jaga flash news

Monday 12 June 2017

!!*மஹா பெரியவளின் மகிமை*!!

!!*மஹா பெரியவளின் மகிமை*!!
சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. ஒரு நாள் ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தில் இரவு பெரியவா அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். இரவு எட்டரை மணி இருக்கும். வேகவேகமாக ஓடிவந்தனர் ஒரு தம்பதியர். அவர்கள் பின்னாடி ஓர் இளம் வயது பெண்ணும் விரைந்து வந்தாள். பெரியவாளுக்கு முன் மூங்கில் தட்டுகளில் பழங்கள், முந்திரி, திராட்ச்சை என பல வகையான பதார்த்தங்களை வைத்தனர். உடனே பெரியவர் அடடே நம்ம விஸ்வநாதனா? பேஷ் பேஷ் இதோ பக்கத்துல நிக்கிறாளே உன் பொண்ணு. அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கியாக்கும். எங்கே விவாஹ பத்திரிகை? காணோமே என்றார். அவ்வளவு தான். எதிரில் நின்றிருந்த மூவரும் மடை திறந்த வெள்ளம் என கேவி கேவி அழுதபடியே ஆச்சார்யாள் பாதங்களில் விழுந்தனர். மஹா பெரியவா ஒன்றுமே தெரியாதமாதிரி ஏண்டாப்பா விஸ்வ நாதா நான் ஏதாவது எசகுபிசகாக கேட்டுட்டேனா? என்றார். சிவ சிவா அபச்சாரம் அபச்சாரம். இவள் என் பொண்ணு இவளுக்கு இருபத்தஞ்சு வயசு ஆகிறது இவளோட பதினேழாவது வயசிலேர்ந்து ஒவ்வொரு வருஷமும் இங்கே வந்து தங்கி முயற்சி பண்ணறோம் பெரியவா. ஒரு வரனும் குதிரலே. தட்டிப்போயிடரது நன்னா படிச்சிருக்கா, அழகாகவும் இருக்கா, பணம் இருக்கு இதெல்லாம் இருந்தும் அதிர்ஷ்டம் இல்லே என்று மீண்டும் அழ ஆரம்பித்தார். அங்கு நிலவிய இறுக்கத்தைப் போக்க எண்ணிய பெரியவா விஸ்வ நாதா நீ கோயில், குளம், ஏழைகளுக்கெல்லாம் தான தர்மம் பண்ணறேனு நேக்கு நன்னா தெரியும். நோக்கு இப்படி ஒரு மனக்கஷ்டமா? இவ நோக்கு ஏகபுத்திரி தானே? என்ன பேரு? என்று கேட்டார். அதற்க்கு விஸ்வ நாதன் இவ பேரு அபர்ணா எனக்கு இவள் ஏக புத்திரி தான் பெரியவா என்றார். ஜோஸ்யாள்ட்ட இவ ஜாதகத்தை காமிச்சியோ? என்றார் பெரியவா விஸ்வ நாதன் பார்த்தேன் பெரியவா. ஏதேதோ தோஷங்கள் சொல்லறா நிறைய பரிகாரங்களும் பண்ணிப் பார்த்துட்டேன் பெரியவா என்றார். பெண் கல்யாணத்துக்கு நகையெல்லாம் பண்ணிட்டியோ? என்று பெரியவா விஸ்வ நாதனின் மனைவியைப் பார்த்து கேட்டார். அவள் எங்க பொண்ணுக்கு 30பவுன். அதோட சேர்த்து தனித்தனியா ரெண்டு 20 பவுனுக்கு செட்டா நகை பண்ணியிருக்கேன். அபர்ணாவுக்கு கல்யாணம் நிச்சயமானா அந்தக் கல்யாணத்தோட ரெண்டு ஏழை பெண்களுக்கும் எல்லாச் செலவையும் ஏத்துண்டு விவாஹம் பண்ணி வைக்கிறதா தீர்மான. அதான் அவாளுக்கும் நகை பண்ணியிருக்கேன் என்றாள். பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த பெரியவா உன்னோட பரந்த மனசுக்கு அந்த காமாட்க்ஷி காப்பாத்து வாடா. ஒரு கார்யம் பண்ணு நாளக்கு கார்த்தால குடும்பத்தோட திருவானக்காவல் போய் அகிலாண்டேஷ்வரிக்கும், ஜம்புலிங்கேஷ்வரர்க்கும் அபிஷேகம் பண்ணி பிராத்தனை பண்ணுங்கோ. ஒம் பொண்ணு அபர்ணாவை அம்பாள் காதுலே இருக்கிற தாடங்கத்தை வெச்ச கண் வாங்காம பார்த்துண்டே பிராத்தனை பண்ணச் சொல்லு. அதை பண்ணிட்டு நேரா திருப்பதிக்குப் போய் ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் பண்ணு. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றார். பெரியவா இது வரை ஸ்ரீ நிவாஸ பெருமாளுக்கு எட்டு முறை திருக்கல்யாணோற்ச்சவம் பண்ணி வச்சிருக்கேன் என்று விஸ்வநாதன் கூறியது தான் தாமதம். சரி இந்த சன்னியாசி சொல்லறதுக்காக ஒன்பதாவது தடவை பண்ணு என்றார். அடுத்த இரண்டு நாட்களில் பெரியவா சொன்ன படி திருவானைக்காவில் அபிஷேக ஆராதனைகளை முடித்துவிட்டு திருப்பதி சென்றனர் அந்த குடும்பத்தினர். அங்கு ஸ்ரீ நிவாஸனுக்குத் திருக்கல்யாண உற்ச்சவத்தை நடத்தினர். நடத்த போதே ஸ்ரீ நிவாஸா எம் பொண்ணு என்ன பாவம் பண்ணினா? அவளுக்கு ஒரு வரன் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்கிற? என்று அழ ஆரம்பித்தனர் . விஸ்வ நாதனுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் சார் என் பெயர் வைத்திய நாதன். மெட்ராஸில் இருக்கேன். ஏன் அழுதுண்டு இருக்கேள் சுவாமி சன்னதியில்? என்று கேட்டார். உடனே விஸ்வ நாதன் தன் கவலையை கொட்டி தீர்த்து விட்டார். வைத்தியனாதன் நாங்க ஸ்ரீவத்ஸ கோத்திரம். நீங்க? உங்க பொண்ணுக்கு என்ன வயசு? என்றார் வாதூலம் அவளுக்கு 25 வயது ஏன் கேட்கறேள் என்றார் விஸ்வ நாதன். அதற்க்கு வைத்திய நாதன் எனக்கு ஒரே பையன். வயசு 26. பெயர் ஸ்ரீ நிவாஸன் நாங்க தஞ்சாவூர் பக்கம் மெலட்டூர். நான் டிஃபன்ஸ் அக்கவுண்ட்ஸ்ல வேலை. பையன் அமெரிக்காவுல ஃபோர்ட் கம்பெனியில் நல்ல வேலை. அவனுக்கு மூணு வருஷமா வரன் பார்த்துண்டு இருக்கோம். மூணு மாசத்துக்கு முன்னாடி பெரியவா கிட்ட பிராத்திச்சோம். அவா ஸ்ரீ நிவாஸனுக்கு திருக்கல்யாணம் பண்ணச் சொன்னா. அந்த பெரியவா அனுக்கிரஹம் இருந்தால் உங்க பொண்ணு எங்க மாட்டுப்பொண்ணா வரலாம் என்றார். திருமலையிலேயே ஜாதகப் பொருத்தம் பார்த்தனர். பத்துப் பொருத்தங்களும் தீர்க்கமாக அமைந்தது. சென்னை திரும்பிய இரு குடும்பத்தாரும் பெண் பார்க்கும் படலத்திற்க்கு ஏற்பாடு செய்தனர். மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போக பதினைந்து நாட்களுக்குள் ஒரு சுப முகூர்த்தம் பார்த்து விட்டார் விஸ்வ நாதன். இரு வீட்டாரும் ஒரு நாள் காஞ்சி மகானை தரிசிக்கப் புறப்பட்டனர். வைத்திய நாதனும் விஸ்வ நாதனும் தட்டுகளில் பழங்களோடு முகூர்தப்பத்திரிக்கையையும் பெரியவா முன் வைத்தனர். பெரியவா முகத்தில் அனுமாஷ்யமான சந்தோஷம். உடனே பெரியவா ஏண்டாப்பா விஸ்வ நாதா ஸ்ரீ நிவாஸனுக்கு 9வது தடவை திருக்கல்யாணம் பண்ணியதால் பத்து பொருத்தத்தோடு எப்போ முகூர்த்தம். உன் பொண்ணுக்கு கல்யாணம் அமைஞ்சுடுத்து என்றார். அந்த மகான் விஸ்வ நாதா அன்னிக்கு நீ அழுதுண்டே சொன்னப்ப உன் பொண்ணுக்கு பூர்வ ஜன்ம தோஷம் இருக்கிறது தெரிஞ்சுது. அந்த தோஷ நிவர்த்திக்காக அகிலாண்டேஷ்வரியின் தாடங்க தரிசனத்தையும் ஒம்பதாவது தடவையாக ஸ்ரீ நிவாஸனுக்கு திருக்கல்யாணமும் பண்ணச் சொன்னேன். புரியறதா? என்றார். ஷேமமா இருங்கோ என்று மனதார ஆசிர்வதித்தார் இரு குடும்பத்தாரையும் பெரியவா. விஸ்வ நாதன் குடும்பத்தையும், வைத்திய நாதன் குடும்பத்தையும் திருமலையில் சந்திக்க வைத்து சம்பந்திகளாக ஆக்கிய பெரியவாளின் கருணையை என்னவென்று சொல்லுவது?

No comments:

Post a Comment