jaga flash news

Friday 8 April 2016

விமர்சனம்

விமர்சிக்கும் உலகம் இது 
பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. 
சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி.
அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?
நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.
அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.
சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரு… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.
நீதி:
எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்

2 comments:

  1. எல்லாம் மாயை. சூரியனுக்குக் கீழே மனுஷனோ, மனுஷியோ படுகிற எல்லாப் பிரயாசமும் வீண்.

    மாயை, என்பதற்கான, எபிரேய வார்த்தையின் நேர்ப்பொருள்
    *மூச்சு அல்லது ஆவி*. இது விஷயம் இல்லாததை, நிலைக்காததை, நீடித்த பயன் இல்லாததைக் குறிக்கிறது.

    சூரியனுக்குக் கீழே என்ற வார்த்தை, இந்தப் பிரபஞ்சத்தில், அல்லது, இந்த லோகத்தில்(பூமியில்) என்ற அர்த்தத்தைத் தருகிறது. ஆகவே, எல்லாம், ஈசனின் விருப்பத்திற்கு எதிரான, மனிதனுடைய, முயற்சிகள் எல்லாம் *மாயையே*. ஆகவே, இறைவனோடு உள்ள பந்தத்திற்கு மட்டுமே, முக்கியத்துவம் கொடுப்பது தான், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு, முக்கிய அம்சமாகத் தெரிகிறது. ஏனென்றால், இறைவனின் பார்வையில், துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி, ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாது.
    ஏனெனில், ஈசன் உயர்வானவர். நீ பூமியில் இருக்கிறாய். ஆகவே உன் வார்த்தைகள் சுருக்கமாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. சூரியனுக்கு கீழே, பூமியில், என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளுங்கள். (பிரபஞ்சம் என்பது அண்டத்தை, அதாவது, நடச்த்திரங்கள் அடங்கிய வானம் என்று பொருள் தரும்.) தவறுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete