jaga flash news

Monday 22 July 2013

ராகுகேது

ராகுகேது இருவரும் பெரும் வீரர்கள். அரசு பதவி பெற உதவிகரமாக இருப்பவர்கள். ராகுவை வழிபாட்டால் பைத்தியக்காரன் கூட தெளிவு பெறுவான் என்பது ஆன்றோர் வாக்கு
ராகு பலம் இருந்தால் வாழ்வில் தானே உயர்வு வரும். என்றாலும் சில அமைப்பின் காரணமாக ராகு – கேது பெயர்ச்சி எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே ராகு – கேது பெயர்ச்சியின்போது ஐதீகப்படி உரிய வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் ராகு – கேதுக்களின் தாக்கங்கள் குறைந்த நல்லது நடக்கும். வழிபாடு செய்வது எப்படி?
ராகு-கேதுவை வழிபடும் முறை வருமாறு:-
வருகிற 2-ந்தேதி (ஞாயிறு) ராகு-கேது பெயர்ச்சி தினத்தன்று ராகு காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை வழிபாடு செய்ய மிகவும் ஏற்ற நேரம் ஆகும். முதலில் ராகுவை வழிபட வேண்டும். இதற்கு ஐந்துமுக பாம்பு கோலம் போட வேண்டும். அதன் மீது கருப்பு உளுந்தை பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த உளுந்தின் மீது ஏழு அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த சமயத்தில் சித்தர குப்தரை நினைத்து வணங்க வேண்டும். பின்னர் ராகு கவசம் படிக்க வேண்டும். இந்த வழிபாட்டை செய்தால் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய அளவில் லாபம் அளிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ராகு உறவுக்காரகன் ஆவார்.
எனவே அவரை இப்படி ஐதீகப்படி வழிபட்டால் பிரிந்து சென்ற உறவினர்கள் நம்மை தேடி வருவார்கள். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். ராகு தியான துதியை சொல்லி வர வேண்டும். இதன்மூலம் வீட்டில் செல்வம் பெருகும்.
கேது பூஜை…………
ராகு பூஜை முடிந்ததும் கேதுவுக்கு வழிபாடு நடத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரைதான் இந்த வழிபாட்டுக்கும் உகந்த நேரம் ஆகும். இந்த வழிபாடு செய்ய முதலில் பாம்பின் வால் பகுதியை கோலமாக வரைந்து கொள்ள வேண்டும். அந்த வாலின் மீது கொள்ளுப் போட்டு பரப்பி வைக்க வேண்டும்.
அதன்மீது 5 அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். பிறகு கேது கவசம் படிக்க வேண்டும். இந்த வழிபாடு மிகமிக அரிய பலன்களை தரவல்லது. கேதுபகவான் ஞானக்காரகன் ஆவான். எனவே கேதுவை மனம் குளிர வழிபட்டால் மந்தப்புத்தி உள்ளவர்களிடம் மனமாற்றம் ஏற்படும்.
படிப்பில் சுமாராக இருக்கும் மாணவ- மாணவிகள் இந்த வழிபாட்டை செய்தால் கல்வியில் மேம்பாடு அடையலாம். கேது பூஜையின்போது தவறாமல் கேது கவசம் படித்தால் கேதுவின் ஆற்றலால் பிரிந்து சென்ற கணவர் திரும்பி வருவார்
கேது தசை
ராகுவைப் போலவே கேதுவும் நிழல் கிரகம் தான். ராகுவைப் போலவே ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருப்பார் கேது. ராகுவைப் போலவே இவரும் பின்நோக்கிச் செல்பவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது அந்த ராசிக்கான பலன்களை 3 மாதங்களுக்கு முன்கூட்டியே காட்டி விடுவார்.
கேதுவின் ஆட்சிக்கு உட்பட்டது மீனராசி. கும்ப ராசியில் உச்சம் பெறுவார். சிம்ம ராசியில் நீச்சம் அடைவார். மற்ற கிரகங்களைப் போலவே இவர் 7 ஆம் பார்வை பார்ப்பார். அதாவது தான் நிற்கும் ராசியில் இருந்தபடியே 7வது ராசியைப் பார்ப்பார். பொதுவாக, செவ்வாய் தரும் பலன்களை இவரும் தருவார். எனவே, 4, 7, 8 பார்வை செவ்வாயைப் போலவே கேதுவுக்கும் உண்டு. கேது தசை 7 ஆண்டுகள் நடக்கும்.
கேதுவின் பலன்கள்……
ஒருவர் ராசியில் கேது நிற்கும் சமயம் நன்றாக இருக்காது. முயற்சிகள் தடைபடும், வீண்பகை உண்டாகும். உடல் ஆரோக்கியம் கெடும். ராசிக்கு 3-இல் கேது வரும் சமயம் கவலைகளும், கஷ்டங்களும் இருக்கும். பணத்தைக் கெட்டதற்காகவே செலவு செய்வான். ஆனால், ராசிக்கு 3-இல் வரும்போது நல்ல நிலைமை உருவாகும்.
எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். மன அமைதியும் உடல் ஆரோக்கியமும் உண்டாகும். ஆனால், ராசிக்கு 4-இல் வரும் சமயம் அப்படியே எதிர் மாறாக நடக்கும். தீயோர் சகவாசத்தினால் பொருள் சேர்ப்பும், இழப்பும் இருக்கும். பணம் கையில் புழங்கும். ராசிக்கு 4-இல் வரும்போதும் அப்படித்தான்.
பகை, நோய், துயரம் எல்லாம் இருக்கும். ராசிக்கு 6-இல் வரும் சமயம் எல்லா கஷ்டங்களும் விலகும். பொருள் வசதி பெருகும். ஆரோக்கியம், ஆனந்தம் நிலவும். கேது 7-இல் வரும்போது காரிய தாமதம், குடும்பத்தில் சச்சரவு, நோய், கவலைகள் இருக்கும்.
8-க்கு வரும்போது மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 9-க்கு வரும்போது தொல்லைகள் இருக்கலாம். ஆனால், 10-க்கு வரும்போது நல்ல பலன்கள் உண்டாகத் தொடங்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் கேது, ராசிக்கு 12-இல் வரும்போது நண்பர்களால் பொருள் விரயம் எல்லாம் இருக்கும்.
கேது தோஷ பரிகாரம்……….
கேது பகவானுக்கு ஏதாவது ஒரு கிழமையில் அபிஷேகம் செய்விக்கவும். பலவர்ண ஆடை, வைடூரிய மணி, செவ்வல்லி மலர் ஆகியவற்றால் அலங்காரம் செய்யவும். கேது மந்திரங்களைச் சொல்லி தர்ப்பையினால் யாகத்தீயை எழுப்பி, கொள்ளுத் தானியம், கொள்ளுப் பொடி ஆகியவற்றால் ஆகுதி பண்ணவும். தீபாராதனை செய்யவும். கற்பூர ஆரத்தி எடுக்கவும். ராகம் தெரிந்தவர்கள் சண்முகப் பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடி வழிபடவும்
கிரகங்களில் ராகுவை சாயா கிரகம் என்பார்கள். சாயா என்றால் நிழல். ராகு, மற்ற கிரகங்களைப் போல் பிரதட்சிணமாகச் சுற்ற மாட்டார். பின் நோக்கி அப் பிரதட்சிணமாகச் சுற்றுவார். ஒரு ராசியில் ராகு ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருப்பார். சனிக்கு அடுத்தப்படியாக நீண்ட காலம் ஒரு ராசியில் தங்குபவர் ராகுதான்.
ராகுவுக்கு என்று தனி சக்தி இல்லை. இவர் சார்ந்துள்ள கிரகங்களின் அடிப்படையில் இவருக்குச் சக்தி உண்டாகும். என்றாலும் இவருக்கென்று சில தனித் தன்மையும் உண்டு. ஆனாலும் தாமஸகுணம் கொண்டவர். ராகுவின் ஆட்சி வீடு கன்னி. விருச்சிகத்தில் ராகு உச்சம் பெறுவார். ரிஷபத்தில் நீச்சப்படுவார்.
கடகம், சிம்மம் இவற்றைத் தவிர மற்ற கிரகங்கள் ராகுவுக்கு நட்பு வீடுகள். ராகு ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்குச் செல்லும் போது, போகும் இடத்தில் தரக்கூடிய பலன்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தெரிய வரும். ராகு தசை 18 ஆண்டுகள் இருக்கும் கிட்டதட்ட சனி தரும் பலன்களையே இவரும் தருவார்.
ராகுவின் பலன்கள்……..
ஒருவர் ராசியில் ராகு வந்து தங்கும் சமயம் பந்த பாசங்களில் மனக்கசப்பு உண்டாகும். தவறான வழிகளில் வந்த பணத்தால் நோய் வந்து செலவை ஏற்படுத்தும். சுபர் பார்த்தால் தீயவை அனைத்தும் மாறி நல்லது நடக்கும். ராசிக்கு 2-இல் ராகு வரும்போதும் இப்படித்தான் இருக்கும். ஆனால், ராசிக்கு 3-இல் ராகு வரும் போது நிலைமைகள் சீரடையும்.
தொடங்கும் காரியம் சிறப்படையும். வசதிகள் பெருகும். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். தீய குணங்கள் விலகி நல்ல குணங்கள் உண்டாகும். ராசிக்கு 4-இல் ராகு வரும்போது குடும்பம் அமைதி இழக்கும். சிலருக்கு இடமாற்றம் இருக்கும். ராசிக்கு 5-இல் வரும்போது இந்த விரும்பத் தகாத சூழ்நிலை நீடிக்கும்.
ஆனால் ராசிக்கு 6-இல் ராகு வரும் சமயம் நிலைமை சீரடையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தீய குணங்கள் விலகி, நல்ல குணமுடையவனாவான். ராகு, ராசிக்கு 7-இல் வரும்போது கெட்டவர்களின் சகவாசத்தால் துன்பங்கள் உண்டாகும். இடம் விட்டு இடம் செல்ல நேரிடும்.
ராசிக்கு 8-இல் வரும் சமயம் எடுத்த காரியங்களில் தடைகள் வந்தாலும் சுபக்கிரகங்கள் பார்த்தால் தடைகள் நீங்கி காரியங்கள் வெற்றி பெறும். ராகு 9-இல் வரும்போது விஷக்கடியால் துன்பம் ஏற்பட்டு சுகமாகும். 10-இல் வரும்போது செலவுகள் அதிகமாகும். குரு பார்த்தால் குறைகள் நீங்கி நிறைந்த பலன் கிடைக்கும். 11-இல் வரும்போது நன்றாக இருக்கும்.
பொருளாதாரம் சீரடையும், உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் 12-இல் நன்றாக இருக்காது. குடும்ப அமைதிய கெடும். மருத்துவச் செலவு ஏற்பட்டு, பொருள் நஷ்டம் உண்டாகும். கஷ்டங்களும், கவலைகளும் இருக்கும். ஆனாலும் சுபவலிமைபெற்ற கிரகங்கள் சேர்க்கையிருந்தால் கஷ்டங்கள் தீரும். நன்மை உண்டாகும்.
ராகுதோஷ பரிகாரம்……..
ராகு பகவானுக்கு ஏதாவது ஒரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கறுப்பு வஸ்திரம், கோமேதக மணி, நீலமந்தாரை, இலுப்பைப் பூ ஆகியவற்றால் அலங்காரம் செய்யவும். ராகு ஸ்துதி செய்து அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி, உளுந்து தானியம், உளுத்தம் பருப்புப் பொடி அன்னம் இவற்றால் ஆகுதி பண்ணவும். தீபாராதனை செய்யவும். ராகு கீர்த்தனைகளை ராகப் பிரியா ராகத்தில் பாடி வழிபடுவது சிறப்பு.*
ஸ்ரீராகுவுக்கான கோலம்
ஸ்ரீராகுவுக்கான கோலம்
அரிசி மாவினால், ராகுவுக்குரிய இந்தக் கோலத்தை செவ்வாய்க் கிழமை தோறும் பூஜை அறையில் போடவும். விளக்கேற்றி வைத்து ராகுவுக்குரிய பாடல்களை, தியான சுலோகங்களைச் சொல்லி வழிபடவும்.
ஸ்ரீ கேதுவுக்கான கோலம்
ஸ்ரீ கேதுவுக்கான கோலம்
அரிசி மாவினால், கேதுவுக்குரிய இந்தக் கோலத்தை சனிக்கிழமை தோறும் பூஜை அறையில் போடவும். விளக்கேற்றி வைத்து கேதுக்குரிய பாடல்களை, தியான சுலோகங்களைச் சொல்லி வழிபடவும்.
திருமண வரம் தரும் ராகு வழிபாடு
நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் கீழ்க்கண்ட ராகு வழிபாட்டை செய்து விரைவில் திருமணம் கூடிவரப் பெறலாம். திருமணம் ஆகாத பெண்கள் ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். இவ்வாறு செய்து வர அப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும்.
திருமண வாழ்க்கையில் பிரச்சினையைக் காண்பவர்கள் அப்பிரச்சினையில் இருந்து விடுதலை பெற வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் (காலை 10.30 – 12 மணி வரை) தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டுëம். இவ்வாறு 11 வாரம் செய்து முடித்த பிறகு 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டினை செய்ய திருமண வாழ்வில் தம்பதியினருக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும். திருமண வரம் கூடி வந்தவுடன் காணிக்கையாக 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றலாம். அதேபோல் தம்பதிகள் மேற்கண்ட வழிபாட்டை செய்து தங்கள் பிரச்சினை தீர்ந்தவுடன் அரக்குக் கலர் பட்டுப் பாவாடை சாற்றலாம்.
ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும் போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும்.
சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள்.
ராகு – கேது உருவான வரலாறு
பாற்கடலை கடைந்தபோது அமிர்தம் வெளிப்பட்டது அதனை தேவர்களும் அசுரர்களும் சரிபாதியாக பங்கிட்டுக் கொள்ளுவது என்பதே ஒப்பந்தம். இந்த நேரத்தில் விஷ்ணு மோகினி வடிவம் எடுத்தார். அசுரர்களை மயக்கினார். அமிர்தகலசம் தன்வந்திரியின் கையில் இருந்தது. அதனை மோகினி வாங்கிக் கொண்டாள். அவளது அழகில் மயங்கிய அசுரர்கள் மோகினியே அனைவருக்கும் பரிமாரட்டும் என கூறிவிட்டனர்.
தேவர்களும் ஒப்புக் கொண்டனர். யாருக்கு முதலில் அமிர்தத்தை தருவது என்ற பிரச்சினை எழுந்தது. மேலே தெளிவாக உள்ள நீரை தேவர்களுக்கும் அடியில் கலங்கி இருக்கும் திரவத்தை அசுரர்களுக்கும் கொடுப்பது என்று முடிவாயிற்று. முதலில் தேவர்களுக்கு அமிர்தம் வழங்கப்பட்டது.
இதில் ஏதோ குளறுபடி உள்ளது என புரிந்து கொண்ட கஸ்யப மஹரிஷியின் மகனான ஸ்வர்பானு எங்கே தனக்கு அமிர்தம் கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சி அசுரவடிவம் மாற்றி தேவர் வடிவம் பூண்டு தேவர்கள் வரிசையில் அமர்ந்தான். இதனை சூரியனும், சந்திரனும் பார்த்து விட்டனர். இதற்குள் மோகினி, தேவன் என்று நினைத்து ஸ்வர்பானுவுக்கு அமிர்தம் அளித்து விட்டார். அவனும் அவசர அவசரமாக பருகி விட்டான்.
சந்திர, சூரியர்கள் மோகினியிடம் சென்று நடந்தவற்றை கூறினர். மோகினி வடிவம் தாங்கிய விஷ்ணுவுக்கு கடுங்கோபம் உண்டாயிற்று. அவள் தன் கையில் இருந்த அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி தட்டினார். தலைவேறு, முண்டம் வேறு என இருகூறுகளாயிற்று அமிர்தம் உண்ட காரணத்தால் உயிர் நீங்கவில்லை.
ஒப்பந்தத்தை மீறியதால் அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க முடியாது என மோகினி கூறிவிட்டாள். அமிர்த கலசத்தை பிடுங்க அசுரர்கள் முயல, மோகினி வேகவேகமாக அனைத்தையும் தேவர்களுக்கு அளித்து விட்டார். ஏமாற்றமடைந்த அசுரர்கள் சுவர்பானுவால்தான் தங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை என வருந்தி சுவர்பானுவை தங்கள் குலத்திலிருந்து விலக்கி வைத்துவிட்டனர்.
இரு உடலாக கிடந்தாலும் உடல் இருந்தும் தலை இல்லாமலும், தலை இருந்து உடல் இல்லாமலும் இருந்த ஸ்வர்பானு, பிரமனிடம் முறையிட்டாள். பிரம்மனோ “விஷ்ணுவால்தான் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய இயலும்” என்று கூறிவிட்டார். விஷ்ணுவை ஸ்வர்பானு வணங்கி பிராயச்சித்தம் செய்யும்படி கேட்டான். விஷ்ணு பகவான் அருள் சுரந்து பாம்பு உடலை கொடுத்து தலையுடன் பொருத்தினார்.
அதேபோல் பாம்புத்தலையை மனித உடலுடன் பொருத்தினார். இப்போது மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கும் படி கூறி அருள் பாலித்தார்.
இவ்வாறு ராகு கேது உருவானவுடன் மகாவிஷ்ணு இப்பூவுலகில் கிருதாயுகம் நடைபெறுகிறது. இப்போது உங்களுக்கு வேலை இல்லை, நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்க இன்னும் ஒரு யுகம் பொருத்திருக்க வேண்டும் என்றார். அடுத்த யுகமான திரேதாயுதத்தில் நான் ராமனாக மனிதகுலத்தில் பிறப்பேன். அப்போது உங்கள் சக்தியால் ராகு கோதண்ட மாகவும் (வில்) கேது அம்பாகவும் என்னிடம் வருவீர்கள்.
அசுரகுல கடைசி அரசனான ராவணனை கொல்வதற்கு நீங்கள் பயன்படுவீர்கள். அப்போது உங்கள் பாவம் தொலையும் என்றார். நீங்கள் வித்தியாசம் தெரிவதற்காக மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் வானவெளியில் அப்ர தட்சனமாக வலமிருந்து இடமாக சுற்றி வருவீர்கள் என்றார்.
ராகுவும் கேதுவும் தங்களின் இந்த நிலைக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழிவாங்க பிரம்மனிடம் வரம் கேட்டனர். அந்த வரத்தை பிரமன் தர மறுத்தார். பல காலம் தவமிருந்து பிரமனிடம் வரம் பெற்றனர். இவ்வரத்தின்படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது தடுக்கும் வரத்தை கொடுத்தார்.
இதுவே கிரகணம் எனப்படுகிறது. ராகுவும், கேதுவும் வெட்டப்பட்ட போது ஒரு துண்டு நாகேஸ்வரத்திலும் மற்றொரு துண்டு கீழ்பெரும்பள்ளத்திலும் விழுந்ததாகவும் அங்கேயே அவர்கள் குடி கொள்ள இறைவனிடம் வேண்டி அருள் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது.
ராகு பயோடேட்டா
நட்சத்திரம் – திருவாதிரை – சுவாதி – சதயம்
தானியம் – உளுந்து
மலர் – மந்தாரை
நவரத்தினம் – கோமேதகம்
எண் – 4
நிறம் – சிவப்பு
உயரம் – நெடியர்
நட்பு கிரகம் – சனி,சுக்கிரன்,புதன்
பகை கிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்
திசை வருடம் – 18 வருடங்கள்
லிங்கம் – அலி
பாஷை – அன்னிய பாஷை
ஜாதி – கலப்பு ஜாதி
குணம் – கோபமுடையவர்
நோய் – பித்தம்
திசை – தென்மேற்கு
சமித்து – அருகு
வாகனம் – ஆடு
சுவை – புளிப்பு
உலோகம் – கருங்கல்
ராசியில் சஞ்சரிக்கும் காலம் – 1 வருடங்கள்
தேவதை – பத்ரகாளி
வஸ்திரம் – கருப்பு
ஸ்தலம் – காளாஸ்திரி
ராகுபகவானின் ஆட்சிக்கு உட்பட்ட பொறுப்புகள்
தகப்பன் வழி, சூதாட்டம், விதவையின் தொடர்பு, உடலில் ஏற்படும் வலி, களவு, கபடம், அடிமைத் தொழில், சிறைவாசம், மது, நர்ஸ், செல்வ இழப்பு, அளவுக்கு மீறிய லாபம், நஷ்டம், அளவுக்கு மீறிய துன்பம், துறவரம், புதையல், தையல் கலை, சுவீகார புத்ரன், அëன்னிய மதத்தினரின் தொடர்பு, முத்து எடுத்தல், கள்ளக்கடத்தல், குறுக்கு வழியில் சம்பாதித்தல், வெளிநாட்டில் வேலை, குழந்தைகள் தரும் மகிழ்ச்சி, விஷபயம், வயிற்றில் புண், கர்பம் கலைதல், கெட்ட கனவு, திருமண வாழ்வில் மகிழ்ச்சி, அறிவியல் அறிஞர், கலைஞர், எலக்ட்ரானிக் தொழில், கலாட்டா – குழப்பம், சூதாடுதல், லஞ்சம், திடீர் விபத்து, அரசியல் குழப்பம், ஏமாற்று வேலை, தோல்வியாதி, அயல்நாட்டு மொழிகள் அறிவது, சக்தி வழிபாடு, அனைத்து ரிப்பேர் தொழில்கள், தற்கொலை முயற்சி, விபத்துக்கள், இதயகோளாறு, விஷம்.
ராகு சூரியனது ஆட்சி வீடான சிம்மத்திலும் உச்ச வீடான மேஷத்திலும் சந்திரன் ஆட்சி வீடான கடகத்திலும் உச்ச வீடான ரிஷபத்திலும் இருப்பின் நற்பலன்களே தருவார். சனி பகவானின் வீடான மகர, கும்பங்களிலும் நற்பலன் தருவார்.
ஜாதகம் இல்லாதவர்கள் ராகுதோஷத்தை கண்டுபிடிப்பது எப்படி?
ஒருவர் நல்லவராக இருந்து திடீரென கெட்டபழக்கவழக்கங்களுக்கு ஆளாகுதல், மோசமான குணம், மற்றவர்களை கெடுக்க நினைப்பது, ஏமாற்ற நினைப்பது, பொய் சொல்லுவது, மற்றவர்களுடன் அனுசரித்து செல்லாதது, விதண்டாவாதம் புரிவது, மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக பேசுவது, அழுத்தக்காரராக இருப்பது, எப்போதும் ஏதாவது ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பது, குழப்பமான முடிவெடுப்பது, விஷபூச்சிகளால் பாதிக்கப்படுவது, கணவன்-மனைவிக்குள் ஒன்றுமில்லாத தகராறு ஆகியவை இருந்தால், அவருக்கு ராகு தோஷம் இருப்பதாக கொள்ளலாம்.
ராகு தரும் இன்னல்கள்……
சிறை தண்டனை பெறுதல், ஏமாற்றிப் பிழைக்கும் எத்தன், சித்திரவதைக்கு உள்ளாகுதல், பெரும் விபத்தில் உயிரிழத்தல், ஒழுக்கமில்லாத வாழ்க்கை இவை அனைத்தும் ராகு தரும் கொடுஞ்செயல்கள்.
கேது பயோடேட்டா
நட்சத்திரம் – அஸ்வினி, மகம், மூலம்
தானியம் – கொள்ளு
மலர் – செவ்வரளி
நவரத்தினம் – வைடூரியம்
எண் – 7
நிறம் – சிவப்பு
உயரம் – மத்திமம்
நட்பு கிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம் – சனி, சுக்கிரன்
திசை வருடம் – 7 வருடங்கள்
லிங்கம் – அலி
பாஷை – அன்னிய பாஷை
ஜாதி – கலப்பு ஜாதி
குணம் – கோபமுடையவர்
நோய் – பித்தம்
திசை – வடமேற்கு
சமித்து – தர்ப்பை
வாகனம் – சிங்கம்
சுவை – புளிப்பு
உலோகம் – துருக்கல்
ராசியில் சஞ்சரிக்கும் காலம் – 1 வருடங்கள்
தேவதை – இந்திரன்
வஸ்திரம் – பல வண்ணம்
ஸ்தலம் – காளாஸ்திரி
கேது தரும் இன்னல்கள்
சொந்தபந்தங்களின் உறவு இல்லாமல் போதல், கடவுள் பக்தி அற்றவனாதல், பழிவாங்கும் குணம் கொண்டு இருத்தல், தகாத செயல்களில் ஈடுபடுதல், அரசு தண்டனை பெறுதல், கொடிய விபத்தில் மரணமடைதல் அனைத்தும் கேது தரும் இன்னல்களே.
கிரகணம் பிடிப்பது ஏன்?
ராகு பகவானை வைத்து சந்திர மற்றும் சூரிய கிரகணத்திற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. தன்னை அசுரன் என்று காட்டிக் கொடுத்ததால் சந்திர, சூரியர்கள் மீது ராகுவுக்கு கடுமையான சீற்றம் எப்போதும் உண்டு. எனவே அவர்களை அவ்வப்போது பிடித்து கிரகணத்தை ஏற்படுத்துகிறார். ராகு சந்திரனைப் பிடிக்கும்போது சந்திர கிரகணமும், சூரியனைப் பிடிக்கும்போது சூரிய கிரகணமும் ஏற்படும். ராகுவை கரும்பாம்பு என்றும் கேதுவை செம்பாம்பு என்றும் கூறுவர்.
கேது பகவானின் ஆட்சிக்கு உட்பட்ட பொறுப்புகள்…..
மணி – மந்திரம் – ஒளஷதம். மோட்சதம் அளிப்பவர். உலக இன்பங்களை அளித்து அதனால் துன்பங்களை அனுபவித்து வேதனைபடுதல், பசி – பட்டினி – பிச்சை எடுத்தல், அரசு பயம், வெற்றி – தோல்வி, கமிஷன் வியாபாரம், பாட்டன் வழி உறவுகள், குஷ்டரோகம், அம்மைநோய், புகைபிடித்தல், திடீர் பொருள் வரவு, பகை வெல்லும் சக்தி, துறவறம் கொள்ளும் நிலை, நெருப்பினால் ஆபத்து, மந்திரசக்தி, மந்திர சக்தி பெற்று மக்களால் பாராட்டப்படுதல், கண்நோய், மருந்துகள், உடல்வலி, நண்பர்கள், விஷம், மீன்பிடித்தல், முத்து எடுத்தல், மருத்துவம் சம்பந்தப்பட்ட தொழில், விஷ மருந்து.
அழுக்குத்துணை, வியாபாரம், நகை, தரகு வியாபாரம், மாந்திரீகம், பேயோட்டும் தொழில், தையல் கலை, மட்பாண்டம் செய்தல், கூலி வேலை, மூலிகை வியாபாரம், ஞான உபதேசம், ஓடு, செங்கல் தயாரித்தல் விற்றல். கேது பகவான் செவ்வாய் வீடான மேஷத்திலும், சூரியன் வீடான தனுசு ராசியிலும் நற்பலன் தருவார். கடகம் – மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக கேது திசை நன்மை செய்யும்.
கேது யந்திரம்…..
கேது
கேது பலநிறம் உள்ளவர். பல நிறம் உள்ள மலர்மாலை, ஆடை, குடை, கொடி ரதம் கொண்டவர். மேரு மலையை இடமிருந்து வலமாக சுற்றி வருபவர். தெற்கு முகமாக, கொடிமரம் போன்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பவர். நான்கு கரங்களை கொண்டவர்.
அந்தர்வேதி என்னும் தேசத்தின் அதிபதி. ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது தான்யம்- கொள்ளு, ரத்தினம் -வைடூரியம், அதிதேவதை- சித்ரகுப்தன், பிரத்யதி தேவதை -பிரம்மா, மனைவி -சித்ரலேகா, மகன் -அபமிருது. விநாயகரை வழிபட வேண்டிய வரங்களை அருளுபவர்.
கேது யந்திரம்…..
14 15 10
9 13 17
16 11 12
ராகு யந் திரம்ராகு யந்திரம்
ராகு நீலநிறம் கொண்டவர். நீல நிற மலர், குடை, கொடி தரித்துள்ளவர். நீல நிற ரதத்தில் அமர்ந்து மகாமேருவை இடமிருந்து வலமாக (அப்பிரதட்சணமாக) வலம் வருபவர். சிம்ம வாகனமும், முறம் போன்ற ஆசனமும் உடையவர்.
நான்கு கைகளிலும் கத்தி, கேடயம், சூலம், வரமுத்திரையுடன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர். பைடீன்ஸ் கோத்திரத்தை சேர்ந்தவர். பர்பர தேசாதிபதி.
இவருக்கு உரிய தான்யம் -உளுந்து, ரத்தினம்- கோமேதக்கல், மனைவி -ஸிம்ஸி, மகன் -அமிர்தகடிகன், ஆதிதேவதை -துர்கை, பிரத்யதி தேவதை -ஸர்ப்பராஜன். காமதேனுவையும், ஸர்ப்பேஸ் வரரையும் வழிட்டாலும் இவரது அருளைப் பெறலாம். துர்கா ஸுக்தம்.
ஸ்ப்தசதீ பாராயணம் போன்ற துர்க்கை வழிபட்டாலும் இவரின் அருளைப் பெறலாம்.
திருமணமும், ராகு – கேதுவும்
திருமண வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் லக்கனத்தில் ராகு அமர்ந்தால் ஏழாவது வீட்டில் கேது அமருவார். லக்கனத்தில் கேது அமர்ந்தால் ஏழாவது வீட்டில் நான் இருக்கிறேன் என்று ராகு அமருவார். இருவரும் சேர்ந்து திருமணத்தில் பிரச்சினையை ஏற்படுத்துவார்கள். இருவரும் திருமணத்தில் எப்பொழுதும் பிரச்சினையை ஏற்படுத்தமாட்டார்கள்.
அந்த தசா நடக்கும் போது பிரச்சினையை ஏற்படுத்துவார்கள். ராகுவும் கேதுவும் அமரும் வீட்டில் உள்ள பலனை கொடுப்பதால் அந்த வீட்டின் தசா நடந்தாலும் உஷாராக இருக்க வேண்டும். அனைத்து லக்கனத்திலும் ஒரு மாதிரி பலனை தராது லக்கனத்திற்க்கு தகுந்த மாதிரி பலனை தரும்.
ரிஷப லக்னம்,கடக லக்னம்,சிம்ம லக்னம்,கும்ப லக்னம் ஆகிய லக்னத்தை கொண்டவர்களுக்கு நல்லது செய்யும். இரு கிரகங்களும் பொதுவாக சந்தேகங்களை ஏற்படுத்தும் அதில் இருந்து பிரச்சினையை உருவாக்கி இருவரையும் பிரிய வைக்கும்.
இதில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 

No comments:

Post a Comment