jaga flash news

Saturday 16 January 2021

பாக்யசாலியாக மாற்றும் 'வருத்தினி ஏகாதசி' விரத மகிமை...

பாக்யசாலியாக மாற்றும் 'வருத்தினி ஏகாதசி' விரத மகிமை...

'வருத்தினி ஏகாதசி' விரத மகிமை ...

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 
'வைஷாக மாதம்', (April / May )  தேய்  பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "வருத்தினி  ஏகாதசி" (Varuthini Ekadasi)  என்று அழைக்கப்   படுகின்றது. 

வருத்தினி ஏகாதசி பற்றி 'பவிஷ்ய உத்தர புராண' விளக்கம்: 
ஸ்ரீ கிருஷ்ணரிடம், யுதிஷ்டிர மஹராஜ் கேட்கிறார்...ஹே, ஸ்ரீ கிருஷ்ணா,  வைஷாக  மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விவரியுங்கள் என்று கேட்கிறார். 

ஸ்ரீ கிருஷ்ணர்  கூறுகிறார்; ஓ அரசர்களில் சிறந்தவனே, 
வைஷாக மாத தேய் பிறையில்  வரும் ஏகாதசி 'வருத்தினி ஏகாதசி' என்று அழைக்கப்படும். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் இந்த ஜென்மம் மட்டுமல்லாது அடுத்த ஜென்மாவிலும் சகல சௌபாக்கியங்களையும் பெறுவர். இதனை கடைபிடிக்கும் ஒரு துர்பாக்யசாலியான மனைவி கூட, மிகுந்த பாக்யசாலி மனைவியாக மாறுவாள்.  அதன் மகிமையை நான்  உனக்கு கூறுகிறேன் கேள் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான்  கூறியதை நாம் இங்கு விவரிக்கின்றோம்... 

இந்த ஏகாதசி விரதத்தினை  முறையாக கடைபிடிப்பவர்கள் அனைவரும், தான் செய்த  அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவர், இக வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களையும் பெறுவர், அதன் பின்பு மோக்ஷத்தை அடைவர்.

இந்த ஏகாதசி விரதத்தை முறையாகக்  கடைபிடித்த "மந்ததா"  எனும் அரசன், தான் செய்த அனைத்து பாவங்களிலும் இருந்து விடுபட்டு முக்தி பெற்றான். சாபத்தின் காரணமாக தொழுநோயைப் பெற்ற, 'இக்ஷவாகு' குலத்தைச் சேர்ந்த  மஹாராஜா 'துந்துமாரா' இந்த வருத்தினி ஏகாதசி விரதத்தைக் கடைபிடித்து தனது சாபம் நீங்கப்பெற்றான். 

பல நூறு ஆண்டுகள் , தவம் செய்து பெரும் புண்ய பலனை, இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் பெற முடியும். தானங்களில் உயர்ந்த குதிரைகளை வழங்குதல், அதனினும் உயர்ந்த யானைகளை வழங்குதல், அதனினும் உயர்ந்த பூமியை வழங்குதல், அதனினும் உயர்ந்த 'பொன்' (தங்கம்) வழங்குதல், அதனினும் உயர்ந்த 'எள்' தானம் வழங்குதல், இவை யாவும் சிறந்தவை.  

இருப்பினும், இவை எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக, அனைவருக்கும் உணவளித்தல் உள்ளது. ஆம், அன்னதானத்தின் மூலம் மேற்கூறிய எல்லா புண்யங்களையும் விட அதிக புண்யத்தைப் பெற முடியும். அதற்கு நிகராக, பசுக்களை தானம் வழங்குவதன் மூலமும் பெற முடியும். மற்றும் ஒருவருக்கு 'ஞானத்தை தானம்' வழங்குதலும் குறிப்பிடப்படுகிறது. ஆம், 'கல்வி தானம்' எனப்படும் 'வித்யா தானம்'. 
இத்தகைய, அனைத்து உயர்ந்த தானங்களை பிறருக்கு வழங்கி நாம் பெறக்கூடிய புண்யபலனை, இவ்வாறு தானம் செய்ய வாய்ப்பில்லாதவர்கள், இந்த 'வருத்தினி ஏகாதசி' விரதத்தைக் கடை பிடிப்பதன் மூலம் பெற முடியும். 

மேலும் ஒருவர் தனது புத்திரிக்கு (மகள்), விவாகம் செய்து வைக்கும் பொழுது, திருமணத்திற்கு ஈடாக, எந்த ஒரு பொன் அல்லது பொருளையும்,  மணமகனிடம் இருந்தோ, அவர்கள் குடும்பத்தாரிடம் இருந்தோ பெற்றுக் கொண்டு, செய்யக்கூடாது. (மகளுக்கு திருமணம் செய்யும் பொழுது அவ்வாறு மணமகன் இல்லத்தில் இருந்து தானமாக வாங்கிக்கொண்டு செய்வது, மகளின் தந்தைக்கு மிகப்பெரிய பாவத்தை சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.)
விவாகத்தின் பொழுது, தந்தை தனது மகளுக்கு  தன்னால் முடிந்த / இயன்ற அளவு அணிகலன்களை அணிவிக்கலாம் அல்லது ஏதும் அணிவிக்காமல் கூட இருக்கலாம். ஆனால், தனது மகளுக்கு ஈடாக பொன் அல்லது பொருள் பெற்றுக்கொண்டு திருமணம் செய்வது தான் பாவம் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு, ஒருவேளை தெரியாமல் ஒரு தவறு ஏற்பட்டிருப்பினும், அந்த பெண்ணின் தாய், தந்தையரும்  இந்த 'வருத்தினி ஏகாதசி'  விரதத்தை கடைபிடித்து தனது பாவத்தை போக்கி கொள்ளலாம். 

எவ்வாறு விரதம் இருப்பது ?
ஏகாதசி முதல் நாளன்று (தசமி திதியன்று) பித்தளை பாத்திரத்தில் (அ) தட்டில் சமைத்த (அ)  பரிமாறும்  எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. 
தேன் மற்றும் மாமிச உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. 
அன்று, உடலுறவை தவிர்க்க வேண்டும். 
அன்று, பக்தி உணர்வற்ற ஒருவரது இல்லத்திலோ அவ்வாறு எண்ணம் கொண்ட ஒருவரது  கைகளால் சமைக்கப்பட்ட  உணவை எடுத்துக் கொள்ளக்கூடாது . 

வருத்தினி ஏகாதசி அன்று:
காலையில் எழுந்து குளித்துவிட்டு, பகவான் நாமாவை ஜெபம் செய்ய வேண்டும்.
அன்று முழுவதும், உண்ணாமல் இருக்க வேண்டும்.
அன்று முழுவதும், சூதாட்டம் மற்ற தேவையற்ற விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும்.
அன்று, பகலில் உறக்கம் கூடாது.
அன்று, உடலுறவை தவிர்க்க வேண்டும். 
தலைக்கு அல்லது உடலுக்கு எண்ணெய் தேய்த்து கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டியவை. 
பிறரிடம் குற்றம் காண்பது, தேவையற்ற வதந்திகளை பரப்புவது, அடுத்த நபர்களை பற்றி வீண் வார்த்தைகள் பேசுவது, பிறரிடம் கோபம் கொள்வது மற்றும் பக்தியற்ற ஒருவரிடம் உரையாடுவது இவை அனைத்தையும் அன்று தவிர்க்க வேண்டும். 
மொத்தத்தில், இறை சிந்தனையுடன் மட்டும் இருக்கவேண்டும். 

துவாதசி திதி அன்று: (ஏகாதசிக்கு அடுத்த நாள்)
அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு, பகவான் விஷ்ணுவை வணங்கி விட்டு அதன் பின்னர் உணவு உண்ண வேண்டும். நாம் உணவு உண்ணும் முன், (வாய்ப்பு இருந்தால்) ஒரு அந்தணருக்கு தானம் அளித்து விட்டு அதன் பின்பு உண்ண வேண்டும். 

இவ்வாறு, இதன் பெருமைகளை யுதிஷ்டிரனிடம்  கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் கூறுகையில், ஓ  யுதிஷ்டிரா, இந்த 'வருத்தினி ஏகாதசி' விரத கதையினை படித்தவர்களும், கேட்டவர்களும் மற்றும் பிறருக்கு எடுத்துச் சொல்பவர்களும் மிகுந்த புண்ய பலனைப் பெறுகின்றனர். அவர்கள் 'கோ தானம்' செய்த புண்ய பலனைப்பெறுவர், என்று கூறினார். 

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'வருத்தினி ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  

No comments:

Post a Comment