jaga flash news

Friday 6 May 2016

ஊஞ்சலில் இவ்வளவு விஷயங்களா?

ஊஞ்சலில் இவ்வளவு விஷயங்களா?
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு ஏற்றது. இடவசதி குறைவாக உள்ளவர்களும் வீடுகளில் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் விற்பனைக்கு வருகின்றன.
ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறையும். மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்கள் தோன்றும். திருமணங்களில் ‘ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. ஊஞ்சல் ஆடுவதால், மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும்போது, முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகும். கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துபோன இன்றைய தலைமுறைக்கு இந்த ஊஞ்சல் பயிற்சி சிறந்தது. முதுகுத்தண்டு பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்யும்.
தோட்டத்தில் அமைக்கப்பட்டும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்துக்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்துக்கு ரத்தம் சீராக செல்லும்.
கோபமாக இருக்கும்போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றி அலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால், களைப்பு பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும்போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.
பல வகை ஊஞ்சல்கள்:
சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளைகொண்ட ஊஞ்சல். இது பழைய கால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது த்ரில் அதிகம்.
நவீன வகை ஊஞ்சல்கள் “சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.
தோட்டம் மற்றும் திறந்தவெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.
மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி மற்றும் படுக்கை அறைகளுக்கு ஏற்றது. மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தரவல்லது.
குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது. காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.
கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது.

1 comment:

  1. ஊஞ்சல், பசுமையான நினைவுகளைத் தூண்டிவிட்டது. எத்தனை ஆடம்பர ஊஞ்சல் வந்தாலும், என் காலத்திய ஊஞ்சலுக்கு ஈடாகாது. ஆலமரக் கொப்பில் கயிறுகட்டி, அதில் பனைமட்டையை உட்காரும் பலகையாக அமைத்து, அதில் அமர்ந்து ஊஞ்சலாடும் சுகமே தனி. அதுமட்டுமா, ஆலம் விழுதுகளைப் பிடித்து, ஊஞ்சலாடுவது, இன்னும் தனி சுகம். இந்தக்காலத்து இளைஞர்களுக்கு, இந்த அனுபவமே கிடையாது, தெரியாது என்று கூட சொல்லலாம். சுதந்தரமான உலகத்தில், சுதந்தரமாக விளையாட, அவர்களுக்கு நேரமும் இல்லை, அப்படிப்பட்டதான மரமும், தற்போது இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், அதிலும் ஒரு கடையை வைத்து, இவர்கள் சுதந்தரத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்பது தான் வருத்தம்.

    ReplyDelete