jaga flash news

Friday 26 February 2016

பெரிய புராணங்கள் 18

பெரிய புராணங்கள் 18 ஒரு பார்வை:-
வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாசங்கள் ஆகியவற்றிற்கு அடுத்த இடத்தில் இருப்பவை புராணங்கள்.
நான்கு வேதங்களும் அநாதி காலந்தொட்டு ‘ஸ்ருதி’களாக இருந்து வருபவை.
‘உபநிஷத்துகள்’ ஒவ்வொரு வேதத்தின் ‘ஆரண்யகம்’ பகுதியில் பல இடங்களில் விரவியிருக்கின்றன. சில நேரங்களில் ‘உபநிஷத்துகளும்’, ‘ஆரண்யகம்’ என்றும் ‘வேதாந்தம்’ என்றும் அழைக்கப்படும்.
வால்மீகி இராமாயணம், வியாச மகாபாரதம் இரண்டு மட்டுமே இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதிகாசம் என்றால் இப்படித்தான் நடந்தது என்று பொருள் படும். அதாவது அவை உண்மை வரலாறுகள். அவற்றில் கற்பனைக்கு அதிக இடமில்லை.
அடுத்து வருபவை புராணங்கள். வேதங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் உள்ள உட்பொருளை சற்றுக் கற்பனையும் கலந்து யாவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய கதை வடிவில் உள்ளவை புராணங்கள். ‘புராண’ என்ற சொல்லுக்கு மிகப் பழைமையானது என்ற பொருள் உண்டு. வேதங்களின் அங்கங்களாக உள்ள பிராம்மணங்களில் கூட புராணங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
நான்கு வேதங்களையும் தொகுத்த வேதவியாசரே புராணங்களையும் தொகுத்துக் கொடுத்துள்ளார்.
திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகிய மூவரும் உருவாகக் காரணமாக இருந்த வேதவியாசரே அவர்களின் உண்மை வரலாற்றை உடனிருந்து மகாபாரதம் என்ற இதிகாசமாக இயற்றியதுடன் ஸ்ரீமத் பாகவத புராணம் என்பதையும் இயற்றியுள்ளார்.
புராணங்களில் 18 பெரிய புராணங்களும் 18 சிறிய உபபுராணங்களும் இருக்கின்றன. பதினெட்டுப் பெரிய புராணங்களைப் பற்றிய விவரங்களை இனி பார்ப்போம்.
விஷ்ணுவையும் அவரது அவதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டவை: 1.விஷ்ணு புராணம். 2.மத்ஸ்ய புராணம். 3.கூர்ம புராணம். 4.வராஹ புராணம். 5.வாமன புராணம். 6.கருட புராணம். 7.ஸ்ரீமத் பாகவத புராணம்.
சிவபெருமானைக் குறித்த புராணம்: லிங்க புராணம்.
பிரம்மனுடன் தொடர்புடைய புராணங்கள்: 1.பிரம்ம புராணம். 2.பத்ம புராணம். 3.பிரம்ம வைவர்த்த புராணம். 4. பிரம்மாண்ட புராணம்.
மற்ற புராணங்கள்: 1.அக்னி புராணம். 2.வாயு புராணம். 3.பவிஷ்ய புராணம். 4.நாரதீய புராணம். 5.ஸ்காந்தம் (கந்த புராணம்). 6.மார்க்கண்டேய புராணம்.
விஷ்ணு புராணம்
இது மிகவும் பழைமையானது. ஆறு காண்டங்களையும், ஒவ்வொரு காண்டத்திலும் ஐந்து பெரும் பிரிவுகளையும் கொண்டது. பராசர மகரிஷி, மைத்ரேயருக்கு உபதேசம் செய்ததே விஷ்ணு புராணமாகும்.
மத்ஸ்ய புராணம்
விஷ்ணுவின் முதலாவது அவதாரமான ‘மத்ஸ்யம்’ (மீன்) தன்னைக் குறித்து மனுவிடம் விவரிப்பதாக உள்ளது இப்புராணம். பதிமூன்றாயிரம் ஸ்லோகங்களை உள்ளடக்கிய இப்புராணம் பல மன்னர்களின் வரலாறுகளைக் கதைபோல விவரிக்கிறது.
கூர்ம புராணம்
விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்மம் (ஆமை) இந்திரத்யும்னன் என்று மன்னனிடம் விவரிப்பது போல அமைந்துள்ளது. இதில் எட்டாயிரம் ஸ்லோகங்கள் உள்ளன. இப்புராணத்தில்தான் முதன் முதலாக ஜம்புஸ்த்வபம் என்பதாக நமது பரதக்கண்டத்தின் பூகோள அமைப்பு விவரிக்கப்படுகிறது.
வராஹ புராணம்
விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்தை பதினான்காயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம்.
வாமன புராணம்
பத்தாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் வாமன அவதார வரலாற்றை மட்டுமல்லாது பரமேஸ்வரன்-பார்வதி ஆகியோரின் திருமண வரலாற்றையும் கூட விரிவாக விவரிக்கிறது.
கருட புராணம்
மகாவிஷ்ணுவானவர், தமது வாகனமாகிய கருடனுக்கு எட்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கும் செய்திகளே இப்புராணம். இதில் மருத்துவம், வான் ஆராய்ச்சி, மரணத்திற்குப் பின் மனிதர்கள் அடையும் நிலைகள் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.
ஸ்ரீமத் பாகவத புராணம்
வியாசரே எழுதியது. மகாபாரதத்தில் முழுமையாக இடம் பெறாத ஸ்ரீகிருஷ்ணரின் முழு வரலாறும், விஷ்ணுவின் பிற அவதாரங்கள் குறித்த செய்திகளும், பன்னிரண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு பதினெட்டாயிரம் ஸ்லோகங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.
லிங்க புராணம்
சிவபெருமானைக் குறித்தும் அவரது 28 வடிவங்களைப் பற்றியும் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம். லிங்க வழிபாட்டின் தோற்றமும், காரணமும், சிவபெருமானின் அவதார லீலைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
பிரம்ம புராணம்
பிரம்மன் தட்சப் பிரஜாபதிக்கு விவரிப்பதாக உள்ள இப்புராணத்தில் 25,000 ஸ்லோகங்கள் உள்ளன.
பத்ம புராணம்
ஆறு காண்டங்களில் 55,000 ஸ்லோகங்களைக் கொண்ட பெரிய புராணம் இது. பிரம்மனின் பத்மாசனம் விவரிக்கப்படுவதால் இது பத்ம புராணம் என்று பெயர் பெற்றது.
பிரம்மவைவர்த்த புராணம்
பிரம்மகாண்டம், ப்ரக்ருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண ஜன்ம காண்டம் ஆகிய பிரிவுகளுடன் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. இதில் உள்ள கணேச காண்டம் என்ற பகுதிதான் விநாயக புராணம் என்ற உபபுராணமாக பின்னர் உருவானது. “கிருஷ்ண ஜன்ம காண்டம்” என்ற பகுதிகளில் உள்ள தகவல்களை ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் காணலாம்.
பிரம்மாண்ட புராணம்
பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் ஒரு பொன்னிற முட்டையிலிருந்துதான் நமது பிரபஞ்சம் (பிரம்மாண்டம்-ஹிழிமிக்ஷிணிஸிஷிணி) தோன்றி விரிவடைந்தது என்று விவரிக்கிறது. நவீன விஞ்ஞானம் தற்காலத்தில் நம்பும் பெருவெடிப்பு (ஙிவீரீ ஙிணீஸீரீ) என்ற நிகழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்ட இப்புராணத்தில் காணலாம்.
அக்னி புராணம்
அக்னிதேவன் வசிஷ்ட மகரிஷிக்கு விவரித்தது இப்புராணம். சிவலிங்கம், துர்க்கை, இராமர், கிருஷ்ணர் ஆகியோரைப் பற்றியும், நாடகம், சிற்பம், ஜோதிடம் போன்ற கலைகளைப் பற்றியும் விவரிக்கிறது என்பது இப்புராணத்தின் சிறப்பாகும்.
வாயுபுராணம்
பதினான்காயிரம் ஸ்லோகங்களைக் கொண்டு இப்புராணத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஆண்ட குப்த வம்சத்து மன்னர்களைப் பற்றியும், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்டர் என்பவரைப் பற்றியும் கூட தகவல்களைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பவிஷ்ய புராணம்
வருங்காலத்தில் என்னென்ன நிகழ்வுகளெல்லாம் நடக்க இருக்கின்றன என்று சூரியன் முன் கூட்டியே மனுவுக்குத் தெரிவிப்பதாக அமைந்தது இப்புராணம். ஸ்தலங்களைப் பற்றியும் அங்கெல்லாம் யாத்ரிகர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பற்றியும் கூட இப்புராணம் விவரிக்கிறது.
நாரதீய புராணம்
நாரத மகரிஷியானவர் சனத்குமாரருக்கு உபதேசித்தது இப்புராணம். 25,000 ஸ்லோகங்கள் இதில் உள்ளன.
ஸ்காந்தம்
முருகனின் வரலாற்றை விவரிப்பதுதான் இப்புராணம்
மார்க்கண்டேய புராணம்
மிகப்பழைமையான புராணம் இது. இதிலுள்ள தேவி மகாத்மியம் என்ற பகுதிதான், பின்னர் தனியான ஓர் உப புராணமாக உருவெடுத்தது.
மேற்குறிப்பிட்ட பதினெட்டு பெரிய புராணங்களும் தேவபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில்தான் உள்ளன என்றாலும் பிற்காலங்களில் பாரத நாட்டின் பல்வேறு பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஸ்காந்தம் தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியரால் கந்தபுராணம் என்ற பெயரில் வழிநூலாக எழுதப்பட்டது. ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற உப புராணம் தான் பின்னர் திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் தமிழில் உருவெடுத்தது.

1 comment: