jaga flash news

Monday 7 June 2021

சனியை புரிந்துகொள்வோம்..!

சனியை புரிந்துகொள்வோம்..!

சனி சாதாரண மக்களை குறிக்கும், சுத்தம்/சுகாதாரம் சார்ந்த தொழிலை குறிக்கும், கீழ்நிலை பணியாளர்கள் அடித்தட்டு மக்களை குறிக்கும், சனிக்கு பொருளாதாரம் முக்கியமில்லை, சனி உழைப்பே உயர்வு எனும் கொள்கை உடையவர், சனி வாக்கில் அசுப வார்த்தைகள் அத்தனையும் குறிப்பார், அவச்சொல், நீச்ச பேச்சு, ஒருவரை அவமானப்படுத்தும் சொல், இப்படி சனி பேச்சில் அத்தனை கீழ்த்தரமான வார்த்தைகளையும் குறிப்பார், ஒரு நாடு/நகரம் உருவாக உழைப்பு அவசியமாகும் அந்த உழைப்பை சனியே தருகிறார், சனியால் உழைக்க மட்டுமே இயலும், சனியால் அதிகாரம் செய்ய இயலாது, சனிக்கு அதிகாரம் செய்ய தெரியாது என்றே கூறலாம், சனி எப்போதுமே சாமானியன் ஆவார், சனியின் உழைப்பால் மேன்மை பெற்றவர்கள் பலர், இதனை தான் சனியை போல் கொடுத்தார் இல்லை என்கிறோம், அதாவது சனி மற்றவருக்கு உழைத்து அவரை உயர்த்திவிடும்..!

சனி ஆயுள்காரகர் சனியால் ஒருவருக்கு தீர்க்காயுள் கிடைக்கிறது என்றாலே அந்த ஜாதகர் இந்த ஜனனத்தில் அனுபவித்து கழிக்க வேண்டியது அதிகம் என பொருள் கொள்ளலாம், சனி ஒருவரின் வாழ்வில் நித்தம் நித்தம் செயல்படுகிறார் என்றால் மிகையாகாது, ஒருவரது உழைப்பு, ஆயுள், பேச்சு, ஒருவருக்கு ஏற்படும் மிக பெரிய சரிவு இப்படி பல விதங்களில் சனி ஒருவரின் வாழ்வில் செயல்பட்டு கொண்டே இருக்கிறார், பலரை வெளியில் அதிகாரத்தில் அமரவைத்து உள்ளிருந்து அழுத்தம் கொடுத்து இயக்குவார் சனி, அதாவது என்னதான் அதிகாரத்தில் ஒருவர் அமர்ந்தாலும் அவரின் பலவீனம் ஒரு சாமானியன் கையில் இருக்கும், அவரே அதிகாரத்தில் இருப்பவரின் முடிவுகளை தீர்மானிப்பார், இப்படி சனி மறைமுகமாக ஆட்சி செய்யும் வல்லமை பெற்றவர் இதையே சனியின் பிடி என்கிறோம், சனி சாதாரண தோற்றத்தில் ஏன் பிச்சைக்கார வேஷத்தில் கூட சர்வவல்லமை பெற்று இருப்பார், சனியின் காரகம் கொண்டவர் எதிலும் எளிமையை விரும்புவார், இவரின் பேச்சில் எதார்த்தம் வெளிப்படும், அதேநேரத்தில் இவருக்கு யாராவது தீங்கு நினைத்தால் அவரை உண்டு இல்லை என்று செய்யும் அளவுக்கு எதிரியின் பலவீனத்தை அறிந்து வைத்திருப்பார், இதனால் தான் சனியை கர்மகாரகர் என்கிறோம், அதாவது ஒருவரின் பலவீனமே சனி தான் அதுவே அவரின் வாழ்வில் பெரும் பின்னடைவையும்/தோல்வியையும் தரும், இவ்வாறான பலவீனம் இல்லாத மனிதர் இல்லை என்றே கூறலாம், ஏனெனில் பலவீனம் முன்வினை கர்மபயனாகவே பெரும்பாலும் இருக்கும், ஒருவர் ஜாதகத்தில் சனி நின்ற வீடு பலவீனம் ஆகும் அதாவது அந்த வீட்டை சார்ந்த கர்மத்தை தான் ஜாதகர் இந்த ஜனனத்தில் அனுபவிக்க இருக்கிறார் என்பதே இதன் உட்பொருள், சனி எவ்வளவு பெரிய செயலையும் சில நொடிகளில் சிதைக்கும் ஆற்றல் பெற்றவர் ஏனெனில் இவரின் கையில் தானே ஆயுளும் கர்மமும் உள்ளது, அதே நேரத்தில் துளிகூட இரக்கம் இல்லாதவர் என்றும் கூறலாம், ஏனெனில் கர்மபலனை வழங்க இரக்கம் அவசியம் அற்றது ஆகிறது, கைக்கு முன்னே நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே வாய்ப்புகளை நழுவ செய்து கர்மத்தின் பலனை தருவதில் சனிக்கு நிகர் சனியே..!

அதே போல சனி சுப கிரகங்களுடன் கூட்டணி வைக்கமாட்டார், அப்படி சுபர் சேர்க்கை கிடைத்தால் அவ்வளவு தான் சுபரை அசுபராக்கி விடுவார், உதாரணமாக: குரு எனும் அந்தணன் சனியுடன் இணைந்தால் அந்த நபருக்கு ஆன்மீகத்தில் எல்லாம் தெரிந்தும் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்காது, வைதீககாரியங்களை குரு+சனி இணைவு என்றால் சாலப்பொருந்தும், நன்றாக கவனித்தால் வைதீக காரியம் செய்யும் அனைவரும் பொருளாதாரத்தில் மேன்மை பெறுவதில்லை, அப்படியே மேன்மை பெற்றாலும் வீட்டில் நிம்மதி இருக்காது ஏதாவது ஒரு குறை இருக்கும், பலரை பார்த்திருப்போம் நன்றாக உழைக்க தெரியும் ஆனால் அதனை எங்கே செய்ய வேண்டும், எதற்கு செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்கிற அடிப்படை அறிவே இல்லாமல் செக்குமாடு மாதிரி உழைப்பார்கள், அதற்கு ஏற்ற ஊதியம் அல்லது உயர்வு வாழ்வில் கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது, சிலருக்கு ஓ இப்படி உழைத்தால் இவ்வளவு மேன்மை பேரலாமா என்று ஆச்சர்யமாக கேள்வி கேட்டவரையும் பார்த்திருக்கிறேன் இவைகள் அத்தனையும் சனியின் செயலே, ஒருவர் தன் பலத்தை அறியாமல் இருப்பதே பெரும் பலவீனம் இதனை சனி நன்றாக செய்வார், உங்களுக்கு உள் இருக்கும் திறமை பல நேரங்களில் உங்களுக்கே தெரியாமல் மறைக்க சனியால் மட்டுமே முடியும், அதே போல நான் முன்பே கூறியபடி சனி அசுபர்களுடன் கூட்டணி என்பதால் சனியே ஆசையை விதைக்கிறார் என்றால் தவறாகாது அதனால் தான் ஸ்வாதி நட்சத்திரம் துலாம் ராசியில் உச்ச வலுவை பெறுகிறார், ஒருவர் கர்மம் சேர்ப்பது வாழவேண்டும் என்கிற ஆசையால் தானே அதைத்தான் சனி இங்கே உச்சம் பெற்று குறிக்கிறார், அதே போல ஒருவர் தர்ம வழி தவறாமல் வாழ்ந்தால் அவரிடம் சனி பணிந்து மண்டியிடுவார் என்பதை குறிக்கவே காலபுருஷ லகிணத்தில் நீச்ச நிலையை பெறுகிறார் ஏனெனில் இங்கே ஆத்மகாரகர் சூரியன் உச்சம், சனி ஆசையை தூண்ட ராகுவுடன் கூட்டணி வைப்பார் அதனை பொருளாக செயல்படுத்த சுக்கிரனை இணைத்துக்கொள்வார், அதே போல ஒருவரின் ஆன்மீகபாதையில் தடை/தாமதம் ஏற்படுத்த கேதுவுடன் கூட்டணி சேர்வார் அதன் வழியே அந்த நபரை ஆன்மீகத்தை வெறுக்க வைத்து ஆசையின் பக்கம் திருப்புவார், பல ஆன்மீக சாமியார்கள் பெண்ணாசை/மண்ணாசை போன்ற சர்ச்சையில் சிக்கியது சனி+கேது கூட்டணியில் தான், சனி+ராகு கூட்டணி சேர்ந்தால் அங்கே சூதாடுவது, மற்றவருக்கு சொந்தமான பொருளை பறிப்பது/அபகரிப்பது/துரோகம் செய்வது போன்ற காரகங்களை வழங்குவார், இவைகள் அத்தனையும் சனி ஒருவரின் முன்வினை கர்மத்தின் அடிப்படையில் வழங்குகிறார் என்பதே உண்மை, ஆகவே சனி கொடுப்பதை விட தடுப்பது அதிகம் அவர் வழிவிட்டு நின்றாலே மோட்சத்தை அடைய இயலும் இல்லை என்றால் மீண்டும் பிறப்பு எடுக்க வேண்டியது தான், மீண்டும் சந்திப்போம்..!

No comments:

Post a Comment