jaga flash news

Saturday 22 December 2012

பழனி முருகன் கோவில் ஸ்தல புராணம்


பழனி முருகன் கோவில் ஸ்தல புராணம்

பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவில் முருகனது அறுபடைவீடுகளில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 100 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
கோவில் வரலாறு
ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலுருந்த உமையாள் அந்த பழத்தை தனது குமரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினான். அன்றிலிருந்து அவனது இந்த படை வீடு “பழம் நீ ” (பழனி) என அழைக்கப்படுகிறது.
முருகன் சிலையின் சிறப்பு
முருகனின் சிலை நவபாஷாணத்தல் வடிக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை பழுதுபட்டுள்ளது. சில காலங்களுக்கு முன் இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்பட்டது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
போகர் வரலாறு
போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்துவந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார். அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்ததாக பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.
கோவில் திருவிழாக்கள்
பழனி திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள்,
  • தைப்பூசம்
  • பங்குனி உத்திரம்
  • சூரசம்ஹாரம்
பிழை
பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.

1 comment: