jaga flash news

Sunday 2 July 2017

கிருஷ்ணர்



கி.மு. 2228-ல் மதுராவில் தேவகி, வாசுதேவன் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மனித சமுதாயத்தினை மேம்படுத்தவும், ஆன்மீகம் தழைக்கவும் வேண்டி பிறந்த இக்குழந்தையே ஸ்ரீகிருஷ்ண பகவான்.
தெய்வீக அவதாரமான இவரை இன்றும் கோடானு கோடி மக்கள், வழிபட்டும், பெயரினை ஜபம் செய்தும், தவம் செய்தும் வருகின்றனர். ஸ்ரீகிருஷ்ண புராணம் படிக்கவும், கேட்கவும் திகட்டாத இனிமை.
ஒரு குழந்தையாக, போர் வீரராக, மாடுகள் மேய்ப்பவராக, தேரோட்டியாக, குருவாக உலகம் போற்றும் கீதையினை போதித்தவராக பல ஸ்தானங்களில் 125 வருடம் வாழ்ந்தவர். அனைவரின் மனதினையும் கவர்ந்தவர். அதர்மத்தினை அழித்து தர்மத்தினை நிலை நாட்டியவர்.
அவர் வாழ்வில் அவர் சந்திக்காத கடின சூழ்நிலைகளே இல்லை. ஆனால் அவர் ஒரு முறை கூட சோகப்படவில்லை. மலர்ந்த, சிரித்த முகம் மாறியதே இல்லை. அருளின் மொத்த உருவ அமைப்பு அவர்.
பிறப்பு கி.மு. 2228 (ஜூலை 19/20) கிருஷ்ண பட்சம், அஷ்டமி, ரோகிணி நட்சத்திரத்தில் நடு நிசியில் பிறந்தவர். வாசு தேவரால் கோகுலத்தில் நந்தபாலன், யசோதையிடம் சேர்க்கப்பட்டவர். காரக முனிவரால் கிருஷ்ணன் என்று பெயர் சூட்டப்பட்டார்.
மூன்று வயதிற்குள்ளாக புட்டனா சகதசூரா, த்ரினிவத்ரா என்ற அரக்கர்களை அழித்தவர்.
3-6 வயதில் பிருந்தாவனில் பகாசுரா, அக்ரசுரா, தேனுகா என்ற அரக்கர்களை அழித்தவர்.
7-10 வயதிற்குள் கோவர்த்தன மலையை தூக்குதல், மதுராவில் மல்யுத்தம், கம்சனை அழித்தல் என்ற சாகசங்களையும் புரிந்தவர்.
10-28 வயதில் மதுராவை ஆண்டவர். கார்கமுனியால் காயத்ரிஜபம் ஏற்றல், 64 கலை கற்றவர், அரக்கர்களிடமிருந்து மதுராவினை காத்தவர்.
29-83 வயதில் துவாரகையை நிறுவியவர்.
84-125 வயதில் அர்ஜுனின் கீதோபதேசம், விஸ்வரூப தரிசனம் பிரிகிர் மகாராஜாவை கருப்பையில் காப்பாற்றியவர்.
கிருஷ்ணரை நாம் ஏன் கடவுள் என்று கூறி வழிபடுகின்றோம்?
கிருஷ்ணர் இதுவரை ஒன்பது அவதாரங்கள் எடுத்துள்ளார். விஞ்ஞான ரீதியாக 5000 வருடங்களுக்கு முன்னால் இப்பூமியில் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான நிரூபணங்கள் உள்ளன.
அவர் ஆட்சி செய்த துவாரகா நகரம் குஜராத் கடலுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு 7 வயது சிறுவனாக மிகப்பெரிய கோவர்த்தன மலையினை தன் கையால் தூக்கி மக்களை காத்தவர்.
அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் பொழுது தனது விஸ்வ ரூப தரிசன காட்சி அளித்தவர். தாய் யசோதைக்கு தன் வாயைத் திறப்பதின் மூலம் பிரபஞ்சத்தினை காட்டியவர். இன்றும் பகவத் கீதை உலகில் எவரும் எக்காலத்திலும் கடைபிடிக்க வேண்டிய புனித சாரமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முக்காலத்தினையும் உணர்ந்தவர்.
பிரம்ம சம்ஹிதாவில் இறைவன் பிரம்மா
கோவிந்தன் எனப்படும் கிருஷ்ணனே கடவுள். நிரந்தர ஒளிவிடும் ஆன்மீக உடல் கொண்டவர் என குறிப்பிட்டுள்ளார். கீத மஹாத்மியத்தில் இறைவன் சிவன் கூட ஒரே ஒரு கடவுள் கிருஷ்ணா, தேவகியின் புதல்வர் என குறிப்பிட்டுள்ளார். மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஸ்ரீகிருஷ்ண அவதாரமே அதிகம் எழுதப்பட்டுள்ளது. பேசப்படுகின்றது. வழிபடப்படுகின்றது. எனவேதான் கிருஷ்ண ஜெயந்தி இந்துக்களின் மாபெரும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண பகவானின் பண்புகளாக 64 பண்புகள் குறிப்பிடப்படுகின்றன. இந்த பண்புகளே இவரை கடவுளாக நம்மை வழிபடச் செய்கின்றது. அவற்றையும் காண்போம்.
* ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தவுடன் பார்ப்பவரின் கண்களை தானாக ஈர்க்கும் பரவசம் அளிக்கும் தோற்றம்.
* அனைத்து சுப, மங்கல பண்புகள் பெற்றவர்.
* சிவந்த கண்கள், பாதங்கள், அண்ணம், உதடுகள், நகங்கள்.
* பரந்த-நெற்றி, குறுகிய-கழுத்து ஆழ்ந்த-குரல், நீண்ட- மூக்கு, கைகள், கால்கள் போன்ற பண்புகளைப் பெற்றவர்.
* ஸ்ரீகிருஷ்ணரை பார்த்த உடனேயே பார்ப்பவர் மனமகிழ்ச்சி பெறுவர்.
* அவரது தோற்றம் சுடரொளி கொண்டது. நீல வண்ணமானவர்.
* வலுவானவர். எத்தனையோ அரக்கர்களையும், அசுரர்களையும் அழித்தவர். கோவர்த்தன மலையைத் தூக்கியவர்.
* எப்பொழுதும் இளமையாய் காணப்படுபவர்.
* பல மொழிகள் அறிந்தவர், விலங்குகள், 
பறவைகள் சம்பாஷனை கூட புரிந்தவர்.
* உண்மையானவர்.
* இனிமையாக பேசுபவர்.
* அர்த்தமுள்ள சொற்களை சரளமாக பேசுபவர், நல்ல நடத்தை கொண்டவர்.
* மிகவும் கற்றவர். தார்மீகக் கொள்கைகளை செயல்படுத்துபவர்.
* அதீத புத்திசாலி தனமும், கூர்மையான நினைவும் கொண்டவர்.
* ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு மேதை.
* கலை நயம் கொண்டவர்.
* மிக அதிக புத்தி கூர்மை உடையவர். பல்வேறு வேலைகளை தனி ஒருவராய் ஒரே நேரத்தில் செய்பவர்.
* சிறந்த நிபுணர். கடினமான பணியினை விரைவில் செய்யும் திறன் கொண்டவர்.
* கடமைப்பட்டவர். அவர் ஒருவரது சிறிய உதவியினையும் மறவாதவர்.
* மிக உறுதியான கொள்கைகள் உடையவர்.
* காலம், சூழ்நிலை அறிந்த நிபுணத்துவம் கொண்டவர்.
* வேதங்களின் சாரமானவர்.
* புனிதமானவர்.
* மிக அதிக சுய கட்டுப்பாடு உடையவர்.
* வேகம் கொண்டவர். மன உறுதி கொண்டவர். நினைத்த இலக்கை அடையும் வரை தொடர்ந்து வேலை செய்பவர்.
* எவரும் தாங்க முடியாது என நினைக்கும் பிரச்சனைகளைக் கூட பொறுக்கும் குணம் படைத்தவர்.
* மன்னிக்கும் குணம் கொண்டவர்.
* அவரது மனம், திட்டம், நடவடிக்கை, செயல்பாடு இவற்றினை புரிந்து கொள்வது மிகக் கடினம்.
* அமைதியானவர். எந்த கொந்தளிப்பும் இல்லாதவர்.
* உலகின் அனைத்துப் பிரிவினரும் அவருக்கு சமமே.
* பரந்த மனப்பான்மை கொண்டவர்.
* மத ஒழுக்கம் கொண்டவர்.
* மாவீரர். எதிரிகளை கதிகலங்கச் செய்பவர்.
* கருணை கொண்டவர். மற்றவர் துயர் துடைப்பவர்.
* மரியாதை தெரிந்தவர். ஆன்மீக குரு. அந்தணர். ஒரு சாதாரண நபர் அனைவரையும் மரியாதையோடு நடத்துபவர்
* மென்மையானவர். சுதந்திரமானவர்.
* எளிமையானவர்.
* பணிவு கொண்டவர்.
* தன்னை சரணடைந்த ஆத்மாக்களை காப்பவர்.
* எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பவர்.
* தன் பக்தர்களுக்கும், அனைவருக்கும் நல்லதையே நினைப்பவர்.
* அன்புக்குக் கட்டுப்பட்டவர்.
* எப்போதும், எல்லோருக்கும் சுபமானவர்.
* மிகவும் சக்தி வாய்ந்தவர்.
* மிகவும் புகழ் பெற்றவர்.
* மிகவும் பிரபலமானவர். அனைவருக்கும் பிரியமானவர்.
* பக்தர்களின் குரலுக்கு ஓடோடி வருபவர்
* சிறப்பு தகுதிகள், உயர் சக்திகள் உள்ள தெய்வங்களை கண்டு பெண்கள் ஆராதிப்பர். அவ்வகையில் பெண்களால் போற்றப்படுபவர்.
* அனைவராலும் வணங்கப்படுபவர்.
* புகழ், செல்வம், அழகு, அறிவு என்ற செழுமைகள் நிறைந்தவர்.
* இவரே சிறந்தவர்.
* பிரபஞ்சங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்ட உயர்சக்தியானவர்.
* எப்போதும் மாறாதவர்.
* எல்லா நேரங்களிலும், அனைத்து இடங்களிலும் நடப்பவைகளை அறியும் தன்மை படைத்தவர்.
* எப்பொழுதும் புதிதாய், புத்துணர்வாய் இருப்பவர்.
* அழியா பொன்னுடல் கொண்டவர்.
* ஆன்மீக அதிசய ஆளுமை பெற்றவர்.
* அபரிமிதமான வல்லமை பெற்றவர்.
* தன்னிடமிருந்து கணக்கிலடங்கா பிரபஞ்சங்களைத் தோற்றுவிப்பவர்.
* பல அவதாரப் பிறப்புகளின் மூலம் இவரே.
* இவர் அழிக்கும் எதிரிகள் கூட இவரால் இரட்சிக்கப் படுகிறார்கள்.
* உடலிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆன்மாக்கள் இவரிடம் கவரப்படுகின்றன.
* அற்புதமான நடவடிக்கைகள் கொண்ட வாழ்க்கையும், குறிப்பாக வியக்கும் குழந்தை பருவமும் கொண்டவர்.
* எப்பொழுதும் பக்தர்களால் சூழப்பட்டவர்.
* தனது புல்லாங்குழல் இசையால் அனைத்து ஜீவன்களையும் கவர்ந்திருப்பவர்.
* இவரது பிரம்மாண்ட அழகு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

No comments:

Post a Comment