jaga flash news

Sunday 13 August 2017

!!**ஆதி சங்கரர்**!!

!!**ஆதி சங்கரர்**!!
காசிக்கருகில் ஒருநாள், கங்கை நதியில் குளித்துவிட்டு சங்கரர் தன் சிஷ்யர்களுடன் பாதையில் போய்க்கொண்டிருந்தார். எதிரே, அந்தக்கால வருணாசிரம முறைப்படி கீழ்ஜாதிக்காரனான ஒருவன் வந்துகொண்டிருந்தான். பார்ப்பதற்கு அருவெருப்பு தரும் உருவம். கையில் பிடித்திருந்த கயிறுகளில் நான்கு நாய்களைக்கட்டி இழுத்துக்கொண்டு வந்தான். அவனிடமிருந்து துர்வாசம் வீசிற்று. மிக அருகில் அவன் வருவதாகத் தோன்றவே, ஆதிசங்கரர் அவனை `சற்று விலகிப் போ!` என்றார். அவனோ விலகவில்லை. நின்றான். ஆதிசங்கரரைப் பார்த்துக் கேட்டான்: “எது விலக வேண்டும்? உடம்பா? ஆன்மாவா? ஆன்மாவென்றால் அது எங்கும் நிறைந்திருப்பது . எல்லாவுமானது. அதிலிருந்து அதுவே விலகமுடியுமா? உடம்புதான் என்றால், அது ரத்தம், சதை, எலும்புகளாலானது. நிச்சயம் ஒரு நாள் அழியப்போவது. அழியப்போகும் உடம்புகளில் ஒன்று, இன்னொரு உடம்பை விலகிப் போ எனச் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்?“
சங்கரர் லேசாக அதிர்ந்தார். அவன் தொடர்ந்தான்: “கங்கையின் பரப்பில் பிரதிபலித்து மின்னும் சூரியன், சேரியிலிருக்கும் குட்டையில் பிரதிபலிக்கும் சூரியனிடமிருந்து வேறுபட்டதா? “
எதிர் நின்றவனைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருந்த சங்கரரின் மனதில் ஆன்மஒளி பிரகாசித்தது. “தாங்கள் இவ்வளவு விஷயஞானம் உடையவர் எனத் தெரியாது. ஏதோ தவறாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. தங்களை நமஸ்கரிக்கிறேன்“ என்று கைகூப்பி, தலைதாழ்த்தினார் ஆதிசங்கரர். இந்தக் கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் அவர் அப்போது 5 ஸ்லோகங்களை (பாடல்களை) இயற்றி, எதிர் நின்றவன் முன் பாடினார். அதற்குப் பெயர் `மனிஷா பஞ்சகம்`. `மனிஷா` என்றால் உறுதிப்படுத்திக்கொள்ளல்(conviction) அல்லது திட நம்பிக்கை எனப் பொருள். பஞ்சகம் என்பது ஐந்து ஸ்லோகங்கள் அல்லது பாடல்கள். ஒருவன் ஆன்மதரிசனம் அடைந்தபின், அதாவது தன்னை முழுமையாக உணர்ந்தபின், அவன் மேல்ஜாதி, கீழ் ஜாதி, உயர்குலம், தாழ்ந்த குலம் போன்ற சமூக வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவனாகிறான் என்கிற ஆன்மீகக் கருத்தை முன்வைக்கிறது மனிஷா பஞ்சகம்.
அத்வைத சித்தாந்தத்தைத் தன் குருவிடமிருந்து சங்கரர் ஏற்கனவே கற்றிருப்பினும், இந்த நிகழ்வில்தான் அதன் உண்மையான சாரம் அவரால் ஆழமாக உணரப்பட்டது என்பர். விஸ்வனாதராகக் காசியில் வீற்றிருக்கும் சிவபெருமானே ஆதிசங்கரரை சோதிக்க, இப்படிப் புலையனாக எதிர்வந்தார் என்றும், அவனுடைய கையில் பிடித்திருந்த நான்கு நாய்கள், உண்மையில் நான்கு வேதங்களைக் குறிக்கும் என்றும் கூறுவர் சமயச்சான்றோர்.

No comments:

Post a Comment