jaga flash news

Monday 26 November 2012

கடவுளை நம்புவது மூடத்தனமா ?

“கடவுள் உண்டா? கடவுள் இருக்குமானால் கண்ணுக்குத் தெரியவில்லையே? உண்டு என்பவர்கள் முட்டாள்கள். அது மூட நம்பிக்கை,” என்று சிலர்
வாதஞ் செய்கின்றனர்.

உலகமெல்லாம் போற்றும் திருவள்ளுவர் இது பற்றி என்ன கூறுகின்றார்; சிந்திப்போம்.திருவள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து
அலகையாய் வைக்கப்படும்'

என்பது வள்ளுவரது அமுதவாக்கு. உலகம் என்பது உயர்ந்தோர்மாட்டே', என்பது தொல்காப்பியம். எனவே உலகம் என்ற சொல் அறிவு நிறைந்த
ஆன்றோரைக் குறிக்கும்.

ஆன்றோர்கள் உண்டு உண்டு என்று கூறுவதை இல்லையென்பவனைப் பேய் என்று ஒதுக்கிட வேண்டும் என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவர்
தெளிவுபடுத்துகின்றார். இதுபற்றி நன்கு சிந்திப்போமாக.

தொல்காப்பியர் நான்கு நிலங்களைக் கூறி அந்நிலங்கட்குத் தெய்வங்களைக் கூறியுள்ளார். சேயோன் மேய மைவரை உலகும்'' என்பது தொல்காப்பியம்.
கடவுள் என்ற சொல்லின் பொருள், என்ன? கடவுகின்றவன் கடவுள், கடவுதல்; செலுத்துதல். உடம்பை உயிர் செலுத்துகின்றது. உயிரைக் கடவுள்
செலுத்துகின்றார். காரை டிரைவர் செலுத்துகின்றான். டிரைவரைப் பின் சீட்டிலுள்ள எஜமான் செலுத்துகின்றான். இறைவன் உயிருக்கு உயிராய்
உள்நின்று நம்மைச் செலுத்துகின்றான். உடம்புக்குள்ளே உயிர்; உயிருக்குள்ளே கடவுள். டயருக்குள் ட்யூப் டயருக்குள் ட்யூப்பு. ட்யூப்புக்குள்ளே காற்று.
டயர் போல் உடம்பும், ட்யூப்பு போல் உயிரும், காற்று போல் கடவுளும் எனவுணர்க.

நீராயுருக்கி என் ஆருயிராய் நின்றானே, என்கின்றார் பாண்டி நாட்டு முதலமைச்சராக விளங்கிய மணிவாசகர்.

ஒரு கார் ஒடுகின்றது என்றால் ஓட்டுபவன் இன்றி கார் ஓடாது அல்லவா? தானே அது ஒடுகின்றது என்பவனைக் கீழ்ப்பாக்க மருத்துவமனையில்
சேர்க்க வேண்டுமல்லவா?

உலகம் நியதியாக நடைபெறுகின்றது. கதிர்மதிகள் காலந் தவறாது உதிக்கின்றன. வானில் சஞ்சரிக்கின்ற நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் ஒழுங்கு தவறாமல் இருக்கின்றன.

நம் உடம்பில் உள்ள உயிர் கண்ணுக்குத் தெரிகின்றதா? கண்ணுக்குத்தெரியாமையால் நான் உயிர் இல்லாதவன் என்று ஒருவன் கூறுவானானால் அவனை  என்னென்று உரைப்பது? அருகில் உள்ளவர்கள் உயிர் இல்லாதவன் என்று கூறுபவனைப் புதைகுழியில் வைப்பார்கள் அல்லவா?

கடந்து நிற்பது கடவுள். கட என்ற பகுதியடியாகப் பிறந்த சொல். எல்லாவற்றையும் கடந்தது கடவுள். இனி நம்மைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து கடக்கச் செய்வது கடவுள்.

கடவுள் கறுப்பா? சிவப்பா?

கடவுள் கறுப்பா சிவப்பா? என்றும் வினவுகின்றார்கள்.

ஒரு பெரியவர் அரச மரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும்,
சொல்லுடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான்.

ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்.''

தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கின்றேன்.''

ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். 
கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''

தம்பீ, காண முயலுகின்றேன்.''

கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா''

இல்லை.''

கடவுளின் குரலைக் காதால் கேட்டிருக்கின்றீரா?''

இல்லை.''

ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை, கையால் தொட்டீரில்லை, காதால் கேட்டீரில்லை, இல்லாதவொன்றை இருப்ப தாகக் கற்பனை செய்து கொண்டு அரிய நேரத்தை வீணடிக்கின்றீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப்படுகின்றேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம் போன்றவர்களைக் காட்சிச்சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே. அது கறுப்பா? சிவப்பா?''

சட்டைப்பையில் என்ன இருக்கிறது

தம்பி! என் சட்டை பையில் என்ன இருக்கின்றது?.

இது தேன்பாட்டில்.

அப்பா! தேன் இனிக்குமா, கசக்குமா?

என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாத சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே. 

உணவுப் பொருளிலேயே தேன் தலைமை பூண்டது, இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் 
தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.

தம்பி! தித்திக்கும் என்றனையே அந்த இனிப்பு என்றது கறுப்பா? சிவப்பா? சற்று விளக்கமாக விளம்பு. நீ நல்ல அறிஞன்.

மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால் இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

ஐயா! தேனின் இனிமையை எப்படி இயல்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது; உண்டவனே உணர்வான்.

பெரியார் புன்முறுவல் பூத்தார். அப்பா! இந்தப் பெளதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனில் இனிமையையே உரைக்க முடியாது. உண்டவனே உணர்வான் 

என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவ வஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால்தான் உணர்தல் வேண்டும்.

தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே
என்றார். அவர் பரமஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. பெரியவரே! எனக்குப் பசிக்கின்றது. சாப்பிட்டுவிட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.

பசியைப் பார்த்திருக்கறாயா?

தம்பி! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால்  கண்டிருக்கின்றனையா?.

இல்லை.

பசி பேசுவதைக் காதால் கேட்டிருக்கின்றனையா?

இல்லை.

பசியை மூக்கால் முகர்ந்திருக்கின்றனைனையா?

இல்லை.

பசியை கையால் தொட்டிருக்கின்றனையா?

இல்லை.

என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்ளுகின்றாய் பசியைக் கண்ணால் கண்டாயில்லை: காதால் கேட்டாயில்லை. மூக்கால்
முகர்ந்தாயில்லை. கையால் தொட்டாயில்லை. அப்படியிருக்க, அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய்.
பசி என்ற ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப் பொய், பசி என்ற ஒன்று இருக்கின்றது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி 

என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல் தான் கடவுளும் அநுபவ பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் 

உணர்தல் வேண்டும். உடம்பு வேர்த்தது

மாணவன் உடம்பு வேர்த்தது. தலை சுற்றியது. இந்தக் கிழவர் கூறுவதில் உண்மையுளது என்று உணரத்தலைப்பட்டான்.

ஐயா, வணக்கம். இப்போது தன் அறியாமையை உணர்கின்றேன். ஒரு சந்தேகம். கடவுளைக் கண்ணால் கண்டால்தான் நான் ஒப்புக் கொள்ளுவேன். நீர் சிறந்த தவ 

முனிவர். கடவுளைக் காட்ட முடியுமா?

தம்பி! உன் பெயர் என்ன?

என் பேர் பச்சையப்பன்.

பச்சையப்பா! நீ பேசுவது எல்லாம் கொச்சையப்பா. உனக்குச் சொல்ல வேண்டும் என்பது என் இச்சையப்பா. கவனமாகக் கேள். பச்சையப்பன் என்ற சொல் இந்த 

உடம்புக்குப் பேரா? உயிருக்குப் பேரா?

அவன் திகைத்தான்.

ம்..ம்.. என்று முணுமுணுத்தான்.

பெரியவர் பொருள் பொதிந்த அறிவுரை கூறுவாரானார்.

பச்சையப்பா! சற்று நிதான புத்தியுடன் கேள். அறுபது அடி நீளமுள்ள இரு சுவர்கள். ஒவ்வொரு சுவரிலும் எட்டு ஜன்னல்கள், இரண்டு நிலைகள்
அமைந்துள்ளன. மேலே ஒரு கூரை வேய்ந்தால் அதனைப் படிப்பகம் என்றோ, மாணவர் இல்லம் என்றோ கூறுவார்கள். மேலே கூரையில்லை
யானால் எட்டு ஜன்னல்களுடன் இரு நிலைகளுடன் கூடிய அறுபது அடி நீளமுள்ள அந்தச் சுவர்கட்கு என்ன பேர்? தயவு செய்து சொல்.

அதற்குக் குட்டிச்சுவர் என்று பேர்.

இப்போது சிந்தனை செய். அறுபது அடி நீளமுள்ள சுவர்கள் எத்துணைச் சிறுமை பெற்றது! குட்டிச்சுவர் என்ற பழி பெற்றது. சுவர்கட்குப் பெருமை
யில்லை. மேலே வேய்கின்ற கூரைக்குத்தான் பெருமையென்று உணர்கின்றாயல்லவா?

சவமும் சிவமும்

சவம் என்று எழுதி, முதல் எழுத்தாகிய சகரத்தின் மீது ஒரு வளைந்த கோடு இட்டால் சிவம் என்று பெருமை பெறுகின்றது. அந்த ஒரு சிறு
கோடில்லையானால் சவம் என்று சிறுமையடைகின்றது.இந்த உடம்பில் சிவம் என்ற ஒன்றிருந்து பெருமை தருகின்றது. சிவம் இல்லையானால் இது
சவமாகிறது. அப்பா! நீ நல்ல பிள்ளை. முன்னுக்கு வரக்கூடியவன். நீயும் உய்ய வேண்டும். உன்னால் நாடும் வீடும் உய்ய வேண்டும்.இந்த உடம்பை
நீ கண்ணால் பார்க்கின்றாயா?''

என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா ? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து
வருகின்றேன்.''

தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒரு போதும் கருதமாட்டேன். நீ அறிஞன் தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால்
மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால்
மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும்.

பச்சையப்பா !

பச்சையப்பா! இந்த உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''

ஆம். நன்றாகத் தெரிகின்றது.''

அப்பா! அவசரப் படாதே. எல்லாம் தெரிகின்றதா?''

என்ன ஐயா! தெரிகின்றது தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது.''

அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றதா?''

ஆம்! தெரிகின்றது.''

முழுவதும் தெரிகின்றதா?''

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில், முழுவதும் தெரிகின்றது,'' என்றான்.

தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?''

பச்சையப்பன் விரள விரள விழித்தான்.

ஐயா! பின்புறம் தெரியவில்லை.''

என்ன தம்பீ! முதலில், தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறந் தெரியவில்லை என்கின்றாய். முன்புறம் முழுவதுமாவது
தெரிகின்றதா ?''அவசரம் கூடாது

பச்சையப்பன் சிரித்தவண்ணம், ஆம், முன்புறம் முழுவதும் தெரிகின்றது,'' என்றான்.

அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையுங் காண்கின் றனையா? நிதானித்துக் கூறு......''

எல்லாப் பகுதிகளையுங் காண்கின்றேன்...எல்லாம் தெரிகின்றது.''

தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''

ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்லுகின்றேன், முன்புறம் எல்லாம் தெரிகின்றது.''

தம்பி! முன்புறத்தில் முக்கியமான முகந் தெரிகின்றதா ?''

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.

தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், ஐயனே! முகந் தெரியவில்லை,'' என்றான்.

குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுவதும் தெரியவில்லை. முன்புறத்தில் முக்கியமான முகந் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான்
கண்டனை; கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதுந் தெரியவேணுமானால்

என்ன செய்ய வேண்டும்? சொல்.''

ஐயனே! இரு நிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களுந் தெரியும்.''

தம்பீ! இந்த ஊன உடம்பை முழுவதுங் காண்பதற்கு இரு நிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக்
காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''

ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள், இப்போதே வாங்கி வருகின்றேன், பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?''

அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று, வேதகாமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இரு நிலைக் கண்ணாடிகள் வேண்டும் என்றேன்
அல்லவா? ஒரு கண்ணாடி திருவருள். மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு

கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவாய் இறைவனைக் காண வேண்டும். அன்புள்ள தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள் 

மூலமே பெற வேண்டும். கடும் வெயிலில் பஞ்சை வைத்தால் வெதும்புமேயன்றி வெந்து சாம்பலாகாது. சூரியகாந்தக் கண்ணாடியை வெயிலில் வைத்து அதன் 

கீழே வரும் ஒளியில் பஞ்சை வைத்தால் அந்தக் கணமே வெந்து சாம்பலாகும். சூரியகாந்தக் கண்ணாடி பரந்து விரிந்துள்ள வெயிலின்

ஆற்றலை ஒன்றுபடுத்திப் பஞ்சை எரிக்கின்றது. அதுபோல் யாண்டும் விரிந்து பரந்துள்ள திருவருளை ஒன்று படுத்தி மாணவனுடைய வினைகளாகிய பஞ்சைக் 

குருவருள் சாம்பலாக்கு கின்றது. கதிரவனது வெயிலும்

சூரியகாந்தக் கண்ணாடியும் தேவைப்படுவது போல் திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.இறை என்ற சொல் இறு என்று 

பகுதியடியாகப் பிறந்தது. எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் இறைவன் என்று பேர் பெற்றது. எங்கும் நிறைந்த பொருளைக் காணும் வழி வகைகளையறிவது 

தான் அறிவுடைமை. முரட்டுத்தனமாகப் பேசுவது அறிவுடைமையாகாது.

எதை எதனால் அறிவது?

எந்தப் பொருளை எந்தக் கருவியினால் அறிய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஓசையை மூக்காலும் மணத்தைச் செவியாலும்
அறிய முயல்வது மூடத்தனமன்றோ?''

நன்கு படித்த ஒருவர், இருபத்தைந்து ஆண்டுகளாக, மல்லி முல்லை ரோஜா முதலிய மலர்களில் மணம் இருக்கின்றது என்கிறார்களே, அதனை நான்
கண்ணால் கண்ட பிறகே ஒப்புக் கொள்ளுவேன்.' என்று பூதக் கண்ணாடியை வைத்து நறுமணத்தைக் கண்ணால் காண முயன்று கொண்டிருந்தார். ஏன்?
அவருக்கு நாசியில் சதை வளர்ந்திருந்தது. சுவாசக் காற்று வாய்வழியே சென்று கொண்டிருந்தது. எனவே அவர் இந்தப் பிறப்பிலே நறுமணத்தைக்
காண முயன்றால் முடியமா? நெடிது ஆராய்ந்து, மல்லிகையில் முல்லையில் ரோஜாவில் நறுமணம் உண்டு என்று கூறுகின்றவன் முட்டாள். மலரில் மணம்
இல்லை; இல்லவேயில்லை, இது சுத்தப் பொய்,'' என்று கூறினால் இதை யார் ஒப்புக் கொள்ளுவார்கள்? மூக்கில் சதை வளர்ந்தவர்கள் ஒவ்வொரு
ஊர்களில் சிலர் இருப்பார்கள் தானே? அவர்கள், ஆம், ஐயா கூறுவது உண்மை. மலர்களில் மணம் இல்லை,' என்று கூறி ஆமோதித்ததார்கள்.
இவர்களைக் கண்டு நாம் இரங்க வேண்டுமேயன்றி, சீற்றமடையக் கூடாதுதானே?

நறுமணத்தை நாவினால் அறிய முடியாது. சுவையை நாவினால் அறிதல் வேண்டும். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தையும் நாக்கு கண்
உடம்பு செவி நாசி என்ற கருவிகளால் அறிய வேண்டும்.

ஐந்துக்கும் அப்பாற்பட்டவர் கடவுள் இந்த ஐந்துக்கும் அப்பாற்பட்டவர். அவரை இந்த பெளதிகக் கருவிகளால் அறியத் தலைப்படுவது அறிவுடையைகாது. 

மனத்தாலும் அறிய ஒண்ணாது. புத்தகங்களைப் படித்து அதனால் எய்தும் நூலறிவாலும் உணர வொண்ணாது. வாலறிவனை நூலறிவினால் உணர்தல் இயலாது.
ஒரு மகான் கோயிலுக்குச் சென்றார். அங்கு ஒருவன் ஒரு குடத்தில் கையை விட்டு அவசரம் அவசரம்மாகத் துழாவிக் கொண்டு இருந்தான். அந்த மகான், அப்பா! 

நீ என்ன தேடுகின்றாய்?'' என்று கேட்டார்.

அவன், மகானே! நான் யானைப்பாகன். யானை எப்படியோ காணாமல் போய்விட்டது. அதைத்தான் இப்பானைக்கும் தேடுகின்றேன்,'' என்றான்.

மகான் சிரித்தார். யானையைப் பானையில் தேடுகின்ற அறிவாளியும் உலகில் இருக்கின்றானா?'' என்று அதிசயப்பட்டார்.

ஒருவனவன் யானை கெடக் குடத்துள் செங்கை ஓட்டுதல் போல்.''
என்கின்றார் தாயுமானார்.

இறைவன் அறிவு வடிவானவர். அறிவே வடிவாய் ஆண்டவனை அறிவு என்ற ஒன்றினாலேயே அறிதல் வேண்டும். ஆனால் நூலறிவு அன்று.
அநுபவத்தால் உண்டான மெய்யுணர்வு. திருவள்ளுவர் மெய்யுணர்வு என்ற ஓர் அதிகாரத்தில் இதனை உணர்த்துகின்றார்.

வாழை நாரும் மதயானையும்

வாழை நாரால் மலர் தொடுக்கலாம். மதயானையைக் கட்ட முடியாது. ஏணி வைத்து மாடிமீது ஏறலாம். இமயத்தின் உச்சியாகிய எவரெஸ்டுக்கு
ஏறமுடியாது; படியினால் நெய்யை அளக்கலாம்; கடல் நீரை அளக்கலாகாது. அதுபோல நூலறிவினால் பிற பொருள்களையிறயலாம். இறைவனை
யடைய முடியாது. வாசித்துக் காணாது,'' என்பார் அருணகிரிநாதர்.

அறிவாலறிந்துன் இருநாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே.''
அறிவையறிபவர் அறியும் இன்பந்தனை''. 

என்பவை அருணகிரிநாதரது அமதவகாக்கு. எனவே இறைவனை அநுபவ அறிவால் அறிய முயல் வதுவே அறிவுடைமை. பொருள் தொலைவில் இருகுமானால் 

கண்ணுக்குத் தெரியாது. நீலகிரியில் இருப்பவனுக்குச் சென்னை மாநகரந் தெரியாது தானே? தனக்குத் தெரியாமையால் சென்னை நகரமே இல்லையென்று 

கூறலாமா ?

ஒரு பொருள் கண்ணை ஒட்டி வைத்தாலும் தெரியாது. எனவே மிகத் தொலைவில் உள்ள பொருளளுந் தெரியாது; மின நெருங்கிய பொருளுந்
தெரியாது. திரைக்கு அப்பாலுள்ள பொருளுந் தெரியாது.

பெரிய பொருளின் சர்க்கரையும் அப்பில் கரைந்த உப்பும் தெரியாது. மிக நுட்பமான பொருளுந் தெரியாது. ஒருவனிடமுள்ள அன்பு அறிவு
இவைகள் தெரியமாட்டா. இவை செயல்படும்போது மட்டும் உணர முடியும். இதுபோல் கடவுள் மெய்யுணர்வுக்கு மட்டும் புலனவார். உணர்ந்தவரும்
இத்தன்மையால் உரைக்கமாட்டாமல் திகைப்பார்கள்.

உலககெலாமுணர்ந் தோதற் கரியவன்,' என்பார் சோழநாட்டு முதலமைச் சராகிய சேக்கிழார் பெருமான். செவ்வானுருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாததென உணர்வித்தது தான் அவ்வாறறியார் அறிகின்றதலால் எவ்வாறொருவர்க்கு இசைவிப்பதுவே,'

என்கின்றார் அருணகிரியார்.

ஓரில் கண்ட ஊமன் கனவென
ஆருக்குஞ் சொலல வாயில்லை ஐயனே,'
என்கிறார் தாயுமானார்.

முகத்தில் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனொடாடிய
சுகத்தைச் சொல்லெனச் சொல்லுமாறு எங்ஙனே'!
என்கின்றார் திருமூலர்.

பச்சையப்பா! நம் முன்னோர்கள் பரம ஞானிகளாக விளங்கினார்கள். தொல்காப்பியர் முதல் அண்மையில் வாழ்ந்த காந்தியடிகள் வரை கடவுள்
பற்றும், கடவுள் உணர்ச்சியும் உடையவர்களே. ஆழ்வார்களும் சமய குரவர்களும் நாயன்மார்களும், தாயுமானாரும்,
இராமலிங்க அடிகளாரும், பாம்பனடிகளும் கடவுள் காட்சி பெற்றவர்கள். 

முன்னோர் மூடர்களானால்

முன்னோர்கள் மூடர்கள் என்றால், மூடர் பரம்பரையில் அறிவாளி வரமுடியாது. அகலக்கட்டையான வேட்டியிலிருந்து கிழிந்த துண்டு
அதிக அகலமுள்ளதாக இருக்காது என்பதைச் சிறு பிள்ளைகளும் உணர்வார்களே?

ஆதலால் நம் முன்னோர்கள் பேரறிவு படைத்த பெரியோர்கள், வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவர்,'
என்கின்றார் வள்ளல் பெருமானார்.

கண்டேன் அவர் திருப்பாதங்
கண்டறியாதன கண்டேன்' ................ அப்பர்.

பிரமபுரம் மேவிய பெம்மான் இவன்,' என்று கண்டு காட்டுகின்றார்
திருஞான சம்பந்தர்.''

பச்சையப்பன் இந்த அறிவுமயமான அறவுரை கேட்டுக் கண்ணீர் அரும்பினான். அப்பெருமானுடைய அடிமலர் மீது வீழ்ந்தான். மெய் நடுங்கினான். உள்ளம் பதை 

பதைத்தது. உரை குழறியது.

கண்ணுக்கு வைத்தியம்

ஐயனே! நான் கல்லூரியில் படித்து அறிவு பெற்றேன். ஆனால் தாங்கள் கூறிய இறையறிவைப் பெற்றேனில்லை.

தாங்கள் அறிவின் கருவூலமாக விளங்குகின்றீர்கள். என் அறியாமையால் என்னை அறிவாளியென்றும், தங்களை அறிவற்றவர் என்றும் கருதினேன். கண் 

மருத்துவரிடம் போய் கண்ணுக்கு மருந்திட வேண்டுமேயன்றி, மிருக மருத்துவசாலைக்குப் போய், புண்ணுக்கு மருந்திடும் மருத்துவரிடம் கண்ணுக்கு 

மருந்திடுவது எத்துணை அறியாமை! அதுபோல் ஞானமூர்த்தியாகிய தாங்களே என் அறிவுக்கண்ணுக்கு மருந்திட வேண்டும். தங்களிடம் சிற்சில விளக்கம் பெற 

விரும்புகின்றேன். தாங்கள் கருணை கூர்ந்து விளக்கஞ் செய்வீர்களாக,'' என்றான்.

மெய்ஞ்ஞானி கூறுகின்றார். அப்பனே! உனக்கு நான் எந்தக் கருத்துக்கு விளக்கஞ் செய்ய வேண்டும்? தயங்காமல் கூறுக.''

பெருமானே! தாங்கள் கூறியவற்றிலிருந்து நான் தெரிந்து கொண்டது கடவுள் அறிவு வடிவானவர் என்பது ஆகும். கடவுள அறிவுப் பொருளாக இருக்க, 

கோயில்களில் செம்பாலும், சிலையாலும் உருவங்கள் வைத்து வழிபடுகின்றார்களே? இது அறிவுக்குப் பொருந்துமா? இன்னும் ஆடம்பரமாகத் தேர்த் 

திருவிழாக்கள் செய்கின்றார்களே? இது என்ன நியாயம்? கல்லும் செம்பும் கடவுளாகுமா? பலர் வீடின்றித் தவித்துக் கொண்டு இருக்க ஊரில் பாதி கோயிலா? 

பலர் பட்டினி கிடந்து பரிதவிக்க சிலைக்கு விலை மதிக்க முடியாத அணிகலன்களா? இத்தகைய ஐயங்கள் எழுகின்றன. இவைகளுக்கு விளக்கந் தர வேண்டும்.''

அப்பனே! இத்தகைய வினாக்கள் எழுவது இயல்பு தான். இவைகளுக்குத் தக்க விடைகள் பகர்கின்றேன். ஒருமைப்பட்ட மனத்துடன் கேள்.

ஊரில் பாதி கோவிலா?

ஊரில் பாதி கோயிலா என்று கேட்டனை; அதற்கு விளக்கம் கூறுகின்றேன், கேள். மதுரையில் மிகப் பெரிய கோயில் இருக்கிறது. அதை இருநூறு வீடுகளாக 

அமைத்துக் கொடுத்தால் இருநூறு பேருக்கு வீடில்லாத துயரம் தொலையும். இவ்வாறு செய்வதனால் அக்கோயில் இருநூறு பேருக்குத் தனியுடைமையாக 

ஆயிற்று.மக்கள் நெருங்கி வாழும் மதுரைக்கு வரும் யாத்ரீகர்கள் கோயிலில் தங்குவார்கள். வீட்டில் இடமில்லாத வறியவர்கள், கோயிலில் சென்று படிப்பார்கள்,
படுப்பார்கள், தியானம் செய்வார்கள். எனவே, மதுரை கோயில் இன்று வாழும் நாற்பத்தைந்து கோடி மக்களுக்கும் பொதுவுடமையாகத் திகழ்கின்றது. எனவே, 

நாற்பத்தைந்து கோடி மக்களுக்கும் பொதுவுடமையாகத் திகழும் ஆலயத்தை நூறு அல்லது

இருநூறு பேருக்குத் தனியுடைமயாகச் செய்வது பரந்த நோக்கம் ஆகுமா? ஆதலால், பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் மக்கள் அனைவருக்கும் பயன்படுமாறு
ஆலயங்களை விசாலமாக அமைத்தார்கள்.

சிலைக்கு நகையா ?

சிலைக்கும் செம்புக்கும் அணிகலன்கள் அவசியமா என்று கேட்டனை. முன்னிருந்த முடிமன்னர்களும் தனவந்தர்களும் தாம் அணிந்திருந்த அணிகலன்களைத் 

தெய்வச் சிலைகளுக்கு அணிவித்து எல்லோரும் கண்டு களிக்குமாறு செய்தார்கள். அணிகலன்கள் காட்சிப் பொருளே அன்றி, உணவுப் பொருள்கள் அல்ல. ஒரு 

பெருந்தனவந்தன் விலை மதிக்க வொண்ணாத நவமணிகளாலான அணிகலன்களைத் தன் மனைவிக்குப் பூட்டி அலங்கரிப்பானானால் அதனை மற்றவர்கள 

கண்டு களிக்கலாமா? அயலானுடைய மனைவியின் அலங்காரத்தைக் காண்பது முறையா? தனவந்தன் தான் காண உடன்படுவானா? எனவே, கண்ணால் மட்டும் 

காணக்கூடிய அணிகலன்களைத் திருப்பதி வெங்கடாசலபதிக்கும் திருவரங்கம் அரங்கனாதருக்கும் மதுரை மீனாட்சிக்கும் அரசர்கள் அர்ப்பணித்தார்கள்.

இனி, சிலையும் செம்பும் கடவுளாகுமா என்று கேட்டனை; பசுவின் உடம்பு முழுவதும் பால் பரவியிருந்தாலும் அந்தப் பாலைக் கொம்பைப் பிடித்து
வருடினால் பெற முடியுமா? வாலைப் பிடித்து வருடினால் பெற முடியுமா? வாலைப் பிடித்து வருடினால் என்ன கிடைக்கும்? பால் கிடைக்காது;
பல் கிடைக்கும். பாலைப் பசுவின் மடி மூலம் பெறுவதுபோல் எங்கும் பரந்து விரிந்திருக்கும் இறைவனுடைய திருவருளைக் கோயிலில் விளங்கும் 

திருவுருவத்தின் மூலமாகப் பெறுதல் வேண்டும். கோயிலில் உள்ள திருவுருவத்துக்கு மூர்த்தி என்று பேர். அதிலிருந்து வெளிப்பட்டு அருள் புரிகின்ற இறைவன் 

மூர்த்திமான் எனப்படுவான்.

தனவந்தர் மகன்

ஒரு பெருந்தனவந்தருடைய மகன் பள்ளியில் சேர்ந்தான். அவன் படியாமல் பள்ளிக்கூடத்தையே கலக்கிக் கொண்டிருந்தான். பள்ளித்துணை ஆய்வாளர் 

அப்பள்ளிக்கு வந்தார். எல்லாப் பிள்ளைகளும் எழுந்து நின்று, வணக்கம்,' என்றார்கள். பள்ளித் துணை ஆய்வாளர் ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப் பெற்று 

மோர்க்குழம்பு தான் போல் மொழு மொழுவென்று இருந்த இந்தப் படியாத தடியனைப் பார்த்து, தம்பி, நீ என்ன படிக்கின்றாய்?' என்று கேட்டார்.

அவன், புஸ்தகம் படிக்கின்றேன்,' என்றான்.

புஸ்தகம் எங்கே?' என்று கேட்டார்.

வீட்டில் இருக்கிறது,' என்றான்.

புஸ்தகம் இல்லாமல் ஏன் வந்தாய்?'

மோட்டார் லாரிகளில் அகப்பட்டுக் கொள்வேன் என்று என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.'

இது என்ன, ஆடுமாடு அடைக்கின்ற பவுண்டா? தலைமையாசிரியரே, நீர் பள்ளிக்கூடம் நடத்துகின்ற பாங்கு நன்றாக இருக்கின்றது.'

பள்ளித் துணை ஆய்வாளர் கரும்பலகையில், அறம் செய விரும்ப,' என்று எழுதி, நம்பி, இது என்ன படி,' என்றார்.

அவன் அதைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

என்னப்பா, ஆறு மாதங்களாகப் பள்ளிக்கு வருகின்ற உனக்கு அறஞ்செய விரும்பு என்பதைப் படிக்கக் கூடத் தெரியவில்லையே!' என்று
கூறி வெகுண்டார்.

பின்னர் குழந்தைகள் கலபமாகப் படிக்கக்கூடிய விதத்தில் அக்கரும் பலகையில் படம்' என்று எழுதினார்,
அம்மாணவனைப் பார்த்து, இதனைப் படி,' என்றார்.

அவன் ஆந்தைபோல் விழித்துக் கொண்டு நின்றான்.

பள்ளித் துணை ஆய்வாளர், படம் என்ற பதத்தில் பகரத்தையும் மகர மெய்யையும் அழித்தார். நடுவில் உள்ள எழுத்தைக் காட்டி, தம்பி, இது உனக்குத் 

தெரிகிறதா?'

தெரிகின்றது,'

ஆசிரியரும் ஆய்வாளரும் சற்று மகிழ்ந்தார்கள். ஓர் எழுத்தாவது தெரிகின்றது என்றானே என்று உள்ளம் உவந்தார்கள்.

தம்பி, இது என்ன எழுத்து?'

கோடு,' என்று கூறினான் அம்மாணவன்.

ஆசிரியரும் ஆய்வாளரும் சிரித்தார்கள்.

மற்றொரு மாணவனை அழைத்து, இது என்ன?' என்று கேட்டார்.

அவன், ட' என்று கூறினான்.

கோடும் அதுதான்; டவும் அதுதான். கற்றவன் ட என்று கண்டான்; கல்லாதவன் கோடு என்று கண்டான். கோட்டுக்குள்ளே அறிவுள்ளவன் ட என்ற ஒலியைக் 

காண்கின்றான். அது போல கல்லாலும் செம்பாலும் செய்த சிலைக்குள்ளே சச்சிதானந்த பரம்பொருளை ஞானிகள் காண்கின்றார்கள். அவைகளைச் செம்பு என்றும், 

கல் என்றும் கூறுவது ட என்ற எழுத்தைக் கோடு என்று கூறுவதை ஒக்கும்.

கருத்து ஒருமித்த காதலுனும் காதலியும் நல்லறமாகிய இல்லறத்தில் வாழ்ந்தார்கள். அந்த இல்லறக்கிழத்தி பம்மபரமாகச் சுழன்று கணவருக்கு
அறுசுவை உணவு அமைத்து ஊட்டுவாள். ஆடைகளைத் துவைத்துக்கொடுப்பாள். கணவனாருக்குப் படுக்கை விரிப்பாள். விசிறி விடுவாள். கணவன் திருவடிகளை 

வருடி விடுவாள்.

காதல் கடிதம்

காதல் கணவன் வியாபார நிமித்தம் பம்பாய்க்குப் புறப்பட்டான். மனைவி இனிய உணவுகளை ஆயத்தம் செய்து கணவனைப் புகை
வண்டியில் ஏற்றினாள். வண்டி புறப்படும் பொழுது அவளுடைய கண்கள் குளமாயின. விரைவில் வாருங்கள்,' என்று தழு தழுத்துக் கூறினாள்.

வண்டி புறப்பட்டதும் அவள் கைப்பையை எடுத்து அசைத்தாள்.

அவன் கைத் துண்டை அசைத்தான். புகைவண்டி நிலையத்தில் அவள் அப்படியே தூண் போல் அசைவற்று நின்றுவிட்டாள். பின்னர் வீட்டுக்கு
வந்தாள். அவளுக்கு வீடு வெறிச்சென்று இருந்தது. மறுநாள் அன்பு ததும்பும் கடிதம் எழுதி அனுப்பினாள். கண்ணீரினால் அக்கடித்தின் எழுத்துக்கள் 

அணைந்திருந்தன. கை தடுமாறியதால் எழுத்துக்கள் கோணல் மாணலாக இருந்தன. பம்பாய் சேர்ந்த கணவன், மாண்பு மிகுந்த மனைவியின் கடிதத்தை 

ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவசரம் அவசரமாக உறையைப் பிரித்துப் படிக்கத் தலைப்பட்டான். அந்தப் பொன்னெழுத்துக்களைக் கண்டு 

தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது. இப்பொழுது சிந்தியுங்கள்.

அவன் கடிதத்தைக் கண்டா அழுதான். அந்த மைக் கோடுகளைக் கண்டா அழுதான்? இல்லை இல்லை. கண்டது கடிதம். மனக் கண்கண்டது மனைவியினுடைய 

மலர்க கரங்கள். உணர்வில் உணர்ந்தது மனைவியின் அன்புடைமை. அந்த அன்பையும் பண்பையும் நினைந்து அழுகின்றான். இது போல் தெய்வத் 

திருவுருவத்தைக் கண்டு பக்தர்கள் மனக் கண்ணால் இறைவனுடைய அருள் வடிவத்தையும், மெய்யுணர்வால் இறைவனுடைய கருணைப் பண்பையும் உணர்ந்து
கண்ணீர் வடிக்கிறார்கள். ஆதலினால் தெய்வத் திருவுருவங்களைக் கண்டு அன்பர்கள் அழுகிறார்கள், தொழுகிறார்கள் என்று உணர்வாயாக!

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்''
- திருவாசகம்

தேர் திருவிழா எதற்கு?

தம்பீ! ஆடம்பரமாகத் தேர்த்திருவிழா எற்றுக்கு? என்று கேட்டனை. இதற்கும் விளக்கம் கூறுகின்றேன்.

பலவழியாலும் பணம் படைத்த ஒருவன் கோயிலில் திருவிழா செய்கின்றான். மூவாயிரம் ரூபாய்கள் செலவழிகின்றன. இந்த ரூபாய் நோட்டுக்களைக் கயிற்றில் 

கோத்தா இறைவனுக்குச் சாத்துகின்றான்! இல்லை.

சுவாமி தூக்குகின்றவனுக்கு ரூ. 75 - பூமாலை தொடுத்தவனுக்கு 300 - திருமுறைகள் ஓதுவாருக்கு 200 - விளக்குச் சுமப்பவர்கட்கு 75 - குடை பிடிப்பவனுக்கு 

50 - மேளம் வாசிப்பவர்கட்கு 500 - பந்தல் இட்டவனுக்கு 300 -வறியவர்க்கு பிரசாதமாக 500 - வேலை செய்பவர்க்குக் கூலியாக 200 - வாணக்காரனுக்கு 200
- விரிவுரை புரிபர்க்கு 300 - அச்சிடுபவருக்கு 200 - அபிஷேகத்துக்கு 100 - சிற்றுண்டிகள் 400 - என்று செலவழிகின்றன. இத்தனையும் வறியவர்க்குப் 

பயன்படுகின்றன. இது இல்லையானால் தனவந்தனுடைய பணம் அவன் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும். வாண வேடிக்கையால் யாக்கை நியைமையைப் 

பாமர மக்கள் உணர்வார்கள். எனவே பெருந்தனவந்தனுடைய பணம் பல தொழிலாளர்க்குப் பயன்படுகின்றது. இதனால் திருவிழாவினாலும் பல மக்கள் உண்டு 

கண்டு உவகையுறுகின்றார்கள்.

அன்பினால் இதனை நம் முன்னோர்கள் அமைத்தார்கள். ஆதலால் இது பயனற்றது என்று கூறுவது அறிவுடைமையாகாது.

மேற்றிசையிலிருந்து கிழக்கே ஓடுவதற்கு நதி என்று பேர். கிழக்கேயிருந்து மேற்கே ஓடுவதற்கு நதம் என்று பேர்.

மழையும் வெள்ளமும்

மாலையிலே ஒருவன் நதிக்குப் போனான். அதில் ஒரு துளி கூடத் தண்ணீர் இல்லை. மறுநாள் காலை நதியின் அருகில் சென்றான். நதியில் நொப்பும்
நூரையுமாக வண்டலுடன் வெள்ளம் ஓடுவதைக் கண்டான். அந்த ஊரில் சிறிதும் மழை பொழியவில்லை.

மேற்கே மழை பொழிந்தது என்கின்றார். கண்டது வெள்ளம்; காணாதது மழை. கண்ட வெள்ளத்தைக் கொண்டு, காணாத மழையை நிச்சயிப்பதுபோல்,
காணுகின்ற உலகைக் கண்டு காணாத கடவுளைக் கருதல் அளவையால் உறுதிப்படுத்த வேண்டும்.

மரங்களில் இலையுதிர்காலத்தில் நியதியாக இலைகள் உதிர்கின்றன. மார்கழி தை மாதங்களில் பனி துளிக்கின்றது. சித்திரை வைகாசியில் வெய்யில் 

வெதுப்புகின்றது. மரங்களுக்கும் பனிக்கும், வெய்யிலுக்கும் எந்த அரசாங்கம் கட்டளை பிறப்பித்தன?

இவைகள் எல்லாம் இறைவனுடைய திருவருள் ஆணையினால் நியதியாக நிகழ்கின்றன.

உலகம் காரியப்பாடுடைத்து. கர்த்தா இன்றி, காரியம் நிகழாது.

நாம் ஒரு குடத்தைக் காண்கின்றோம் அக்குடத்துக்கு மண் முதல் காரணம். தண்ட சக்கரங்கள் துணைக் காரணம். குயவனார் நிமித்த காரணம்.
இதுபோல் உலகிற்கு மாயை முதற் காரணம். அருட் சக்தி துணைக் காரணம். இறைவன் நிமித்த காரணம் என உணர்தல் வேண்டும்,''

பச்சையப்பன், ஐயனே, தாங்கள் நான் வினவிய வினாக்களுக்குக் காரணகாரியங்களுடன் விளக்கம் செய்தீர்கள். அறிவு படைத்த எவனும் இதனை
ஒப்புக் கொள்வான். மற்றொரு ஐயப்பாடு.'' என்று கூறலானான்.

எல்லாம் ஈசன் செயல். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று பெரியோர்களும் அறிவு நூல்களும் கூறுகின்றன. ஒருவன் கொலை செய்கின்றான். எல்லாம் 

அவன் செயல் என்பது உண்மையானால் குற்றம் செய்தவனை ஏன் தண்டிக்க வேண்டும் என்ற ஓர் ஐயம் எழுகின்றது. இதனை விளக்கியருளுமாறு 

வேண்டுகின்றேன்.''

தம்பீ! எல்லாம் அவன் செயல் என்பதும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் முற்றிலும் உண்மை தான். அதற்குப் பொருள்
காண்பதில் தான் பிழை நேருகின்றது.

விளக்கைச் சூழ்ந்து பலர்

அமாவாசை நடு இரவு. நள்ளிருள். ஒருவிளக்கு எரிகின்றது. அந்த விளக்கைச் சூழ்ந்து பலர் இருக்கின்றார்கள். ஒருவன் அறிவு நூல்களை ஓதுகின்றான். ஒருவன் 

புத்தகத்தில் ஐந்தெழுத்தை எழுதிக் கொண்டிருக்கின்றான். ஒருவன் பொய்க் கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றான். ஒருவன் தன் மாற்றானைக் கொல்ல மருந்து 

ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றான். மற்றொருவன் ஒருவனைக் கொல்லக் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கின்றான்.

இத்தனை விதமான செயல்களும் விளக்கின்றி நிகழவில்லை. விளக்கின்றிப் படிக்க முடியாது. விளக்கின்றிப் பொய்க் கணக்கு எழுத முடியாது. நனமையான 

செயல்களுக்கும், தீமையான செயல்களுக்கும் விளக்கின் ஒளியே காரணமாகும்.

ஆனால் நன்மை தீமைகளால் விளையும் பண்ணிய பாவங்களுக்கு விளக்கு காரணமாகாது. அதுபோல் அவரவர்கள் செய்யும் செய்யும் நன்மை தீமைகளின் 

பயன்கள் அந்த ஆன்மாக்களையே சாரும். இதனை உய்த்து உணர்க.

இனி, நம்பிக்கையைப் பற்றிக் கூறுகின்றேன் கேள். நம்பிக்கையின்றி எந்த மனிதனும் ஒரு கணமும் வாழ முடியாது. முதலாவதாக, பேருக்கு முன் பொறிக்கும் 

தலையெழுத்தே நம்பிக்கையை வைத்துத் தான் போடுகிறோம். இவர் தான் உன் தந்தை,' என்று தாய் கூறும் வார்த்தையினால் தான் பேருக்கு முன் 

தலையெழுத்தைப் பொறிக்க முடியும். நம்பித்தான் ஆகவேண்டும்

நம் வீட்டைவிட்டுப் புறப்படும்பொழுது மனைவி முதலியோரை நம்பித்தான் வெளியேறுகிறோம். மருத்துவச்சாலையில் கம்பவுண்டர் கொடுக்கின்ற மருந்தை 

நம்பித்தான் உண்கிறோம். இந்த மருந்து எந்தக் கம்பெனியில் செய்தது? யார் யார் உண்டு நலம் பெற்றார்கள்? நலம் பெற்றவர்கள் முகவரியைக் கொடுங்கள். 

அவர்களுக்கு எழுதிக் கேட்டுத் தெளிவு பெற்ற பின் மருந்தை உண்பேன் என்று எந்த நோயாளியாவது கூறுகின்றானா? மருத்துவரை நம்பித்தானே நோயாளி 

மருந்து உண்கின்றான்?

பேருந்தில் பிராயணம் செய்கின்ற ஒருவன்'' அதைச் செலுத்துகின்றவனை நம்பித்தானே தூங்கின்றான்? பேருந்து செலுத்து கின்றவனும் மனிதன் தானே? 

அவனுக்கும் தூக்கம் வரும் தானே? செலுத்துகின்ற டிரைவர் தூங்குவானானால் தூங்கிய பிராயணி கண் விழிப்பானா?

எனவே, முன்பின் தெரியாத கம்பவுண்டர்களையும் டிரைவர்களையும் நம்புகின்ற நாம், அறிவு படைத்த ஆன்றோர்களையும் நம்பித்தானே ஆக வேண்டும்?

மனிதனுக்குத் துன்பங்கள் அத்தனைக்கும் மூல காரணம் ஆசை ஒன்று தான். ஆசையை விட்டவனே இன்பத்தை அடைவான். ஆசையை விடாதவன் துன்பத்தில் 

துடித்துத் துயரமடைந்து மாள்வான் என்பதனை உணர்த்த எழுத்தையே ராமாயணமும் பாரதமும் என உணர்க.

ஒரு பெரியவர் பல மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆறு மாதம் ராமாயணமும் ஆறு மாதம் பாரதமும் பாடம் சொன்னார். ஓர் ஆண்டுக்குப் 

பின் ராமாயண, பாரதமும் பாடம் சொன்னார். ஓர் ஆண்டுக்குப்பின் ராமாயண, பாரத பாடங்கள் முடிவு பெற்றன. பூர்த்தி விழாக் கொண்டாடப்பட்டது. தேநீர் 

வழங்கினார்கள்.

ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, மாணவ ரத்தினங்களே! ராமாயணத்துக்கும் பாரதத்துக்கும் என்ன வேற்றுமை?'' என்று வினவினார்.

வேற்றுமை என்ன?

ஒருவன்: ராமாயணம் மஞ்சள் அட்டை. பாரதம் பச்சை அட்டை.
ஒருவன்: ராமாயணம் நானூறு பக்கம். பாரதம் ஐந்நூறு பக்கம்
ஒருவன்: ராமாயணம் பதிப்பித்தது பார்க்கர் பிரஸ். பாரதம்
அனுமந்து பிரஸ்.
ஒருவன்: ராமாயணத்தில் சகோதரர்கள் நால்வர்: பாரதத்தில் ஐவர்கள்.
ஒருவன்: ராமாயணம் சொன்னவர் வால்மீகி. பாரதம் சொன்னவர்
வியாசர்.
ஒருவன்: ராமர் பதினாலு வருஷம் வனவாசம் செய்தார். தருமர்
பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசஞ் செய்தார்.
ஒருவன்: ராமாயணம் திரேதா யுகத்தில் நிகழ்ந்தது. பாரதம் துவாபர
யுகத்தில் நிகழ்ந்தது.

இப்படிப் பலரும் பலவாறு கூறினார்கள். ஒரு சிறுமி குருநாதரைத் தொழுதாள்.

குருநாதா! நான் கூறலாமா?''

அம்மா! அறிவு எல்லாருக்கும் பொதுவுடைமை தானே? நீயும் சொல்லலாம்,'' என்றார்.

அந்தப் பெண் சிறுமி, குருநாதா! ராமாயணத்துக்கும் பாரதத்துக்கும் ஒரே ஓர் எழுத்துத் தான் வேற்றுமை,'' என்றார்.

இதைக் கேட்டு எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்தார்கள். சிறுமியைக் கோபத்துடன் உற்றுப் பார்த்தார்கள்.
ஹும்.....'' என்று உறுமினார்கள். அசடு! சும்மா இரு, உளறாதே!'' என்று கூறி வைத்தார்கள்.

இராமாயணம், உலகம் யாவையும் தாமுளவாக்கலும்....' என்று தொடங்குகின்றது. மகாபாரதம், நீடாழி உலகத்து.....' என்று தொடங்குகின்றது. இவ்வாறு பல 

எழுத்துக்கள் வேற்றுமையாக இருக்கும் பொழுது ஒரே-ஒரு எழுத்து வேற்றுமையென்று இந்த மக்குப் பெண் கூறினாளே!'' என்று எள்ளி நகையாடினார்கள்.

ஆசிரியர் அவர்களை அடக்கி, அம்மா, குழந்தாய்! இராமாயணத்துக்கும் பாரதத்துக்கும் ஒரே ஓர் எழுத்துத் தான் வேற்றுமையென்று சொன்னாயே, அதனை 

இவர்கள் விளங்கிக் கொள்ளுமாறு விளக்கமாக விளம்பு,'' என்றார்.

அது என்ன எழுத்து ?

அச்சிறுமி, குருநாதா! இராமாயணம் பெண்ணாசையில் விளைந்தது. மகாபாரதம் மண்ணாசையினால் விளைந்தது. இராவணன் தன் மனைவியரை விடுத்து, 

இராகவன் மனைவியை விரும்பிக் குலத்துடன் அழிந்தான். துரியோதனன் பாண்டவர்களின் அரசை விரும்பி 11 அட்சரோணிசேனைகளுடன் மாய்ந்தான். எனவே 

பெண்ணாசையை விட்டுவிடு என்று ராமாயணமும், மண்ணாசையை விட்டுவிடு என்று மகாபாரதமும் நமக்கு அறிவுறுத்துகின்றன.''
இதனைக் கட்டு, ஆசிரியர்களும் மாணவர்களும் அக மகிழ்ந்தார்கள்.

ஓர் எழுத்துத்தான் வித்தியாசம்

பச்சையப்பா! இவ்வாறு நூல்களை நுனித்து உணர்தல் வேண்டும். பழங்கதைகள் என்றும், புராணப் புளுகு என்றும் புறக்கணிக்கக் கூடாது.

ஆதலால் ஆன்றோர்களின் நூல்களில் அசையாத நம்பிக்கை வைக்க வேண்டும். அயலாருக்குப் போகின்ற நாம் கை காட்டி மரத்தை நம்பினலொழியப் பிரயோசனப் 

படாது. புகை வண்டியில் போகின்ற நாம் கால அட்டவணையை நம்பினாலன்றிப் பிராயணம் செய்ய முடியாது.

அதுபோல் ஜீவ யாத்திரைக்கு ஆன்றோர்கள் எழுதிய அறிவு நூல்கள் நமக்கு வழி காட்டுகின்றன. எனவே எங்குமாய், எல்லாமாய், அறிவு வடிவாய், கருணை 

மயமாய் விளங்கும் இறைவனைச் சிந்தித்தும் வாழ்த்தியும், வந்தித்தும் ஆன்ம லாபத்தைப் பெறுவாயாக!'' என்று அரச மரத்தின் கீழிருந்த அறிஞர் பெருமான் 

அமுத மயமாகிய அறிவுரைகளை அன்பாலும் அருளாலும் எடுத்து விளக்கமாக உரைத்தருளினார்.

பச்சையப்பன் திருந்தினான்

பச்சையப்பன் கேட்டுப் பரவசமடைந்தான். பழந் துணியை எடுத்தெறிவது போல தன் அறியாமையை உதறித் தள்ளி அறிவு நலம் பெற்றான். பண்புடைய
வனாய் வாழத் தொடங்கினான். பரம்பொருளைப் பணிந்தான்.

இதுகாறும் கூறியவற்றால் தொல்காப்பியர் முதல் காந்தியடிகள் வரை ஆன்றோர்கள் கடவுள் உண்டு என்று வற்புறுத்தியும் வலியுறுத்தியும் கூறினார்கள்
என்பதும், கடவுகின்ற பொருள் கடவுள் என்பதும், அது உயிர்க்குயிராய் உள் நின்று உதவுகின்றது என்பதும், அதை அனுபவ அறிவால் காண வேண்டும் என்பதும், 

திருவருளாலும் குருவருளாலும் காண முயலுதல் வேண்டும் என்பதும், கண்டவர் விண்டிலர் என்பதும், கோயில்கள் விசாலமாக இருப்பதன் அவசியம் இது 

என்பதும், விக்கிரக ஆராதனை உட்கருத்து இது என்பதும், கோட்டில் ட வைக் காண்பது போல் திருவுருவத்தில் தெய்வத்தைக் காண வேண்டும் என்பதும்
திருவிழாக்களால் பல ஏழைத் தொழிலாளிகள் வாழ்வு பெறுகிறார்கள் என்பதும், எல்லாம் அவன் செயல் என்பதனுடைய உட் கருத்து இது தான் என்பதும், 

நம்பிக்கையின்றி வாழ முடியாது என்பதும், இதிகாசங்களின் உட்கருத்தை உணர வேண்டும் என்பதும் உணர்த்தப் பெற்றன.

ஆதலால் நல்லறிவு பெற்றவர்கள் அதனைப் பலமுறை சிந்தித்து, தெளிந்து பண்புடையவர்களாக வாழ்வார்களாக!

No comments:

Post a Comment