jaga flash news

Thursday 12 June 2014

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம் 




இன்று புதிய வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, வாடகை வீட்டுக்குப் போவதாக இருந்தாலும் சரி, வாஸ்து பார்க்கும் வழக்கம் வந்து விட்டது. உண்மையில் இப்படி வாஸ்து பார்ப்பது சரியா? வாஸ்துப்படி வீடு இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடுமா?

வாஸ்து என்றால் என்ன?

வாஸ்து என்பது மனிதனைக் குறிக்கும் ஒரு சொல். இதனால்தான் வாஸ்துக்குரியவனை வாஸ்து புருஷன் என்கிறோம். வாஸ்து ஒரு இடத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை அர்த்த சாஸ்திரம் சொல்கிறது.

வாஸ்து சாஸ்திரம் ஒரு மனித சாஸ்திரம். இது மனிதனை மையமாகக் கொண்டு மனிதர் பழக்க வழக்கங்கள், அவர்கள் வாழக்கூடிய இடங்களைக் கொண்டு கணிப்பது. மனித சாஸ்திரத்தை வீடு கட்டுவதற்கும், வீட்டில் குடியிருப்பதற்கும் பார்ப்பது சரியல்ல. வீட்டிற்கும் வீட்டின் அமைப்பிற்கும் பொருத்தமானது மனை விதி சாஸ்திரம்தான்.

வாசகர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரம் வேறு, மனை விதி சாஸ்திரம் வேறு.

மனிதப் பிறப்பில் அவருடைய பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர் எடுத்த கர்மா (பிறப்பு)வின் படி அந்த மனிதனின் வாழ்க்கை அமையும். இதுபற்றிக் குறிப்பிடுவதுதான் வாஸ்து சாஸ்திரம். இதற்குத் துணையாக இருப்பது மனை விதி சாஸ்திரம்.

வாஸ்து புருஷ லட்சணம் என்பது மனிதனின் பாவ புண்ணியத்திற்கேற்ப கோள்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதை வாஸ்து நிர்ணயிப்பதில்லை. இணை விதி நிர்ணயிப்பது இல்லை.

கோள்கள் வாஸ்துவை இயக்குகின்றன. கோள்கள் மனையை அமைத்துத் தருகின்றன. இப்படித்தான் வாழ வேண்டும் என பிறப்பின் போதே கோள்கள் நிர்ணயித்து விடுகின்றன. மனிதன் இதை விடுத்து வேற்றிடங்களில் வாழ முடியாது. வீட்டை மாற்றினால் கோள்கள் நிலை மாறுமா? ஏற்கனவே கோள்களின் நிலை நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை மாற்றி விடலாம் என நினைப்பது மனிதனின் அறியாமை ஆகும்.

மனைக்குரிய விதிகள் வாஸ்துவுடன் ஒத்து வருமா? கோள்கள் மனிதனை எவ்வாறு இயக்குகின்றன? எப்படி வீடு வாய்ப்பு அமையும். எட்டு திசைகளை எப்படி பார்ப்பது? இந்த பிரபஞ்சம் உள்ளவரை என்றும் மாறாத திசைகள் பின்வரும் படத்தில் உள்ளது.


இதில் சந்திரன் - உடல், சூரியன் - ஆன்மா. இவர்கள் தெற்கு நோக்கி இருந்து மனிதர்களை இயக்குகிறார்கள்.

வடக்கு - சுபிட்சம், குபேரன் - தெற்கு என்பது மனிதர்கள். மனிதர்கள் தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டிப் படுத்தால் சுபிட்சத்திற்குக் குறை இருக்காது. காரணம் என்ன? அங்கே நேர் எதிரே குபேரன் சுபராக இருந்து சுபதன்மை பெறுகிறார்கள்.

தெற்கு - எமதர்மராஜன்

உடல் - சந்திரன்

ஆன்மா - சூரியன்

இதில் எடுத்துச் செல்லும் ஆற்றல் எமதர்ம ராஜனுக்கு உண்டு. அதாவது தர்மத்தை நிலை நாட்டும் ஆற்றல் எமதர்மனுக்கே இருக்கிறது. மனிதர்களின் உள்ளே ஆன்மா புகுந்து கொண்டு எமதர்மரஜனை அதிகாரியாகக் கொண்டு விளையாடுகிறது.

வடக்கு குபேரன் (சனி பகவான் வீடு). இங்கு ஏன் சனியைக் கொடுத்தார்கள்?. நீ குபேரனாக வேண்டுமானால் சனியைப் போல் உழைக்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் முன்னேற்றமடைய சனி பகவான் போல் உழைக்க, கர்மா நன்றாக இருக்க வேண்டும்.

கிழக்கு= இந்திரன், மேற்கு = வருணன்

அதாவது மனிதர்களின் இருபுறமும் இந்திரன், வருணன். எதிரே குபேரன். நமக்கு மேலே அக்னி, நமக்குக் கீழே நிருதி


மேல் அக்கினி. கீழ் நிருதி.- நிருதி என்பது இருண்ட சூழ்நிலை (கர்ப்பத்தில் குழந்தை இருப்பது போல்). இந்த இடத்தில் ஆண்-பெண் உடல் உறவு கொள்ளக் கூடாது. இங்கு அக்கினியில் உடல் உறவு கொள்ளக் கூடாது.

தென்மேற்கு நிருதி - இங்கு கர்பாதானம் கூடாது. இருண்ட சூழ்நிலை. பிறக்கும் குழந்தைகளுக்குத் துன்பம் நேரிடும்.


1. கன்னி மூலை - இங்கு சப்த கன்னிகள் வாசம் செய்கிறார்கள். வீட்டின் கன்னி மூலையில் அடைப்பு வேண்டும். திறப்பு கூடாது. தப்பு மற்றும் துவேசம் ஏற்படும்.

2. நிருதி (மீனம்) - அசுத்தம் கூடாது. கழிவு சேமிப்புக் குழி (செப்டிக் டேங்க்) அமைக்கக் கூடாது. இங்கு வேம்பு மரம் வைத்தால் குடும்பத்தில் குற்றங்கள் எதுவும் நிகழாது.

3. வாயு (தனுசு) - இப்பகுதி திறந்து இருக்க வேண்டும். காற்று வந்து போக வேண்டும். கழிவுகளை வைக்க வேண்டும். தெற்கே தெய்வங்களை வைத்து வடக்கு முகமாக (சிவசக்தி சொரூபம்) வைத்து வணங்கி வந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

4. வடக்கு (மகரம்- கும்பம்) - வடக்கும், கிழக்கும் எப்பொழுதும் சுமை இல்லாமல் இருக்க வேண்டும். கனமான பொருட்கள் இப்பகுதியில் இருந்தால் ஏதோ மன வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.

5. அக்னி மூலை (மிதுனம்) - வாயுவிலிருந்து அக்னி மூலைக்கு காற்று போக வேண்டும். அதே போல கன்னியில் இருந்து ஈசானம் போக வேண்டும். இந்த அக்னி வாயு மூலை இணையுமிடத்தில் படுக்கை அறை இருக்க வேண்டும்.

6. வடமேற்கு (வாயு) [தனுசு] முதல் தென்மேற்கு (அக்னி) [மிதுனம்] - இங்கு காற்று தள்ள வேண்டும். காற்றின் வேகம் கர்ப்பாதானதிற்குத் தள்ள வேண்டும் விந்துவை.தவசு என்ற வில் மைதூனம் (மிதுனம்) என்ற ராசிக்குக் கடக்கிறது. தனுசு மன்மதன் அதில்தான் குருவைக் கொடுத்து இருக்கிறார்கள். தனுசு (குரு) முதல் மிதுனம் (புதன்) ஆகிறது. இது கற்பனையல்ல. பொதுவாக தனுசுவிலேதான் பூலோக நட்சத்திரம் மூலம் இருக்கிறது. தனுசுவில் 3 டிகிரி அதாவது பாலியை வீதிகளுக்கான புவியீர்ப்பு சக்தி இருக்கிறது. மூலம் இல்லையென்றால் ஒன்றுமில்லை. இது தனுசு ராசியின் அமைப்பு.

அக்னியில் அடுப்பு


அக்னியில் ஏன் அடுப்பு வைக்க வேண்டும் என்கிறோம்?

இந்திரன் எமதர்மராஜன் இரண்டுக்கும் நடுவில் அக்னி. ஏன்? இந்திரனுக்கு நேர் சமநிலையுடையவர்களுக்கு வருணன். வருணன் அனைத்து இடத்திலும் இவருடைய பங்களிப்பு தேவையாக உள்ளது. இந்த நிலைகள் எல்லாம் நிர்ந்தரமானது. இவைகளில் எக்காலத்திலும் மாறுதல்களில்லை.

வாஸ்து புருஷன்

வாஸ்து புருஷன் ஈசானத்தில் தலை வைத்து நிருதியில் கால் நீட்டி அக்னியில் இடது கையை வைத்து வாயுவில் வலது கையை வைத்துப் படுத்து இருக்கிறார்.

வாஸ்து புருஷன் தலை வைக்கும் இடத்தில் நாம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன்? ஈசானியம் என்பது முக்தியும் மோட்சமும் தரக்கூடிய இடம். அங்கு உன்னுடைய ஐம்புலன்களையும் அடகு வைக்க வேண்டும். எல்லாவிதமான முக்தி மோட்சத்திற்கும் இறை சிந்தனை வேண்டும்.

கன்னியில் கால் ஏன்? ஞானிகளையும், பெரியவர்களையும் கன்னியில் நிறுத்திப் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.

வலது கை வாயு - அக்னி வாயு

இடது கை அக்னி - வாயு அக்னி

இதனால்தான் இடது கை பலம் குறைகிறது. வலது கை (வாயு) காற்று பலம் அதிகம்.

எப்பொழுதும், எந்தச் சூழ்நிலையிலும் நாம் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றால் வாயுவை வணங்க வேண்டும். அருனள் தன்மை வாயுவுக்கு மட்டுமே உண்டு.

சிரசு - ஈசான்யம்

வலது கை - வாயு மூலை

இடது கை - அக்னி மூலை

இந்தத் தகவல்கள் விக்கிரமாதித்தன் வாஸ்து சாஸ்திரச் சுவடியில் உள்ளது. இந்த சாஸ்திரப்படிதான் விக்கிரமாதித்த மன்னைன் தன் சிம்மாசனத்திற்குப் படிகளை அமைத்தான் என்று சொல்வதுண்டு.



வாஸ்து புருஷ லட்சணம் என்பது இதுதான். இதன்படி நாம் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். சில இடங்களில் சில பொருட்களை வைத்தால் அதற்கான தனி அதிர்வுகள் நிலை மாறும்.

அக்னி மூலை - இந்த மூலையில் விளக்கு எரிந்து கொண்டே இருதால் எவ்விதத் துன்பமும் துயரமும் வராது. தொழில் நிறுவனங்களில் இங்கு மின்சாதனப் பொருட்கள், இணைப்புகள் இருக்க வேண்டும்.

ஈசான்யம் - மண் பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். இதைத் தவிர்த்து மீன் தொட்டி வைக்கக் கூடாது. இனவிருத்திப் பொருட்களை இங்கு வைத்தல் சரியல்ல.

எமதர்மராஜன் - இங்கு மனிதன் தர்மம் உயர்ந்து மேலோங்க வேண்டும். தர்மம் அதிகரிக்க அதிகரிக்க குபேரன் (வடக்கு) தலை வணங்கிக் கொடுப்பார்.

மேற்கு உயர்வாகவும், கிழக்கு தாழ்வாகவும் வேண்டும் என்பார்கள் ஏன் தெரியுமா? வருணன் அருள் ஏற ஏற தானாகவே சில விஷயங்கள் கட்டுக்குள் வந்துவிடும். இப்படி அமைந்த வீடுகளில் நடைமுறையில் பார்வைக்கு ஆடம்பரம் இருக்காது. மாறி இருந்தால் எத்தனை லட்சங்கள் வந்தாலும் பற்றாக்குறை நிலவும். இதுபோல் பல ரகசியங்கள் இதில் உள்ளன.

திசை அமைவு கோள்கள் வழிமுறை


1. திசைகள் எந்தச் சூழ்நிலையிலும் பார்க்க கால புருஷத் தத்துவப்படி (ராசிப்படி) இது மாறாது.

2. திசையில் ஆட்சி செலுத்தும் கோள்கள் நிலைகள் கால புருஷத் தத்துவப்படி;

உதாரணமாக;

ஒருவரின் தர்மாதிபதி (9 ஆம் பாகத்தில்) கர்மத்தில் இருப்பின் தர்மத்தைக் காமத்தின் மூலமாக செயல்படுத்தி தனக்குத்தானே அழிவு ஏற்படுத்திக் கொள்வார். தர்ம காரியம் இவர் ஏதோ செய்ய என் பெயர் பெரிதாக இருக்க வேண்டும், புகைப்படம் பெரிய அளவில் வர வேண்டும், முதல் மரியாதை வேண்டும் என்கிறதான ஆசைகளுடன் செயல்படுகிறது. தர்மம் கர்மாவாக செயல்படுகிறது.

கர்மம் தர்மமாகச் செயல்படுதல் 

இவரின் கர்மாதிபதி தர்மத்திக் இருந்தால் எந்த பேரும் வேண்டாம். பிரதிபலன் வேண்டாம். நல்லவிதமாக தர்ம காரியம் செய் என்பார். இப்படித்தான் பார்க்க வேண்டும். இதுபோலத்தான் நிலையாக இருக்கும் திசை அமைப்பு மனிதனின் பாவ புண்ணியங்களுக்கேற்ப மாறி செயல்படுகிறது. இருவரின் கர்மாதிபதி தர்மத்திலிருந்தால் எந்த பேரும் வேண்டாம், பிரதி பலன் வேண்டி நல்ல விதமாக தர்ம காரியம் செய் என்பர். கர்மம் தர்மமாக இருந்து செயல்படுகிறது.

இப்படித்தான் பார்க்க வேண்டு. இது போலத்தான் நிலையாக இருக்கும் திசை அமைப்பு மனிதனின் பாவ புண்ணியங்களுக்கேற்ப மாறி செயல்படுகிறது.

அக்னி பாகத்தில்தான் சமையலறை இருக்க வேண்டும். ஜாதகரின் கர்மாவிற்கு ஏற்றவாறு திசைகள் மாற்றமாகலாம். பிறப்பின் தன்மைக்கு ஏற்றபடியும் திஅசைகள் மாறுபட்டு செயல்படும்.


மேலே காணும் ஒருவருடைய ஜாதகத்தில் உதய லக்கினம் கன்னி. உதயம் என்றாலே கிழக்குதான். அஸ்தமனம் மேற்கில் ஏழாம் வீடு. இங்கு தென்மேற்கு திசை கிழக்காக மாறிச் செயல்படுகிறது. கிரகங்கள் ராசியில் எங்கு உள்ளார்களோ அங்கு அந்த ராசிப்படியான பலன்களைத் தருவார்கள். நம் பிறப்பிற்கேற்ப நம் இல்லத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த வீடு நம் பிறப்பிற்கேற்ப ஒத்திருந்தால் அந்த வீடு நம்மை ஏற்றுக் கொள்ளும்.

தாத்தா, மகன் நல்லபடியாக இருந்த வீட்டில் பேரன்கள் இருக்க முடியாமல் போய்விடுவதுண்டு. இது ஏன்? பிறப்பு லக்கினம் மாறி விட்டது. லக்கினம் மாறி விட்டால் வீடு கை மாறி விடும். இதுதான் மனைவிதி சாஸ்திரம். இதில்தான் ரகசியமும் உள்ளது.

இந்தக் கட்டுரையின் ஆசிரியரான எனக்கு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம்தான் சொந்த ஊர். இங்கு எங்கள் வீடு கட்டி சுமார் 110 ஆண்டுகள் ஆகின்றன. எங்கள் வீடு பெரிய வீடு. எங்கள் தாத்தாவிற்கு ஆறு குழந்தைகள். என் அப்பா என் தாத்தா வீட்டில் இரண்டாவது மகன். இந்த வீடு என் அப்பாவின் பாகத்திற்குப் பாகச் சொத்தாய் வந்தது. எங்கள் அப்பாவிற்கு என்னைச் சேர்த்து ஐந்து குழந்தைகள். எங்களுக்குத் திருமணம் முடிந்த பின்பு, எங்கள் அப்பா காலத்திற்குப் பிறகு எங்களின் குழந்தைகள் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. ஆனால் வீடு இன்றும் உள்ளது. , திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளின் போது அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இந்த வீட்டில் வடகிழக்கு மூலையில்தான் சமையலறை இருக்கிறது. சமையலறை அகினியில்தானே இருக்க வேண்டும். இங்கு எவ்விதப் பிரச்சனையுமே இல்லையே...

இது கர்மாவிற்குத் தக்கபடி ஒரு மனிதனின் திசைகள் (ஜாதகப்படி மாறி) செயல்படுகிறது.

இதற்கான விளக்கத்தைப் பின் வரும் ஜாதகத்தின் வழியாகக் காண்போம்.


லக்கினம் என்பது கிழக்கு - உதயம்

ஏழாமிடம் என்பது மேற்கு - அஸ்தமனம்

இந்த ஜாதகப்படி இவருடைய திசைகள் மாறி விட்டன. இந்த ஜாதகருடைய கர்மாவுக்குத் தக்கபடி திசைகள் மாறி செயல்படும், பிறப்பின் தன்மைக்கேற்ப மேற்கு திசை கிழக்காக மாறி செயல்படுகிறது.

கும்பம் 4ஆம் வீடு இவர் தெற்கு பகுதியில் (தெற்கு முதல் வடக்காக) இறைவனை வைத்து வழிபடுவது சிறப்பைத் தரும் வடக்கு தெற்காக மாறிவிட்டது. இதுதான் இந்த மனையின் ரகசியம். இதுதான் மனை விதி சாஸ்திரம்.

சமையலறை தென்கிழக்குப் பகுதி வடமேற்கு பகுதி தென் கிழக்காக மாறி விட்டது. வடமேற்கில் சமையல் அறை இந்த ஜாதகருக்கு சிறப்பாக இருக்கும்.

இந்த ஜாதகருடைய 4 ஆம் வீட்டு அதிபதி சனி பகவான் கடகத்தில் இருக்கிறார். இதனால் தலைவாசல் வடக்கு பக்கம் இருக்க வேண்டும். நான்காமிடம் வண்டி, வாகனம் வடக்குப் பகுதி தலைவாசல் சிறப்பைத் தரும். திசைகள் மாறும் பொழ்து கிரகங்கள் எங்கிருக்கிறார்களோ அதன்படிதான் மனைவிதி சாஸ்திரம் செயல்படும். இதுதான் உண்மை.

வாடகை வீடு

வாடகை வீட்டின் சொந்தக்காரர் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் குடியிருப்பவர்களும் இருப்பார்கள். வீட்டின் உரிமையாளரைப் பொறுத்தே வாடகைக்கு இருப்பவர்களின் நிலையுமிருக்கும். அவர்கள் நன்றாக இருந்தால் இவர்களும் நன்றாக இருப்பார்கள்.

அபார்ட்மெண்ட்

பூமியிலிருந்து 40 அடிக்கு மேல் ஒரு கட்டிடம் இருந்தால் அங்கு எவ்வித வாஸ்து தோசமும் இல்லை. 10 அடிக்கு மேல் வாஸ்து தோசம் இல்லை.


6 comments:

  1. Thu. 13, July, 2023, at 8.57.

    *சோதிடவியல் அடிப்படைக் கல்வி...!*

    *வாஸ்து சாஸ்த்ரம் :*

    வாஸ்த்து எனப்படும் சமஸ்கிருத சொல்லுக்கு வீடு, பூமி, வீடு கட்டக் கூடிய மனை, இடம் அல்லது வாழும்
    இடம் என்று பொருள்.

    *வாஸ்த்து என்று பெயர்வரக் காரணம்:*

    அந்தகாசுரனுக்கும், சிவபெருமானுக் கும் யுத்தம் நடந்தபோது, சிவபெருமானின் திருமேனியிலிருந்து சிந்திய வியர்வைணிலிருந்து எல்லா உலகங்களையும் விழுங்கக் கூடிய அளவிற்கு ஒரு பூதம் தோன்றியது.

    சிவபெருமானின் கட்டளைப்படி அப்பூதம் அந்தகாசுரனை விழுங்கியது. பின்னர் இப்பூதம், சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் புரிந்து, பல வரங்களைப் பெற்றது.

    இதனால், உலகத்தை மிகவும் வருத்தியது. துயருற்ற தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிவபெருமான், அதிபலன் எனும் ருத்திரனை தோற்றுவித்து, மாயபாச வலைகளால் கட்டி, அப்பூதத்தை பூமியில் தள்ளினர். அதன்மீது தேவர்களை வசிக்கச் செய்தார்.

    இவ்வாறு தேவர்கள் வசிப்பதற்கு இடமாக இப்பூதம் விளங்கியதால், இப்பூதத்திற்கு *வாஸ்து புருஷன்* என்று பெயர் ஏற்பட்டது.

    இவரதம் நிறம் நீலநிறம். இரண்டு கைகளை உடையவர்.

    *இவரைப் பற்றிய தியானம்...*

    *மானதண்டம்"காரப்ஜேன வஹந்தம் பூமி சோதகம்*
    *வந்தேஹம் வாஸ்த்துபுருஷம் ஸயானம் ஸயனே சுபே.*

    *இதன் பொருள் யாதெனில்...*

    *பூமியை ஆய்ந்து அளந்து அறியத் தக்க அளவு கோலையுடையவரும், உயர்ந்த மங்களகரமான படுக்கையில் படுத்து இருப்பவருமான வாஸ்த்து புருஷனை நான் வணங்குகின்றேன்*
    என்று பொருள்.

    ReplyDelete
  2. இந்த வாஸ்த்து புருஷன் , பூமி முழுவதிலும் காணப்படுவதால், பூமியின் மீது எங்கு கட்டிடம் கட்டப்பட வேண்டுமாயினும், இவருடைய அனுமதியின் பேரில்தான் கட்டப்பட வேண்டும்.

    * வாஸ்த்து புருஷன் படுத்திருக்கும் போது.... கால் பகுதியில் வாசல் வைத்தால், மனைவிக்கு கெடுதல். உண்டாகும்.

    * தலை பகுதியில் வாசல் வைத்தால், கணவனுக்கு கெடுதல் உண்டாகும்.

    * முதுகுபுறத்தில் வாசல் வைத்தால், அரசாங்கத்தால் பயம் உண்டாகும்.

    * வயிற்றுப்புறத்தில் வாசல் வைத்தால், நல்ல வாழ்வு உண்டாகும்.

    இது *வாசல்விடும் திசையும், அதன் பலன்களும் ஆகும்.*

    *வாஸ்த்து புருஷன் எத்திசையில் படுத்திருப்பார்..அவரது தலை எங்கே, முதுகுப்புறம் எங்கே, கை எங்கே என எப்படி அறிவது ? என்ற ஐயம் எழலாம் அல்லவா..?*

    *அந்த ஐயத்தை நீக்க மேலும் படியுங்கள்..*

    * வாஸ்து புருஷன்... சித்திரை, வைகாசி மாதங்களில் மேற்கே தலை வைத்தும், கிழக்கே கால் வைத்தும், தலைக்கு கீழே, இடது கையை வைத்துக் கொண்டும், வடக்கு முகமாகப் படுத்துக் கொண்டுமிருப் பார்.

    * சித்திரை, வைகாசி மாதங்களில் மேற்கே தலையை வைத்திருப்பதால், மேற்கே வாசல் கூடாது.

    * கிழக்கே கால் நீட்டி இருப்பதால், கிழக்கே வாசல் கூடாது.

    * வடக்கே பார்வை இருப்பதால், பின்பகுதியான தெற்கே வாசல் வைக்க கூடாது.

    எனவே, *வாஸ்து புருஷன் பார்த்துக் கொண்டாருக்கும், வடக்குப் பகுதியில் தான் வாசல் வைக்க வேண்டும்.

    *ஆடி, ஆவணி மாதங்களில், வடக்குப் பக்கமாகத் தலைசாய்த்து, தென்புறமாகக் கால்நீட்டி, இடக்கை கீழாகக் கிழக்கு முகமாகப் படுத்திருப் பார்.*

    *ஐப்பசி, கார்த்திகை மாதங்களில், கிழக்குப் பக்கமாகத் தலை சாய்த்து, மேல்திசையில் கால்நீட்டியும், தென்திசைகளில் தலைசாய்த்து வடதிசையில் கால்நீட்டி மேல் திசையைக் கண்டவண்ணம் படுத்திருப்பார்.

    எனவே, *வாசல் பக்கம் வைக்க வேண்டிய திசைகள்...*

    மாதம் : வாசல் பக்கத்தின் திசை

    சித்திரை, வைகாசி வடக்கு வாசல்.
    ஆடி, ஆவணி − கிழக்கு வாசல்.
    ஐப்பசி, கார்த்திகை − தெற்கு வாசல்.
    தை, மாசி − மேற்கு வாசல்.

    இதுமட்டுமின்றி... *திசை நாயகர்கள்..*

    திசை திக்பாலர்
    ----------- ------------------

    * கிழக்கு − இந்திரன்
    * தென்கிழக்கு − அக்கினி
    * தெற்கு − யமன்
    * தென்மேற்கு − நிருருதி
    * மேற்கு − வருணன்
    * வடமேற்கு − வாயு
    * வடக்கு − குபேரன்
    * வடகிழக்கு − ஈசானன்.

    ReplyDelete
  3. வாஸ்து புருஷன் படுத்திருக்கும் மற்றொரு விதம்... அந்தந்த மாதத்து இராசியில் காலை நீட்டி, அதற்கு 7−வது இராசியில் தலையை வைத்து, இடது கையை தலையீல் வைத்துக் கொண்டும், வலது கையை மேலே வைத்துக் கொண்டும் படுத்திருப்பார்.

    * வாஸ்த்து துயில் எழும் நாளைக் கண்டு பிடித்து, அந்நாளில் வாஸ்து பூஜை செய்து வீடுகட்ட ஆரம்பிக்க வேண்டும்.

    *அவர் துயில் எழுவதை எவ்வாறு அறிவது என்றால்....*

    *ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி, ஆகிய இந்த நான்கு மாதமும், வாஸ்த்து புருஷன் தூக்கத்திலிருந்து எழும்புவதில்லை.*

    * சித்திரை மாதம் 10−ஆம் தேதி...
    * வைகாசி மாதம் 21−ஆம் தேதி...
    *ஆடி, ஐப்பசி மாதம் 11−ஆம் தேதி...
    * ஆவணி மாதம் 6−ஆம் தேதி....
    * கார்த்திகை மாதம் 8−ஆம் தேதி....
    * தை மாதம் 12−ஆம் தேதி....
    * மாசி மாதம் 20−ஆம் தேதி....

    ஆகிய தேதிகளில் வாஸ்த்து புருஷன் நித்திரையிலிருந்து விழித்துக் கொள்வார். இந்நாளில் வாஸ்த்து விழித்திருக்கும் காலமறிந்து பூஜை செய்ய வேண்டும்.

    *இப்போ காலத்தை எவ்வாறு அறிவது.மேலும் வாசியுங்கள்...*

    * சித்திரை மாதம் 10− ஆம் தேதி நாழிகை − 5.

    * வைகாசி மாதம் 21−ஆம் தேதி நாழிகை − 8.

    * ஆடி 11−ஆம் தேதி நாழிகை − 2.

    * ஆவணி 6−ஆம் தேதி நாழிகை − 21

    * ஐப்பசி 1−ஆம் தேதி நாழிகை − 2.

    * கார்த்திகை 8−ஆம் தேதி
    நாழிகை− 10.

    * தை 12−ஆம் தேதி நாழிகை− 8.

    * மாசி மாதம் 20−ஆம் தேதி நாழிகை−8.

    இந்த நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகை வரை விழித்துக் கொண்டிருப்பார். அதாவது... ஒன்றரை மணி ( 1 1/2 ) நேரம் ஆகும்.

    வாஸ்த்து புருஷன் விழித்திருக்கும் இந்நேரத்தில்...அவர் செய்யும் பணி யாதெனில்....

    * முதல் முக்கால் (3/4) நாழிகை தந்த தாவனம் செய்வார். தந்த தாவனம் என்றால்... பல் துலக்குவார்.

    * அடுத்த முக்கால் நாழிகை ஸ்நானம் செய்வார்.

    * அதற்கடுத்த முக்கால் நாழிகையில் பூஜை செய்வார்.

    *அதற்கு அடுத்த முக்கால் நாழிகையில் போஜனம் செய்வார்.

    * அதற்கடுத்த முக்கால் நாழிகையில் தாம்பூலம் அருந்திப் பின்னர் துயில்வார்.

    குறிப்பு :

    முதல் இரண்டே கால் (2 1/4) நாழிகையில் மனை முகூர்த்தம் செய்யக் கூடாது.

    ReplyDelete
  4. தாம்பூலத்தின் போது செய்வதே விசேஷமாகும்.*

    * இந்த 18 நிமிடங்களுக்குள் முடியாது என்பதால், இதற்கு முன்னர் போஜனம் செய்ய ஆரம்பிக்கும்போதே வாஸ்த்து பூஜை செய்ய ஆரம்பித்துவிடுகின்ற னர்.

    சரி...தற்போது தற்காலத்தில் சூரியோதயம் 6− மணி என்றால், வாஸ்து புருஷன் எழுந்திருக்கும் நேரத்தை எவ்வாறு அறிவது ?

    எவ்விதம் அறிய வேண்டும் என்றால்...
    .
    * சித்திரை மாதம் 10−ஆம் தேதி, 8−மணி முதல் 9.30 மணி வரை.

    * வைகாசி மாதம் 21−ஆம் தேதி 9.12 முதல் 1.42 நிமிடம் வரை.

    * ஆடி மாதம் 11−ஆட் தேதி 6.48 முதல் 8.18 வரை.

    * ஆவணி மாதம் 6−ஆம் தேதி 11.24 முதல் 15.54 நிமிடம் வரை.

    * ஐப்பசி மாதம் 11−ஆம் தேதி 6.48 முதல் 8.18 நிமிடம் வரை

    * கார்த்திகை மாதம் 8−ஆம் தேதி 10.00 முதல் 11.30 நிமிடம் வரை.

    * தை மாதம் 12−ஆம் தேதி 9.12 முதல் 10.42 நிமிடம் வரை

    * மாசி மாதம் 20−ஆம் தேதி 9.12 முதல் 10.4 நிமிடம் வரை.
    .
    சூரியோதய வித்தியாசத்தை இதனுடன் சேர்த்து அறிந்து கொள்ள வேண்டும்.

    இப்போ உதாரணமாக...

    மாசி மாதம் 20−ஆம் தேதி சூரியோதயம் 6.40 எனில், அன்று வாஸ்த்து புருஷன் நித்திரையிலிருந்து எழும் விவரத்தை அளிக்கிறேன்....

    சூரியோதயம் 6 மணி. எனில் வாஸ்து எழுந்து உறங்கச் செல்லுதல் . வித்தியாச சூரியோதயம் 6.40 எனில் எனில் வாஸ்து உறங்கச் செல்லுதல் எனில்....
    மாசி மாதம் 20−ஆம் தேதி 9. 12. 10.42− 0.40 9.52 −11.22.

    இவ்வாறே சூரியோதயத்திற்குத் தகுந்த மாதிரி கணக்கிட்டு கடைசி 36−நிமிடங்களில் வாஸ்து பூஜை செய்ய வேண்டும்.

    இந்த அடிப்படைக் கல்வி சோதிடமல்லாது... வேறு சிலரின் கருத்துப்படி, வாஸ்து புருஷனின் ஐவகை செயல்கள் மற்றும் பலன்களை இங்கே அளிக்கிறேன்.

    *செயல் மற்றும் பலன்.*

    1. குளித்தல் − அரச பயம்
    2. பூஜை செய்தல் − துன்பம்
    3. உணவு உட்கொள்ளல் − வறுமை
    4. தாம்பூலம் தரித்தல் − மக்கட்பேறு
    5) ஆட்சி செய்தல் − மிகுந்த தன்மை

    கவனிக்க.....
    இம்முறைப்படிப் பார்த்தாலும்... கடைசி இரண்டு பகுதிகள் (5−6) நன்மை அளிக்கக் கூடியவைகளாக இருப்பதால்.... கடைசி 36−நிமிடங்களில் வாஸ்த்து பூஜை செய்வது நல்லது.

    ReplyDelete
  5. Fri. 14, July, 2023 at 8.42 am.

    *அறிந்து கொள்ளலாமே...!*

    சோதிட அகராதியையும் சேர்த்தே அறிந்து கொண்டால், *சோதிடவியல் அடிப்படைக் கல்வி* எளிதாக புரியும். மற்றும் சோதிடம் கணிக்க எளிதாகவும் இருக்கும்....

    *சோதிட அகராதி :*

    *அ − அழகு தமிழினது முதல் எழுத்து.*

    *அங்கம் :*
    உடல் உறுப்புகள்

    *அகமார்க்கம் :*
    மந்திரம் சொல்லும் முறை.

    *அட்ட திக்கு(8−திசை) :*
    கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, வட கிழக்கு, வட மேற்கு.

    *அட்ட திக்குப் பாலகர் :*
    இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.

    *அஷ்டமி :*
    எட்டாவது திதி. நல்லவை செய்ய ஆகாது.

    *அட்டமச் சனி :*
    சந்திரனுக்கு 8−ஆம் பாவத்தில் கோசார சனி வரும் காலம். அதாவது...இரண்டரை (2 1/2 ) வருடங்கள்.

    *அட்டம ஸ்தானம் :*
    லக்கணத்திற்கு 8−ஆம் பாவம். ஆயுள் ஸ்தானமும் இதுவே.

    *அட்டாவதானம் :*
    ஒரே நேரத்தில் வெவ்வேறான எட்டுப் பொருள்களில் கவனம் செலுத்துதல்.

    *அஷ்டம லர்க்கம் :*
    எட்டு வர்க்கம். சோதிடத்தில் ஓர் கணித முறை ஆகும். ,7−கிரஹங்களும், லக்கணமும் இணைந்து எட்டு விதங்களில் பலன் தரும் முறை. அவை : சமுதாயம்,திரிகோண சோதனை, ஏகாதிபத்ய சோதனை, மண்டல சோதனை, இராசி குணாகரம், கிரக குணாகரம், ஏக சமுதாயம், சுத்த பிண்டம் முதலின.

    *அதியோகம் :*
    லக்கணம் அல்லது இராசிக்கு 6−7−8ல் சுபக்கிரஹங்களான... குரு, புதன், சுக்கிரன் இருப்பது. மகிழ்ச்சியான வாழ்க்கையுடன்", நீண்ட ஆயுளையும் தரும் யோகம் ஆகும்.

    *அதிசாரம் :*
    கிரகங்கள் தன் இயற்கையான நிலையில் செல்லும் தூரத்திற்கு... வேகமாகச் செல்லும் நிலை.

    *அகோராத்திரம் :*
    பகலும், இரவும்.

    *உபக்கிரகம் :*
    தூமா, வைதிபதா, பரிவேஷா, சாபா, உபகேது..என 5−கிரகங்கள்.
    இதன் விளக்கம்...!
    * தூமா என்பது, சூரியன் பாகையுடன் 133.20 பாகை கூட்ட தூமா ஆகும்.

    * இந்த தூமாவின் பாகையுடன் 53.20 பாகை கூட்ட வைதிபதா ஆகும்.

    * இவ் வைதிபதா பாகையுடன் 180 பாகை கூட்ட பரிவேஷா ஆகும்.

    * இப் பரிவேஷாவின் பாகையில் இருந்து 53.20 பாகை கழிக்க சாபா ஆகும்.

    * சாபாவின் பாகையுடன் 16.40 பாகை கூட்ட உபகேது ஆகும்.

    *மீண்டும் சந்திக்கலாம்...!*
    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  6. Fri.14, July, 2023 at 9.49 pm.

    *சோதிட ரீதியாக சில பழமொழிகள் :*

    *கிழமைகள் :*

    * ஞாயிறு பிரயாணம் நாய்பட்ட பாடு.
    * திங்கள் பயணம் திரும்பாப் பயணம்.
    * திரும்பிப் பார்த்தால் திங்கட்கிழமை .
    * செவ்வாயோ வருவாயோ.
    * செவ்வாயோ வெறும் வாயோ.
    * கேட்டை, மூட்டை, செவ்வாய்க் கிழமை.
    * பொன் அகப்பட்டாலும், புதன் அகப்படாது.
    * புற்றில் உள்ள பாம்பும், புதனில் புறப்படாது.
    * சனிப்பிணம் தனிப் போகாது.
    * ஸ்திரவார கார்யம் ஸ்திரமானது.

    *திதிகள் :*

    * ஆடிக்கொரு தடவை அமாவாசைக் கொருதடவை.

    * ஷஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.

    *மாதங்கள் :*

    * சித்திரை அப்பன் தெருவிலே.

    * ஆடிப்பட்டம் தேடி விதை.

    * ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்.

    * ஆடிக்காற்றில் அம்மியே பறக்குதாம், இலவம் பஞ்சு எனக்கென்ன வழி என்றதாம்.

    * ஐப்பசி அடைமழை.

    * கார்த்திகை கன மழை.

    * கார்த்திகைக்குப் பின் மழையில்லை கர்ணனுக்குப் பின் கொடையில்லை.

    * தை பிறந்தால் வழி பிறக்கும்.

    * தைப்பனியில் தரையும் குளிரும்.

    * மாசிச் சரடு பாசிப்படரும்.

    * மாசிப் பனியில் மச்சும் குளிரும்.

    * பரணி தரணி ஆளும்.

    * தில்லு முல்லு திருவாதிரை.

    * மகத்துப் பெண் ஜகத்தில் கிட்டாது.

    * மகத்தில் புக்கதோர் சனி.

    * உத்திரத்தில் ஒரு பிள்ளையும் ஊர்கோடியில் கொஞ்சம் நிலமும் இருந்தால் போதும்.

    * ஹஸ்தம் கை வைத்த இடம் பஸ்பம்.

    * ஹஸ்தத்தின் அப்பன் தோளோடே

    * கேட்டை கோட்டை கட்டி வாழும்.

    * ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிரமூலம்.

    * பூராடம் போராடும்.

    * பூராடம் நாலூடாது.

    * திருவோணத்தான் உலகான்வான்.

    * அவிட்டம் , தவிட்டுப் பானை எல்லாம் தனம்.

    * சதயத்திற்கு சொந்த புத்தியும் கிடையாது சொல் பேச்சு கேட்பதும் கிடையாது.

    *பொதுவான பழமொழிகள் :*

    * எதற்கும் மீன மேஷம் பார்க்காதே.

    * பழைய பஞ்சாங்கம்

    * அபத்த பஞ்சாங்கத்திற்கு அறுபது நாழிகைகளுக்கும் தியாஜ்யம்.

    * நாளும் தோளும் நலிந்தோர்க்கில்லை.

    * இராகுவைப்போல் கொடுப்பவன் இல்லை...கேதுவைப்போல் கெடுப்பவன் இல்லை.

    * நாள் செய்வதை நல்லோரும் செய்யமாட்டார்.

    * குரு பார்க்கக் கோடி நன்மை.

    * ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு.

    * பத்தில் பார்ப்பான் பதவியைத் தொலைப்பான்.

    * அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.

    * கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete