jaga flash news

Monday 12 June 2017

தமிழர் சம்பிரதாயத்தில் தாலி வந்த கதை தெரியுமா உங்களுக்கு? இதைப் பாருங்கள்!

தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. தாலி கட்டும் வழக்கம் இந்து மக்களிடம் காணப்படுகிறது. பெண்ணிய பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆண் ஆதிக்க செயற்பாடாக பார்க்கப்படுகிறது.
சங்ககாலத்தில் தாலி
மகளிர் அணிந்த தாலி வேப்பம்பழம் போல இருந்தது. இந்தத் தாலியைப் ‘புதுநாண்’ என்றனர். (அள்ளூர் நன்முல்லையார் – குறுந்தொகை 67)
தாலி அணிந்த பெண்களை வெள்ளிவீதியார் ‘வாலிழை மகளிர்’ என்று குறிப்பிடுகிறார். – குறுந்தொகை 386
பெயர்காரணம்
தாலியின் வடிவம் சாதிக்கு சாதி மாறுபடுகிறது
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை – மண அடையாள வில்லையைக் குறிக்கும்
தாலி கட்டப்படும் முறை[தொகு]
இந்து முறை[தொகு]
கூறை உடுத்தி வந்த மணமகள், மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்து கொடுக்கும் மாங்கல்யத்தை (தாலி) இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்
“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”
‘ஓம்! பாக்கியவதியே’ யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிட வேண்டும்.
சீர்திருத்த முறை[தொகு]
சொல்லாய்வு[தொகு]
மஞ்சளும் தாலியும்[தொகு]
மஞ்சளுக்கும் திருமணத்திற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு தமிழர் மரபில் என்றென்றும் உண்டு. மல் என்னும் வேரில் கிளைத்த மல்குதல் என்ற சொல்லிற்கு பொலிதல் (to become fertile), அதிகப் படுதல் (to grow, to increase) என்ற பொருளுண்டு. மல்>மலர்>மலர்தல் என்ற வளர்ச்சியில் பொலிவு, பூ விரிதல் என்ற பொருட்பாடுகள் வந்து சேரும். அதுமட்டுமில்லை, “பொன், உலோகத்தைக் குறிக்கும் மாழை, மாடை” என்ற சொற்களும் கூடப் பொலிவுப் பொருளில் கிளைத்தவை தான். கத்தூரி மஞ்சளைக் குறிக்கும் சொல்லான மாளம் கூட இந்த வழி வந்தது தான்.
மல்>மால்>மாழை = பொன், உலோகம்
மல்>மள்>மளி>மளிகாரம் = வெண்காரம்
மள்>மண் = புழுதி, சுண்ணச் சாந்து, தரை
மள்>மாள்>மாளம் = கத்தூரி மஞ்சள்
மாள்>மாடு = பொன், சீதனம், செல்வம்
மாடு>மாடை = பொன், அரை வராகன், உலோகம்”’
மல்கின் விரிவாய் எழுந்த மலிகுதல் என்ற சொல்லும் பெருகுதற் (to grow) பொருளைக் குறிக்கும். மல்கு>மலுகு>மலிகு= பெருகுதல் அடுத்து மங்கல் என்ற சொல் எழுந்ததும் இதே வழியில் தான். இருள் மிகுந்த பின்புலத்தில் ஒளிபாய்ந்து பெருகும் போது அது மங்கலாய்க் காட்சியளிக்கும்.
மலிகு>மலிங்கு>மயிங்கு>மய்ங்கு>மங்கு>மங்கல் என்ற சொல் மங்கல் ஒளியைக் குறிக்கும்.
மங்கலின் திரிவே தமிழர் மரபில் மஞ்சள் நிறமாகும். மங்கல்>மங்கள்>மஞ்சள் = நிறம், மஞ்சள் பொருள் ஙகர, ஞகரப் போலி தமிழில் மிகுதியானது. மங்கலின் இன்னொரு வளர்ச்சி அம் என்னும் பெருமை விகுதி பெற்று மங்கலம் என்றாகும். மங்கல்>மங்கலம் = சிறப்பான நிகழ்வு, பொலிவு. மங்கலமான மணப்பருவம் எய்திய பெண்ணைக் குறிக்கும் சொல்லான மங்கையும் கூட மங்கு என்ற சொல்லில் இருந்து தோன்றியது தான். மங்கு>மங்கை = மங்கல(மாகிய மண)ப்பருவம் அடைந்த பெண்.
நாம் செவ்வாய் என்பது, வடவர் கணிப்பில் மஞ்சள் தோற்றமே காட்டும். (மஞ்சட் பொருள் காடித் தன்மையில் (acidic nature) மஞ்சள் நிறம் காட்டுவதும், களரித் தன்மையில் (alkaline nature) சிவப்பு நிறம் காட்டுவது இயற்கை அறிவு. காடி சேர்த்த மஞ்சள் பொற்சுண்ணம் என்று சொல்லப் படும்; பெருமாள் கோயில்களில் தாயார் முன்னிலையில் பொற்சுண்ணம் கொடுப்பார்கள்; களரி சேர்த்த மஞ்சள் குங்குமம் என்று சொல்லப் படும். அதை ஆண்டாள் முன்னிலையில் கொடுப்பார்கள்.) மங்கலம்>மங்கல வாரம் = வட மொழியில் செவ்வாய்க் கோள் (மங்கல் என்பது இங்கே சிவப்பு என்ற பொருளில் வந்திருக்கிறது.)
மங்கலத்தின் இன்னொரு நீட்சி மங்கலம்>மங்கல்யம்>மங்கலியம் = பொன்; மங்கலியம்>மாங்கலியம் = பொன்னால் ஆன தாலி, மஞ்சள் நிறைந்த தாலி
மஞ்சள் என்னும் சொல் கீழ்க்கண்டவாறு இன்னும் திரியும்.
மஞ்சள்>மஞ்சுளம் = அழகு
மஞ்சு>மஞ்சுதல் = மஞ்சள் நீரால் முழுக்காட்டுதல்
மஞ்சுதல்>மஞ்சனம் = நீராட்டு. (பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் என்றே சொல்லுவார்கள்; சிவன் கோயிலில் இது அப்பு இழிக்கம்> அப்பிஷேகம் > அபிஷேகம் என்று வடமொழிப் படுத்தி ஆளப்படும். தமிழர் வழக்கில், அகவைக்கு வந்த பெண்ணுக்குச் செய்யும் நீராட்டும் மஞ்சள் நீராட்டு என்றே சொல்லப்படும். தென்பாண்டி நாட்டில் இந்தச் சடங்கு இன்றைக்கும் பெரிதாய்க் கொண்டாடப் படுவதே.)
மஞ்சுதல்>மஞ்ஞுதல்> மண்ணுதல் = நீராட்டுதல், அலங்கரித்தல்
மண்ணுநீர் = மஞ்சன நீர்
மண்>மணிகம் = நீர்க்குடம்
மணம் = கல்யாணம்
என்ற சொற்கள் எல்லாமே மஞ்சளை உணர்த்தும்.
தால்[தொகு]
தால் என்ற சொல் தால் என்னும் இயல்பையும் (மஞ்சள் நிறம்), தால் என்னும் இயற்பொருளையும் (மஞ்சள் பொருள், பொன் போன்றவை) குறிக்கலாம். இனி, வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலி. இந்தத் தாலி பொன்னால் இருக்க வேண்டியது அல்ல. ஒளி நிறைந்த மஞ்சளால் கூட ஆகியிருக்கலாம்.
தகல்>தால்>தாலி[தொகு]
தகல்>தால் என்று சொல்லுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தாலின் நீட்சியாய் எழுந்த தாழ் என்ற சொல், தாழம்பூ என்ற மஞ்சள் நிறப் பூவை நம்முன் கொண்டு வந்து சான்று கூறுகிறது. தகதக, தங்கம், தகை, திகழ்தல், திகழி, திங்கள், தாழம்பூ ஆகியவற்றை ஒருங்குற எண்ணிப் பார்த்தால் தால் என்னும் சொல் தமிழில் இருந்திருக்க வேண்டும். டால் என்னும் பலுக்கற் பிறழ்ச்சி கூடத் தாலைத் தான் குறிக்கிறது என்றும் சொல்ல முடியும். ஏரணவியலின் துணைப் படி ஆய்ந்து பார்த்தால், தாலி என்பது மஞ்சள் பொருள் கட்டிய கயிறு என்றே பொருள் கொள்ள முடியும்.
பழங்காலத்தில் தாலி[தொகு]
அகநானூறு[தொகு]
இந்தக் காலத்தில் மாப்பிள்ளை பொண்ணுக்குத் தாலிகட்டுவது தான் கல்யாணம் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், சங்க காலத்தில், அப்படி இல்லை; தாலியைப் பற்றிய பேச்சு அங்கு இல்லை. (பேச்சு இல்லை என்றவுடன், பழக்கம் இல்லையென்று கூறிவிட முடியாது. நம்மால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை என்று மட்டுமே சொல்லலாம். ஆனால் சங்கம் மருவிய காலத்தில் சிலம்பின் காலத்தில் தாலி உறுதியாய் இருந்திருக்கிறது.
அகநானூறு 86-ல் ஒரு திருமணக் காட்சி வருகிறது.
உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
‘கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை”’
விளக்கம் :
“தலை உச்சியில் குடத்தை வைத்துக் கொண்டுள்ள பெண்கள், புது மண்பாண்டம் (உருண்டையான அதற்கு மண்டை என்றே பெயர்.) வைத்திருக்கும் பெண்கள், ஆரவாரமாய்ச் சடங்கு செய்ய மங்கலமான பெரிய அம்மாக்கள், என இவர்கள் எல்லாம் ஒவ்வொரு பொருளையும் எடுத்துத் தர, பிள்ளை பெற்றெடுத்த நான்கு வாழ்வரசிகள் (பசலை போட்டிருக்கும் அவர்கள் நகைகள் அணிந்திருக்கிறார்கள்) “அம்மாடி, பெண்ணே, சொல் திறம்பாமல் (சொன்ன சொல் மாறி விடாதே), எல்லார்க்கும் உதவி செய்து, கொண்டவன் விருப்பத்துக்குத் தக்க நடந்து கொள்பவளாய் இரு”
என்று வாழ்த்தி கூந்தலுக்கு மேலே, நீரைச் சொரிந்து, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவுகிறார்கள்; அதோடு கல்யாணம் முடிகிறது. மொத்தத்தில் மஞ்சள் நீர் ஆடுவதும், பூ, நெல் சொரிவதும், வாழ்த்துவதும் தான், அகநானூற்றின் படி, மண்ணுதல் என்று சொல்லப்படும் மணம் ஆகிறது. பொதுவாக பூ, நெல் சொரிவதோடு, முளைப்பாலிகை என்ற இன்னொன்றையும் கலந்து கொள்ளுவார்கள். [திருமணத்திற்கு முதல்நாள், நெல்லோடு பல கூலங்களையும், சில பயறுகளையும் கலந்து ஈரத்தோட முளைக்க விட்டு, அதைப் பாலோடு கலந்து வைப்பதற்கு முளைப் பாலிகை என்று சொல்லுவார்கள்.] இந்த முளைப்பாலிகையையும், பாலில் பூவிதழ்களைப் பிய்த்துப் போட்டு வைப்பதையும் தான் மணமக்கள் மேலே சொரிவதற்குப் பயன்படுத்துவார்கள்.
மஞ்சள் நீராடல்[தொகு]
முல்>முல்ங்குதல்>முங்குதல் = முறங்குதல்; நீருக்குள் முங்கி எழுதல்
முல்ங்குதல்>முல்ஞ்சுதல்>மல்ஞ்சுதல்>மஞ்சுதல்>மஞ்ஞுதல்>மண்ணுதல் = நீர் இறங்குதல்
மஞ்சனம்>மஞ்ஞனம்>மண்ணனம் = நீர் இறைக்கும் செயல்
முல்>முழு>முழுகுதல்>முழுக்குதல் = நீருக்குள் இறக்குதல்
மண்ணுதல்>மண்ணம்>மணம் = நீருள் இறங்கும் செயல்.
அந்தக் கால தமிழர் மணம் என்பது கூடியிருப்போர் வாழ்த்துக் கூற நடக்கும் மங்கல நீராட்டே ஒழிய வேறு எதுவும் அல்ல. அகநானூற்றில் சொல்வது போல திருமணத்தில் மஞ்சள்நீர் ஆடும் சடங்கு இன்றைக்கும் நாட்டுப் புறங்களில் பல இடத்தும் (குறிப்பாக சிவகங்கைப் பக்கம்) முகன்மையாகத் தான் இருக்கிறது. முன்னே சொன்னது போல், மணம் என்ற சொல்லுக்கே மஞ்சள்நீர் ஆடுதல் என்றுதான் அதே போல 60-ஆம் ஆண்டு மணி விழாக்களிலும் மஞ்சள் நீராடுவதே (கும்பஞ் சொரிவதே) பெருஞ்சடங்காகத் தமிழ்நாடு எங்கணும் கொள்ளப் படுகிறது. (வடக்கில் இருந்து தெற்கே வந்து தமிழரோடு கலந்து போன பார்ப்பனர் கூட மஞ்சள் நீராட்டுச் சடங்கைத் தங்கள் திருமணங்கள், மணிவிழா போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளுவார்கள்.) ஆக அகநானூற்றுப் பழக்கம் குறைந்தது 2300 ஆண்டுகள் இந்தக் குமுகாயத்தில் தொடர்ந்து வருகிறது. இதே பழக்கம் கோபுரக் கலசங்களை நீராட்டுவதிலும் இருந்திருக்கிறது.
தொல்காப்பியத்தில் தாலி[தொகு]
மஞ்சள் நீராட்டு வழக்கை தொல்காப்பியம் புறத்திணையியலில் உழிஞைத் துறை பற்றிப் பேசும் இடத்தில் இயல்பு, இலக்கணம், துறைகள் ஆகியவை பற்றிப் பேசிய பின்பு, நொச்சி பற்றிப் பேசும் இடத்தில் தொல் 1014: 10 வது வரி பேசும். மாற்றுநாட்டுக் கோட்டையைப் பிடித்தபின் அந்தக் கோட்டைக் கோபுரத்தின் கும்ப உச்சியில் குடமுழுக்கு செய்வதைக் குறிக்கும் முகமாக
“குடுமி கொண்ட மண்ணுமங்கலம்”
என்ற சொல்லாட்சி அந்த வரியில் வரும். ஆக, மஞ்சள் நீராட்டு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, 2700 ஆண்டுகளாய் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது.
“திருக்குட நீராட்டு என்பது சமயப் பழக்கமல்ல; அது இனக்குழுப் பழக்கமே” என்பதற்குத் தொல்காப்பியமே முற்றுமுழுதான சான்று. இதே போன்ற திருக்குட நீராட்டு கோபுரத்திற்கு நிகழுமானால், பின் ஆண்பெண் இருவருக்கும் அவருடைய வாழ்க்கையின் குடும்பத் தொடக்கத்திலும், பெண்ணானால் அவள் அகவைக்கு வந்த பின்னும், பின்னால் ஆணுக்கு 60 அகவை முடிந்த போதும், குடநீராட்டு நடப்பது நெடுநாள் மரபாய் இருந்திருக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும். வெற்றி ஏற்பட்டால், நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தால், ஏதொன்றையும் கொண்டாட வேண்டும் என்றால், தமிழருக்கு மஞ்சளும், மஞ்சள் நீரும் வாழ்வில் ஊடுவந்து விடுகின்றன என்றே சொல்லலாம்.
சிலப்பதிகாரத்தில் தாலி[தொகு]
சிலம்பில் வரும் மங்கலவாழ்த்துப் பாடல் என்னும் முதற் காதையே “மங்கல வாழ்த்து” என்ற சொற்றொடரால் “திருமண வாழ்த்தை”த்தான் குறிக்கிறது. குறிப்பாக, மங்கலம் என்ற சொல் இங்கு திருமணத்தையே குறிக்கிறது. சிலம்பின் மங்கல வாழ்த்து 46-47 ஆம் வரிகளில்,
“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது””’
என்று சொல்லும் போது மங்கல அணி என்ற சொல்லாட்சியும் வருகிறது; அதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். “முரசுகள் இயம்பின, மத்தளங்கள் அதிர்ந்தன, சங்கு முழக்கம் முறைப்பட எழுந்தது, அரசெழுந்தது போல் வெண்குடைகள் எழுந்தன இத்தனைக்கும் பின்னே மணம் நடக்கும் அகலுள் (அகல் என்பது ஒரு சாலை அல்லது மண்டபம் அல்லது hall) மங்கல அணி எழுந்தது” என்று உணர்த்துகிறார்.
“ 19ம் நூற்றாண்டு வரையிலும் கூட நம்மூரில் திருமணங்கள் இரவில்தான் நடந்தன; பகலில் இல்லை. இராகு காலம், யம கண்டம் இல்லாமல் நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்தது அப்பொழுது இல்லை. இன்றைக்கு இருக்கும் காலநேரத் திருமண நடைமுறை ஒரு 100/120 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியதே! தவிரவும் திருமணங்கள் பெரும்பாலும் பூரணையும் (பௌர்ணமி), சகட நாள்காட்டும் (உரோகிணி நட்சத்திரம்) கூடிய இரவில் தான் நடந்தன. (நிலாவெளிச்சத்தில் வெண்குடைகள் எழுவது அலங்காரமாய் தோற்றமளிக்கும். ”
மங்கல அணி என்ற சொல்லாட்சி எதைக் குறிக்கிறது என்பதைப் புரிய மிஞ்சிக் கிடக்கும் இன்றையப் பழக்கம் தெரிந்தால் போதும். இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு திருமணத்திலும், “கெட்டிமேளம், கெட்டிமேளம்” என்ற குரல் எழுந்து மேளம் அதிர்ந்து, சில இடங்களில் சங்கு முழங்கி [குறிப்பாகச் சிவகங்கைப் பக்கம் சில ஆண்டுகள் முன்பு வரை சங்கு முழக்கம் திருப்பூட்டும் போது (தாலி கட்டும் போது) இருந்தது], அரசாணைக் காலுக்கு அருகில் எல்லோரும் எழுந்து நிற்க, வந்தவர்கள் தொட்டு வாழ்த்தப் பெற்ற தாலி அகலுள் எழத் தான் செய்கிறது. எனவே, சிலம்பில் மங்கல அணி என்ற சொல் தாலியைத்தான் மிகத் தெளிவாகக் குறிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. இங்கே தாலி என்ற சொல் வரவில்லை என்றாலும் தாலி குறித்த சொல் இருப்பதைக் காணலாம். தாலிப் பழக்கம் கி.பி. 100/150 அளவில் இருந்திருக்கிறது என்று சிலம்பை வைத்து அறுதியிட்டு உரைக்க முடியும்.
மங்கல அணி என்பது மனையறம் படுத்த காதையிலும் பேசப் படுவதைச் சொல்லலாம். நகரத்தார் வழக்கத்தில் திருமணமான மகனையும் மருமகளையும் (பெரும்பாலும்) ஓராண்டு முடிந்தோ, அல்லது ஓரோவழி மூவாண்டு முடிந்தோ, தனிக் குடித்தனம் வைப்பார்கள். இப்படித் தனிக் குடித்தனம் வைத்தலை “வேறு வைத்தல்” என்றும் சொல்லுவார்கள். இளங்கோவடிகளும் கூட “வேறு வைத்தல்” என்ற சொல்லாட்சியையே சிலம்பில் ஆளுகிறார். மகனைப் பெரிய வீட்டில் (பெற்றோர் வீட்டில்) இருந்து வேறு வைத்தலைத் தான் “மனையறம் படுத்தல்” என்று சொல்லுவார்கள்.
மனையறம் படுத்த காதையில் “மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே” என்றெல்லாம் கோவலன் சொல்லுவதைப் பலரும் ஏதோ திருமண நாள் இரவு நடந்தாக எண்ணிக் கொள்கிறார்கள். அது தவறு. அந்த உரை வேறு வைக்கும் சடங்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு நடந்ததாகும். அந்த ஓராண்டில் அவர்களுக்கு ஏற்பட்ட நிறைவின் முடிவில் தான், கோவலன் கண்ணகியைப் பலவாறு பாராட்டுகிறான். அப்படிப் பாராட்டுவதில் கீழே வருவதும் ஒரு பாராட்டாகும்.
நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுவின் மங்கல அணியே அன்றியும்
பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்
“மணம்வீசும் மலர்சூடிய பெண்ணே! உன்நலம் பாராட்டுபவர்கள், குறையில்லாத மங்கல அணியைத் தவிர வேறு அணி சூடவில்லையே, அது எதனால்?”
என்று கேட்கிறான். வேறொன்றும் இல்லை; பல்லாண்டு மங்கலமாய் வாழ்ந்து பலபேறும் பெற்ற வாழ்வரசி தான் தனித்து வாழப் போகிறவளை வாழ்த்த வேண்டும் என்பது மரபு. இங்கும் மங்கல அணி என்பது தாலியையே குறிக்கிறது. இந்தக் காலத்தில் சுமங்கலி என்ற இருபிறப்பிச் சொல்லால் இது போன்ற வாழ்வரசிப் பெண்ணைக் குறிப்பார்கள். சிவ மங்கலி என்னும் நல்ல தமிழ்க்கூட்டுச் சொல் தான் திரிந்து சுமங்கலி என்றாகி வடமொழியாய்ப் பொய்த்தோற்றம் காட்டுகிறது. இன்றும் இறைவியின் முன்னிலையில் பெற்ற குங்குமத்தைத் தாலியின் மேல் இட்டுக் கொள்ளும் பழக்கம் தமிழ்ப் பெண்களுக்கு உண்டு. குங்குமம் பொற் தாலியில் ஒட்டாது; ஆனால் மஞ்சள் பொருளில் நன்றாய் ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது அது சிவமங்கலியாய் ஆவது வியப்பு ஒன்றும் இல்லை.
இன்னும் பார்த்தால், மங்கலம் என்ற சொல் சிலம்பு 5:146, 151 வரிகளிலும் பயில்கிறது. இனி நடுகற் காதையில் வேண்மாளைக் குறிக்கும் போது வரும் வரிகளைப் (சிலம்பு 28:51) பார்க்கலாம்.
தமனிய மாளிகைப் புனைமணி அரங்கின்
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியேர் வண்ணம் காணிய வருவழி
வதுவை வேண்மாள் என்பது வதுவுற்ற அரசி வேண்மாளைக் குறிக்கிறது. வதுவை = wedding; இங்கே வதுவுற்ற என்பது wedded என்ற வினைச்சொல்லைக் குறிக்கிறது. மங்கல மடந்தை என்ற பெயர்ச்சொல் கண்ணகியைத் தான் குறிக்கிறது. “நிலவு எழுந்த பொழுதில் பொன்மாளிகையில் உள்ள புனைமணி அரங்கின் ஊடே மங்கல மடந்தையைக் காண வரும் வழியில்” என்ற பொருளை இங்கு கொள்ள வேண்டும்.
ஆகக் கணவன் இறந்த பின்னும் கூடக் கண்ணகி மங்கல மடந்தை என்றே சிலம்பிற் சொல்லப் பெறுகிறாள். இன்றைக்கும் கேரளத்தில் கண்ணகி கோயில் மங்கலதேவி கோயில் என்றே சொல்லப் பெறுகிறது. “கணவன் இருப்பதால் தான் மங்கலச் சிறப்பு” என்ற மூடநம்பிக்கைகளைக் குறிக்காமல், இங்கு தனித்த முறையில் மங்கல மடந்தை என்று கண்ணகி சொல்லப் பெறுவது குறிப்பிடப்படவேண்டியது.. மங்கல வாழ்வு என்பது ஒரு முழுமை பெற்ற வாழ்வு, அவ்வளவு தான். பொதுவாய் வேறு வைத்துத் தனிக் குடித்தனம் நடத்தும் எந்த ஒரு பெண்ணுக்கும் குமுகத்தில் தனி ஆளுமை கிடைத்து விடுகிறது. அப்படி ஆளுமை கிடைத்த எவளும் மங்கல மடந்தை, வாழ்வரசி என்றே அழைக்கப் படுவாள். (இன்றைக்கு முட்டாள் தனமாகக் கணவனை இழந்தோரை வாழ்வரசி அல்லாதவள் என்று கூறினாலும்) பழைய புரிதலில் கண்ணகியும் மங்கல மடந்தையே. (இந்தச் சொல்லாட்சி சிலம்பு 28:51, 30:53, 50:88 ஆகியவற்றிலும் பயிலும்.) நிறைவு வாழ்க்கையை கண்ணகி நடத்தியதை மனையறம் படுத்த காதையின் முடிப்பு வரிகளில்,
வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
மறப்பருங் கேண்மையொடு அறப் பரிசாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமோடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற்
காண் தகு சிறப்பில் கண்ணகி தனக்கென்
என்று சொல்லி ஆண்டு சில கழிந்ததை உணர்த்துகிறார். இன்னொரு சொல்லாட்சியாய் நீர்ப்படை காதையில் (27:163)
மாடலன், மங்கல மறையோன் என்று சொல்லப் பெறுவான்.
எங்கோ வேந்தே வாழ்கென்று ஏத்தி
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்
இன்றைக்கும் பெருமானரில் இரண்டு வகையை இனம் காட்டுவார்கள். ஒருவர் மந்திரங்களிலும், வேள்விகளிலும் தேர்ந்தவர், இன்னொருவர் தந்திரங்களில் (கோயில் பற்றிய புரிசைகளில்) தேர்ந்தவர். முதல்வகை ஆள் தான் இன்றைக்கும் திருமணங்களின் ஊடே வருகின்ற பார்ப்பனர் ஆவார். இரண்டாம் வகையைச் சேர்ந்த தந்திரி, ஓரோவழி முதல் வகையாருக்கு உதவி செய்யும் தோதாய் வரக்கூடும். இருந்தாலும் முதல் வகையாரையே, பெருமானர் சடங்குகள் நடத்த நாடுவர். மாடலன் முதல் வகை மறையவன்; அவன் மங்கல மறையோன் = மங்கல காரியங்களை நடத்தி வைக்கின்ற பார்ப்பனன் என்றே சொல்லப் படுகிறான். அதாவது “கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைச் செய்து வைக்கும் வாத்திமார்”.
மங்கல அணி என்ற தமிழ்க் கூட்டுச்சொல் மங்கலம்>மங்கல்யம்>மாங்கல்யம் என்று சுருங்கிப் போய் இருபிறப்பியாய் மாறியது ஒன்றும் வியப்பான செயல் அல்ல.
எடுத்துக்காட்டாக, “ஜல சமுத்ரம்” என்ற இருபிறப்பிச் சொல் இன்று “சமுத்ரம்” என்று சுருங்கச் சொல்லப் பட்டு பொருள் புரிந்து கொள்ளப் படுகிறது. சமுத்ரம் என்ற இருபிறப்பிச் சொல்லின் பிறப்பை அறியத் தமிழில் வராமல் முடியாது. கும்>கும்முதல்>குமிதல் என்ற தமிழ்வினையடி சேருதல் என்ற பொருளைத் தரும். குமிதல் என்பது தன் வினை. குமித்தல் என்பது பிறவினை. குமித்தம்/குமுத்தம் என்பது சேர்த்து வைத்ததைக் குறிக்கும் பெயர்ச்சொல். தென்மொழி/வடமொழிப் பரிமாற்றங்களில் (இவை இருவழிப் பரிமாற்றங்கள்; ஒருவழி மட்டுமே அல்ல.) குகர/சகரப் போலி பலநேரம் ஊடு வந்து நிற்கும். நம்முடைய குமுகம் அவர்களுடைய சமுகமாக உருமாறும். அப்படித்தான் குமுத்தம் சமுத்தம் ஆகி வழக்கம் போல ரகரம் ஊடுருவி சமுத்ரம் ஆகும்.
தாலி விளக்கம்[தொகு]
தாலி என்ற சொல்லிற்குப் பலரும் “மணமகளுக்குத் திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலன்” என்றே விதப்பாகப் புரிந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அது மட்டுமே பொருட்பாடல்ல; வேறு சிலவும் இந்தச் சொல்லிற்கு உண்டு. சரியாகச் சொன்னால், “வளமை (prosperity), பிறக்கம் (fertility)” ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு ஆட்களுக்கு அணிவிக்கும் ஒரு கலனாகவே தாலி என்னும் பொதுமைச் சொல்லைப் புரிந்து கொள்ள வேண்டும். தாலி என்னும் பொதுமைச் சொல்லோடு வெவ்வேறு சொற்களை முன்சேர்த்து, ‘மங்கலத் தாலி, ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி’ என்றெல்லாம் பலவிதக் கூட்டுச்சொற்களை பழந்தமிழர் உண்டாக்கி இருக்கிறார்கள்.
பேச்சு வழக்கில், ஓர் இயல்மொழியில் ஏற்படும் சொல்லாக்க முறைகளின் அடிப்படையைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு கருத்தைக் குறிக்கும் ஓரகைச் (unique) சொற்கள் விதப்பாகத் தான் ஓர் இயல்மொழியில் முதலில் எழுகின்றன. பின்னால் இது போன்றதொரு இன்னொரு விதப்பும் அதே கருத்தைச் சுட்டிக் காட்டும் போது, முன்னால் குறித்த விதப்புச் சொல் பேச்சு வழக்கில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பொதுமைச் சொல்லாகி விடுகிறது. அடுத்த சுற்றில், மேலும் ஒரு பெயரடையை அதற்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தி இன்னும் பல விதப்புச் சொற்கள் புடைத்து எழுகின்றன. தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்; பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான் தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) அடுத்த வளர்ச்சியில் இன்னும் பல விதப்புப் பயன்பாடுகள் பெருகியபின்னால், ‘மணமகளுக்கு திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலனை’ விதப்பாகக்’ குறித்த ‘தாலி’ பொதுமைச் சொல்லாகி, நல்ல எண்ணெய் போல, மங்கலத் தாலி என்று விதப்பு வழக்கை உருவாக்கியிருக்க வேண்டும்.
மற்ற விதப்புப் பயன்பாடுகளாய், ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலை), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி’ போன்றவையும் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன.
ஐம்படைத் தாலி[தொகு]
இது பெற்றோர் சிறுவருக்கு அணிவிக்கும் ஒருவகைத் தாலியைக் குறிக்கும். இந்தக் குறிப்பை இலக்கியங்கள் மூலமாகவும், 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நடைமுறையிலும் கூட நாம் அறியலாம். சங்கு, சக்கரம், வாள், வில், தண்டு (=கட்டை>கத்தை>கதை; இதைச் செண்டு என்று கூட இலக்கியங்கள் குறிக்கும். விழாக்களில் பூச்செண்டு கொடுப்பார்களே! அதன் வடிவத்தை ஓர்ந்து பாருங்கள்; கதை போல இருக்கும்), என ஐந்து விதமான படைக் கருவிகளின் சிறு போல்மங்களைச் செய்து அவற்றை ஒரு மஞ்சள் கயிற்றில் தொடுத்து ஐம்படைத் தாலி என்ற பெயரில் சிறுவருக்குப் பெற்றோர் அணிவிக்கும் பயன்பாடு புறநானூறு 77ம் பாட்டின் 7 ஆம் வரியிலும், அகநானூறு 54 ஆம் பாட்டின் 18 ஆம் வரியிலும், திணைமாலை நூற்றியைம்பதின் 66 ஆம் பாட்டில் 3வது வரியிலும், மணிமேகலையின் மூன்றாம் காதையில் 138 ஆம் வரியிலும், கலிங்கத்துப் பரணியின் 240 ஆம் பாட்டிலும் கூறப்பட்டிருக்கிறது.
புறநானூற்றின் 77ம் பாட்டு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் செருவில் தேரூர்ந்து வந்து நின்ற காட்சியையும், பின்னர் பகைவரோடு பொருது அவரைக் கொன்றவிடத்து அமைந்த தோற்றத்தையும் பற்றி இடைக்குன்றூர் கிழார் பாடுவது ஆகும். நெடுஞ்செழியனின் தந்தையும் (ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்) தாயும் (பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு), நெடுஞ்செழியனின் இளம் அகவையில் தவறிப் போக, இவன் தன் பகைவரோடு பதின்ம அகவையில் தலையாலங்கானத்தில் போரிட நேருகிறது. பையனாயும் அல்லாது, பெரியவனாயும் அல்லாது, ஒரு கலவையாய்க் காட்சியளிக்கும் நெடுஞ்செழியனின் தோற்றத்தைப் புலவர் இங்கே எடுத்துரைக்கிறார்.
“கிண்கிணி களைந்து கழலை இப்பொழுது தான் அணிந்திருக்கிறான்; சென்னியில் வேம்பின் தளிரும், உழிஞைக் கொடியும் இப்பொழுதுதான் குடுமி ஒழித்த முடியில் சூடிக் கொண்டிருக்கிறான்; வளையல் தவிர்த்த கைகளில் வில்லைப் பிடித்திருக்கிறான்; இப்பொழுது தேரின் மேல் நிற்கிறான்.” என்று சொல்லிய புலவர் மேலும் சொல்லுகிறார்.
“…………………………………………. தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன்”
“மாலை அணிந்தருக்கிறான்; ஆனால் ஐம்படைத் தாலியைக் களையாது இருக்கிறானே! பால் இல்லாத உணவு இன்றுதான் உண்டிருக்கிறான்.” என்று புலவர் சொல்லும் போது பதின்ம வயது வரை ஒரு சிறுவன் ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் நிலையை நுணுகி அறிகிறோம். பெரியவனாகிய பிறகு ஐம்படைத்தாலி களையப் படுவதும் கூட இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது. இனி, அகநானூற்றில் வினைமுடித்து மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகற்குச் சொல்லுவதாய் வரும் பாட்டைப் பார்ப்போம்,
முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால்” என
விலங்க அமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி
திதலை அல்குல் எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே
இந்த வரிகள், மகனுக்காகப் பொய்சொல்லி நிலாவை அழைக்கும் தாய் நிலையைத் தேர்ப்பாகனுக்குத் தந்தை உரைப்பதாய்க் காட்சி காட்டும். “முகிழ்த்து ஒளிகாட்டும் மூன்றாம் பிறை நிலவே! பொன்னால் ஆன ஐம்படைத் தாலியை அணிந்திருக்கும் என்மகனோடு விளையாட நீயும் வந்தால் உனக்குப் பால்தருகிறேன் என்று புதல்வனுக்காக பொய்யுரைக்கிறாள் என் காதலி” – என்று சொல்லுகிறது இந்த வரிகள்.
ஆக பதின்மப் பருவத்திலும் இளைஞன் அணிந்து கொள்ளும் ஐம்படைத் தாலி, பால்குடிப் பருவத்திலேயே அவனுக்கு அணிவிக்கப் பட்டுவிடுகிறது. இனி திணைமாலை நூற்றைம்பதைப் பார்ப்போம். (இது சங்கம் மருவிய காலத்தில் கி.பி. 300-400 களில் எழுந்த நூல்)
வல்வருங் காணாய் வயங்கி முருக்கெலாம்
செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் – நல்ல
பவளக் கொழுந்தின்மேற் பொன்தாலி பாஅய்த்
திகழக்கான்று இட்டன தேர்ந்து.
“செல்வச் சிறுவர்கள் அணியும் பொன்தாலியில் பொற்கொல்லர்கள் பவளம் இட்டுப் பொலிவித்தது போல, ஒளிவீசும் முருக்க மரத்தில் மலர்கள் பூத்திருக்கின்றன; பார்த்துக் கொள்ளம்மா! வேனிற் காலம் வந்தாயிற்று; இனிமேலும் நம் தலைவன் வேறிடத்தில் தங்கான்; உன்னைத் தேடி வந்துவிடுவான்” என்று தோழி தலைவிக்குச் சொல்லுகிறாளாம். இந்தப் பாட்டின் மூலம் செல்வச் சிறார்களின் தாலியில் சிவந்த பவளத்தைப் பொதிப்பதையும் நாம் அறிந்து கொள்ளுகிறோம். (மஞ்சளில் குங்குமப் பொட்டிடுவது இயற்கையில் நடக்கக் கூடியது தான். இன்றும் சில பெண்கள் கோயிலில் குங்குமத்தை எடுத்துத் தாலியில் இட்டுக் கொள்ளுகிறார்கள்.)
முடிவில் மணிமேகலையில் மலர்வனம் புக்க காதையில் 137-138 ஆம் வரிகள் முருகன் கோயில் திருவிழாவின் கால்கோள் காணப் புகும் தாய்மார்கள் தங்கள் செல்வச் சிறார்களை யானையின் முதுகில் வைத்துக் கொண்டு வரும் காட்சியைச் சொல்லுகின்றன. பொதுவாய் ஐந்து, ஆறு மாதத்தில் இருந்தே, பிள்ளைகளுக்கு வாய்நீர் கொட்டும். [ஏதொன்றையும் சுவையுணர்வால் அறியும் பருவம் அது.] காட்சியில் சொல்லப் படும் குழந்தைகள் பிறந்து எட்டுமாதம் ஆகியிருக்க வேண்டும். பேசத் தொடங்கும் நிலை. “எட்டு மாதத்தில் குளறிக் குளறி மெய்பெறாத மழலையிலும் வாய்நீர் கொட்டிக் கொள்வதால், அப்படிக் கொட்டும் வாய்நீர், பிள்ளைகள் போட்டிருந்த ஐம்படைத் தாலியை நனைக்கிறதாம்.” என்ற பொருளில் இந்த வரிகள் அமைகின்றன.
செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
ஆக, எட்டு மாதக் குழந்தை கூட, மணிமேகலைக் காலத்தில் (கி.பி.200) ஐம்படைத் தாலி போட்டிருக்கிறது. இதே போலப் பெரியாழ்வார் (கி.பி. 690-775), முதல்பத்து, திருத்தாலாட்டு 5 ம் பாட்டில் “எழிலார் திருமார்புக்கு ஏற்கும் இவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு” என்று சொல்லித் தாலப் பருவத்திலேயே ஐம்படை அணிவதைச் சொல்லுவார். இன்னும் நிறைந்த முறையில் பெரிய திருமொழி 1:6:10 -இல், மங்கல ஐம்படை என்றே கூடச் சொல்லி மஞ்சள் நிறத்தோடு பெரியாழ்வார் ஐம்படைத் தாலியைத் தொடர்புறுத்திச் சொல்லுவார்.
ஆக, அகநானூற்றின் காலத்தை வைத்துப் பார்த்தால், தாலி என்ற சொல்லின் பொதுமைப் பயன்பாடு, 2400 ஆண்டுகளுக்கும் முந்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கி.மு.400 ல் இருந்து கி.பி.800 வரைக்கும் கிட்டத் தட்ட 1200 ஆண்டுகள் ஐம்படைத் தாலிப் பழக்கம் இருந்திருக்கிறது. அதற்கு அப்புறமும் இலக்கியச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியும். (அப்புறம் எப்படி பத்தாம் நூற்றாண்டில் தான் தாலி எழுந்தது என்று கூற்றுச் சரியாகும்?) இந்தக் ஐம்படைத்தாலிப் பழக்கம் 50 ஆண்டுகளுக்கு முன்வரைக்கும் கூட, சிவகங்கை மாவட்டத்தில் நகரத்தார் குமுகத்தில் ஆண் சிறாருக்கு எனத் தொடர்ந்து வந்திருக்கிறது. (இந்தக் காலத்தில் ஐம்படைத் தாலி என்பது தென்மாவட்டங்களில் வெறும் பொற்சங்கிலியாய் மாறிப் போனதும் உண்டு.)
தாலி கட்டாத திராவிடர்கள்[தொகு]
நீலகிரியில் வாழும் மக்களாகிய தொதவர், கோட்டர் என்பவர்கள் திருமணத்தின்போது தாலி கட்டும் வழக்கம் இல்லாதவர்கள். இவர்களோடு அம்மலையில் வாழும் படகரிடமும் தாலிகட்டும் வழக்கம் இல்லை. கோதாவரி மாவட்டத்து மலைகளில் வாழும் கோயில்களும் தாலி கட்டாதவர்கள். கஞ்சம், விசாகப்பட்டினம் மாவட்டங்-களிலுள்ள மலைவாழ் கொண்டர் என்பவரும் இவர்களது கிளையினரான சவரர் என்பவரும் திருமணத்தின்போது தாலி கட்டும் வழக்கம் இல்லாதவர்கள். இவர்களுள் நீலகிரியில் வாழும் கோட்டர் மனைவி, கணவன் இறந்தபின், தான் அதுவரை-யில் அணிந்திருந்த பித்தளைக்காப்பை மங்கல நீக்கத்திற்கு அறிகுறியாக உடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் முதுவர் என்னும் வகுப்பார், சில நூற்றாண்டு-களுக்கு முன் நடைபெற்ற அயலார் படை-யெடுப்பின் போது, மதுரையிலிருந்து இம்மலை நாட்டுப் பகுதிகளுக்கு ஓடிவந்து விட்டதாகக் கூறுவர். இவர்கள் கோவை, மதுரை, மற்றும் மலையாள மாவட்டங்களிலுள்ள மலைகளி-லும், திருவாங்கூர் நாட்டிலுள்ள மலைகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடையே திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்கு காதணிகளையும், பித்தளைக் காப்பையும், ஒரு புடைவையையும், சீப்பையும் கொடுப்பது வழக்கம். அவன் இறந்த பிறகு அம்மணமகள், அவனால் கொடுக்கப்பட்டுத் தான் அதுவரை-யில் அணிந்து வந்த காதணிகளையும், பித்தளைக் காப்பையும் நீக்கி விடுதல் இன்றும் இருந்துவரும் வழக்கமாகும். (இக்கால மனைவி வளையலை உடைத்தலும், முதுவர் மனைவி வளையலை நீக்கலும், சங்க காலக் கண்ணகி வளையலை உடைத்தலும், வெளிமான் மனைவியர் வளையலை நீக்கியதும் இங்கு சிந்திக்கத்தக்கன)
தெலுங்குப் பழங்குடிகள்[தொகு]
இக்கால நாகரிகம் எட்டிப் பாராத பழங்குடிகளாகிய தெலுங்கு நாட்டு ஏட்டர், ஏனாதிகள் முதலிய இனத்தாரிடம் தாலி கட்டும் வழக்கம் இல்லை.தொட்டிய நாயக்கர் இனத்தில் உள்ள கொல்லவார் , ஏறகொள்ளர் போன்ற மக்களிடமும் தாலி கட்டும் வழக்கம் இல்லை , தொட்டிய நாயக்கர் , ராஜகம்பள மக்களின் திருமண நிகழ்வுகளின் மண்பாண்டம் கொண்டு செல்லுவது , தாலி அணிவது இல்லை , வரதட்சணை இல்லை , அவர்கள் எருக்கம்பூ , வேம்பு போன்றவற்றையே இன்றும் தங்கள் திருமணங்களில் பயன்படுதுகின்றனர் , இவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்களின் தமிழகத்தில் அதிகம் மக்கள் தொகை கொண்டு இருந்தும் பிராமணர்களை அழைக்காமல் தாங்களாகவே திருமணம் செய்துகொள்கின்றனர் .
மலையாளம்[தொகு]
மலையாள நாட்டிலுள்ள செருமார், முக்குவர், பலியர், வலையர், புலையர், பறையர், நாயாடிகள், பனியர், மலக்கர், கரிம்பளர், மலையர், மலசர், காடர், வேட்டுவர், மாவிலோர், அருநடர் முதலியோரிடத்திலும் திருமணத்தின்போது தாலி கட்டும் வழக்கம் இல்லை. ஈழுவர், காணிகர் முதலிய சில சாதியர் சாமின்னு என்னும் அணியைத் திருமணத்தின்-போது அணிகின்றனர். வாரியார் என்பவர் மத்தளம் அல்லது பறை வடிவில் உள்ள மாத்ரா என்னும் அணியைக் கட்டுவர். அந்நாட்டு சலவைத் தொழிலாளர் உந்து மின்னு அல்லது புளியிலைமின்னு என்னும் அணியைக் கட்டுவர். மலையாள வேட்டுவருள் மண அணியாக மோதிரம் அணிவித்தல் மரபு.
கன்னட நாடு[தொகு]
கன்னட நாட்டிலுள்ள காப்பிலியர், கொரகர், காடு குறும்பர், மொகயர், கார்விகள் முதலிய சாதியாரிடமும் தாலி கட்டும் வழக்கம் இல்லை. கார்வி என்னும் பரதவர் பொன்மணி (தாரைமணி) கழுத்தில் கட்டிப் பெண்ணைப் பந்தலுக்கு அழைத்து வருவர். காப்பிலியர் கரிய கண்ணாடி வளையல்களை அணிகின்றனர்.
துளு நாடு[தொகு]
துளு நாட்டிலுள்ள பாணார், ஓடாரி என்னும் சாதியரிடமும் தாலி கட்டும் வழக்கம் இல்லை.
தமிழ் சினிமாவில் தாலி.[தொகு]
பி.வாசு இயக்கிய சின்னத்தம்பி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். உலக விபரம் தெரியாத கதாநாயகனை மடக்கிப் பிடித்து தனது கழுத்தில் முன்று முடிச்சு போட வைத்து விடுவாள் கதாநாயகி. அதைக் கலியாணம் என்று அறியாமல் விட்டிற்கு வந்து தாயாரிடம் விளக்கம் கேட்பான் கதாநாயகன். பந்தல் வைக்காமல் மேளம் கொட்டாமல்கூட கலியாணம் நடக்கும் ஆனால் தாலி கட்டாமல் அது நடக்காது என்பார் தாயார்.
கே. பாக்கியராஜ் இயக்கிய அந்த ஏழு நாட்கள் திரைப் படத்தில் படத்தின் கதாநாயகியை அவளது காதலனிடமிருந்து பிரித்து வேறு ஒருவனுக்கு கட்டி வைத்து விடுவார்கள். அவனோடு வாழப் பிடிக்காத கதாநாயகி நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்று தப்பி விடுவாள். தன் காதலனைத் துறந்து கணவனோடு வாழப் பிடிக்காத நாயகி கணவன் தாலியை அறுக்க முற்படும்போது மட்டும் கதறித் துடித்து, அழுது ஆராற்றி, விம்மி வெதும்பி இறுதியாக கணவனுக்காக அல்ல அந்த கயிறு ஒன்றுக்காகவே கணவனோடு வாழத்தொடங்குவாள்.
ஒளிப்பதிவாளர் ஏ.வின்சன்ட் இயக்கிய ‘துலாபாரம்’ என்ற திரைப் படத்தில் தான் தாலியில்லாமல் தமிழ் மறையான திருக்குறளை ஓதி மாலை மாற்றி நடைபெறும் திருமணம் காட்டப் படுகிறது. தங்கர்பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ போன்ற திரைப் படங்களில் புரோகிதம் தவிர்க்கப் பட்டாலும் தாலிகட்டுவது தவிர்க்கப் படவில்லை.
திரைப் படங்களில் மட்டுமல்ல தமிழர்களின் அன்றாட வாழ்க்கையிலும் தாலி பிரிக்கப் படமுடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. தாலியில் போடப் படும் மூன்று முடிச்சுக்களானது அர்த்தம் முதல் முடிச்சு கணவனுடைய பந்தங்கள் மனைவிக்கு புதிது, மனைவியின் சொந்த பந்தங்கள் கணவனுக்கு புதிது இவை இரண்டையும் இணைக்கும் விதத்தில் முதல் இரண்டு முடிச்சும். மூன்றாவது நாம் தோற்றுவிக்கப்போகும் நம் குழந்தைகள் புதிதாக தோன்றும் உறவு. அந்த உறவைக் குறிக்கும் மூன்றாவது முடிச்சு. திருமணம் என்பது இந்த மூன்று உறவுகளை மையப்படுத்துவதால்தான் தாலியில் மூன்று முடிச்சு போடும் வழக்கத்தை நம் முன்னோர்கள் வழிநடத்தி வந்திருக்கிறார்கள் என்றும் விளக்கமளிக்கப் படுகிறது.
சில துளிகள்[தொகு]
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி மட்டுமே!
‘கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது’ – வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.
‘பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை’ – பெரும்புலவர் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனார்.
கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.
இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.
பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete