jaga flash news

Monday 23 November 2020

கார்த்திகை மாதமும் சோதிடமும்...!

கார்த்திகை மாதமும் சோதிடமும்...!

இன்று கார்த்திகை மாதப்பிறப்பு இந்த மாதம் முழுவதும் சூரியன் விருச்சிகத்தில் சஞ்சரிப்பார், காலபுருஷ 8ம் வீடு விருச்சிகம் இது ஒரு நீர் ராசி ஆகும், ராசி வகைகளில் மோக்ஷத்தை குறிக்கும் ராசியாகும், எந்த ஜாதகருக்கு அவரின் தீவினை பயன் 8ல் தான் இருக்கும், அதை போலவே காலபுருஷ 8ம் வீடு விருச்சிகம் அனைத்து தீவினை பயன்களையும் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது, இதை எண்ணியே நம் முன்னோர்கள் இந்த ராசியின் காரகங்களில் அந்த தீவினை பயனை கழிக்கும் வழிபாட்டு முறைகளையும் கார்த்திகை மாதத்தில் ஏற்படுத்தியுள்ளார் என்பதை எண்ணிப்பார்க்காமல் இருக்க இயலவில்லை சரி அவை என்ன பார்ப்போம் வாருங்கள்...!

கார்த்திகை மாதம் ஹரி/ஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐப்பனுக்கு மிக உகந்த மாதமாக அவரை தரிசிக்க விரதத்தை தொடங்கும் மாதமாகவும் அமைத்ததின் அர்த்தம் என்ன?, ஐயப்பன் கிரகங்களில் சனியை குறிப்பார், விருச்சிக ராசியின் காரகாதிபதி அதாவது 8க்கு உரியவர் சனியே, விருச்சிக ராசி ஒரு தேங்கிய குட்டை பகுதி ஆகும், கரடு முரடான பாதை கொண்ட பகுதி, இதையே ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் அவரின் சபரிமலையில் கடக்க வேண்டும், பெரும்பாலும் கார்த்திகையில் மாலை அணிந்து மார்கழியில் ஐயப்பனை தரிசிப்பார்கள் ஏன் தெரியுமா, கார்த்திகை மாதம் சந்திர பலம் குறைந்த மாதம் மேலும் இது கால புருஷ 8ம் வீட்டுக்கு உரியது என்பதால் இந்த மாதத்தில் அதாவது 8ம் வீட்டில் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மையை விரதத்தின் வழியே கடைபிடித்தால் அதன் பலனை மார்கழியில் அதாவது காலபுருஷ 9ம் வீடான தனுசு குருவின் வீட்டில் சூரியன் நிற்கும் போது ஐயனை தரிசித்து பெறலாம், இவ்வாறு செய்யும் போது தீய கர்மங்கள் கழியும் என்பதே இதன் அர்த்தம், சிலர் கார்த்திகையில் தரிசனத்தை நிறைவு செய்வார்கள் அது அவரவர் இஷ்டம் ஆனால் முறை என்பது மேலே கூறியது தான்...

இதே போல் தான் திருவண்ணாமலை தீபம், மகர ஜோதிக்கு நிகரான நிகழ்வு, அதே போல் திரு கார்த்திகை முருகனுக்கு உகந்தது, மூன்றுமே 8ல் இருக்கும் இருளை இறைவன் அருளை கொண்டு நீக்கும் தாத்பரியமே, மூன்றிலும் விருச்சிகத்தின் காரகங்கள் நிரம்பியுள்ளன, ஐயப்பன் சனி என்றால், ஈசன் சூரியன், முருகன் செவ்வாய் இம்மூவருக்கும் உகந்த மாதமாக கார்த்திகையை முன்னோர்கள் நிர்ணயம் செய்ததன் பொருள், ஈசன் ஐயப்பனின் காரக வீட்டில்,  முருகன் ஆளும் வீட்டில் சஞ்சரிக்கிறார் என்பதே, ஆகவே இம்மாதத்தில் இந்த மூவரின் தரிசனம் அபரிமிதமான பலனை நல்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...

பொதுவாகவே இந்த மாதம் இருட்டு அதிகம் உள்ள மாதமாகும், பகல் குறைவு, ஆகவே இந்த மாதத்தில் ஏதாவது ஒரு கோயிலுக்கு நடைபயணம் செய்வது அதி உத்தமம், நடந்தே செல்வதால் தீவினை கர்மம் குறையும், சனியின் ஆதிக்கத்தில் உள்ள மாதம் என்றும் கூறலாம் ஆகவே நேர்மை, ஒழுக்கம் அவசியமா ஆனால் உங்கள் கர்மா சனியின் சிஷ்யர்கள் ராகு/கேதுவின் வழியே தீவினை கர்மத்தை சேர்க்கவும் செய்யும் என்பதை மறக்க வேண்டாம், இந்த மாதத்தில் உண்ணாவிரதம் நல்ல பலனை நல்கும், ஆனால் தற்போது கேது விருச்சிகத்தில் நிற்பதால் எந்த தெய்வ காரியங்கள் என்றாலும் விருச்சிக ராசியினருக்கு ஒருவித விரக்தி, சோம்பலை தான் தரும், சிலருக்கு உடல் நலம் பாதிக்கலாம், பலர் ராகுவின் கட்டுப்பாட்டில் இயங்குவார்கள், இவையனைத்தையும் உடைத்தெறிந்து இறைவனை சரண்புகுந்தால் தீய கர்மம் கழியும் என்பதில் சந்தேகமில்லை, மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...!

No comments:

Post a Comment