jaga flash news

Friday 3 April 2015

மரங்களை வெட்டினால் யாரிடம் புகார் கொடுப்பது?’’

“மரங்களை வெட்டினால் யாரிடம் புகார் கொடுப்பது?’’
‘‘மிருகங்களுக்குத் தீங்கு செய்தால், ‘புளூ கிராஸ்’ அமைப்பில் புகார் செய்ய முடியும். இதேபோல, பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டினால் யாரிடம் புகார் கொடுப்பது?’’
தமிழக வனத்துறையின் ஒய்வுபெற்ற வனச்சரகர் ர.ராம்நாத்சேகர் பதில் சொல்கிறார்.
‘‘காப்புக் காடுகள் (ரிசர்வ் ஃபாரஸ்ட்) மற்றும் வனப்பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டினால், அருகில் உள்ள வனச்சரகர், மாவட்ட வனப் பாதுகாப்பு அலுவலர்களுக்குத் தகவல் கொடுக்கலாம். உடனடியாக மரம் வெட்டுவதைத் தடுக்க, அமைக்கப்பட்டுள்ள வனத்துறையின் ரோந்து பிரிவு வனவர்கள் அங்கு வந்து நடவடிக்கை எடுப்பார்கள். ஒருவேளை பொது இடத்தில் உள்ள மரத்தை வெட்டினால், அந்தப் பகுதிக்கு உட்பட்ட வி.ஏ.ஓ, தாசில்தார் மற்றும் காவல்நிலையத்துக்குப் புகார் கொடுக்கலாம். புகார் கிடைத்தவுடன், மரம் வெட்டப்படும் இடத்துக்கு இந்தத் துறைகளின் அலுவலர்கள் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். மரம் வெட்டுவது என்பது இயற்கையை அழிக்கும் செயல். ஆகவே, இதற்கு அபராதமும், சிறை தண்டனையும் உண்டு.
பொது இடத்தில் மட்டுமல்ல, சொந்த நிலத்தில் நாம் வளர்க்கும் மரங்களை வெட்டுவதற்கு கூட, வி.ஏ.ஓ வின் அனுமதி அவசியம். அது எந்த மரமாக இருந்தாலும் சரி. உதாரணத்துக்கு வேப்ப மரமாக இருந்தாலும் அனுமதி பெற வேண்டும்.
சொந்த பயன்பாட்டுக்காக ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றால், அங்கு குறைந்தபட்சம் நான்கு மரங்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையில் மரங்கள் இருந்தால்தான், மரம் வெட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும், ஒரு மரத்தை வெட்டினால், அங்கு நான்கு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும்... என்பது போன்ற நல்ல விஷயங்களை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. நடைமுறையில் யாரும் பின்பற்றுவதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.’’

No comments:

Post a Comment