jaga flash news

Monday 26 November 2012

கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள்

கா‌ர்‌‌த்‌திகை தீபம், அது சாதாரண தீபமல்ல. ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிகச் சிறப்பு மிக்க தீபம். 

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம். கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம். ஏனென்றால், இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி, நரம்புகளெல்லாம் சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள். 

அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும். அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம். 

ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார். திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும், தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது. 

இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் ஒரு காலத்தில் வெளிப்படும். பிற்காலத்தில் அதையெல்லாம் பார்க்கப் போகிறார்கள். அதனால்தான் அந்த மலையைச் சுற்றினாலேயே அத்தனை இன்பம் கிடைக்கும் என்று சொல்வது. அந்த அளவிற்கு மிகப் பழமையான மலை. 

அதனால்தான் இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார். உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது. 

இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. நிதி வேண்டாம், கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல கருணை நிதி கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம். 

நவம்பர் 27ஆம் தேதி முதலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பிறகு மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ‌ண்டாகு‌ம். 

எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நான் கார்த்திகை மாதம் விரதம் இருக்கிறேனோ இல்லையோ, முடிந்தவரை கெட்ட சிந்தனைகளை அகற்ற விரும்புகிறேன், நல்மனதோடு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதே. எப்போதுமே, நான் கார்த்திகை, மார்கழி மாதங்களை சிறப்பாக நினைப்பவள். மன அழுக்கை போக்கி, உள்ளன்போடு அகல்விளக்கு ஏற்றினால் தான், அந்த விளக்குபோல், நம் உள்ளங்களும், குடும்பமும், பிரகாசிக்கும் என்பதே.

    அய்யா!வெ.சாமி அவர்களுக்கு, 17/11/2018ஆம் வருடத்திய(சனிக்கிழமை) கார்த்திகை மாதப்பிறப்பின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete