jaga flash news

Tuesday 16 March 2021

காரடையான் நோன்பு விளக்கம்

காரடையான் நோன்பு விளக்கம்
==============================

காரடையான் நோன்பிற்கும் யமனுக்கும் உள்ள சம்மந்தம் என்ன என இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

சத்தியவான் சாவித்திரி பற்றிய கதை மார்கண்டேய முனிவரால் கூறப்பட்டது. இங்கே மார்க்கண்டேயரை நினைவில் வையுங்கள். திரௌபதிக்கு பதிபக்தி பற்றி விவரிக்க சாவித்திரி பற்றி எடுத்துரைக்கிறார். எமனிடம் இருந்து சாவித்திரி சத்தியவானின் ஆன்மாவை திரும்ப பெற்றாள். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக கார அடை செய்து எமனுக்கு படைத்தாள் என்கிறது கதை.

ஜோதிட விளக்கம்

மாசிமாதம் என்பது கும்ப மாதம். கும்பம் என்றால் கலசம் அதாவது மறைபொருள் அல்லது மறைத்து வைக்கப்பட்ட பொருள்கள் கொண்ட ராசி எனவும் கூறலாம். மேலும் பித்ருக்களை குறிக்கும் மகம் இருக்கும் சிம்ம ராசிக்கு சப்தமத்தில் இருக்கும் ராசி கும்பம். இது எமலோகம் என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் இருளை குறிக்கும் சிவராத்திரி, மயான கொள்ளை மற்றும் காரடையான் நோன்பு ஆகியவை கொண்டாடப்படுகிறது.

மாசி மாதத்தில் சூரியன் கும்பத்தில் இருக்கும். பங்குனி மாதம் தொடங்கும் போது சூரியன் மீனராசியில் இருக்கும். சூரியன் மாசியிலிருந்து பங்குனி செல்வதற்குள் இருக்கும் காலகட்டமே காரடையான் நோன்பு. இதை இன்னும் தெளிவு பெற கூறவேண்டுமானால், சதய ராசி மண்டலத்திலிருந்து பத்ரா ராசி (பூர்வ பத்ரா பாதா/பூரட்டாதி) மண்டலத்திற்குள் சூரியன் செல்லும் காலம். ஆக சதயம் இங்கே முக்கியமான நட்சத்திரமாக கவனிக்கப்படுகிறது. 

சதயம் (சதாபிஷா) என்பதன் பொருள் நூறு மருத்துவர்கள் என்பதாகும். மூலிகைகள் ஆன வட்டவடிவான வட்டவடிவமே சதய நட்சத்திர வடிவம். இங்கே கார மற்றும் வெல்லத்தால் ஆன வட்டவடிவ அடைகள் என்பதை சதய வடிவாக கொள்ளலாம். அதுபோல சதய நட்சத்திரத்தின் அதிதேவதை எமதர்மன் என்பதும் குறிப்பிட்டதக்கது. இதை தொடர்புபடுத்தி பார்க்கும் போது சதய நட்சத்திரத்தில் சூரியன் பயணிக்கையில் விரதம் மேற்கொண்டு சதய நட்சத்திர அதிதேவதை எமனிடமிருந்து சத்தியவானை மீட்டு, அவருக்கு சதய வடிவான கார மற்றும் வெல்ல அடைகளை படைத்து நன்றி செலுத்தும் நாளே காரடையான் நோன்பு. 

இந்த கதையை வர்ணிக்கும் மார்கண்டேய முனிவரும் சதய நட்சத்திர அதிதேவதை எமதர்மனிடமிருந்து மீண்டவர் என்பது இங்கே தொடர்புபடுத்தி பார்க்கலாம். 

ஆகவே அதிதேவதை வழிபாடுகளை சிறப்பாக மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக முன்னோர்கள் பரிந்துரை செய்ததே அர்த்தமுள்ள நோன்புகள் மற்றும் பண்டிகைகள்.

No comments:

Post a Comment