒன்று அடக்கம், இன்னொன்று குருபக்தி. இந்த இருகுணங்களும் உள்ள மாணவன்தான் முன்னேற்றம் அடைவான்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும், அதன் ஜுவாலை மேல்நோக்கி எரிந்து கொண்டிருப்பதுபோல், உயர்ந்த குணத்தை உடையவர்களைக் கீழ்ப்படுத்த முயன்றாலும் முடியாது.
* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. இல்லையேல், மனதை உயர்நிலைக்கு இட்டுச்செல்லும் அற நூல்களைப் படியுங்கள். அதுவே நம்மை நல்வழிப்படுத்தும்.
* பிறருடைய குற்றங்களை அலசி, ஆராயக்கூடாது. நாம் செய்த குற்றங்களை மூடிமறைக்கவும் கூடாது.
* பணிவு என்பது மனித வாழ்க்கையின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத்தரம் உயர்ந்த நிலையை அடைகிறது.

6 comments:

  1. அருமை, கிருபானந்த வாரியார் அவர்கள் ஆற்றிய உரை.

    ReplyDelete
  2. *அறப்பணிகள் அனைத்துக்கும், வேர் போன்றவர் நல்ல மனைவிகளே!*

    ReplyDelete
  3. அகல் விளக்கு, வெளிச்சம், ஒளி, தீபம், சுடர், என்றெல்லாம் பெயர்கள் இருக்க,
    நான் இந்த தலைப்புக்குண்டான ஒரு சிறுகதை தருகிறேன்.

    ஒரு மனிதன் ஒரு சிறு மெழுகுவர்த்தியை *ஒளியேற்றி* அதனை கையில் எடுத்துக்
    கொண்டு, ஒரு நீண்ட படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினான்.

    அப்பொழுது மெழுகுவர்த்தி, அம்மனிதனை
    பார்த்து, என்னை எங்கு கொண்டு செல்கிறாய்? என்று கேட்டது. அப்பொழுது அந்த மனிதன், உன்னை நான் *கலங்கரை விள்க்கத்தின்* மேல் எடுத்து செல்கிறேன்...நீ கப்பல்களுக்கு எல்லாம்
    வழிகாட்டப் போகிறாய் என்றான்.

    அதற்கு அந்த மெழுகுவர்த்தி, நானோ சிறு வெளிச்சம்..நான் எப்படி கப்பல்களுக்கு வழிகாட்ட முடியும்? என்று அவனிடத்தில் கேட்டது. அப்பொது அவன், நீ உன்னால்
    முடிந்த வெளிச்சத்தை கொடு..மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, அவன் அந்த மெழுகுவர்த்தியை, மேலே கொண்டு சென்று அங்கிருந்த ஒரு *ராட்சச விளக்கின் தீபத்தை ஏற்றினான்.*
    அப்பொழுது அது மிகப்பெரிய வெளிச்சத்
    தைக் கொடுத்தது. அருகிலிருந்த ஒரு *கண்ணாடி,* அங்கிருந்து வெளிப்பட்ட வெளிச்சத்தை பிரதிபலிக்க(Reflect) செய்து கடலிலே வெளிப்படுத்தியது..
    அதன் மூலம், கப்பல்களுக்கு வழிகாட்டப் பட்டது.

    நம்மால் பெரிய பெரிய காரியங்கள் செய்யமுடியவில்லை என்று கவலை கொள்ள வேண்டாம். நமக்குள் இருக்கும் சக்தியை வெளிப்படுத்துவோம்.

    நமது அறப்பணி, ஒரு பெரிய கலங்கரை விளக்கை ஏற்றுவதற்கு, அறநூல் என்னும் வெளிச்சம்(அகல் விளக்கு) மிக மிக முக்கியம்.
    இந்த உலகிற்கு ஒளியாய் இருங்கள். பகவானின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருங்கள். சகலமும் நன்மைக்கு
    ஏதுவாயிருக்கும்.

    ReplyDelete
  4. இரண்டாவது முறையாக தங்கள் ஆன்மீகத்தில் வலம் வருகிறேன்.

    அகல்விளக்கு போதனைகள் மிக மிக அருமை.

    ReplyDelete
  5. மூன்றாவது முறையாகவும் தங்கள் முகநூலில் வலம்வருகிறேன். இன்னும் இதைக் கடந்துசெல்ல காலதாமதமாகும் என நினைக்கிறேன். காரணம், ஒவ்வொன்றையும், நிதானமாக மீண்டும் வாசித்துக் கடந்து செல்கிறேன் என்பதே.

    ReplyDelete
  6. அய்யா! வெ.சாமி அவர்களே, இது நான்காவது முறையாக இந்த பதிவுக்கு வந்திருக்கிறேன். இந்த மெழுவர்த்தி கதையை, My Status ல் இன்று குறிப்பிட்டுவிட்டேன். மேலும், ஶ்ரீகணேச தியானம், என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். ஒட்டுமொத்த நெட்டையும் குளோஸ் பண்ணிவிடுகிறீர்களோ! இருக்கட்டும். எனக்கு தெரிந்த ஶ்ரீகணேச தியானம் : *பரகாஸ ஸ்வரூபம் நமோ வாயுரூபம்/லிகாராதி ஹேதும் கலாதார பூதம்/அநேக க்ரியா யோக சக்தி ஸ்வரூபம்/ஸதாவிச்வரூபம் கணேசம் நமாமி/அகஜானந பத்மார்க்கம் கஜாநநமஹர்நிசம்/அநேகதந் தம் பக்தாநாம் ஏகதந்தமுபாஸ்மஹே என்பது.
    வேறு உண்டா என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன் அவ்வளவே.

    ReplyDelete