jaga flash news

Friday 30 November 2012

ராகு -கேது பெயர்ச்சிப் பலன்கள்:


மேஷம்:
கடந்த ஒண்ணரை வருடங்களாக ராகு உங்கள் ராசிக்கு 7-மிடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 2-மிடத்திலும் இருந்து உங்களுக்குப் பல வழிகளில் நிம்மதி இல்லாமல் செய்தார்கள். அவ்வப்போது சில நன்மைகள் நடந்தன என்றாலும், பொதுவாக பலருக்கும் பல கெடுதல்களே நடந்தன. இப்போது வரப்போகும் பெயர்ச்சியின்போது ராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடமான துலா ராசிக்கும் கேது உங்கள் ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
        7-மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு திருமணத் தடைகளை உண்டாக்குவார். அல்லது திருமண ஏற்பாடுகள் தாமதமாகும். சில புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல், வாழ்க்கையையே பிரச்சினையாக்கிக்கொள்வார்கள்.அதேபோல சில குடும்பங்களில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி உறவு சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது.  ஆனால், ஜாதக திசா-புத்திகள் யோகமாக இருந்தால், துலா ராசியில் ராகு உச்ச சனியுடன் சேர்ந்து இருப்பதால், திருமணத் தடைகள் விலகும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரலாம். அதே சமயம் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். அவருக்கு ரத்தம் சம்பந்தமான பாதிப்புகள் , விஷம் சம்பந்தமான பாதிப்புகள் அலர்ஜி ஆகியவை ஏற்படும். சிலர் ஒழுக்க நிலையில் பிறழ்ந்து தடுமாறிப் போகும் சூழ்நிலை உண்டாகும். அந்நியப் பெண்கள் , ஒழுக்கக் குறைவான பெண்களின் நட்பும் ,பழக்கமும் உங்களுக்கு  ஏற்படக்கூடும். அது உங்கள் கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துவிடும்.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் கூட்டுத் தொழில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் எச்சரிக்கையும் அவசியம். இல்லாவிட்டால் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது. ஆனால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் உங்களைவிட்டு மாறினாலும்கூட சிலருக்கு தொழில்ரீதியாகப் புதிய கூட்டாளி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. திடீரென எதிர்பாராத வருமானம் வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சிலருக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தாலும்கூட பழைய ந்ண்பர்களில் சிலர் உங்களைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடும்.   மேஷராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியும் லாப ஸ்தானாதிபதியுமாக சனி இருப்பதாலும் அப்படிப்பட்ட சனி பகவான் உச்ச சனியாகி நிற்கும் துலா ராசியில் ராகுவும் உச்ச சனியுடன் இணைந்து நிற்பதாலும், தொழில் யோகமும் தொழில் விருத்தி யோகமும் உண்டாகும். வேலையில் இருப்போருக்கும் நல்ல முன்னேற்றமும் திருப்பமும் உற்சாகமும் உண்டாகும். 2013- மே மாதம் வரை அதாவது குரு ரிஷபத்தில் இருக்கும்வரை தொழில், உத்தியோகத்தில் சிற்சில . இடையூறுகளும் தடைகளும் ஏற்படலாம்.சிலர் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகலாம்.  மே மாதத்துக்குப் பிறகு குரு மிதுன ராசிக்கு மாறியபிறகு 9-க்குரிய குரு 10-க்குரிய சனியைப் பார்ப்பதால், தர்மகர்மாதிபதியோகம் ஏற்பட்டு தொழில், உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் அத்தனையும் நீங்கிவிடும். சிலர் தங்களது தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். சிலருக்கு இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலையும் உருவாகும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்யவேண்டியிருக்கும்.  சிலருக்கு வண்டி வாகனங்கள் விரயச் செலவை ஏற்படுத்தும்.
ஆரம்பத்தில் வெளிவட்டார பழக்கவழக்கங்களில்  சில பிரச்சினைகள் உருவானாலும்  பிறகு விரும்பியபடி காரியங்கள் பலிதமாகும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு முடிவில் வெற்றி உண்டாகும். பண வசதியைப் பொறுத்தவகையில் இல்லை என்ற குறை நீங்கி எண்ணங்கள் ஈடேறும்.  இரண்டாம் இடத்து குரு உங்கள் வாக்கு சாதுர்யத்தை மேம்படுத்தி மற்றவர்களை உங்கள் வசப்படுத்தி  உங்கள்  திட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றச் செய்வார். அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனைவியும் பிள்ளைகளும் கேட்டதை வாங்கிக் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். உங்கள் உறவினர்களையும் மனைவிவழி உறவினர்களையும் அனுசரித்து வரவேற்று உபசரிப்பதன்மூலம் சொந்த பந்தங்களின் அன்புக்கு ஆளாகலாம்.
உங்கள் மனோபாலம் அதிகமாகும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும். ஆனால் முடிவெடுக்கும்பொதுதான் குழப்பங்கள் ஏற்பட்டு கால தாமதமாகும்.   பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், திடீர் தொல்லைகள் ஏற்படும்.
உங்கள் ஜென்ம ராசியில் கேது சஞ்சாரம் செய்வதால்,மனதில் தேவையற்ற குழப்பங்கள் அதிகமாகும். காரணம் தெரியாத வீண்பயம் மனதில் இருக்கும். எப்போதும் முகத்தில் சோகம் குடிகொண்டிருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள் எல்லாம் அப்போதைய சூழ்நிலைக்கு பயனற்றதாக இருக்கும். உங்கள் உடல்நலத்திலும் கவனம் தேவை.   உங்கள் தாயாரின் உடல்நலத்திலும் கவனம் தேவை. தாய்வழி உறவினரகளுடன் கருத்து வேறுபாடுகளும் பகைமையும் ஏற்படும். சிலர் பெற்றோரைப் ப்ரிந்து வாழ வேண்டிவரும்.  தொழில் ரீதியாகவும் சில இடையூறுகள் ஏறப்டும். அதன்மூலம் மனசஞ்சலம் ஏற்பட்டு மன நிம்மதி கெடும்.
     மாணவர்கள் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிரத்தையுடன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் பெரிய புத்திசாலியாகவும் எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை படைத்தவராக இருந்தாலும் இந்த சமயத்தில் அவை எடுபடாமல் போகும். எடுக்கும் முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை ஏற்படும் காலம் இது. தொழி;லாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மின்சாரம், நெருப்பு ஆயுதம் இவைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மனதை ஒருமுகப்படுத்தி, ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டால், குருமார்களின் தரிசனம் , சாதுக்களின் நட்பு  பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உங்கள் கௌரவம் உயரும். புகழ், பாராட்டு கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகத் தொடர்புகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் அந்த தசாபுத்திகள் நடந்தால், ஜோதிடம், வைத்தியம், தியானம் யோகா போன்ற கலைகளில் ஈடுபாடு ஏற்படும். சனியும் சேர்ந்து சம்பந்தம் ஏற்பட்டால், மாந்த்ரீகம், ஹிப்னாட்டிசம் இவைகளில் ஆர்வம் ஏற்படும்.
உங்கள் செல்வாக்கு புகழ் இவைகளில் உங்கள் வாழ்க்கத் துணைக்கும் பங்கு கிடைக்கும். இருவரும் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவதால், சந்தோஷமும் வாழ்க்கையில் நிறைவும் ஏறப்டும். சிலருக்கு ,பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்காமல் போகலாம். ஒழுக்கக் குறைவால் எல்லோருக்கும் கேவலத்தை ஏற்படுத்தி சங்கடங்களை உண்டுபண்ணக்கூடும். பிள்ளைகள்மீது கவனம் செலுத்துவது மட்டுமின்றி அணுசரணையாக இருப்பதும் அவசியம்.  சகோதர வகையில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் விட்டுக்கொடுத்து நடந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு கை கொடுக்கும்.
ரிஷபம்:
வருகிற டிஸம்பர் 2-ம் தேதியன்று, ராகு துலா ராசீகும் கேது  மேஷ ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்துக்கும் கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்கும் சென்று அமர்கிறார்கள். அதன்மூலம் பொதுவாக உங்களுக்கு நற்பலன்களாகவே நிகழும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மேன்மையடையும். அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவார்கள். அவர்களால் நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். அதே நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏறப்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படும். நெருங்கிய நண்பர்கள்,  நெருங்கிய உறவினர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்.
எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. கோர்ட் கேஸ்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்புகளும் கிடைக்கும்.
உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும்  புதிய பொறுப்புகளும் கிடைக்கும். புத்தி சாதுரியம் அதிகரித்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடித்துவிடுவீர்கள் . அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்து, உங்களுக்கு மிகச் சிறப்பான பலன்களைக் கொடுக்கிறார். இது உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். விரயச் செலவுகள் குறையும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.  வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு இப்போது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சிலர் வெளிநாட்டுக்கு மகிழ்ச்சி சுற்றுலா சென்று வருவார்கள். குழந்தைகள் சம்பந்தமாக எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலர் காசி ராமேஸ்வரம் செல்வார்கள். சிலர் கடமைகள் அத்தனையும் முடித்துவிட்டு குடும்பப் பொறுப்புகளிலிருந்து  அமைதியாக ஒதுங்கி இருப்பார்கள். சிலர் ஏகாந்தமான மோன நிலைக்கு செல்வார்கள். ஞான நிலையும் சித்திக்கும். தியானத்தை மேற்கொள்வார்கள்.
கேதுபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தை தனது 3-ம் பார்வையால் பார்க்கிறார். அதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தின் தேவைகளைக் காலமறிந்து பூர்த்தி செய்து அவர்களுடைய மகிழ்ச்சியைப் பெறுக்குவீர்கள்.  உங்கள் செல்வாக்கும் புகழும் உயரும். கௌரவம் அந்தஸ்து மேன்மையடையும். தேவைக்கேற்றபடி வருமானம் கிடைக்கும். தொழிலில் மேன்மை ஏறப்டும். புதிய தொழிலும் அமையும்.
கன்னி:
         வருகிற டிஸம்பர் மாதம் 2-ம் தேதியன்று நிகழப்போகும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, ராகு உங்கள் ராசிக்கு 2-ம் இடமான துலாம் ராசியிலும், கேது உங்கள் ராசிக்கு 8-ம் இடமான மேஷத்திலும் சஞ்சரிக்கவுள்ளார்கள்.  ஜோதிட விதிப்படி, 2,8-ம் இடத்து சஞ்சாரம் உகந்ததல்ல என்றாலும், உங்கள் ராசிக்கு சாதகமாக குருபகவான் 9-ம் இடத்திலும், சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான துலாம் ராசியிலும் சஞ்சரிப்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். உச்ச சனியுடன் ராகுவும் சேர்ந்து சஞ்சரிப்பது ஒரு விஷேஷம். மேலும், துலாராசியின் திரிகோணாதிபதியான சனி பகவான், தான் நின்ற ராசிக்கு யோகத்தைக் கொடுப்பார். அதன்படி சனி 2-ம்  இடத்துக்கு நன்மை தருவார். அந்த சனியுடன் சேர்ந்த ராகுவும் நன்மையையே செய்வார்.  எனவே இங்கு கூறப்போகும்  ராகு கேதுவின் சஞ்சார பலன்களைப் படித்து  நீங்கள் பீதியுறவேண்டாம். அந்தந்த கிரகங்களுக்குரிய பலன்கள்தான் இங்கே கொடுக்கப்படுகின்றன. உங்கள் ராசிக்குரிய ராகு-கேதுக்களின் கடுமையான பலன்கள் மிகவும் குறைய வாய்ப்புள்ளது என்பதை மறக்கவேண்டாம். நன்மையைத் தரும் விதமாகவே குருவும் சனியும் அமைந்துள்ளதால், கெடுபலன்கள் மாறி நன்மைகள் நிகழ வாய்ப்புள்ளது. இனி பலன்களைப் பார்க்கலாம்.
  தற்போது துலா ராசியான 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானின் சஞ்சாரம் உங்களை குடும்பத்துக்காக அதிகம் உழைக்கச் செய்யும். குடும்பப் பொறுப்புகள் அதிகமாகும். சிலருக்கு குடும்பம் ஒரு சுமையாகத் தெரியும். குடும்பம் நடத்துவதே சிரமமாக இருக்கும்.  உங்களுக்கு ஏற்படும் டென்ஷன் அனைத்தும் உங்கள் வார்த்தைகளில் வெளிப்பட்டு, குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டியது மிகவும் அவசியம். வருமானக் குறைவு ஏற்படும். வருமானம் வரப்போகிறதே என்றெண்ணி எந்த செலவையும் திட்டமிட முடியாது.  எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேராது. எந்த வழியிலாவது உங்களுக்குப் பணம் வருமா என்றும் தெரியாது. பணப்பற்றாக்குறை காரணமாக  குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போகும். எனவே குடும்பத்தாரின் கோபத்துக்கு ஆளாக நேரும். திடீர் வருமானங்கள் வரும் என்றாலும், அந்த வருமானத்திற்கு தயாராக செலவுகள் காத்திருக்கும். எனவே உங்களுக்கு சேமிப்பு என்பதே இருக்காது.இந்தக் காலத்தில் சிலர் நேர்மையான வழியில் நடக்க முடியாமல் போகும். சில நேரங்களில் பொய் புரட்டுகளும் பித்தலாட்டங்களும் சிலருக்கு தவிர்க்க முடியாததாகிவிடும். பணத்தேவை தவிர்க்க முடியாததாகிவிடுவதால், , பணம் கிடைக்காத சூழ்நிலையில் சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிக்கப்படும். யாரிடமும் நாணயத்துடன் நடந்துகொள்ள முடியாது. அதன் காரணமாக கொடுக்கல்-வாங்கலில் சிக்கலான சூழ்நிலை ஏற்படும்.
ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். முக்கியமாக கண்களில் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. புதல்வர்களுக்கு சில தொல்லைகள் ஏற்படலாம். அவர்கள் தங்கள் கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் கடுமையாக போராட வேண்டியிருக்கும். கஷ்டங்கள் பல வந்தபோது, அவர்கள் கடுமையாகப் போராடி கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். சிலர் அடிக்கடி பயணம் மேற்கொள்வார்கள். அந்தப் பயணங்களால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் மிகுந்த மனவேறுபாடு தோன்றும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது எச்சரிக்கையுடன் பேசவேண்டியதும் விட்டுக்கொடுக்கவேண்டியதும் அவசியமாகிறது. இல்லையென்றால் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்து , சிலர் குடும்பத்தைவிட்டு தற்காலிகமாகப் பிரிய வேண்டி வரும்.
அரசுத் துறையிலோ அல்லது அதிகாரிகளாகவோ இருப்பவர்களில் சிலர் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்படுவதற்கோ அல்லது தண்டனை அனுபவிப்பதற்கோ வாய்ப்புண்டு. திருமண ஏற்பாடுகள் தடைப்பட நேரலாம். ஆனால் குருவின் சஞ்சாரம் குருபலம் கொடுத்து, நிலைமையை மாற்றக்கூடும்.எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடைப்படநேரும்போது, டென்ஷன் ஏற்படுவதால்,யாரிடமும் சுமுக சூழ்நிலை இருக்காது. யாரிடமும் வாக்குக் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம் மற்றவர் பிரச்சினைகளில்  குளறுபடிகளும் குதர்க்க வாதங்களும்  அதிகமாகும். இத்தனை பிரச்சினைகள் மலிந்திருந்தாலும் மற்றவர்கள் நலமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு மேலோங்கி இருக்கும். எதிர்பாராதவிதமாக ,சிலருக்கு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். புதிய தொழில் மற்றும் அதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படலாம். கடும் முயற்சியினால், குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சியை செய்து முடிப்பீர்கள்.
ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்ப்பதால், உங்கள் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படும். வீடு கட்டிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த கட்டடப் பணிகள் தடைப்படும்.வண்டி வாகனங்கள் ரிப்பேர் செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவை ஏற்படுத்தும். மேலும் ராகு பகவான் தனது 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தைப் பாப்பதால், விரயச் செலவும் அலைச்சல்களும் ஏற்படும். அதன்காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. தேவையற்ற செலவுகள் ஏற்படும். வருமானம் வரும் வழி தெரியாவிட்டாலும், செலவினங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தான தருமங்களில் நாட்டம் ஏற்படும். திடீர் பண வரவு கிடைத்தாலும் அது கையில் தங்காது. மனதை ஆன்மீக வழியில் செலுத்தினால் மட்டுமே நல்ல பலன்களை அடைய முடியும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். பயணங்களின்போது எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பல தொல்லைகள் உருவாகிவிடும். சிலர் அடுத்தவ்ர் பிரச்சினையில் தலையிட்டு அவர்கள் பிரச்சினை இவர்களையும் தொற்றிக்கொள்வதால், அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பார்கள். அடிக்கடி ஏதாவதொரு துக்க செய்தி வந்தவண்ணம் இருக்கும். அதன் காரணமாக மனதில் கலக்கங்களும் வேதனைகளும் நிறைந்திருக்கும். சொந்த பந்தங்களால், பொருள் இழப்பும், பகைகளும்  தேவையற்ற வம்புகளும் வந்து சேரும். சிலருக்கு உயிர்பயமும் ஏற்படும். .இதையெல்லாம் படித்து யாரும் பயப்படத் தேவையில்லை.சரியான பரிகாரங்களையும் தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டால்,கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு நடக்கும் தசா புத்தியையும் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும்  சனி-குருவின் சஞ்சாரங்களும் நன்மை செய்யும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
இந்தச் சமயத்தில் பொருளாதாரத் தட்டுப்பாடு அதிகம் ஆகும். சிலர் தங்கள் பூர்வீகச் சொத்தை விற்றோ அல்லது எதிர்பாதவிதமாகவோ பண வரவினைப் பெறக்கூடும். இந்த சமயத்தில் கூட்டுத் தொழில் முயற்சிகள் பலனளிக்காமல், கைப்பொருளையும் இழக்க நேரும். அதே சமயம் உங்கள் பணத்தை யாரிடமாவது கொடுத்து வைத்தால், அது திரும்ப கைக்கு வராது.
கேது பகவான், தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10 இடத்தைப் பார்க்கிறார். இதன் மூலம் தொழில் வியாபாரம் பாதிக்கப்படும். முதியவர்களுக்கு தொல்லைகள் ஏற்படும். அலுவலர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது குடும்பம் மற்றும் அலுவலகச் சூழ்நிலை உங்களுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தும். மேலும் கேது பகவான் தனது 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன்மூலம் சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். உங்கள் எதிரிகள் இயற்கையாகவே பாதிப்புக்குள்ளாவார்கள். உங்களுக்கு அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் உண்டாகும்.  விஷக்கடி ஏற்படலாம். பெண்களால் தொல்லைகளும்  பொருள் நஷ்டமும் ஏற்படும். மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் உண்டாகும். தொழிலில் மன அமைதி கெடும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். அவற்றால் எந்த லாபமும் இருக்காது. தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், குடும்பத்தில் மன அமைதி ஏற்படுவதுடன் மனைவி மக்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.
விருச்சிகம்:
  வருகிற டிஸம்பர் மாதம் 2ம் தேதி ஏற்படப்போகும் ராகு கேது பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
ராகுவின் 12ம் இடத்து சஞ்சாரம் உங்களுக்கு அதிக அலைச்சலையும் பயணங்களையும் கொடுக்கும். வேலைப்பளு கூடும். உறக்கம் குறையும். சிலர் குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்க நேரும். உங்ககளுடைய பயணங்கள் அனைத்தும் பெரும்பாலும் வியாபார சம்பந்தமாகவோ அல்லது உத்தியோக சம்பந்தமாகவோதான் இருக்கும். பூர்வீகச் சொத்து பிரச்சினைக்குள்ளாகி ,பிறகு நீங்கும். குழந்தைகள் வழியில் செலவுகள் ஏறப்டும். சிலருக்கு அரசாங்கத்தாலும் அரசு அதிகாரிகளாலும்  விரயச் செலவு ஏற்பட்டு மனக்கஷ்டங்கள் தோன்றும். மறைமுக எதிரிகளால் எப்போதும் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும் அவர்கள் எதிர்ப்பு உங்களை ஒன்றும் செய்ய முடியாது. பெண்கள் அளவுக்கு மீறிய செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால், பற்றாக்குறை ஏற்படும்.வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். உறக்கம் என்பது ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் ராசிக்கு குருபார்வை கிடைத்துள்ளதால், விரயத்தில் உள்ள ராகுபகவான், ஏதாவது ஒரு நல்ல காரியத்தை நடத்தி வைத்து, அதன்மூலம்  சுப விரயச் செலவுகளை ஏற்படுத்துவார்.
     ராகு பகவான் தனது 11ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தைப் பார்ப்பதால், தொழில் ரீதியாக சில பின்னடைவுகள் ஏற்படும். உற்பத்திப்பொருட்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடக்கும். உங்களிடம் கடன் பெற்ற வியாபாரிகளிடமிருந்து பணம் திரும்பக் கைக்கு வராது. ராகுபகவான் தனது  3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தைப் பார்ப்பதால், உங்களால் நாணயத்துடன் நடந்துகொள்ளமுடியாமல் போகும். அது மட்டுமின்றி உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிப்படையும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்பட்டு மறையும். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் இல்லாமல் போகும். வார்த்தைகளில் சிடுசிடுப்பு இருக்கும். கண்கள் சம்பந்தமான நோய் ஏற்படும். தேவையில்லாத அபவாதம் ஏற்படும். மேலதிகாரிகள்ன் கோபத்துக்கு ஆளாகலாம். கணவன்-மணைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. புத்திர-புத்திரிகளின் போக்கு மனதுக்கு கவலையளிக்கும்.
        கேது பகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தின்மூலம் நற்பலன்களாக நிகழும். உங்கள் ராசிக்கு குரு பகவானின் நற்பலன்களும் கூடுவதால், ராகுவின் தீய பலன்கள் பெருமளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. கேதுவின் சஞ்சாரம் தக்க முறையில் தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த போட்டியாளர்களையும் எதிரிகளையும் அழிக்கும். பழைய கடன்கள் அடையும். அதே சமயம் தொழிலைப் பெருக்க எதிர்பார்த்த புதிய கடனுதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் பண வரவு கிடைக்கும். சிலர் நூதனமான பொருள் விற்பனை மூலம் நல்ல லாபம் காண்பார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நோயிலிருந்து விடுபடுவீர்கள். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. உங்கள் செல்வாக்கு உயரும். தாராள பணப்புழக்கம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல நிலைமை ஏறப்டும். எடுக்கும் காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் உங்கள் புதிசாலித்தனத்தின்மூலம் வெற்றியடைவீர்கள். அரசியல்வாதிகள் , பத்திரிக்கையாளர்கள் ,மக்கள் பணி புரிபவர்கள் ஆகியோர்  மேன்மையடைவார்கள். புதிய பட்டம் பதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வளர்ச்சி காண்பீர்கள். சேவைத் துறையில் உள்ளவர்கள் மேன்மையடைவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களில் இதுவரை நிலவிவந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி, இப்போது சுப கார்யங்கள் நடந்தேறும்.
அரசியலில் இருப்பவர்கள் பிரபலமாகும் வாய்ப்புள்ளது. கேது பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தை தனது 3ம் பார்வையால் பார்ப்பதால், இதுவரை தொல்லை கொடுத்து வந்த பிரச்சினைகள் யாவும் அமுங்கிப்போகும். வேலைப்பளு அதிகமாகும். ஆனால் அதற்கேற்ற வருமானமும் இருக்கும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தைப் பார்வையிடுவ்தால் தாயாரின் உடல்நலம் சிறக்கும். தாய்வழி உறவினர்கன் உதவி கிட்டும். சிலர் புதிய வண்டி வாகனத்தை வாங்குவார்கள். சிலர் வீடு மனை வாங்குவார்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். பூர்வீகச்சொத்து மேன்மையடையும். கேதுபகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தால், மனதிற்குள் அசாத்திய துணிச்சல் ஏற்படும். மிகவும் சுறுசுறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டு வெற்றியை அடைவார்கள். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். ராகுவின் கெடு பலன்கள் குறையும்.
மீனம்:
வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி ராகு பகவான் துலாம் ராசியிலும் கேதுபகவான்  மேஷ ராசியிலும்  சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன்மூலம் ராகு பக்வான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும், கேதுபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இவற்றை நல்ல சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. இனி இவற்றால் உண்டாகப்போகும் பலன்களைக் காணலாம்.
8-ம் இடத்தில் உள்ள ராகுவின் சஞ்சாரம் எதிர்பாராத நிகழ்வுகளை ஏற்படுத்தும். எதிர்பாராத நிகழ்வுகள் என்று குறிப்பிட்டதன்மூலம் தீய பலன்கள் மட்டுமின்றி  சில நல்ல பலன்களையும் எதிர்பார்க்கலாம். ராகு தனது 3-ம் பார்வையால், 10-ம் இடத்தைப் பார்ப்பதால், சிலர் உத்தியோகம், வியாபாரம், தொழில் சம்பந்தமாக திடீரென்று வேறு ஊர்களில்  வேறு இடங்களுக்கு  மாறிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிலர் தங்கள் வசிப்பிடங்கலையும் மாற்றிக்கொண்டிருப்பார்கல். வீடு குடி மாறுவார்கள். சியல்ருக்கு எதிர்பாராத சொத்து சுகங்கள் கியடிக்கும். சிலருக்கு ஷேர்மார்க்கெட்டில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். இருப்பினும் அதையே நம்பி வாழ்க்கையை ஓட்டிவிட முடியாது. பயணங்களின்போது 8-ம் வீட்டில் உள்ள ராகு சில எதிர்பாராத நிகழ்ச்சிகளை நடத்திவிட வாய்ப்புண்டு. அதனால் பயணங்களின்போது கவனம் தேவை. பயணங்களின்போது எடுத்துச் செல்லும் பொருள்கள் திருட்டுப்போகும் நிலயும் ஏறப்டலாம்.  சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் போலீஸ். கோர்ட், தண்டனை என்று அல்லல்படுவார்கள். வியாபாரிகள் கணக்குவழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அரசாங்கத்தால் தொல்லை ஏறப்டும். அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளால் பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்கள் கையூட்டுப் பெறுவதை தவிர்ர்க்கவில்லையென்றால், காவல்துறையிடம் சிக்கி சிறை செல்வார்கள். அவமானப்பட நேரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புண்டாகும் யோகம் வரும். அதுபோல சிலருக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும்.  இந்தக் காலத்தில் யாருக்காகவும் ஜாமீனுக்குப் போகவேண்டாம். அதில் நீங்கள் சிக்கிக்கொண்டு துன்பப்படநேரும். வரவு செலவுகளும் உங்களைக் கவிழ்த்துவிட்டுவிடும் நாணயம் தவறிப்போவீர்கள். பணத்தைப் பிறரிடம் கொடுத்துவைத்தால் ஏமாற்றப்படுவீர்கள். தானாகக் கிடைக்காத விஷயத்தை பணம் கொடுத்து சாதித்துக்கொள்ளவேண்டாம். சிக்கல் ஏற்படும். காரியமும் நிறைவேறாமல், செலவழித்த பணமும் கைவிட்டுப் போய், லஞ்சம் கொடுத்ததற்கான தணடனையும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சம்பந்தமாக சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். எடுத்த காரியங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். மனதில் குழப்பம் இருக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் தொல்லை ஏற்படும்.. ஆரோக்கியம் பாதிப்படையும். மறைந்திருக்கும் எதிரிகளால் அவ்வப்போது தொல்லைகள் ஏற்படும். ஆனால், அவர்களால் உங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது. பொதுவாக இந்த ராகு பெயர்ச்சி பண விரயம், எதிகளால் தொல்லை,அலைச்சலகள் தீய நட்பு, பெண்களால் அவமானங்கள் என்று ஏற்படும்.
இனி கேதுபகவானின் 2-ம் இட சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பது பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும். தொழில் மந்த கதியை அடையும். வருமானம் குறையும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் ஏற்படும். அவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பெரிய சிரமம் உண்டாகும். கொஞ்சம்  வருமானம் வந்தாலும்  பின்னாலேயே செலவும் வந்து நிற்கும். அவசிய செலவுகளை மட்டும் பிரித்துக்கொள்ளாவிட்டால், கடன்படவேண்டியிருக்கும்.  மாணவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். கவனம் கல்வியில் செல்லாது. நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தாருடன் நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட பூர்த்திசெய்யமுடியாமல் போகும். அதனால், குடும்பத்தாரின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவதால், உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிகக்ப்படும். சிலருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும். மனதில் விரக்தி ஏற்படும். சிலர் மன அமைதிக்காக வேதாந்த விஷயங்களில் மூழ்குவார்கள்.
கேது பகவான் தன்னுடைய 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தையும், தன்னுடைய 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தையும் பார்வையிடுகிறார். உங்கள் தாயாரின் உடல்நலம் பாதிகக்ப்படும். சிலருக்கு வீடு, மனை நிலம் சம்பந்தமான விரயச் செலவுகளும் , தேவையற்ற வம்பு வழக்குகளும் ஏற்படக்கூடும். வண்டிவாகனங்களில் விரயச் செலவுகள், வணடி வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவுகள் ஏற்படுதல் போன்ற நிலைகளை உருவாக்கலாம். தொழில் வியாபாரத்தில் உங்களது கவனம் செல்லாது. மனநிம்மதி இருக்காது. பொருள் வீணாக செலவழியுமே தவிர உருப்படியாக எதையும் செய்ய முடியாது.  வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடையும் தாமதங்களும் ஏற்படும். சுப காரியங்களை கடன்பட்டுச் செய்யவேண்டியிருக்கும். அந்தக் கடன் உங்களுக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். முடிந்தவரைஎல்லோரையும் அனுசரித்துக்கொள்ளமாட்டீர்கள். அதனால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பீர்கள். அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்று விடுவார்கள்.சிலர் சொந்தபந்தங்களைவிட்டுப் பிரிந்துவிடுவார்கள். சிலருக்கு உறவும் பகையாகும். நண்பர்களும் பிரிந்து விடுவார்கள். அயலாரிடம் இருந்துகூட உதவிகள் கிடைக்கலாம்;ஆனால், சொந்த பந்தங்களிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காது.

No comments:

Post a Comment