jaga flash news

Thursday 8 August 2013

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தைந்தாவது இடத்தை பெறுவது பூரட்டாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி குருபகவானாவார். பூரட்டாதி நட்சத்திரத்தின் 1,2,3&ம் பாதங்கள் கும்ப ராசிக்கும் 4&ம் பாதம் மீன ராசிக்கும் சொந்தமானதாகும். இதில் 1,2,3ம் பாதங்கள் கணுக்கால்களையும், 4&ம் பாதம் கால், முன்னங்கால்களையும் ஆளுமை செய்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஸே, ஸோ, தா, தீ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் நோ, நௌ ஆகியவையாகும். இது  ஆண் இனமாக கருதப்படுகிறது.

குண அமைப்பு;
     
பூரட்டாதி நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் நியாய அநியாயங்களை தைரியமாக எடுத்துரைப்பார்கள். தொலை நோக்கி சிந்தனை அதிகம் என்பதால் எப்பொழுதும் ஏதாவது சிந்தனை செய்து கொண்டேயிருப்பார்கள். மற்றவர்களுக்காக பாடுபடுவார்கள். முன்கோபியாக இருந்தாலும் பரந்த மனம் இருக்கும். தன்னை பற்றி குறை கூறுவதை பொறுத்து கொள்ள மாட்டார்கள். எந்த பிரச்சனைகளையும் ஞாயமாக தீர்த்து வைப்பார்கள் உணர்வுகளை அடக்கி ஆளக்கூடிய திறன் கொண்டவர்கள். நல்ல அறிவாற்றலும் பேச்சாற்றலும் இருக்கும். பால், நெய், தயிர், போன்றவற்றை விரும்பி உண்பார்கள். அப்பாவி பிழைக்க தெரியாதவர் என பலர் நினைத்தாலும் சாதுர்யமாக பேசி பொருள் பட ஈடுபடுவார்கள். எல்லாம் தெரிந்தாலும் எதையும் வெளிகாட்டி கொள்ளாமல், பிறர் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தானுண்டு தன்  வேலையுண்டு என இருந்தாலும் சமூகத்தின் மீது பற்றுடையவர்கள் காலத்திற்கேற்ப தன்னை மாற்றி கொள்ளாமல் பழைய விதி முறைகளையே பின்பற்றுவார்கள். யாருக்கும் தொந்தரவு தாரத இளகிய மனம் கொண்டவர்கள்.

குடும்பம்;
     
பூரட்டாதி நட்சத்திர காரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரை இல்லாதவர்களாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கை என்பது இவர்களுக்கு தாமரை இலையில் தண்ணீர் போலத்தான் பட்டும் படாமல் இருக்கும். வாழ்க்கையில் பற்றுதல் குறையும். பிள்ளைகள் மீது அதிக பாசம் இருக்கும். தாய் தந்தைக்கு ஏற்ற மகனாகவும், சகோதர சகோதரிகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்களாகவும் இருப்பார்கள். யாருடைய சொத்துக்கும் ஆசைபடமாட்டார்கள். அது போல தங்களுடைய சொத்தையும் யாருக்கும் விட்டு கொடுக்கும் மாட்டார்கள். சிறு வயதிலேயே பெரிய அனுபவங்களையும், கசப்பான சம்பவங்களையும் சந்திக்க நேரிடும். ஆடை  அணிகலங்சளை விரும்பி அணிவார்கள். வீண் செலவுகள் செய்ய மாட்டார்கள்.  ஞான அறிவாற்றல் அதிகம் இருக்கும்.

தொழில்;
     
பூரட்டாதி நட்சத்திரகாரர்கள் துறவறம், ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர்கள்.  26 வயது வரை கஷ்டங்களை சந்தித்தாலும் 27 வயது முதல் பல வகையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு பொருளாதாரம் உயர்வடையும். கல்வி ஆசிரியர்களாகவும், அறிவியல் அறிஞர்களாகவும், பலர் கல்லூரி பள்ளி போன்றவற்றை நிர்வகிப்பவர்களாகவும் இருப்பார்கள். சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சங்கங்கள் வைத்து நடந்துவார்கள். இசை, இலக்கியத்தில் ஈடுபாடும், மதம் சார்ந்த கல்வி துறைகளிலும் பொதுப்பணி தலைவர்களாகவோ பணிபுரிவார்கள். பணம் புரளும் இடம், தங்கம் விற்குமிடம் எக்ஸிகியூட்டில் துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். விளையாட்டு துறையில் சிறந்த வீரர்கள் என்பதால் அதிலும் பரிசுகளையும், லாபங்களையும், பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.

நோய்கள்;
      எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பவர்களாதலால் நோய்கள் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை. வந்தால் கால் முட்டுகளில் வலி வந்து மருத்துவ செலவினை உண்டாக்கும்.

திசை பலன்கள்;
      பூரட்டாதி நட்சத்திராதிபதி குருபகவான் என்பதால் முதல் திசையாக குரு திசை வரும்  இத்திசையின் மொத்த காலங்கள் 16 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். இளம் வயதிலேயே சுப கிரக திசை வருவதால் கல்வியில் முன்னேற்றமும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.
     
இரண்டாவதாக 19 வருட காலங்கள் சனி திசை நடைபெறும். இத்திசை காலங்களில் அசையா சொத்து சேர்க்கை, பூமி மனை வாங்கும் யோகம், வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். மக்களின் செல்வாக்கும் கிட்டும்.
     
மூன்றாவதாக வரும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் எதிலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேற வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.
     
நான்காவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் ஆரோக்கியத்திலும் பாதிப்பு உண்டாகும்.
     
ஐந்தாவதாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்கள் நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அசையும் அசையா சொத்து சேர்க்கைகளும் பிள்ளைகளால் பெருமைகளும், பொன்,பொருள் சேரும் யோகமும், சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பும் உண்டாகும்.

விருட்சம்;
     
பூரட்டாதி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள தேமா மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தினை அக்டோபர் மாதத்தில் 12 மணிக்கு மேல் தலைக்கு மேல் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
வண்டி வாகனம் வாங்குதல், கடன்களை தீர்த்தல், விக்கிரங்களை பிரதிஷ்டை செய்தல், மந்திரம் ஜெபிப்பது, மந்திர உபசேம்  செய்வது நல்லது, கிணறு வெட்டுவது, மரகன்று நடுவது, செங்கல் சூளையிடுவது நல்லது.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருக்கோளிலி;
      எனப்படும் திருக்குவளை ஸ்தலம். தஞ்சை மண்டலத்திலுள்ள ஏழ சிவ தலங்களில் ஒன்று நவகிரகங்களின் குற்றங்களை பொறுத்து அருள் செய்ததால் கோளிலி நாதர் என்ற பெயர் பெற்றவர். இக்கோயில் நவகிரகங்களின் பரிகார ஸ்தலமாகவும் உள்ளது.

சொல்ல வேண்டிய மந்திரம்
   ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம்
     யஷாய குபேராய
    வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே
    தன தான்ய ஸம்ருத்திம் மே
       தேஹிதாபய ஸ்வாஹா!

பொருந்தாத நட்சத்திரங்கள்
      கிருத்திகை, உத்திரம், உத்திராடம் புனர்பூசம், விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

No comments:

Post a Comment