jaga flash news

Wednesday 15 November 2023

சிறு கதை:கெட்டவர் நால்வர் யார் தெரியுமா?


கெட்டவர் நால்வர் யார் தெரியுமா?
ஒரு குருகுலத்தில் கற்று தேர்ந்த இளைஞன் விடை பெற்று திரும்பும்போது குருவிடம் "எனக்கு கல்வியுடன் பல வித்தைகளையும் புத்திமதிகளையும் சொல்லி என்னை மனிதனாக்கினீர்கள். ஆனால், இவ்வுலகில் முழு மனிதனாக நான் வாழ என் மனதில் பதியுமாறு தகுந்த அறிவுரையை தயை கூர்ந்து சொல்லுங்கள்" என வணங்கி கேட்டான்.

"நீ விட்டுக் கெட்டவனையும், விடாது கெட்டவனையும், தொட்டுக் கெட்டவனையும், தொடாது கெட்டவனையும் மறக்காமல் நடந்துகொள். நல்லவனாக வாழ்வாய்" என்றார் குரு.

குரு சொன்னதை கேட்டு அந்த இளைஞன் குழம்பினான்.

"குருவே சற்று விளக்கமாக சொல்லுங்கள் அதன்படி நடந்து கொள்கிறேன்" என்றான்.

குரு விளக்கினார்.

"திருமால் வாமன வடிவெடுத்து மூன்று அடி நிலம் கேட்டபோது எதை வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறி, ஒரு அடிக்கு பூமியையும் மறு அடிக்கு விண்ணுல கத்தையும் மூன்றாவது அடிக்கு தன்னையே கொடுத்தும் கெட்டுப்போனவன்தான் மகாபலி. இவனை நீ மறக்கக் கூடாது. வாக்கு கொடுக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். பிறர் என்ன கேட்பார்கள் என்பதை அறியாமலேயே வாக்கு தருவது தவறு. எனவே ஆராய்ந்து, அறிந்து வாக்கு கொடு.

அடுத்து, விடாது கெட்டவன் பற்றி சொல்கிறேன். பாண்டவர்களின் தூதுவனாக கண்ணன் துரியோதனிடம் சென்று ஐந்து காணி நிலமாவது தருமாறு கேட்டான். துரியோதனன் ஒரு அடி மண்கூட தர மாட்டேன் என சொல்லிவிட்டான். தனது சகோதரருக்கு ஒரு சிறு இடத்தைக்கூட விட்டுத் தராமல் போனதால் துரியோதனனும் அவனது சுற்றத்தாரும் மாண்டனர். எனவே, இந்த மண்ணில் வாழ்பவர்களுடன் விட்டுக் கொடுத்து, அனுசரித்து நடந்துகொள். அது உன் வாழ்க்கையை வளமாக்கும்.


   தொட்டுக் கெட்டவன் யார் தெரியுமா? பத்மாசுரன் என்று அரக்கன்  ஈஸ்வரனை நோக்கி கடும் தவம் செய்து தன் கை யார் தலைமீது படுகிறதோ அவர்கள் உடனே பஸ்பம் ஆகிவிட வேண்டும் என்ற வரத்தை பெற்று இஷ்டப்பட்டவர்களை எல்லாம் கொன்றான். ஒருமுறை ஈஸ்வரனின் தலையிலேயே கை வைக்க முயன்றான். ஈஸ்வரன் தப்பி ஓடுவதுபோல் நடித்து எல்லா ஆயுதங்களையும் இழந்துவிட்டவர் போல் பாவனை காட்டினார். அவனது அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தார். விஷ்ணுவும் அவரும் இணைந்து ஒரு தந்திரம் செய்தனர். விஷ்ணு அழகிய மோகினி ரூபம் எடுத்து பத்மாசுரனிடம் சென்றார். அவரது அழகில் மயங்கிய அசுரனிடம் நீ என்னைபோல் நடனமாட வேண்டும். அவ்வாறு செய்தால் உன்னை மணந்துகொள்கிறேன் என்றார். பத்மாசுரனும் மோகினி போலவே நடனம் ஆடினான். ஒரு கட்டத்தில் மோகினி தன் தலைமீது கை வைக்கவே, மோகத்தில் பத்மாசுரனும்  அவ்வாறே தன் தலைமீது கைவைத்தான். அந்த இடத்திலேயே பஸ்மமும் ஆனான். இது போல பெண்களின் மீது மோகம் கொண்டு உன் தலையில் நீயே மண்ணை போட்டு கெட்டுப் போகாதே. 

       தொடாமல்  கெட்டவன் பற்றிக் கேள். சீதையின் மீது ஆசைகொண்டு அவளை  சிறை எடுத்துச் சென்றான் ராவணன். பிற பெண்களை அவர்கள் அனுமதியின்றி தொட்டால் ராவணனுக்கு அழிவு ஏற்பட்டுவிடும். இதன் காரணமாகவே அவள் மீது தன் கைவிரல் நகம் கூடப்படாமல் தொடாமலேயே அவளை தன் இச்சைக்கு வற்புறுத்தினான். இதனால் ராமனின் பாணத்திற்கு பலியானான் ராவணன். இவனைப் போல் பிறன்மனை நோக்காமல் உன் மனைவியுடன் ஒருத்திக்கு ஒருவனாக வாழ்ந்திடு” என்றார் குரு. 

     இளைஞனின் மனம் தெளிவு பெற்றது. குரு சொன்னபடியே விட்டுக் கெட்டவனையும், விடாது கெட்டவனையும், தொட்டுக் கெட்டவனையும், தொடாது கெட்டவனையும் மனதில் நிறுத்தி நல்லவனாக வாழ முடிவு செய்தான்.




No comments:

Post a Comment