jaga flash news

Sunday 14 February 2016

கிரிவலம் வலம் வரும் முறைமை மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள்

கிரிவலம் வலம் வரும் முறைமை மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள்
1. இந்திரலிங்கம்
கிரிவலப் பாதையில் முதலாக அமைந்துள்ள கோயில் இது. கிழக்கு முகமாக அமைந்துள்ள இக்கோயில், ஆணவம் மிகுந்து ஈசன் மீதே போர்தொடுத்த இந்திரன் தன் சாபம் நீங்குவதற்காக கிரிவலப் பாதையில் அங்கப் பிரதட்சிணம் செய்தானாம். அவ்வாறு செய்கையில் ஓரிடத்தில் அவன் உடல் பொன் துகள் போல மின்னவே, அங்கு ஸ்வயம்புவாக லிங்கத்தைக் கண்டெடுத்துப் பிரதிஷ்டை செய்ய, அக்கோயிலே இந்திரலிங்கம் என வழங்கப்படலானது.
12 ராசிகளில் இந்திர லிங்கம் ரிஷபம் மற்றும் துலா (சுக்கிர ராசிகள்) ராசிக்காரர்களுக்கு உகந்ததாகும்.
இந்திர லிங்கத்தை வழிபடுவதால், செல்வம் பெருகும். இகலோக இன்பங்கள் என்று எண்ணுவது அனைத்தும் கைவரப் பெறும்.
2. அக்னிலிங்கம்
கிரிவலப் பாதையில் இரண்டாவதாக உள்ள இக்கோயில் சிம்ம ராசி (சூரியன்) கொண்ட பக்தர்களுக்கானது.
திருவண்ணாமலையே அக்னியாக ஈசன் காட்சி தரும் இடம் என்பதால் இந்த அக்னிலிங்கம் பெரும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மூன்று ருத்ர மூர்த்திகள் மூவர் கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர்களது திருமேனிகள் ஜோதி வடிவமாயின. இதனை வியந்து பார்க்கையில் அங்கு ஸ்வயம்புவாக லிங்கம் இருக்கக் கண்டு அதைப் பிரதிஷ்டை செய்ய, அதுவே அக்னிலிங்கம் என்றானது என்பர்.
தென்கிழக்குதிசையை நோக்கியுள்ளஅக்னி லிங்கத்தை வழிபட, நோய் நீங்கி பூரண ஆரோக்கியம் உண்டாகும். மனதில் அச்சம் கிலேசங்கள் நீங்கும்.
3. யம லிங்கம்
யமதர்மன் திருவண்ணாமலையைச் சுற்றியபோது அவர் திருப்பாதம் பட்ட இடங்கள் அனைத்தும் தாமரைப் பூக்களாயின. ஓரிடத்தின் அவ்வாறு உருவான தாமரைப் பூ கோடிப்பொன் போல பிரகாசத்துடன் சுடர் விட, அங்கு காணப்பட்ட ஸ்வயம்பு லிங்கத்தை யமதர்மன் பிரதிஷ்டை செய்தது யமலிங்கம் என்றானது.
விருச்சிக (செவ்வாய்) ராசிக்காரர்களுக்கு மிகவும் உகந்ததான இந்த யமலிங்கக் கோயிலில் வழிபடுவதால், மரணபயம் நீங்கும் என்பது நம்பிக்கை. மிருத்யுஞ்ச ஜபத்தைச் சொல்வதற்கு ஈடானதாகும் இங்கு உச்சரிக்கப்படும் பஞ்சாட்சரம்.
4. நிருதிலிங்கம்
நாலாவதாக கிரிவலப் பாதையில் நாம் காணும் நிருதிலிங்கம் மேஷ ராசிக்கு (செவ்வாய்) உரியதாகும்.
அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான நிருதீஸ்வரர் கிரிவலம் வருகையில் ஓரிடத்தில் ஒரு சிசுவின் மழலையும், பெண்ணொருத்தியின் சலங்கை ஒலியும் கேட்க, அங்கு ஊன்றிக் காண்கையில் நிருதீஸ்வரர் உருவத்தில் அங்கு அண்ணாமலையான் அவருக்குக் காட்சி தந்தான். இவ்விடமே நிருதிலிங்கம் எனப்படலானது. உமையவளுக்கு சிவபெருமான் காட்சி தந்ததும் இவ்விடத்தில்தான். இங்கிருந்து பார்க்கும்போது மலையின் வடிவம் சுயம்புவான ரிஷபமாகத் தெரியும் என்று கூறுவர்.
நிருதி லிங்கத்தை வழிபடுவதால் சகல தோஷங்களும் நீங்கும்; மகப்பேறு உண்டாகும். பித்ரு சாபம், பிற்விக் கடன் ஆகியவை நீங்கும். மிக்க புகழுண்டாகும்.

No comments:

Post a Comment