jaga flash news

Friday 5 June 2020

வெட்பாலைத் தைலம்

டலின் மிகப் பெரிய உறுப்பு எது? பலரால் யூகிக்க முடியாது. அந்தக் கேள்விக்குப் பதில்… தோல்! ஆம், 50-கே.ஜி தாஜ்மஹாலாக இருந்தாலும் சரி,  90-கே.ஜி தொப்பைத்  திலகமாக இருந்தாலும் சரி… அவர்கள் எடையில் 12 முதல்15 சதவிகிதம் வரை தோல்தான். பலரும் நினைப்பதுபோல் தோல், காதலுக்கு ‘மார்க்கெட்டிங்’ செய்யும் வழவழ வஸ்து மட்டும் அல்ல; ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கு வாழும் இடம் கொடுத்து, உடலுக்குத் தீங்குசெய்ய நினைக்கும் கிருமிகளை, உடலுக்குள் புகவிடாமல் செய்யும் உறுப்பு. அதேசமயம், முக்கிய மருந்துகளை மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கும் புத்திசாலிப் பாதுகாப்பு அரண். உடலின் வெப்பத்தைச் சீராகவைத்திருப்பது, ‘விட்டமின் டி’-யை உருவாக்குவது, சருமத் துளைகள் மூலம் சுவாசிப்பது, யூரியா போன்ற கழிவை வெளியேற்றுவது, கொழுப்பு, நீர் முதலான பொருட்களைச் சேமித்துவைப்பது… எனப் பல வேலைகளை ‘இழுத்துக்கட்டி’ச் செய்யும் உறுப்பு அது. அதனாலேயே தோலில் வரும் நோய்களின் பட்டியல் கொஞ்சம் நீளம்.  அடுப்பங்கரைத் தாளிப்பு முதல் அணுஉலைக் கசிவு வரை உண்டாக்கும் ஒவ்வாமையில் வரும் நோய்கள் சில. பூஞ்சைகளால், பாக்டீரியாக்களால், வைரஸ்களால் வரும் நோய்கள் சில. நோய் எதிர்ப்பாற்றலின் சீரற்ற தன்மையால் வருவன பல. இன்னும் சில… மன உளைச்சலால் மட்டுமே வருகின்றன!

 

குறிகுணங்கள்

உடலில் சிறு தடிப்புகள் ஏற்படும். மென்மையான, வெண்மையான, பளபளப்பான மீன் செதில்கள் போன்று மூடப்பட்டு இருக்கும். செதில்களைப் பிய்த்தால், குண்டூசி முனையளவு ஒத்த ரத்தக்கசிவு ஏற்படும். படை உருவாகும் இடங்களும், வடிவமும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். உடலெங்கும் படை காணப்பட்டு செதில் உதிரலாம். தலை, காதின் பின்புறம் சிறுசிறு கட்டிகள் உருவாகி செதில் உதிரலாம். 

நாணயம் போன்ற வடிவமுடைய படைகளும், கிருமித் தொற்று இல்லாத கீழ் கொப்புளங்களும் ஏற்படலாம். அக்குள், தொடைமடிப்பு, தொப்புள் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நீர்க்கசிவு ஏற்படலாம். உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடிப்பான வெடிப்புகளை உடைய படைகள் ஏற்படலாம். நாட்பட்ட நிலையில், முழங்கால்களைப் பாதித்து, வாதம் போன்று நகரவிடாமல் பாதிப்பை ஏற்படுத்தலாம். நகங்களைப் பாதித்து, நகத்தின் குறுக்கே பள்ளம் விழலாம். நகத்தின் நிறம் மாறலாம். அரிப்பு இல்லாமலும், சிலருக்கு மிகுதியான அரிப்பும் காணப்படலாம். 

 

நோய் வரக் காரணம் 

வாத நாடி பாதிப்படைந்து, அதனால் பிற நாடிகளையும் (பித்தம், கபம்) பாதிப்புக்கு உள்ளாக்கி இந்நோய் ஏற்படும். நவீன அறிவியலின்படி, இந்நோய் வர காரணம் இன்னும் அறியப்படவில்லை. தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சில மருந்துகளினாலும், நோய் எதிர்ப்புத் திறனின் மாறுபாட்டாலும், பரம்பரை காரணமாகவும், மன அழுத்தத்தினாலும் இந்நோய் வரலாம் என நவீன அறிவியல் விளக்கமளிக்கிறது.

 

சித்த மருத்துவம் :

1) வெட்பாலைத் தைலம் 

வெட்பாலை இலைகளையும், தேங்காய் எண்ணையையும் கொண்டு தயாரிக்கப்படும் வெட்பாலை தைலத்தை வீட்டிலேயே தயார்செய்து கொள்ள முடியும். வெட்பாலை (wrightia tinctoria) இலைகளின் எடைக்கு சமஅளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். வெட்பாலை இலைகளை அகலமான பாத்திரத்தில் இட்டு, இலைகள் மூழ்கும் வரை தேங்காய் எண்ணெய் ஊற்றி, வெயிலில் வைக்கவும். மூன்று முதல் ஐந்து நாட்கள் வெயிலில் வைக்க, கருநீலச் செம்மை நிறத்தில் (கிட்டத்தட்ட பொட்டாசியம் பெர்மாங்கனேட் நிறம்) அழுத்தமான தைலம் கிடைக்கும். இலைகளைப் பிழிந்து தைலத்தைச் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். 

 

 முறை

செதில் உதிர் படை இருக்கும் இடங்களில் தைலத்தைப் பூசி, மூன்று மணி நேரம் ஊறவைத்து, பின் பாசிப்பயறு மாவு பூசிக் குளித்து வரலாம். தொடர்ந்து பயன்படுத்தினால் நோய் நீங்கி நலம் பெறலாம். நோயின் தீவிர நிலையில் சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வெட்பாலைத் தைலத்தை 5-10 மி.லி. அளவு எடுத்து, பாலுடன் கலந்து உள்ளுக்கும் சாப்பிட்டு வரலாம்.

வெட்பாலைத் தைலம் தயாரிக்க சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். சித்த மருந்துக் கடைகளில் வெட்பாலைத் தைலம் கிடைக்கிறது. தயாரிக்க இயலாதவர்கள் வாங்கிப் பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment