jaga flash news

Monday 26 October 2020

தந்தையும், மகனும்

தந்தையும், மகனும்
_____________________

சூரியன் தகப்பன் காரகன்....

ஒன்பதாம் இடம் தகப்பனார் ஸ்தானம்.

பகலில் பிறந்தவர்களுக்கே சூரியன் தகப்பன் காரகன் ஆவார்.
இரவில் பிறந்தவர்களுக்கு சனியே பிதுர் காரகன் ஆவார்.

ஒன்பதாம் பாவகத்தில் சுபக்கிரகங்கள் இருந்து, தகப்பன் காரகனான சூரியன் 3,6,10,11 போன்ற ஸ்தானங்களில் இருந்து அல்லது நான்காம் இடத்தை தவிர மற்ற கேந்திரங்களில் இருந்து குரு ,வளர்பிறை சந்திரனால் பார்க்கப்பட சேர்க்கை பெற ,, புதனோடு இணைந்து ஒன்று ,நான்கு எட்டில் அமைய  இவர்களை குரு பார்க்க ,, ஒன்பதாம் இடத்து அதிபதியும் பலமாக

நல்ல தகப்பனாரை அடைந்து,, தகப்பனாரின் சுயார்ஜித சொத்தை ஜாதகன் அடைவான்.  இந்த மூன்றும் பலமாக சுபத்தன்மை அடைய தகப்பனார் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பார்.தகப்பனாருக்கும் பிள்ளைக்கும் இடையே பந்தபாசம் நன்றாக இருக்கும். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை "என்ற கொள்கையுடைய  மகன் பிறப்பான்.

மேலே சொல்லப்பட்ட சில வாக்கியத்தில் உங்களுக்கு முரண்பாடு இருப்பது போல தோன்றும். நான்கில் சூரியன் இருக்கக்கூடாது என்கிறீர்கள்.அடுத்து புதனோடு சேர்ந்து நான்கில் இருக்கலாம் என்கிறீர்கள் .என்னய்யா குழப்புகிறீர்கள்
என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது..

விதி என்று ஒன்று இருந்தால் விதிவிலக்குகளும் கண்டிப்பாக இருந்தே தீரும். நான்கில் தனித்து சூரியன் இருக்கக்கூடாது என்றேன். ஏன் என்று சிந்தித்து பார்த்தோமானால் பத்தாம் இடமான கேந்திரங்களில் உச்ச கேந்திரமான தசம கேந்திரத்தில் சூரியன் திக்பலம் பெறுவார்.அந்த திக்பலத்திற்கு நேர் எதிரான நான்காம் இடத்தில் திக்பல வலிமை இழப்பார்.

நிஷ்பலம் என்னும் பலமில்லாத நிலையை சூரியன் பெறுவார்.அப்போது சூரியனுடன் புதன் ஆட்சி, உச்சம் பெற்று இணையும் போது அல்லது நான்கில் சூரியன் ஆட்சி உச்சம் பெற்று புதனுடன் இணையும் போது , சூரியன் பலம் பெறுவார்.தன்னுடைய அதிநட்பு கிரகமான புதனுடன் சேரும் போது அவருக்கு பலம் கூடுகிறது.

 இந்த அமைப்போடு குருவும் நல்ல வலிமை பெற்று இவர்கள் இருவரையும் பார்க்க சூரியன், புதன், குரு என்று இரண்டு சுபக்கிரகங்களினால் தன் இழந்த பலத்தை பலமடங்கு பெறுகிறார்.

"விளையும் சூரியனும்,புதனும் விரும்பியே ஒன்று, நான்கு, எட்டில் வளையக்கூடின் மன்னவனாவான்"

(விரும்பியே மீன்ஸ் பகை,நீசம் இல்லாமல் இருப்பது )என்ற செய்யுள்படி புத ஆதித்ய யோகத்தால் சூரியன் ,புதன் இருவரின் தசைகளும் நன்மைகளை செய்யும். தகப்பனாரும் நல்ல முறையில் இருப்பார். அரசனுக்கு நிகரான சௌரியங்களை ஜாதகன் அடைவான்.

தகப்பனாரின் ஜாதகத்தில்  புத்திர ஸ்தானமான ஐந்தை, ஐந்தாமாதிபதியை குரு பார்க்க தந்தை மகனுக்கு இடையேயான உறவுப்பாலம் நன்றாகவே இருக்கும். தந்தையின் லக்னாதிபதியும் ,மகனின் லக்னாதிபதியும் நட்பு கிரகங்களாக இருக்கும் பட்சத்தில் தந்தை ,மகன் உறவு மிக நன்றாகவே இருக்கும்.

சூரியனுக்கு ஒன்பதில் அல்லது பாக்கியாதிபதிக்கு ஒன்பதில் குரு ஆட்சி உச்சம் பெற்று  வலிமையாக பார்க்க தந்தை, மகன் உறவு மிக வலிமையாக இருக்கும். தந்தை மிக  உயர்வான நிலைக்கு செல்வார்.குழந்தை பிறந்த பிறகு ஜாதகரின் தந்தை உச்சத்தை அடைவார்

தந்தையின் லக்னாதிபதியும், மகனின் லக்னாதிபதியும் பகையாக இருந்தால் தந்தை மகன் உறவு கேள்விக்குறியாகும்.
ஒன்று, ஐந்து ,ஒன்பது போன்ற திரிகோண ஸ்தானங்களில் முடவன், சேய் ,ரவி என்று சொல்லப்படும் சனி,செவ்வாய், சூரியன் போன்ற பாவர்கள் பாவத்தன்மை பெற்று காணப்பட தந்தைக்கு ஈனம் ஏற்படும்.

தந்தைக்கு அரிட்டம் என்று சொல்லு
தொல்லை என்று சொல்லு ,கஷ்டம் என்று சொல்லு  

"உடன் ஜென்ம லக்னத்திற்கு ஒன்று, ஐந்து ,ஒன்பது, பத்து இந்த இடங்களில் முடவன், சேய், ரவி இந்த மூவரில் ஒருவர் நிற்க, திடமுறும் பிதாவுக்கு ஈனம்"என்ற செய்யுளின்படி பிதாவுக்கு அரிட்டம் ,தொல்லை ,கஷ்டத்தை தரும்.

அமாவாசை யோகத்தில் பிறந்து,சூரியன், சந்திரன் இருவரில் ஒருவர் பகை,நீசம் பெற ஜாதகனின் உயர்வை பெற்றோர்கள் காண இயலாது.

கேது ஐந்தாம் பாவகத்தில் இருக்க அல்லது ஒன்பதாம் பாவகத்தில் இருந்து குறிப்பாக சனியின் வீட்டில் இருந்து செவ்வாயால் பார்க்கப்பட அல்லது செவ்வாயின் வீட்டில் இருந்து சனியால் பார்க்கப்பட தந்தை, மகன் உறவில் விரிசல் இருக்கும். கேது தசையில் பூர்வீக சொத்துக்கள் அனைத்தும் நாசமாகும்.

ஒன்பதாம் அதிபதிக்கு சனி,செவ்வாய், ராகு சம்பந்தப்பட தந்தை ,மகன் உறவு பாதிப்புக்கு உள்ளாகும். சூரியனும் ,சனியும் இணைந்து அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, இதில் சூரியனை விட சனி அதிக வலுப்பெற,
தந்தையும் மகனையும் பிரிக்கும்.
இருவரும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. ஒரே வீட்டில் இருப்பார்கள். பேசிக்கொள்ள மாட்டார்கள். தனித்தனியாக சமைத்து சாப்பிடுவார்கள். யாராவது ஒருவர் வெளிநாட்டில் இருப்பார்கள்.இவர்களுக்குள் இடைவெளி ரொம்ப ஜாஸ்தியாக இருக்கும்.சூரியனும், சனியும் சுபத்தன்மை அடைய இந்நிலை மாறும்.


No comments:

Post a Comment