jaga flash news

Monday 28 September 2020

யோனிப்பகை உள்ளவர்களை இணைத்து வைத்தால் என்ன ஆகும்??

யோனிப்பகை உள்ளவர்களை இணைத்து வைத்தால் என்ன ஆகும்??

பொதுவாக பத்துப் பொருத்தங்களை காட்டிலும் ஜாதக அனுகூல பொருத்தம் பார்ப்பதே சாலச்சிறந்தது.. முற்றிலுமாக பத்து பொருத்தத்தை புறம் தள்ளிவிடலாகாது.எமது மானசீக குருநாதரான ஆத்தூர் மு.மாதேஸ்வரன் ஐயா அவர்கள் பத்து பொருத்தங்களை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து  புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்..

எனது தகப்பனாரும் ,ஜோதிடருமான எனது தந்தையார் ஸ்திரீ ராசிக்கு புருஷன் ராசி எட்டாவது ராசியாக வந்தால் அந்த ஜாதகங்களை இணைத்து வைக்க மாட்டார்.. வேண்டவே வேண்டாம் என்று தூக்கி போட்டு விடுவார்.. எங்கள் உறவினர் ஒருவர்  தனது பெண்ணுக்கு  மாப்பிள்ளை பையன் பைனான்ஸ் பண்றார், நகரில் பஸ் ஸ்டான்டுக்கு அருகில் ஹோட்டல் ,  பங்களா மாதிரி வீடு , நல்ல வசதியான வாழ்க்கை என்று கடக ராசி பெண்ணை , கும்ப ராசி பையனுக்கு கட்டிவைக்க ,பெண் மூன்றே மாதத்தில்  மாப்பிள்ளை பையனுக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு என்று வாழாவெட்டியாக பிறந்த வீடு வந்து சேர்ந்தது ஒரு தனிக்கதை..

பஞ்சாங்கங்கள் இராசி பொருத்தத்தில் ஸ்திரீ ராசிக்கு புருஷன் ராசி எட்டாவது ராசியாக வந்தால் திருமணம் செய்ய கூடாது என்று சொல்லும்.. இந்த எட்டாவது ராசி ஒன்றை ஒன்று விலக்கும்.. இதிலும் விதிவிலக்குகள் இருக்கவே செய்கிறது.. அதாவது அனுகூல ஷஷ்டாஷ்டமம், பிரதிஅனுகூல ஷஷ்டாஷ்டமம் என்று இரண்டு உள்ளதால் இவற்றை நன்கு ஆராய்ந்து இணைக்க வேண்டும்..

உதாரணமாக ரிஷப , துலாம் இரண்டும் ஒன்றுக்கொன்று ஷஷ்டாஷ்டமமாக வரும்.. ஆனாலும் இரண்டுக்கும் சுக்கிரனே ராசியாதிபதியாக வருவதால் விதிவிலக்கு பெற்று விடுகிறது.. அதேபோல யோனிப் பகை இல்வாழ்க்கையில் பிரச்னையை ஏற்படுத்துவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்..

ஜாதக அனுகூல பொருத்தத்தோடு இந்த மாதிரி யோனிப்பகையையும் நாம் சேர்த்தே கவனிக்க வேண்டியுள்ளது.. பிறப்பு ஜாதகத்தில் ஐந்தாமிடம்,குரு பகவான் கெட்டு போய் உள்ளவர்களுக்கு யோனிப் பகை உள்ளவர்களோடு திருமணம் நடப்பதை நாம் அனுபவத்தில் காணலாம்..

யோனிப் பகை உள்ளவர்களுக்கு , ராசி பொருத்தம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டாமல் போகிறது..நமது முன்னோர்கள் மற்றும் ஞானிகள் இந்த யோனிப் பொருத்தம் மற்றும் ராசிப்பொருத்தம் இல்லாவிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டாது என்று உறுதியாக சொல்லும் போது ஜாதக அனுகூல பொருத்தத்தோடு இதையும் சேர்த்து கவனிக்க வேண்டியது அவசியம் என்று உணர்த்துகிறது..

அஸ்வினிக்கும், சதயத்திற்கும் ஸ்வாதியும்,அஸ்தமும் யோனிப்பகையாக வரும்.. அதாவது அஸ்வினி _ ஆண் குதிரை
சதயம் __பெண் குதிரை ,,

ஸ்வாதி_ஆண்எருமை,
ஹஸ்தம் __பெண் எருமை

குதிரைக்கு எருமையும், பசுவும் பகை என்பதால் யோனிப் பொருத்தம் இல்லை..

அதேபோல பரணிக்கும், ரேவதிக்கும்   ஆண்யானை மற்றும் பெண் யானை யோனியாக  வரும்..
இந்த நட்சத்திரங்களுக்கு பூரட்டாதி மற்றும் அவிட்டத்திற்கு யோனிப் பொருத்தம் இல்லை.. ஏன் இல்லை என்றால் இவையிரண்டுக்கும் யோனி சிங்கமாக வரும் என்பதால் யோனிப் பொருத்தம் இல்லை.. யானைக்கும் ,சிங்கத்திற்கும்  பகை  என்பதால் யோனிப் பொருத்தம் இல்லை..

அதேபோல கார்த்திகை மற்றும் பூசம் இரண்டுக்கும் திருவோணம்,, பூராடம் இரண்டும் யோனிப் பகையாக வரும்.. ஏனென்றால் கார்த்திகை __பெண்ஆடு,, பூசம்__ ஆண்ஆடு 

திருவோணம்__பெண்குரங்கு
பூராடம்__ஆண்குரங்கு 
ஆட்டுக்கும்,குரங்குக்கும் பகை என்பதால் யோனிப் பொருத்தம் இல்லை..

ரோகிணி, மற்றும் மிருகசீரிஷம் இரண்டுக்கும் மகமும்,பூரமும் யோனிப் பகையாக வரும்.. ரோகிணி மற்றும் மிருகசீரிஷம் இரண்டுக்கும் ஆண்நாகம்,பெண்சாரை யோனியாக வரும் போது மகம், பூரம் இரண்டும் ஆண்எலி,பெண்எலி யோனியாக வந்து யோனிப் பகையை பெற்று விடுகிறது..

திருவாதிரைக்கு , மூலத்திற்கு அனுஷமும், கேட்டையும் யோனிப்பகையாக வரும்..

புனர்பூசத்திற்கும்,ஆயில்யத்திற்கும் ____மகம், பூரம் இரண்டும் யோனிப் பகையாக வரும்..

முடிவாக ஜாதகத்தில்  ஒருவருக்கு ஐந்தாமிடம் கெட்டு போய் இருந்து , யோனிப் பகை மற்றும் ராசிப்பொருத்தம் அமையாத போது சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை..
இன்னும் சிலருக்கு கணவன் மனைவிக்கும் அன்னியோன்யம் இருப்பது இல்லை.. ஒருவருக்கு ஒருவர் ஈர்ப்பு வருவது இல்லை.. ஏற்கனவே சொன்னது போல சந்தான பாக்கியத்திற்கு கேடு விளைவிப்பது, ஊறு விளைவிப்பது இந்த யோனிப் பகை ஆகும்.. யோனிப் பகை இருந்தால் திருமணம் செய்ய கூடாது .


No comments:

Post a Comment