jaga flash news

Thursday 20 August 2020

யக்ஷனின் கேள்விகளும் யுதிஷ்டிரனின் பதில்களும்

) எது சூரியனை உதிக்கச் செய்கிறது?
பிரம்மமே சூரியனை உதிக்கச் செய்கிறது

2) யார் அவனுக்குத் துணையாக இருக்கிறார்?
தேவர்கள் அவனுக்குத் துணையாக இருக்கின்றனர்

3) எது அவனை மறையச் செய்கிறது?
தர்மமே அவனை மறையச் செய்கிறது

4) எதில் அவன் நிலைபெற்றிருக்கிறான்?
 அவன் {சூரியன்} உண்மையில் {சத்தியத்தில்} நிலைத்திருக்கிறான்

5) எதனால் ஒருவன் கற்றவனாகிறான்?
சுருதிகளாலேயே (அதன் கல்வியாலேயே) ஒருவன் கற்றவனாகிறான்;

6) எதனால் ஒருவன் பெரிய மகத்தான ஒன்றை அடைகிறான்?
தவத்துறவுகளாலேயே ஒருவன் பெரிய மகத்துவத்தை அடைகிறான்;

7) இரண்டாவது ஒன்றை ஒருவன் எவ்வாறு கொள்ளலாம்?
புத்திக்கூர்மையாலேயே ஒருவன் இரண்டாவதாக ஒன்றை அடைகிறான்.

8) ஒருவன் புத்திக்கூர்மையை எவ்வாறு அடையலாம்?
பெரியவர்களுக்குச் சேவை செய்வதாலேயே ஒருவன் ஞானமடைய {புத்திக்கூர்மையை அடைய} முடியும்

9) அந்தணர்களுக்கு தெய்வீகம் எது?
வேதகல்வியில் அவர்களது தெய்வீகம் அடங்கியிருக்கிறது.

10)  பக்திமான்களுக்கு இருப்பது போல அவர்களுக்கான பக்திச்செயல் {அறம்} எது?
அவர்களது தவமே பக்திமான்களுக்கான பக்தியாக இருக்கிறது

11)  அந்தணர்களுக்கு மனிதக் குணம் எது?
 இறப்புக்கு ஆட்படும் அவர்களது குணமே மனிதத்தன்மை

12)  பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல அவர்களுக்கு இருக்கும் பக்தியற்ற நிலை {மறம்} எது?”
அவதூறே {தெய்வத்தை அவதூறு செய்வதே} அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகிறது

13)  க்ஷத்திரியர்களுக்கு தெய்வீகம் எது?
கணைகளும் ஆயுதமும் அவர்களது தெய்வீகம் ஆகும்

14)  பக்திமான்களுக்கு இருப்பது போல அவர்களுக்கான நடைமுறை {அறம்} என்ன?
பக்திமான்களுக்கு இருப்பது போல, வேள்விகள் கொண்டாடுவதே அவர்களது பக்திச்செயல் {அறம்} ஆகும்.

15)  அவர்களுக்கு மனிதக் குணம் எது?
அச்சத்திற்கு ஆட்படுவதே அவர்களது மனிதத்தன்மையாகும்

16)  பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல இருக்கும் அவர்களது நடைமுறை {மறம்} என்ன?
{துன்பப்படுவோரைக்} காப்பதை மறுத்தலே அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகும்

17)  வேள்விக்கான சாமம் {ஸாமம்} என்பது எது?
வாழ்வே {உயிரே} வேள்வியின் சாமமாகும்

18)  வேள்விக்கான யஜுஸ் என்பது எது?
 மனமே வேள்வியின் யஜுஸ் ஆகும்.

19)  ஒரு வேள்விக்கான புகலிடம் எது?
வேள்வியின் புகலிடமாக ரிக்கு {வேத வாக்கு} இருக்கிறது

20)  எது இல்லாமல் வேள்வியைச் செய்ய முடியாது?
அந்த ரிக்கு இல்லாமல் வேள்வியைச் செய்ய முடியாது

21) உழவருக்கு {அ} வைசியருக்கு முதன்மையான மதிப்புடையது {மதிப்புமிக்கது = சிறந்தது} எது?
பயிரிடுவோருக்கு {உழவருக்கு} முதன்மையான மதிப்புடையது மழை.

22)  விதைப்போருக்கு முதன்மையான மதிப்புடையது எது?
விதைப்போருக்கு முதன்மையான மதிப்புடையது விதை.

23)  இவ்வுலகில் செழிப்பை அடைய விரும்புவோருக்கு முதன்மையான
 மதிப்புடையது எது?
(இதற்கு பசு என்று சொன்னதாக சம்ஸ்க்ருத மூலத்திலும், பல வேறு பதிப்புகளிலும் இருக்கின்றன. கங்குலியில் இதன்கான பதில் இல்லை - விளக்கம்:அருட்செல்வப்பேரரசன்)

24)  பெற்றுக் கொள்பவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது எது?
பெறுபவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது வாரிசு {சந்ததி} .

25) புலன்நுகர் பொருட்கள் அத்தனையிலும் இன்புற்றிருந்து, உலகத்தால் மதிக்கப்பட்டும், அனைத்து உயிர்களால் விரும்பப்பட்டும் உள்ள புத்திக்கூர்மையுள்ள எந்த மனிதன், சுவாசமுள்ளவனாக இருப்பினும், உயிரற்றவனாக இருக்கிறான்?
தேவர்கள், விருந்தினர், பணியாட்கள், பித்ரிக்கள் மற்றும் சுயம் ஆகிய ஐந்திற்கும் எதையும் காணிக்கையாக அளிக்கவில்லையென்றால், ஒரு மனிதன் சுவாசமுள்ளவனாக இருப்பினும் உயிருள்ளவன் ஆகமாட்டான்"

26) பூமியை விடக் கனமானது எது?
பூமியை விடக் கனமானவள் தாய்

27) சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தது எது?
சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தவர் தந்தை

28) காற்றைவிட வேகமானது எது?
காற்றைவிட வேகமானது மனம்

29) புற்களைவிட எண்ணிக்கையில் அதிகமானது எது?
புற்களை விட எண்ணிக்கையில் அதிகமானது எண்ணங்கள்

30) உறங்கும்போது கண்களை மூடாதது எது?
உறங்கும்போது மீன் கண்களை மூடுவதில்லை

31) பிறந்த பிறகும் நகராதது எது?
பிறந்தும் நகராமல் இருப்பது முட்டை

32) இதயம் இல்லாதது எது?
இதயமற்றிருப்பது கல்

33) தன் சொந்த உத்வேகத்தால் வீங்குவது {Swells} {அதிகரிப்பது} எது?
தனது சொந்த உத்வேகத்தால் அதிகரிப்பது ஆறு {நதி}

34) நாடு கடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} யார் நண்பன்?
நாடுகடத்தப்பட்டவனுக்கு{வனவாசம் மேற்கொள்பவனுக்கு} வழிப்போக்கனே நண்பன்.

35) இல்லறத்தானுக்கு யார் நண்பன்?
இல்லறத்தானுக்கு நண்பன் அவனது மனைவியே

36) நோய்வாய்ப்பட்டவனுக்கு யார் நண்பன்?
நோய்வாய்ப்பட்டவனுக்கு நண்பன் மருத்துவன்

37) சாகப்போகிறவனுக்கு யார் நண்பன்?
சாகப்போகிறவனுக்கு நண்பன் தானம்

38) அனைத்து உயிர்களுக்கும் விருந்தினன் யார்?
அக்னியே அனைத்து உயிர்களுக்கு விருந்தினன்

39) நித்திய கடமை என்பது யாது?
ஹோமமே நித்திய கடமை

40) அமிர்தம் என்பது என்ன?
பசுவின் பாலே அமிர்தம்

41)  இந்த மொத்த அண்டத்திலும் இருப்பது என்ன?
இந்த அண்டம் முழுவதும் காற்றே {வாயுவே} இருக்கிறது

42) எவன் தனியாக உலவுகிறான்?
சூரியன் தனியாக உலவுகிறான்

43)  பிறந்தவன் எவன் மீண்டும் பிறக்கிறான்?
சந்திரன் {பிறந்த பிறகும் மீண்டும் மீண்டும்} புதிதாகப் பிறக்கிறான்

44)  குளிர்ச்சிக்கான தீர்வு என்ன?
 குளிருக்கான தீர்வு நெருப்பு

45)  பெரிய களம் எது?
 பூமியே பெரிய களம்

46)  அறத்தின் உயர்ந்த புகலிடம் எது?
ஈகையே {தானமளிப்பது; Liberality=தாராளவாதம்} அறத்தின் உயர்ந்த புகலிடம்.

47)  புகழுக்கு புகலிடம் எது?
புகழுக்குக் கொடை புகலிடம்

48) சொர்க்கத்திற்கு புகலிடம் எது?
சொர்க்கத்திற்கு உண்மை {சத்தியம்} புகலிடம்

49) மகிழ்ச்சிக்கு புகலிடம் எது?
மகிழ்ச்சிக்கு நன்னடத்தை புகலிடம்

50) மனிதனுடைய ஆன்மா எது?
மகனே ஒரு மனிதனுக்கு ஆன்மா

51) தேவர்களால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட நண்பன் {துணை} யார்?
மனைவியே தேவர்களால் அவனுக்கு அளிப்பட்ட நண்பர் {துணை}

52) மனிதனுக்குத் தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி} எது?
மேகங்களே அவனது தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி}

53) அவனுக்குத் தலையாயப் புகலிடம் {கதி} எது?
தானமே அவனது தலையாயப் புகலிடம் {கதி}

54) பாராட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் எது சிறந்தது?
பாரட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் செயல்திறனே {skill} சிறந்தது.

55) ஒருவனது உடைமைகள் அனைத்திலும் மிகவும் மதிப்புமிக்கது எது?
உடைமைகள் அனைத்திலும் சிறந்தது ஞானம்

56) லாபங்கள் அனைத்திலும் எது சிறந்தது?
லாபங்கள் அனைத்திலும் சிறந்தது உடல்நலமே {ஆரோக்கியம்}

57) அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் எது சிறந்தது?
அனைத்துவகை மகிழ்ச்சிகளிலும் சிறந்தது மனநிறைவே

58) உலகத்தில் உயர்ந்த கடமை {அறம்} எது?
ஊறு இழைக்காமையே {அஹிம்சையே} {தீங்கு செய்யாமையே} கடமைகளில் உயர்ந்தது {அறம்}

59) எப்போதும் கனியைக் {பலனைக்} கொடுக்கும் அறம் எது?
மூன்று வேதங்களால் விதிக்கப்பட்ட சடங்குகள் எப்போதும் கனி {பலன்} கொடுக்கின்றன

60) அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழிவகுக்காதது எது?
மனமானது அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழிவகுக்காது

61) கூட்டணியை {நட்பை} உடைக்காதவர்கள் (முறிக்காதவர்கள்) யார்?
நல்லோருடன் கூட்டணி {நட்பு} எப்போதும் உடையாததாகும் (முறியாததாகும்)

62) எது துறக்கப்படுவதால், ஒருவன் மற்றவர்களால் ஏற்கப்படுகிறான்?
கர்வத்தைத் துறப்பதால், அது ஒருவனை {மற்றவருக்கு} ஏற்புடையவனாக மாற்றுகிறது

63) எது துறக்கப்பட்டால், வருத்தத்துக்கு வழிவகுக்காது?
கோபத்தைத் துறந்தால், அது வருத்தத்துக்கு வழிவகுக்காது

64) எது துறக்கப்பட்டால், ஒருவன் வளமானவன் ஆகிறான்?
ஆசையைத் துறந்தால், அது ஒருவனை வளமானவனாக்குகிறது

65) எது துறக்கப்பட்டால் ஒருவன் மகிழ்ச்சியடையலாம்?
பேராசையைத் துறந்தால், அது ஒருவனை மகிழ்ச்சியடையச்  செய்கிறது

66) ஒருவன் அந்தணர்களுக்கு எதற்காகக் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்?
அறத்தகுதிக்காக ஒருவன் அந்தணர்களுக்குத் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்.

67) நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் எதற்காக {கொடுக்க வேண்டும்}?
நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் புகழுக்காகக் கொடுக்க வேண்டும்

68) பணியாட்களுக்கு {வேலைக்காரர்களுக்கு} எதற்காக {கொடுக்க வேண்டும்}?
பணியாட்களுக்கு அவர்கள் தங்களைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடுக்க வேண்டும்

69) மன்னனுக்கு எதற்காக {கொடுக்க வேண்டும்}?
அச்சத்தில் இருந்து நிவாரணம் பெற ஒருவன் மன்னர்களுக்குத் தானமளிக்க வேண்டும்

70) உலகத்தை மூடியிருப்பது எது?
உலகம் இருளால் மூடியிருக்கிறது

71) தன்னைத்தானே ஒரு பொருள் கண்டறியமுடியாததற்குக் காரணமாக இருப்பது எது?
ஒரு பொருள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இருள் அனுமதிக்காது

72) நண்பர்கள் கைவிடப்படுவதற்குக் காரணம் எது?
பேராசையின் காரணமாகவே நண்பர்கள் கைவிடப்படுகிறார்கள்

73) சொர்க்கம் செல்வதில் ஒருவனைத் தோல்வியுறச் செய்வது எது?
உலகத்துடனான இத்தொடர்பினாலேயே {அதாவது பற்று [அ] ஆசையால்} ஒருவன் சொர்க்கம் செல்வதில் தோல்வியுறுகிறான்

74) ஒருவன் எதனால் இறந்தவனாகக் கருதப்படலாம்?
செல்வமற்ற மனிதன் இறந்தவனாகக் கருதப்படலாம்

75) ஒரு நாடு எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்?
மன்னனற்ற நாடு இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்

76) சிராத்தம் எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்?
கல்லாத புரோகிதன் துணை கொண்டு செய்யப்படும் சிராத்தம் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்

77) ஒரு வேள்வி எதனால் இறந்ததாகக் {அழிந்ததாக} கருதப்படலாம்?
அந்தணர்களுக்குத் தானம் இல்லாத வேள்வி இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்

78) வழி என்பது எது?
எது நன்மையோ அதுவே வழி

79) நீராகப் பேசப்படுவது எது?
வெளியே {ஆகாயமே} நீராகப் பேசப்பட்டு வருகிறது

80) உணவு எது?

81) நஞ்சு எது?
வேண்டுகோளே {யாசிப்பது; பிச்சை கேட்பது} விஷம்

82)  சிராத்தத்துக்கான உகந்த நேரம் எது?
ஒரு அந்தணனே சிராத்தத்துக்கான உகந்த நேரம்

83) தவத்தின் குறி {குறியீடு} எனச் சொல்லப்படுவது எது?
தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பது தவம் {தவத்தின் குறியீடு};

84) உண்மையான அடக்கம் {தமம்} எது?
மனதின் அடக்கமே, அடக்கங்கள் அனைத்திலும் உண்மையானது

85) பொறுமை எனப்படுவது எது?
பகையைச் சகிப்பதே பொறுமை

86) வெட்கம் என்பது எது?
தகாத செயல்கள் அனைத்திலும் இருந்து விலகுவதே வெட்கம்

87) ஞானம் என்று சொல்லப்படுவது எது?
தெய்வீகமே {உண்மைப் பொருளை அறிவதே} உண்மையான ஞானமாகும்.

88) அமைதி எது?
இதய {மன} அமைதியே உண்மையான அமைதி

89)  கருணை எது?
அனைவருக்கும் மகிழ்ச்சியை விரும்புவதே கருணை

90) எளிமை என்று அழைக்கப்படுவது எது?
இதய அமைதி {மன அமைதியே} எளிமை

91) வெல்லப்படமுடியாத எதிரி எது?
கோபமே வெல்லப்பட முடியாத எதிரி

92) மனிதனின் தீராத நோய் எது?
பேராசையே தீர்க்கப்படமுடியாத நோய்

93) எவ்வகை மனிதன் நேர்மையானவன்?
அனைத்துயிர்களின் மகிழ்ச்சியை விரும்புபவனே நேர்மையானவன்

94) எவ்வகை மனிதன் நேர்மையற்றவன்?
கருணயற்றவன் நேர்மையற்றவனாவான்

95) அறியாமை என்பது எது?
தன் கடமைகளை அறியாததே உண்மையான அறியாமை

96) கர்வம் என்பது எது?
ஒருவன் தன்னைச் செயல்படுபவனாகவோ {actor = நடிகனாகவோ} வாழ்வில் பாதிக்கப்பட்டவனாகவோ உணர்வதே கர்வம் ஆகும்

97) சோம்பலெனப் புரிந்து கொள்ளப்படுவது எது?
ஒருவன் தனது கடமைகளைச் செய்யாதிருப்பதே சோம்பலாகும்

98) துன்பமெனப் பேசப்படுவது எது?
ஒருவனது அறியாமையே துக்கமாகும்

99) முனிவர்களால் நிலைமாறாஉறுதி எனச் சொல்லப்பட்டுள்ளது எது?
ஒருவன் தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பதே நிலைமைமாறா உறுதியாகும்.

100) பொறுமை எது?
புலன்களை அடக்குவதே உண்மையான பொறுமையாகும்

101) உண்மையான சுத்தம் என்பது எது?
மனம் மாசடையாமல் கழுவுவதே உண்மையான நீராடலாகும் {சுத்தமாகும்}.

102) தானம் என்பது எது?
அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதே தானமாகும்

103) எந்த மனிதன் கற்றவனாகக் {பண்டிதனாகக்} கருதப்பட வேண்டும்?
தன் கடமைகளை அறிந்தவன் கற்றவன் {பண்டிதன்} என்று அழைக்கப்பட வேண்டும்.

104)  எவன் நாத்திகன் என்று அழைக்கப்பட வேண்டும்?
 ஞானமற்றவனே நாத்திகன்.

105)  எவன் ஞானமற்றவன் {அறியாமையில் இருப்பவன்} என்று அழைக்கப்பட வேண்டும்?
 நாத்திகனே ஞானமற்றவன்

106) எது ஆசை என்று அழைக்கப்படுகிறது? மற்றும் ஆசையின் ஊற்றுக்கண் எது?
உடைமைகளுக்குக் காரணமே ஆசை (ஆசைகளின் ஊற்றுக்கண் பொருள் உடைமைகள்)

107)  பொறாமை எது?
 இதய {மன} துக்கமே பொறாமை

108) கர்வம் {அகங்காரம்} எது?
எழுச்சியற்ற அறியாமையே கர்வம் {அகங்காரம்}
ஆகும்{அஞ்ஞானமே அகங்காரம்}.

109) பேடிசம் {டம்பம்}{#} எது?
அறநிலை நிறுவுதலே பேடிசம் {டம்பம்} ஆகும் {தான் அறம் கடைப்பிடிப்பதாகப் பிறருக்குத் தெரிவிப்பது டம்பமாகும் [போலித்தனமாகும்]}.

110) தேவர்களின் அருள் எது?
தானங்களின் கனியே {பலனே} தேவர்களின் அருளாகும்

111) பொல்லாங்கு {தீய குணம்} எது?
பிறரைக் குறித்துத் தவறாகப் பேசுவதே பொல்லாங்கு {தீய
குணம்} ஆகும்

112) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன ஒன்றுக்கொன்று எதிரானவை. இப்படி ஒன்றுக்கொன்று பகையானவை எப்படி இணைந்து இருக்க முடியும்?
மனைவியும் அறமும் ஒருவருக்கொருவர் ஏற்புடன் செயல்படும்போது, நீ சொன்ன மூன்றும் {அனைத்தும்} இணைந்து இருக்க முடியும்

113) அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடையும் மனிதன் எவன்?
“ஏழை அந்தணனுக்குத் தானமளிப்பதாக உறுதியளித்து அவனை அழைத்து, பிறகு, கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்பவன் அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடைகிறான்.

வேதங்களிலும், சாத்திரங்களிலும், அந்தணர்களிடமும், தேவர்களிடமும், பித்ரிக்களுக்கு மரியாதை அளித்துச் செய்யப்படும் விழாக்களிலும் பொய் கூறுபவனும் அழிவில்லா நரகத்தை அடைய வேண்டும்.

செல்வத்தின் உடைமையாளன், தானமளிக்காமலோ, பேராசையின் காரணமாகத் தானே அனைத்தையும் அனுபவித்து மற்றவர்களுக்கு இல்லை என்று சொன்னாலோ அவனும் அழிவில்லா நரகத்தை அடைகிறான்.

114)  எந்தப் பிறவி, நடத்தை, {வேத} படிப்பு அல்லது {சாத்திர}
கல்வி ஆகியவற்றால் ஒரு மனிதன் பிராமணனாகிறான்
{அந்தணனாகிறான்}?
பிறவியோ, {வேத} படிப்போ, {சாத்திர} கல்வியோ பிராமணத்தன்மைக்குக் காரணமில்லை என்பதில் ஐயமில்லை. நடத்தையே அது {பிராமணத்தன்மை}.

ஒருவனது நடத்தை எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக ஓர் அந்தணரால் {பாதுகாக்கப்பட வேண்டும்}.

ஒருவன் தனது நடத்தையைக் கெடாநிலையுடையதாகப் பராமரித்தால், அவன் எப்போதும் கெடு நிலையை அடைவதில்லை.

பெரும் ஆசிரியர்கள், மாணவர்கள், உண்மையில் சாத்திரங்களைப் படிக்கும் அனைவரும், தீய பழக்கங்களுக்கு அடிமையானால், அவர்கள் கல்லாத மூடர்களாகக் கருதப்பட வேண்டும். அறக்கடமைகளைச் செய்பவனே கற்றவன்.

நான்கு வேதங்களைப் படித்தும், இழிந்த தீயவனாக இருந்தால் அவன் சூத்திரனில் இருந்து வேறுபட்டவனல்ல என்று (அவனது நடத்தை சரியில்லாததாக) கருதப்பட வேண்டும்.

அக்னிஹோத்ரம் செய்து, புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் {அந்தணன்} என்று அழைக்கப்படுகிறான்.

115) ஏற்புடைய {இனிமையான} வார்த்தைகளைப் பேசும் ஒருவன் அடையும் லாபம் என்ன?
ஏற்புடைய வார்த்தைகளைப் {இனிமையாகப்} பேசும் ஒருவன் அனைவருக்கும் ஏற்புடையவனாகிறான் {அன்பனாகிறான்}


116) எப்போதும் தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் அடையும் லாபம் என்ன?
தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் தான் முயற்சிப்பதை {தேடுவதை} {வெற்றியை} அடைகிறான்

117) நிறைய நண்பர்களை உடையவன் அடையும் லாபம் என்ன?
பல நண்பர்களை உடைய ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.

118) அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனுக்கு {அவன் அடையும் லாபம்} என்ன?
அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன் (அடுத்த உலகில்) இன்பநிலையை அடைகிறான்

119) உண்மையில் மகிழ்ச்சியானவன் எவன்?
கடனுக்கு ஆட்படாமல், வீட்டில் இருந்து வெளியே போக வேண்டிய தேவை இல்லாமல், {வாழ்வுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமில்லாதவன்} ஒரு நாளின் {ஒரு பகலை எட்டுப் பகுதிகளைப் பிரித்து அதில் வரும்} ஐந்தாவது அல்லது ஆறாவது பகுதியில், சொற்ப காய்கறிகளைத் தன் இல்லத்தில் {தன் சொந்த வீட்டில்} சமைப்பவன் {சமைத்து உண்பவன்} உண்மையில் மகிழ்ச்சியுடைவனாவான்

120) அதிசயமானது எது?
நாளுக்கு நாள் எண்ணிலடங்கா உயிரினங்கள் யமனின் வசிப்பிடம் செல்கின்றன. இருப்பினும், மீந்திருப்பவை {உயிரோடு இருக்கும் உயிரினங்கள்} தங்களை இறவாத்தன்மை கொண்டவை என்று நினைத்துக் கொள்கின்றன. இதை விட வேறு எது அதிசயமானதாக இருக்க முடியும்?

121) பாதை எது?
வாதம் செய்வது எந்த ஒரு குறிப்பிட்ட முடிவுக்கும் வழிவகுக்காது. சுருதிகள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருக்கின்றன; {இவரது} கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டது என்று சொல்லுமளவுக்கு ஒரு முனிவர் கூட இல்லை; தர்மம் {அறம்} மற்றும் கடமை சம்பந்தமான உண்மை {சத்தியம்} குகைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; எனவே, பெருமை மிக்கவர்கள் {பெரியோர்} நடந்து சென்ற பாதையே நமக்கான பாதை.

122) {தினமும் நடைபெறும்} செய்தி எது?
அறியாமை நிறைந்த இந்தப் பூமி {சமையற்செய்யத்தக்க} ஒரு பெரிய கடாய் ஆகும். பகல்களையும், இரவுகளையும் எரிபொருளாய்க் கொண்டிருக்கும் சூரியன் நெருப்பு ஆகும். மாதங்களும், பருவங்களும் மரக்கரண்டிகளாகும். {உலகம் என்ற அந்தக் கடாயில்} காலம் அனைத்தையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே {தினமும் நடைபெறும்} செய்தி ஆகும்.

123) உண்மையில் யார் மனிதன்?
ஒருவனது நற்செயலின் அறிக்கை சொர்க்கத்தை அடைந்து, பூமி எங்கும் பரவுகிறது. அந்த அறிக்கை நீடிக்கும்வரை, {அவன் மனிதன் எனப்படுகிறான்.}

124) அனைத்து வகைச் செல்வங்களையும் உண்மையில் கொண்டிருக்கும் மனிதன் யார்?
ஏற்புடையதும் ஏற்பில்லாததும், இன்பமும் துன்பமும், கடந்த காலமும் எதிர்காலமும் {என உள்ள அனைத்து இரட்டைகளும்} எந்த மனிதனால் சமமாகக் கருதப்படுகிறதோ, அவன் அனைத்து வகைச் செல்வங்களையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான் .


No comments:

Post a Comment