jaga flash news

Saturday 2 August 2014

கருடபஞ்சமி

 கருடபஞ்சமி.
கருடனை பெரிய திருவடி என்று போற்றுகிறது. எம்பெருமான் எத்தனையோ வாகனங்களில் பவனி வந்தாலும் அவரை கருட வாகனத்தில் தரிசிப்பதே அதிக நன்மை தரும் புண்ணிய தரிசனம் என்று சிறப்பிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அருள் பகவான் எப்போது புறப்படுவாரோ என்று எப்போதுமே தயாராக இருப்பதால் பகவானே இவர் மீது தனி அன்பு செலுத்துவதாக புராணங்கள் சொல்கின்றன, இறைவன் திருவடியை எப்போதும் சுமக்கும் பெரும்பேறு பெற்ற கருட தேவனைப் போற்றும் திரு நாளே கருடபஞ்சமி. இந்த வருடம் ஆகஸ்ட் முதல் தேதி வருகிறது. 
கருட பகவானின் பெருமைகளையும் அடியார்களுக்கு இரங்கும் அருள் உள்ளத்தையும் கருடபுராணம் விரிவாகச் சொல்கிறது. கருத் என்றால் சிறகு என்று பொருள் அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் . பறவைகளுக்கு அரசனாகவும் திருமாலுக்குச் சேவை செய்யும் போது பெரிய திருவடியாகவும் தன்னை உபாசிப்பவர்களுக்கு அருள் நல்கும் விஷ்ணு அம்சமான கருட பகவானாவும் அவர் விளங்குகிறார்
ஒரு குறிபிட்ட லட்சியத்திற்காக பரம்பொருளை வேண்டி அணுகும் நெறிகளுள் கருட உபாசனை முக்கியமானது. வல்வினைகளில் இருந்தும் விஷ ஐந்துக்களால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்தும் விடுபட கருட பகவானை வழிபடுவது சிறந்தது என புராணங்கள் விவரிக்கின்றன.
கருட உபாசனை மூலம் வேதாந்த தேசிகர் கவித்துவம் பெற்றதாக கூறுவர். திருவஹீந்திபுரம் கருட க்ஷேத்திரம் எனப்படுகிறது. நாடாண்ட மன்னர்கள் பலரும் கருடனிடம் ஈடுபாடு கொண்டிருந்தனர். கருடன் எம்பெருமானுக்கு எல்லா அவதாரங்களிலும் உதவக்கூடியவனாக இருந்தான். இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தால் மயங்கிக் கிடந்த ராம லட்சுமணர்கல் ஆகாயத்தில் பறந்த இறக்கைக் காற்றால் புத்துணர்ச்சி பெற்று யுத்தத்தில் ஈடுபட்டனர். கண்ணபிரான் பாதாள லோகத்தில் அனிருத்தனுடன் சண்டையிட்டபோது இரு இறக்கைகளையும் பறக்க விரித்து உதவினான். ஆதிமூலமே எனக் கதறிய கஜேந்திரனைக் காப்பாற்ற மகாவிஷ்ணுவின் வாகனமாகச் சென்று உதவினான்.
வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அவன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். சில்பாமிருதம் என்ற நூலில் கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேக சமயத்தில் இரட்டைக் கருடன் மேலே வட்டமிடுவது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு பெருமைகளையுடைய கருடனை தரிசிப்பதும் கருட பஞ்சமி விரதத்தைக் கடைப்பிடிப்பதும் சகல பலன்களையும் தரும் என்பதில் ஐயமில்லை

No comments:

Post a Comment