jaga flash news

Tuesday 22 June 2021

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்களை காண்போம்.....

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்களை காண்போம்.....

ஒப்பணக்கார வீதி :

விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் ( பணம் பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள்தான் இந்த பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்தது.

R.S புறம்:

1903ல் கோவையில் வேகமாகப் பரவிய பிளேக் நோயால் ஏரளமான உயிர்பலிகள் நிகழ்தன. எண்ணற்றோர் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து இடம் மாறினர்.மேலும்,மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம் இருந்தது.எனவே நகரை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அப்போது மேட்டுபாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோடுக்கு இடையே இருந்த பல நூறு ஏக்கர் நிலத்தை வாங்கிய நகரசபை நிர்வாகம் அதை மனைகளாகப் பிரித்தது.பின் அப்பகுதிக்கு கோவை நகராட்சி மன்றத் தலைவராக இருந்த இரத்தினசபாபதி முதலியாரின் பெயர் வைக் கபட்டது.ரத்தின சபாபதிபுரம் என்னும் பெயர் சுருங்கி ஆர்.எஸ்.புறம் என்று ஆயிற்று.

சபர்பன் ஸ்கூல்:

பிளேக் நோய் காரணமாக நகரம் விரிவாக்கப்பட்டபோது ஆர்.எஸ்.புறம்,கெம்பட்டி காலனி,தேவாங்கப் பேட்டை உள்ளிட்ட புற நகரங்கள் உருவாக்கப் பட்டன.அந்த நாளில் பிராமணர்களுக்காக உருவாகப்பட்ட ராம்நகரும் கூட ஒரு புறநகரமே. அந்த புற நகரில் ஏற்படுத்தபட்ட பள்ளி என்பதால் சப்-அர்பன் பள்ளி என்று அழைக்கபட்டது.அது மருவி சபர்பன் பள்ளியாயிற்று.

சுக்கிரவார் பேட்டை& தேவாங்க பேட்டை:

கன்னடம் மற்றும் தெலுங்கில் "சுக்கிர வராம்" என்றால் வெள்ளிக்கிழமை என்று பொருள்.கடைகள் நிறைந்த வியாபாரப் பகுதியை "பேட்டை" என்பார்கள். அன்றைய நாளில் வெள்ளிக்கிழமை தோறும் சந்தை கூடிய இடத்திருக்கு பெயர்தான் சுக்கிரவார் பேட்டை. தேவாங்க செட்டியார் அதிகம் வசித்த பகுதியில் நெசவுத் தொழிலும் புகழ் பெற்று விளங்கியதால் தேவாங்கப் பேட்டை ஆயிற்று.

டவுன்ஹால் :

விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் 1887ல் கோவை நகராட்சியின் மையப்பகுதியில் நகர மண்டபம் ஓன்று கட்டப்பட்டது. 1892 இல் திறக்கப்பட்ட அந்த மண்டபம் இருந்த இடம்தான் டவுன்ஹால் என்று அழைக்கப்பட்டது.

கோட்டை மேடு :

டவுன்ஹால்க்கு பின்புறம் கோட்டை இருந்தது.பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடந்த யுத்தத்தில் சிக்கி அந்தக் கோட்டை சின்னபின்னமானது.1782ல் திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.அந்த கோட்டை இருந்த இடம்தான் இன்றைய கோட்டை மேடு.

ராஜா வீதி :

ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கும் கட்டடம்தான் அன்றைய மதோராஜா மஹால்.மைசூர் அரசின் அதிகாரியான அந்த மதோராஜா,அந்த வீதியில் குடியிருந்து ஆட்சி செலுத்தியதால் அந்த வீதிக்கு ராஜாவீதி என்று பெயர்.

காட்டூர் :

அவினாசி ரோடு மேம்பாலம் முதல் வட கோவை சிந்தாமணி வரையில் முன்பொரு காலத்தில் பனங்காட்டுக் குளம் என்ற குளம் இருந்தது.நாளிடைவில் அந்த குளம் அழிய,குளமிருந்த இடத்தில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டன.நாளிடைவில் பனை மரங்கள் நிறைந்த காடாக மாறியதால் பனங்காட்டூர் என்றாயிற்று. நாளிடைவில் அது மருவி காட்டூர் என்றாயிற்று.

"கோயம்புத்தூர்" பெயர்க்காரணந்தெரியுமா உங்களுக்கு..?

நம் கவியரசர் கண்ணதாசனவர்கள்
கூறுகின்ற விளக்கத்தை பாரீர்.

கன்னியரின் இதழழகை கோவையென்பார்!
கனிமழலை முழுவடிவை கோவையென்பார்!
தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு.
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு.

இந்நகரை “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்?
என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!

வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்.
செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்.
தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்.
இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி.

அதனைக்கேட்டு
முன்னவனே நாடாள வேண்டுமென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்.
தனியாக சாத்தனுடன் தங்கிவிட்டான்.

அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று..!

இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!

வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!

அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்!
வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!

உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு
குறையெதற்கு?

No comments:

Post a Comment