jaga flash news

Sunday 19 April 2020

நீங்கள் உடுத்திய துணியை தானமாக மற்றவர்களுக்கு கொடுத்தால் இது தான் நடக்கும் தெரியுமா?

தானம் என்பது புண்ணிய காரியம் தான் என்றாலும் பழைய துணி மணிகளை தானம் அளிப்பதில் நிறைய சிக்கல்கள் உண்டு. அதனால் தான் நம் முன்னோர்கள் பழைய துணியை தானம் அளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். நாம் அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் தானமாகவோ, பாத்திரத்திற்கோ போட்டு விடுகிறோம். இல்லாதவர்களுக்கு தானே கொடுக்க போகிறோம்? அதில் என்ன வந்துவிட போகிறது என்று எண்ணி விடுகிறோம். இதில் ஜோதிட ரீதியாக, ஆன்மீக ரீதியாக சில தேவையற்ற இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஒருவர் உடுத்திய துணியை அடுத்தவருக்கு வழங்குவது என்ன சிக்கல்களை வாழ்வில் உண்டாக்கும் என்று இப்பதிவில் காணலாம்.முந்தைய காலங்களில் வசியம் செய்பவர்கள் பெருகி இருந்தனர். பல திறமை மிக்க மாந்திரீகர்களும், தாந்திரீகர்களும் வாழ்ந்த காலம் அது. அச்சமயத்தில் ஒருவரின் பழைய உபயோகப்படுத்திய துணிகள், காலடி மண், தலைமுடி, நகங்கள் போன்றவை கிடைத்தால் அதை வைத்து தவறான வழிமுறைகளை பயன்படுத்தி ஏவல்களில் ஈடுபட்டு வந்தனர். ஒருவரது ஆடை என்பது அவர்களின் மூச்சுக் காற்று, ஸ்பரிசம், உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள், வியர்வைத் துளிகள் என்று அனைத்தும் கலந்திருக்கும். நீங்கள் என்ன தான் துவைத்தாலும் நிச்சயம் எங்கேனும் ஓரிடத்தில் உங்களை சார்ந்த விஷயங்கள் அதில் ஒட்டி இருக்கும். இவற்றை அடுத்தவர்கள் பயன்படுத்தினால் தரித்திரம் ஏற்படும்.நாம் ஒருவருக்கு மனமுவந்து இவற்றை வழங்குகிறோம். ஆனால் இவைகள் சேருமிடம் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது அல்லவா? அந்தக் காலம் போல இந்தக் காலத்தில் பில்லி, சூனியம், ஏவல் என்பது பெரிதாக பார்க்கப்படவில்லை. அத்தகைய திறமை மிக்க மாந்திரீகர்கள் இக்காலகட்டத்தில் குறைவுதான். அதனால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இருப்பினும் உங்களின் வியர்வை பட்ட அந்த துணி யாருக்கு போய் சேர்கிறதோ, அவர்களிடத்தில் இருக்கும் தரித்திரம் உங்களையும் விட்டுவைக்காத நிலை ஏற்படலாம். உதாரணத்திற்கு உங்களுடைய துணி தரித்திரத்தை கொண்ட ஒருவரிடம் சேர்ந்து விட்டால் அதில் உங்களுக்கும் நிச்சயம் ஒரு பங்கு வந்து சேரும். அவரின் கர்ம வினைக்கு அவர் பரம ஏழையாகவும், மிகவும் துன்பத்தை அனுபவிப்பவராகவும் இருக்கலாம். அவர்களிடம் தரித்திரம், பீடை என்று சொல்லப்படுகின்ற துர் தேவதைகள் வாசம் செய்வார்கள்.இது அவர்களின் கெட்ட நேரமாக இருக்கும். அதில் ஒரு பங்கு உங்களையும் ஆட்டி வைக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம், எடுத்த காரியங்களில் தோல்விகளை தழுவலாம், முன்னேற்றத்தில் தடை ஏற்படலாம். நீங்கள் எந்த தவறும் செய்திருக்க மாட்டீர்கள். ஆனால் உங்களின் வியர்வை பட்ட துணியானது சேருமிடம் சரியான இடத்தில் இருந்து விட்டால் பிரச்சினை இல்லை. இல்லாதபட்சத்தில் உங்களுக்கும் அந்த கஷ்டத்தில் நிச்சயம் பங்கு வரும். இதனால் தான் நம் முன்னோர்கள் துணிமணிகளை தானமாக வழங்குவதை தவிர்த்து வந்தனர். ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கிணங்க நம் முன்னோர்கள் போகி பண்டிகை அன்று பழைய துணிகளை அனைத்தும் போட்டு கொளுத்தி விடுவார்கள். இதுவே சரியான முறையாகும்.ஒருவேளை தானம் கொடுப்பவர்களுக்கு கிரக நிலைகள் சரியாக இல்லாமல், அவர்களுக்கு கெட்ட நேரம் இருந்தால் நீங்கள் தானம் கொடுப்பவருக்கு அது பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆக தானம் கொடுத்தாலும் சரி, வாங்குவதானாலும் சரி அவரவர்களின் கிரக நிலை, காலநிலை சரியாக இல்லாத பட்சத்தில் நிச்சயம் பிரச்சனைகளை உண்டாக்கும். இதனை தவிர்ப்பதே உத்தமம். பிறரால் நமக்கோ, நம்மால் பிறருக்கோ எந்தவிதமான துன்பமும் ஏற்பட்டுவிடக்கூடாது. தானம் என்பது நல்ல காரியம் தான். தானம் கொடுப்பதற்கு பல வகைகள் நம்மிடம் இருக்கின்றன. எவ்வளவோ பேர் நல்ல உபயோகப்படுத்தாத துணிமணிகளை கூட தானமாக வழங்குகின்றனர். நீங்கள் தானம் கொடுப்பதை தவறு என்று கூறவில்லை. இதற்கு மாற்று வழி ஒன்று உள்ளது.துணிமணிகள் நிறைய இருக்கிறது, வீணாக்குவதற்கு மனமில்லை, எனவே இல்லாத ஒருவருக்கு தானமாக கொடுக்கிறோம், அதில் என்ன தவறு இருக்கிறது என்று யோசிக்கும் பட்சத்தில், அதற்கு நல்ல வழி ஒன்று உள்ளது. நீங்கள் என்ன தான் சோப்பு போட்டு சுத்தமாக துவைத்து வைத்து கொடுத்தாலும் அதில் பிரயோஜனமில்லை. அதற்கு பதிலாக கடல்நீரில் இந்த துணிகளை எல்லாம் ஊறவைத்த பின்னர் துவைத்து காயவைத்தால் எத்தகைய மாந்திரீகர்களாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. உங்களை சார்ந்த எந்த விஷயங்களும் அந்தத் துணியில் இருக்காது. கடல் நீருக்கு தேடி அலையவும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் கல் உப்பை சிறிதளவு தண்ணீரில் போட்டு ஊற வைத்தாலே போதும். கடல் நீரிலும் உப்பு தான் உள்ளது. இந்த உப்பு மிகவும் சக்தி வாய்ந்தது. நீங்கள் ரசாயன கலவை ஏற்றப்பட்ட சோப்புகளை பயன்படுத்தினாலும் தீராத தரித்திரம் மகாலட்சுமியின் அம்சமான கல் உப்பிற்கு உண்டு என்பது தான் உண்மை. உடுத்திய துணிகளை தானம் வழங்குவதை முடிந்த வரை தவிர்த்திடுங்கள். தவிர்க்க முடியாவிட்டால் உப்பு நீரில் ஊற வைத்து துவைத்து காயவைத்து பின்னர் தானம் அளியுங்கள். அதுவே தானம் கொடுப்பவர்களுக்கும், அதனை வாங்குபவர்களுக்கும் நல்லது.

1 comment:

  1. மிகவும் அருமை..அய்யா வெ.சாமி அவர்களே..! யாருக்காக என்றாலும் என்னுடைய பழக்கம் புது துணி வாங்கி கொடுத்துவிடுவேன். என் பீரோவில் உடுத்தாத புதுச் சேலைகள் எப்போதும் வைக்கும் பழக்கம் உண்டு. அம்மா உடுத்த ஒரு பழைய சேலை தாங்கம்மா−ன்னு தர்மம் வாங்குகிறவர்கள் யாராவது கேட்டால், அதில் ஒரு புடவை எடுத்து கொடுத்து விடும் வழக்கம் உண்டு. என் பிறந்த வீட்டிலும் யாருக்கும் அந்தப் பழக்கம் கிடையாது. பண்டிகைக்கு வா..தருகிறேன் என சொல்லி அனுப்புவார்கள். அதன்படி வாங்கிச் செல்வார்கள். நானும் தீபாவளி அன்று அவசியம் யாருக்காவது, மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு புடவை அளித்திடும் பழக்கம் உண்டு. அதற்கு காரணம்...நாம் என்னதான் பலகாரங்களைச் சுட்டு, புத்தாடை உடுத்தி, வெடிவெடித்து தீபாவளி கொண்டாடினாலும், அந்த ஏழையின் மகிழ்ச்சியில் கிடைக்கும் சந்தோஷம் நம் தீபாவளியில் இருக்காது. மன திருப்தி என்பது அன்று அவர்களுக்கு அளிக்கும் புடவையில், அவர்கள் மனமகிழ்ந்து வாயார வாழ்த்திச் செல்வார்களே அதில் இருக்கிறது நிறைவு. Very nice. வாழ்த்துகள்..!

    ReplyDelete