jaga flash news

Thursday 25 April 2024

வீட்டில் வளர்க்கக் கூடாத மரங்கள்


வீட்டில் வளர்க்கக் கூடாத மரங்கள் என்னென்ன தெரியுமா?
நம் வீட்டில் அழகுக்காக மரம், செடி, கொடிகள் வளர்ப்பது என்பது சாகஜமான விஷயமேயாகும். இருப்பினும் சில மரங்கள் எதிர்மறை ஆற்றலை உருவாக்குவதால் அவற்றை வீட்டில் வைக்கக்கூடாது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சில மரங்களைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் அரசமரம் வைப்பது தீங்கு விளைவிக்கும். இதனால் பணப் பிரச்னை மற்றும் பண விரயம் ஏற்படலாம். வீட்டின் அருகிலே புளியமரம் இருக்கக் கூடாது. அப்படியிருக்கும் இடத்தில் வீடு கட்டுவதைத் தவிர்த்து விடுவது நல்லது. தென்னை மரத்தை வீட்டில் ஒற்றைப்படையில் வைக்கக்கூடாது. தென்னை மரத்தை ஜோடியாகத்தான் வளர்க்க வேண்டும்.

பனைமரம் இருக்கும் வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமில்லாமல், தலைக்கு மேல் கடனும் ஏறிக்கொண்டே போகும். இலந்தை மரத்தை ஒருபோதும் வீட்டில் வைக்ககூடாது. இது வீட்டின் அமைதியை சீர்குலைக்கும்.

நாவல் மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம், அது மிகவும் குளிர்ச்சியான தன்மை வாய்ந்த மரம் என்பதால் நச்சு பூச்சுகளை கவர்ந்திழுக்கக் கூடிய தன்மையை உடையது. அதனால் அந்த பூச்சுக்கள் வீட்டிற்குள்ளும் வரும் என்பதால் இவ்வாறு சொல்லப்பட்டது.

அத்தி மரத்தையும் வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம், இது வௌவால்களுக்கு மிகவும் பிடித்த பழம் என்பதால் நிறைய வௌவால்கள் வரும். அதனால் நோய்கள் ஏற்படும் என்பதால் சொல்லப்பட்டது.

முற்கள் இருக்கும் செடிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது. கள்ளிச்செடி துரதிர்ஷ்டத்தையும், கஷ்டத்தையும் தரும் என்று கூறுகிறார்கள்.


வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இருந்தால் கருவேப்பிலை மரத்தை வளர்க்கலாம். அப்படியில்லையேல் கருவேப்பிலை மரம் வளர்க்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அப்படி மீறி வளர்த்தால் அந்தப் பிள்ளை நோய்வாய்ப்படும், வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும், இல்லற வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படாது என்று கூறுகிறார்கள். உடனே காய்ந்து விடக்கூடிய தாவரங்களையோ செடிகளையோ வீட்டில் வளர்க்கக் கூடாது. உதாரணத்திற்கு காகிதப்பூ எதிர்மறையான சக்திகளை ஈர்க்கக் கூடியது என்று சொல்லப்படுகிறது.


சிவப்பு நிற அரளியை வீட்டில் வைப்பதால் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு வரும். அதனால் அதை வீட்டில் வைப்பதை தவிர்க்கவும். தாழம்பூ செடி, செண்பக மரம் ஆகியவற்றிலிருந்து வரும் அதிக மணம் நாகங்களை கவரக்கூடியது என்பதால் அதை வீட்டில் வைக்கக் கூடாது என்று கூறுவார்கள். முருங்கை மரத்தை வீட்டின் வாசல் அருகில் வைக்ககூடாது. வீட்டின் பின்புறத்தில் வைப்பதே சிறந்ததாகும்.

அகத்தியர், ‘புனைச்சுருட்டு’ என்னும் நூலில் எந்தெந்த செடிகளை வீட்டில் வைக்கக்கூடாது என்று கூறுகிறார் என்பதைப் பார்க்கலாம். பருத்தி, அகத்தி, பனை, நாவல், அத்தி, எருக்கு, வெள்ளெருக்கு, புளியமரம், கருவேலம், முருங்கை, கல்யாண முருங்கை,கள்ளி, கருவூமத்தை, வில்வம், இலவம், உத்திராட்சம், உதிரவேங்கை ஆகிய 17 மரங்களை வீட்டில் வைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

நம்முடைய வீடு வாஸ்துப்படி கட்டியிருந்தாலும், சில நேரங்களில் நோய், பணக்கஷ்டம், சண்டை போன்ற பிரச்னைகள் வரக்கூடும். அதற்குக் காரணம் நாம் சில நேரங்களில் விவரம் அறியாமல் இதுபோன்ற வீட்டில் வைக்கக் கூடாத மரம், செடியை வைத்திருப்பதே காரணமாக இருக்கும். எனவே, அதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் செழிப்பாக வாழலாம்.

 

No comments:

Post a Comment