jaga flash news

Friday 28 August 2020

உங்கள் உடலுக்கு வலுவூட்டும் சத்துப் பெட்டகங்களாம் பாதாமும், பிஸ்தாவும், முந்திரியும், உலர் திராட்சையும்.

உங்கள் உடலுக்கு வலுவூட்டும் சத்துப் பெட்டகங்களாம் பாதாமும், பிஸ்தாவும், முந்திரியும், உலர் திராட்சையும்.

பாதாம்
 
 நாற்பதுகளில் நடைபோடுபவர்கள் தின்பண்டமாக எண்ணெய், காரம், இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதைவிட தினசரி சில பாதாம் பருப்புகளை மென்று சுவைத்து ரசித்து உண்ணலாம். 
 
 நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் பாதாமுக்கு உண்டு. தொடர்ந்து பாதாம் பருப்பு சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றன ஆய்வு முடிவுகள். 
 
 கோதுமை சார்ந்த குளூட்டன் ஒவ்வாமை இருப்பவர்கள், சிற்றுண்டி தயாரிக்க பாதாம் மாவை மாற்றாகப் பயன்படுத்தலாம். 
 
 கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் பாதாம் பால் பானங்களில், செயற்கை சேர்மானங்கள் அதிகம் இருக் கும் என்பதால் கவனம் தேவை.

முந்திரி
 
 உப்பு சேர்க்காத, எண்ணெயில் பொரிக்காத முந்திரியை அளவோடு சாப்பிட்டால் அது இதயத்துக்கான தோழனாகும். 
 
 முந்திரியில் உள்ள நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள்கள், உடலின் முக்கிய உறுப்புகளுக்கு நோய் தடுக்கும் பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றன. 
 
 பல் ஈறுகளுக்கு பலம் கொடுப்பதுடன் எலும்புகளுக்கும் வலு கொடுக்கும். எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க நினைப்பவர்களுக்குத் தரமான, நலமான நொறுக்குத்தீனி முந்திரி. 
 
 அதே வேளையில் அதிக உப்பு, காரம் சேர்த்து செயற்கைச்சுவை யூட்டிகளில் மூழ்கடித்து பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் முந்திரிப் பருப்புகளைத் தவிர்த்துவிடுங்கள். அதன் சுவையில் மயங்கி ஒரே வேளையில் ஏராளமாகச் சாப்பிட்டுவிடக் கூடாது.

உலர்திராட்சை
 
 மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, இரும்புச்சத்துகளுடன் நிறைய நார்ச்சத்தையும் கொண்டிருக்கிறது உலர்திராட்சை. 
 
 இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உந்துதல் இருக்கும்போதெல்லாம், உலர்திராட்சையை நாடலாம். வறட்டு இருமல், நா உலர்ந்து போதல், அதிக தாகம் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உலர்திராட்சையைத் தண்ணீரில் ஊற வைத்துப் பருகலாம். 
 
 எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் சில உலர்திராட்சைகளோடு பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம். உடலுக்கு வலிமை கிடைக்க உலர்திராட்சை உதவும்.

பிஸ்தா
 
 சோர்வாக இருப்பவர்களுக்கு உடனடி ஆற்றல் வழங்க பிஸ்தா உதவும். இதிலுள்ள ஆர்ஜினைன் எனும் அமினோ அமிலம், ரத்தக் குழாயைச் சிறப்பாகச் செயல்படவைக்க உதவும். 
 
 மாதவிடாய்க் கோளாறுகளை நீக்குவதிலும் பிஸ்தா முக்கியப் பங்கு வகிக்கிறது. கூந்தல் அடர்த்தியாகவும், மிருதுவான சருமத்துக்கும், ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கவும், நினைவுத்திறனை அதிகரிக்கவும், எலும்புகளுக்கு வலுவூட்டவும், நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டவும் பிஸ்தா நல்லது. 
 
 வீரியம் அதிகரிக்கும் மருந்துகளில் பிஸ்தாவின் சேர்மானம் இருப்பது குறிப்பிடத்தக்கது. நினைவுத் திறன், ஒருங்கிணைப்பு போன்ற மூளையின் செயல்பாடு களுக்கு பிஸ்தா துணை நிற்கும். 
 
 பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்னைகளைத் தள்ளிப்போட உதவும்.

No comments:

Post a Comment