jaga flash news

Tuesday 26 May 2020

விகர்ணன் !

விகர்ணன்!

பத்து பேர் கூடியிருக்கிற சபையில் அவர்கள் கருத்துக்கு மாற்றாக ஒரு கருத்தைச் செல்வதென்றால் அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதுவும் தீயவர்களே நிறைந்திருக்கிற சபையில் அவர்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு நற்கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், அதற்குத் தனியாக ஒரு துணிவு வேண்டும். அதற்கும் மேலாக, தீயோர்கள் நிறைந்து ஆபாச வெறியாட்டம் ஆடும்போது, அங்கிருந்த அறிவிலும் ஞானத்திலும் வயதிலும் மூத்தவர்கள்கூட, ஒவ்வொரு காரணத்துக்காக வாய்மூடி மவுனிகளாக இருந்தபோது, அவர்கள் அனைவரையும்விட அறிவு, ஞானம், வயது என அனைத்திலும் சிறியவனாக இருந்த ஓர் இளைஞர், அந்தச் சபையில் நடக்கும் தீயவர்களின் ஆபாச வெறியாட்டத்தைத் தடுக்க முனைகிறான் என்றால், அந்த இளைஞனுக்கு எவ்வளவு ஆவேசம் இருக்க வேண்டும்!

அதனால் தான் அந்த இளைஞனைப் பகைவர்களில் ஒருவனாகக் கருதிக் கொலைசெய்த மாபெரும் வீரன்கூட தன்னைத் தானே நொந்துகொண்டு அழுதான். இவ்வளவு பெருமை வாய்ந்த அந்த இளைஞன் யார்? உப்புக் கடலில் முத்து பிறப்பதைப் போலப் பிறந்தவன். இருண்ட வானத்தில் தோன்றும் வால் நட்சத்திரம் வருவதைப் போல வந்தவன் அந்த இளைஞன். அவன் கர்ணனைவிடத் தலைசிறந்தவன். திகைக்க வேண்டாம். மகாபாரத யுத்தம் பதினெட்டு நாட்கள் நடந்தது. அதில், பாதி நாட்கள் தாண்டியும் கர்ணன் போரில் கலந்துகொள்ளவில்லை. பத்து நாட்கள் கழிந்து பதினோராவது நாளில் இருந்துதான், அதாவது பீஷ்மர் கீழே விழுந்த பிறகுதான் கர்ணன் போரில் கலந்துகொண்டான். பீஷ்மர் ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டார் என்பதற்காக, கர்ணன் அந்த முடிவை எடுத்தான். கர்ணனுக்கு முடிசூட்டி, அங்க தேசத்துக்கு அரசனாக்கி அவனுடைய பெருமைக்கெல்லாம் காரணமாக இருந்தது துரியோதனனா இல்லை பீஷ்மரா?

கர்ணன், துரியோதனனால் அடைந்த நன்மைகள் பற்பல இவ்வாறு கர்ணனைப் பற்றிப் பல விதமாகவும் நாம் பட்டியலிட முடியும். இவ்வாறு எந்தவிதமாகவும் சொல்ல முடியாதபடி, கர்ணனைப் போல அல்லாமல் துரியோதனனை இடித்துத் திருத்த முயல்வான் என்பதற்காகத் தானோ என்னவோ இந்த இளைஞனுக்கு விகர்ணன் எனப் பெயரிட்டார்கள். துரியோதனனின் தம்பிகளில் ஒருவன் விகர்ணன். இவன் மிகவும் நல்லவனாகவும் தர்மம் அறிந்தவனாகவும் இருந்தும். துரியோதனனிடம் அவன் எதையும் பெறவில்லை; ஏச்சும் பேச்சும்தான் பெற்றான். துரியோதனனும் அவன் கூடப் பிறந்தவர்களும் பீஷ்மர் துரோணர், கிருபர் முதலியவர்களிடம் இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொண்டிருந்தாலும் நல்லவற்றைக் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் துரியோதனன் தம்பிகளில் ஒருவனான விகர்ணன் நல்லவற்றை மட்டுமே கடைப்பிடித்தான். அதை வியாஸர் வெளிப்படுத்தியிருக்கும் காலம், இடம் சூழல் முதலியவை அற்புதமானவை!

கவுரவர்களும் பாண்டவர்களும் சூதாட்டம் ஆடிக்கொண்டுடிருந்த நேரம்! தர்மர் செல்வங்களை எல்லாம் தோற்று பின் பாண்டவர்கள் அனைவரையும் வைத்துத் தோற்றார். அதன்பின் திரவுபதியையும் ஆட்டத்தில் இழந்தார். ஒற்றை ஆடையுடன் வீட்டுக்கு விலக்காக இருந்த திரவுபதியை துரியோதனன் ஏவலால் துச்சாதனன் பலாத்காரமாகப் பிடித்து இழுந்துவந்து சபையில் நிறுத்தினான். துயரத்தின் எல்லை காணாத திரவுபதி, சபையில் அனைவரையும் நோக்கி பலவிதமாகவும் தர்மங்களைச் சொல்லி நீதி கேட்டாள். யாருமே வாய் திறக்கவில்லை. பதில் சொல்ல முடியாததற்கான காரணத்தையே பதிலாகச் சொன்னார் பீஷ்மர். அந்த நேரத்தில் விகர்ணன் எழுந்தான்: அரசர்களே! சபையில் இவ்வளவு பேர் இருக்கிறீர்களே! திரவுபதியின் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்கள்! பதில் சொல்லாவிட்டால், நம் அனைவருக்கும் உடனே நரகம்தான் கிடைக்கும். பீஷ்மர், திருதராஷ்டிரர், அறிவாளியான விதுரர் ஆகியோர்கூட ஒன்றும் சொல்லவில்லையே! ஆசார்ய புருஷர்களும் பிராம்மணோத்தமர்களுமான துரோணர் கிருபர் ஆகியோர்கூட வாயைத் திறக்கவில்லை. ஏன்? எல்லாத் திசைகளில் இருந்தும் எல்லா அரசர்களும் வந்திருக்கிறீர்கள். யாராவது ஒருவராவது உங்களுக்குத் தெரிந்த தர்மத்தைச் சொல்லுங்கள்! யாருக்கும் எதற்கும் பயப்படாதீர்கள் என்றான்.

அதர்மம் நிறைந்த அந்த சபையில் விகர்ணனின் வாக்கு எடுபடவில்லை. அதற்காக விகர்ணன் மனம் தளர்ந்து போகவில்லை. மறுபடியும் மறுபடியும் இங்கு நடக்கும் அக்கிரமத்தைத் தட்டிக் கேளுங்கள்! என்று கூவினான். அவன் வார்த்தைகள் மட்டும் அங்கே சபையில் வெளிபட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தனவே தவிர, அங்கிருந்தோர் யாரும் ஒரு வார்த்தைகூடப் பதில் சொல்லவில்லை. அதாவது விகர்ணன் சொன்னதை ஆமோதிக்கவும் இல்லை; மறுத்துப் பேசவும் இல்லை. அந்த அளவுக்குச் சபையில் இருந்தவர்கள் துரியோதனனிடம் பயந்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் விகர்ணனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. சற்று சலித்தான். கைகளைப் பிசைந்துகொண்டு பெருமூச்சு விட்டான். அரசர்களே! இவ்வளவு பேரும் பயந்துவிட்டீர்களே! நீங்கள் இப்படி இருந்தால், நீங்களும் உங்களை நம்பியிருக்கும் நாடும் மக்களும் என்ன ஆவார்கள்? வலிமை உள்ளவன் வைத்தது எல்லாம் சட்டம் என்று வாய்மூடி இருப்பதா தர்மம்? விகர்ணன் அங்கே, துரியோதனன் சபையில் பயந்து வாய்மூடி இருந்தவர்களை வார்த்தைகளால் இடித்துவிட்டு, தன் உள்ளத்தில் இருந்தததைத் தெளிவாக வெளிப்படுத்தினான்.

அரசர்களே! நீங்கள் எல்லோரும் என் கேள்விக்குப் பதில் சொன்னாலும் சரி, பதில் சொல்லாவிட்டாலும் சரி. நான் கவலைப்படப் போவதில்லை. கவுரவர்களே! எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதைச் சொல்லத்தான் போகிறேன். வேட்டை, கள், சூதாட்டம், சிற்றின்பத்தில் மிகுந்த பற்று என்னும் நான்கும்-அரசர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு )மிகவும் துன்பத்தை விளைவிக்கும். இவற்றின்மேல் ஆசை கொண்ட மனிதன் தர்மத்தைவிட்டு விலகிவிடுவான். அது இங்கும் அப்படியே நடக்கிறது. சூதாட்டத்தில் அகப்பட்டுக்கொண்ட தர்மர், அதில் பற்று வைத்த தர்மர், திரவுபதியைப் பந்தயமாக வைத்து இருக்கிறார். அதை இங்கிருப்போர் அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். அதுவே தவறு. அதற்கும் மேலாக திரவுபதி என்ன தர்மருக்கு மட்டுமா சொந்தம்? குற்றமற்றவளும் யாகத் தீயில் இருந்து தோன்றியவளுமான திரவுபதி, பாண்டவர் ஐவருக்கும் அல்லவா சொந்தம்! ஐவருக்கும் பொதுவானவளை, தர்மர் மட்டும் தன் இஷ்டப்படி எப்படி பந்தயப் பொருளாக வைக்கலாம்?

சரி! அவர் வைத்துவிட்டார்; சகோதரர்கள் வாய் திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் செய்துவிட்டதாகவே வைத்துக்கொள்ளுங்கள். அவராகவா செய்தார்? அந்த நிலைக்குத் தருமரைத் தள்ளி, அவரைத் தூண்டிவிட்டவர்கள் யார்? திரவுபதியைப் பந்தயமாக வை என்று சகுனியல்லவா தூண்டினார். இந்த அசம்பாவிதங்களுக்கு எல்லாம் காரணம் சகுனியே. தெரிந்தும் வாய் மூடி இருக்கிறீர்களே! சரி அதையும் விட்டுவிடுவோம். தர்மர் சூதாட்டத்தில் தன்னைத் தோற்று, அதன்பிறகே திரவுபதியை வைத்துத் தோற்றிருக்கிறார். தானே அடிமையான பிறகு, அந்த தர்மர் எப்படி அடுத்தவரை அடிமையாக்க முடியும்? அது செல்லுபடியாகாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே! ஆகையால் இந்த திரவுபதி அடிமையில்லை. சூதாட்டத்தில் அவளை வைத்து தர்மர் தோற்றது செல்லுபடியாகாது. திரவுபதியை யாரும் அடிமையாக நினைத்து உரிமை கொண்டாட முடியாது. இதுவே என் கருத்து. இதைத்தான் திரவுபதியும் கேட்கிறாள். பதில் சொல்ல வேண்டியது இந்தச் சபையின் பொறுப்பு என்று கர்ஜித்து முடித்தான் விகர்ணன். அத்தி பூத்தாற்போல், எப்போதாவது நல்லவற்றுக்கு ஆதரவு கிடைக்கும் போலிருக்கிறது. தர்ம ஆவேசத்துடன் விகர்ணன் பேசி முடித்ததும், சபையில் ஒரு மாபெரும் மாறுதல் உண்டானது. விகர்ணனைப் புகழ்வதும் சகுனியை இகழ்வதுமாகப் பெருங்கூச்சல் உண்டானது. விகர்ணன் பற்றவைத்த தர்மம் என்னும் சின்னஞ்சிறிய தீப்பொறி பரவத் தொடங்கிவிட்டது போல் இருந்தது ஆனால், அதை ஒரு பெருவெள்ளம் வந்து அணைத்துவிட்டது அதன் பெயர்...

விகர்ணனால் சபையில் உண்டான மாறுதலைப் பார்த்தான் கர்ணன். உடனே அவன் கைகளைத் தூக்கி சபையில் எழுந்த கூச்சலை அடக்கிவிட்டு விகர்ணன் பக்கம் திரும்பினான். விகர்ணா! குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக் காம்பே! திரவுபதியின் கேள்விக்கு இங்கு யாரும் பதில் சொல்லாமல் இருந்ததில் இருந்தே அவள் அடிமைதான் என்பதை இங்கு எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் என்பது உனக்குத் தெரியவில்லையா? சிறு பிள்ளைத்தனமாக இவ்வளவு பெரிய சபையில் அடக்கமில்லாமல் பேசுகிறாய். உனக்கு தர்மமும் தெரியாது, அறிவும் கிடையாது. ஐவருக்கும் பொதுவான, தாசியான திரவுபதி ஒற்றை ஆடையுடன் இருந்தால் என்ன? அல்லது ஆடையே இல்லாமல் இருந்தால்தான் என்ன? ஆச்சரியப்பட அதில் என்ன இருக்கிறது? சிறுபிள்ளை நீ! மூடு வாயை! என்று விகர்ணனை அடக்கிய கர்ணன், துச்சாதனன் பக்கம் திரும்பினான்.

துச்சாதனா! பாண்டவர்களின் மேல் உள்ள ஆடைகளையும் திரவுபதியின் ஆடைகளையும் கொண்டு வா! போ! என்று ஏவினான். கர்ணனின் அந்த வார்த்தைகள் விளைவித்த விபரீதம் எல்லோருக்குமே தெரியும்! தன்னுடைய வாக்கு சபையில் இவ்வாறு கர்ணனால் அடித்துத் தூக்கி வீசப்பட்டத்தை அறிந்து, விகர்ணன் மனது என்ன பாடுபட்டிருக்கும்? அவன் மனது பாடுபட்டதோ இல்லையோ, அவனைக் கொன்றவனின் மனம் அழுதது. ஆமாம்! விகர்ணனைக் கொன்றவன், விகர்ணனுக்காக அழுதான். துரோணரின் தலைமையில் கவுரவர்கள் போர் புரிந்து கொண்டிருந்தபோது(ஏற்கெனவே நாம் பார்த்த) ஜயத்ரத வதத்துக்குப் பிறகு போர்க்களத்தில் பீமன் துரியோதனனின் தம்பிகளில் ஏழு பேரை ஒட்டுமொத்தமாகக் கொன்றான். சத்ருஞ்யன், சத்ருஸகன், சித்ரன், சித்ராயுதன், த்ருடன், சித்ரஸேனன், விகர்ணன் என்னும் அந்த ஏழு பேரும் மாபெரும் வீரர்கள். அவர்களில் ஒருவனான விகர்ணனைக் கொல்ல நேர்ந்ததற்காக பீமன் அழுதான்.

தம்பி விகர்ணா! எங்கள் நன்மையில் பற்று கொண்டவன் நீ! விசேஷமாக தர்மரின் நன்மையில் பற்று அதிகமாகக் கொண்டவன். அப்படிப்பட்ட தர்மரின் உன்னைக் கொன்று தரையில் தள்ளும்படியாக ஆகிவிட்டதே! சே! க்ஷத்திரிய தர்மம் எத்தனை கொடியது! என்று தன்னைத்தானே பீமன் நொந்துகொண்டான். ஆஞ்சநேயரை நேருக்கு நேராகத் தரிசித்து அவர் அருளை முழுமையாகப் பெற்ற மாபெரும் வீரரான பீமனையே அழ வைத்த ஒரு கதாபாத்திரம் விகர்ணன். துரியோதனனும் அவன் சகோதரர்களும் செய்த தீமைகளை எல்லாம் விவரித்த வியாஸர், அவர்களில் நல்லவனான விகர்ணனின் தர்ம ஆவேசத்தையும் பதிவு செய்திருக்கிறார்

No comments:

Post a Comment