jaga flash news

Tuesday 30 June 2015

உருத்திராட்ச மஹிமை

உருத்திராட்ச மஹிமை

சிவ பெருமானுக்கு உருத்திரன் என்ற திருநாமம் உண்டு.அந்த உருத்திரனுடைய அக்ஷங்களிலிருந்து (அதாவது கண்களிலிருந்து) வழிந்த நீரில் தோன்றியது உருத்திராட்சம் எனப்படுகிறது.உருத்திராட்சம் தோன்றியது பற்றி ஒரு புராண கதை உண்டு.அதன்படி, தேவர்களுக்கு திரிபுரத்து அசுரர்கள் துன்பத்தை தந்து வந்தார்கள்.இது குறித்து தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.இதைக்கேட்டவுடன் இறைவனின் மூன்று கண்களிலிருந்தும் நீர் வழிந்தது.அப்படி பொழிந்த நீரில் உருவானதே உருத்திராட்சமாகும்.
சிவனின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் துளிகள் பூமியில் ஒரு மரமாய் உருவெடுத்துக் கனியாகிக் காய்த்துக் குலுங்கியது.ஆனால் இக்கனிகள் ருசிப்பதற்காக ஏற்படவில்லை.உலர்ந்து உருத்திராட்சமாக மாறுவதற்காக ஏற்பட்டது.உருத்திராட்ச மரங்கள் நேபாளத்திலும்,ஜாவாத்தீவுகளிலும் அமோகமாக வளர்கின்றன.இமாலயத்திலும் உருத்திராட்ச கொட்டைகள் நிறைய விளைகின்றன.
உருத்திராட்சம் நான்கு நிறங்களில் கிடைக்கின்றன.கருப்பு மற்றும் சிவப்பு நிற உருத்திராட்சங்கள்தான் அதிக அளவில் கிடைக்கின்றன.வெள்ளை நிற உருத்திராட்சம் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் விளைவதால் எளிதில் கிடைப்பதில்லை.மஞ்சள் நிற உருத்திராட்சங்களும் உண்டு.இவை அதிக அளவில் கிடைப்பதில்லை.
உருத்திராட்சத்தில் பல முகங்கள் கொண்ட உருத்திராட்சங்கள் உண்டு.ஒரு முகம் முதல் பதினாறு முகம் கொண்ட உருத்திராட்சங்கள்வரை உண்டு. இவைகளில் ஒரு முகம்,ஐந்து முகம்,பதினோரு முகம் கொண்டவை பூஜைக்கு ஏற்றவையாகும். ஒரு முகம் கொண்டது கிடைப்பது மிகவும் கடினம்.பதினாறு வகையான முகங்கள் கொண்ட உருத்திராட்சங்களின் அதிதேவதைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1முகம்- சிவன்
2முகம்- அம்பிகை
3முகம்- அக்னி
4முகம்- பிரம்மா
5முகம்- காலாக்னி உருத்திரர்
6முகம்- சுப்பிரமணியர்
7முகம்- மன்மதன்,ஆதிசேஷன்
8முகம்- விநாயகர்
9முகம்- பைரவர்
10முகம்- விஷ்ணு
11முகம்- ஏகதச உருத்திரர்
12முகம்- துவாதச உருத்திரர்
13முகம்- ஆறுமுகர்
14முகம்- அர்த்த நாரீஸ்வரர்
15முகம்- சதாசிவர்
16முகம்-அனந்தேஸ்வரர்
உருத்திராட்சத்தின் அடிப்பாகம் விஷ்ணு என்றும்,துவாரம் உருத்திரன் என்றும்,மேற்புறம் பிரம்மா என்றும் கூறுவதுண்டு. உருத்திராட்சத்திற்கு கண்மணி,தெய்வமணி,புனித மணி,அக்க மணி,கடவுள் மணி, நாயகன் விழி மணி எனப்பல பெயர்கள் உண்டு.
நன்றாக விளைந்த உருத்திராட்சக்கொட்டைகளின் நடுவில் பழைய ஓட்டைக்காலனாவை வைத்தால் அது சுற்றும்.அதிலுள்ள மின் சக்திதான் இதற்குக்காரணம்.உருத்திராட்சம் இயற்கையிலேயே நடுவில் துளையைக்கொண்டது.எனவே இதை மாலையாகக் கோர்ப்பது மிகவும் எளிமையானது.
சிவனுடைய கண்களிலிருந்து தோன்றியதால் உருத்திராட்சம் சிவ சின்னங்களில் ஒன்றாகக்கருதப்படுகிறது.உருத்திராட்ச மாலையில் 108 அல்லது 54 அல்லது 27 உருத்திராட்சங்கள் இருக்கலாம். உருத்திராட்சத்தை தலை,காது,கை என உடலின் பல பாகங்களில் அணிந்துகொள்வதுண்டு. உருத்திராட்சத்தை அணிபவரின் பாவ வினைகளை ஈசன் போக்குவதாக பத்ம புராணம் கூறுகிறது.

உருத்திராட்சம் அணிவதால் உண்டாகும் பயன்கள்
1. இரத்த அழுத்தம் சீராகும்.
2. கணவன்-மனைவி உறவில் அன்யோன்யம் உண்டாகும்.
3. மனம் அமைதியடையும்.
4. தன்னம்பிக்கை வளரும்.
5. மன ஒருமைப்பாடு உண்டாகும்.
உருத்திராட்ச மணி தரிக்கும் இடங்கள்.
1. உச்சி (குடுமி)- 1 மணி
2. தலை(நெற்றிக்கு மேல்)- 22 அல்லது 36 மணிகள்
3. காது ஒவ்வொன்றிலும்- 1 அல்லது 3 அல்லது 6 மணிகள்
4. கழுத்து- 1 அல்லது 3 அல்லது 27அல்லது 32மணிகள்
5. மார்பு- 54 அல்லது 108 மணிகள்
6. கைகளில்- 12 அல்லது 16 மணிகள்
7. கை மணிக்கட்டு- 12 மணிகள்
மேற்கண்ட 7 உறுப்புகளைத்தவிர வேறு உறுப்புகளில் உருத்திராட்ச மணிகளைஅணிவது குற்றமாகும்.
உருத்திராட்ச மணிகளை அணியும்காலம்.
1. சந்தியாக்காலம்.
2. சிவ மந்திர ஜெபம் செய்யும் காலம்.
3. சிவனை தியானிக்கும் காலம்.
4. சிவாலய தரிசனம் செய்யும் காலம்.
5. சிவ புராணம் ஓதும் காலம்.
6. சிவ புராணத்தை பிறர் ஓத கேட்கும் காலம்.
7. திருமுறைகளை பாராயணம் செய்யும் காலம்.
8. சைவ சமய சொற்பொழிவுகளை கேட்கும் காலம்.
உருத்திராட்ச மணிகளை அணிய தகாத காலம்.
1. தூங்கும்போது.
2. மல ஜலம் கழிக்கும்போது.
3. உடம்பு தூய்மையாக இல்லாதபோது
4. நோயுற்று படுக்கையில் கிடக்கும்போது
5. வீட்டின் தூய்மை கெடும்போது.
6. பிறப்பு,இறப்பு நிகழும்போது.

No comments:

Post a Comment