jaga flash news

Wednesday 2 August 2017

ஆடி 18 ஆம் பெருக்கு

ஆடி 18 ஆம் பெருக்கு.
. இல்லறம் செழிக்கும்..ஆடிப்பெருக்கு விழா!
நீரின்றி அமையாது உலகு என்பார்கள். அதேபோல், நம் வாழ்வில், எல்லா சடங்கு சாங்கிய நிகழ்வுகளின் போதும் தண்ணீருக்கும் நமக்குமான பந்தம் உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படியொரு உணர்வுபூர்வமான வைபவம்தான் ஆடிப்பெருக்கு விழா!
வருடந்தோறும் ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள், ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக நடைபெறுகிறது. கோடைக் காலம் முடிந்து, அந்த வெயிலில் மண்ணெல்லாம் பாளம் பாளமாக வெடித்து, ஆடிக் காற்றில் அந்த மண்ணுக்குள் காற்று நிரம்பியிருக்க… ஆடி மாதத்தில் சாகுபடிக்கு பூமியே தயாராக இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல, காவிரி முதலான நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயம் சீரும் சிறப்புமாக செழிக்கும். தானியம் பெருகும். தனம் கொழிக்கும்.
முக்கியமாக, ஆடிப்பெருக்கு நன்னாளில் நீர்நிலைகளில் நீராடி வணங்கினால், தாம்பத்ய வாழ்வு சிறக்கும். இந்த நாளில், வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆறு, குளம், நதி முதலான நீர்நிலைகளில் நீராடுவர்.
புது மணப்பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றிக் கொள்ளும் வைபவமும் இந்தநாளில்தான் நடைபெறும். புதிய மஞ்சள் சரடுடன் புதிய தாலியை பெண்கள் ஆற்றங்கரைகளில் அணிந்து கொள்வார்கள். கன்னிப் பெண்களுக்கும் புதிய மஞ்சள் கயிறு அணிவிப்பார்கள். மேலும், எலுமிச்சை, தேங்காய், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை என சித்ரான்னங்கள் படைத்து அனைவருக்கும் தந்து சாப்பிடுவார்கள்.
தம்பதிக்குள் அற்ப விஷயங்களுக்காக பிரிவினை ஏற்பட்டாலும், கருத்து வேறுபாடுகளைக் களைந்து, மீண்டும் ஒன்றுசேர வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியைப் அந்த ஒருமாதத்தில் பிரித்து வைப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்ற தனது பெண்ணை, இந்த மாதத்தில் பெண்ணைப் பெற்ற தாயார் சீர் செய்து தன் வீட்டுக்கு அதாவது பெண்ணின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வருவார்.
ஆடி மாதமான இந்த மாதத்தில் தன் தாய்வீட்டில் இருக்கும் பெண், அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களையும் கற்றறிவாள். சடங்கு சாங்கியத்தை எப்படி மேற்கொள்வது, எல்லோரையும் அனுசரித்து குடும்பம் நடத்துவது எப்படி என்பதையெல்லாம் அறிந்து நடக்க சொல்லிக் கொடுக்கப்படும். பிறந்த வீட்டாரின் சொல்படி கேட்டு புகுந்த வீட்டில் பெயரெடுத்து வாழ்வாள். பெருமைபட வாழ்வாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
ஆடி மாத அருமை, பெருமைகளை புரிந்து உணர்ந்து ஆடிப்பெருக்கு போல் இல்லம் சிறக்க, இல்லறம் செழிக்க வாழ்வோம்!

No comments:

Post a Comment