jaga flash news

Sunday 13 August 2017

புத்தர் சொன்ன நீதி...........

போதிவனத்தில் தியானத்திலிருந்த புத்தரைத் தரிசிப்பதற்காக நடுத்தர வயதுடைய ஒருவன் காத்திருந்தான்.
புத்தர் தியானம் கலைந்து கண் விழித்தார்.
புத்தரை வீழ்ந்து வணங்கினான். புத்தர் அவனிடம் " நீ யார் ? " என்று வினவினார்.
அவன் " என் பெயர் அபிநந்தன் " என்றான்.
புத்தர், " உனக்கு என்ன வேண்டும் ? " என்று கேட்டார்.
அபிநந்தன், " பெருமானே, நான் ஒரு ஏழை. எனக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். நான் உலகப் பற்றிலும், உலக வாழ்க்கையிலும் உழன்று ஏராளமான துன்பங்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்து விட்டேன். என்னை சந்நியாசியாக்கிப் பந்த பாசங்களிலிருந்து விடுவித்து ஞானம் அருளுங்கள். " என்றான்.
புத்தர் சிறிது யோசித்து அவனிடம், " அபிநந்தா இந்த மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. காரணம் என்ன தெரியுமா? காற்று இலைகள் மீது மோதுவதால் மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. மனித மனங்கள் இந்த இலைகளைப் போன்றவை. மனித மனங்கள் மீது உலகப் பற்று என்கிற காற்று வந்து மோதுகிறது. அதனால் மனங்கள் ஆடுகின்றன. அலைபாய்கின்றன. முதலில் உன் மனத்திலுள்ள பந்த பாசங்கள் அனைத்தையும் உன்னால் நீக்கிவிட முடியுமா? " என்று கேட்டார்.
அபிநந்தன், " புத்த பெருமானே , என்னால் பந்த பாசங்களைத் துறந்து விட முடியும் " என்றான்.
" சரி அப்படியானால் நீ இன்று முதல் போதி வனத்திலேயே தங்கலாம். " என்றார் புத்தர்.
சில நாட்கள் கடந்தன.
ஒரு நாள் புத்தர் அருகிலுள்ள குளத்திற்கு நீராடுவதற்காகச் சென்றார். அப்போது அவர் ஒரு மரத்தின் கீழ் , அபிநந்தன் பக்கத்தில் ஒரு நாய்க் குட்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.
புத்தர் அவனிடம், " அபிநந்தா, இது ஏது? " என வினவினார்.
அபிநந்தன், " பெருமானே, இது என் நாய்க்குட்டி. இது என்னை விட்டு அகல விரும்புவதே இல்லை. எப்போதும் என்னுடனேயே இருக்க விரும்புகிறது. ஆதலால் இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்." என்று கூறி இழுத்தான்.
புத்தர் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்.
மேலும் சில நாட்கள் கடந்தன. புத்தர் முன்பு போலவே நீராடச் சென்று கொண்டிருந்தார்.
இப்போதும் அபிநந்தன் அதே மரத்தடியில் நின்றிருந்தான். அவன் அருகில் நாய்க்குட்டியுடன் ஒரு சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.
புத்தர் " அபிநந்தா, இந்தச் சிறுவன் யார் ? " எனக் கேட்டார்.
அபிநந்தன், " ஐயனே, இவன் என் மகன். இவன் இந்த நாய்க் குட்டியுடன் எப்போதும் இருக்க விரும்புகிறான். இவனால் இந்த நாய்க்குட்டியை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவனையும்..." என்றான்.
புத்தர் மீண்டும் சிரித்தவாறு அங்கிருந்து சென்றார்.
மேலும் சில நாட்கள் கடந்தன. அன்றைய தினம் புத்தர் நீராடக் குளத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
குளத்தின் கரையிலிருந்த அதே மரத்தடியில் முன்பு போலவே அபிநந்தன் நின்று கொண்டிருந்தான். அவனருகில் நாய்க்குட்டி, சிறுவன் ஆகியவர்களுடன் ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தாள்.
புத்தர்," அபிநந்தா, யார் இந்தப் பெண் ? " என்றார்.
" பெருமானே, இவள் என் மனைவி. இவளால் இந்தச் சிறுவனை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவளும்..." என்று கூறி இழுத்தான்.
புத்தர் சிரித்துக் கொண்டே இரண்டு காலிப் பாத்திரங்களை எடுத்தார்.
" அபிநந்தா, இதோ பார் " என்று சொல்லிக் கொண்டே அவர் ஒரு பாத்திரத்தில் கற்களைப் போட்டு நிரப்பினார். அதைக் குளத்து நீரில் விட்டார். அந்தப் பாத்திரம் குளத்தில் மூழ்கியது.
மற்றொரு காலிப் பாத்திரத்தைக் குளத்து நீரில் விட்டார். அது மிதந்து சென்றது.
" அபிநந்தா கனமான பாத்திரம் குளத்தில் மூழ்கி விட்டது. காலிப் பாத்திரம் குளத்தில் மிதந்து செல்கிறது. கனமான பாத்திரம் என்பது பந்த பாசம் எனும் உலகப் பற்று நிறைந்த பாத்திரம். அது பிறவித் துன்பங்கள் என்ற கடலில் மூழ்கிறது. காலிப் பாத்திரம் என்பது ஞானப் பாத்திரம். அது மூழ்காமல் மிதந்து செல்கிறது.
தலையிலிருந்து சில கேசங்கள் தாமாக உதிர்ந்து விடுகின்றன. அவ்விதம் உதிர விரும்பாத கேசங்கள், தலையில் இருந்து கொண்டே நரைத்து நம்மைக் கேலி செய்கின்றன. உதிர்ந்த கேசங்கள் ஓடி
விடுகின்றன.
உலகப் பற்று இல்லாதவர்கள் உதிர்ந்த கேசங்களைப் போன்றவர்கள். பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டவர்கள் உதிர விரும்பாமல் தலையில் நரைத்து நம்மைக் கேலி செய்கிற கேசங்கள் போன்றவர்கள். விலக்க முடியாத பந்த பாசங்கள், உதிர விரும்பாத தலையில் உள்ள நரைத்த கேசங்கள் போன்றவை.
உனது மனம் உலகப் பற்றிற்காகவே படைக்கப் பட்டிருக்கிறது. அதற்கு விலையாக நீ உலகத் துன்பங்களையும், சித்ரவதைகளையும் அனுபவித்தேத் தீர வேண்டும். நீ இங்கிருந்து செல்லலாம், போய் வா " என்றார் புத்தர்

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete