jaga flash news

Saturday 16 January 2021

வாமன ஏகாதசி (அ) பார்ஸ்வ ஏகாதசி மகிமை - ஓணம் பண்டிகை புராண விளக்கம்

வாமன ஏகாதசி / பார்ஸ்வ ஏகாதசி / பரிவர்த்தினி ஏகாதசி 

இந்தக் கட்டுரையில் நாம்  காண இருப்பது...
வாமன ஏகாதசி மூலம் ஓணம் பண்டிகை வந்த புராண விளக்கம்...
கேரளா 'பலி' மஹாராஜா முக்திக்கு பிறகு, பகவான் விஷ்ணுவிடம் பெற்ற வரம் என்ன ?
பரிவர்த்தினி ஏகாதசி என்றால் என்ன ?

இந்த வருடம் பார்ஸ்வ / வாமன ஏகாதசி 29-08-2020, சனிக்கிழமை...
இந்த வருடம் திருவோணம் பண்டிகை 31-08-2020, திங்கட்கிழமை . 

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 

'பத்ரபாத' (Pathrabaadha) மாதம், (August / September)  வளர் பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பார்ஸ்வ ஏகாதசி" (அ) "வாமன ஏகாதசி" (அ) "பார்ஸ்வ பரிவர்த்தினி ஏகாதசி" (அ) "பத்ரபாத சுக்ல பட்ச  ஏகாதசி"   पारसवा एकादसी / वामन एकादशी } ( Parsva  Ekadasi / Vamana Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது. 

"வாமன ஏகாதசி" பற்றிய ப்ரம்ம வைவர்த்த புராண விளக்கம்:
பிரம்ம-வைவர்த்த புராணத்தில்ஸ்ரீ கிருஷ்ணர்  மற்றும் மஹாராஜா யுதிஷ்ட்ரர் இந்த நாளின் சிறப்பு பற்றியும், என்றும் அழியாத மகிமைகளைப் பற்றியும் விவாதிக்கின்றனர்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம், இந்த வாமன ஏகாதசி பற்றிய மகிமையை விளக்குங்கள் என்று, யுதிஷ்டிரர் கேட்கிறார்.    


ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...


ஸ்ரீ கிருஷ்ணர், "அரசர்களில் சிறந்த யுதிஷ்டிரா, இந்த நாளின் மகிமைகள் அளவிட முடியாதவை, இது மங்களகரமானது. இது ஒருவரின் எல்லா பாவங்களையும் அழித்து முக்தியை அளிக்கிறது. ஒருவரின் விருப்பத்தை பூர்த்தி செய்கிறது", என்று சொல்லி தொடங்குகிறார்.

இந்த ஏகாதசி அன்று பக்தியுடன் வாமன தேவரை வழி படுபவரை மூவுலக வாசிகளும் வணங்குவர். இந்த நாளில், ஸ்ரீ விஷ்ணுவை தாமரை மலர் கொண்டு வழி படுபவர், நிச்சயமாக பகவானின் பாதங்களை அடைவர்..


இந்த ஏகாதசி காலத்தில் தான், பகவான் ஸ்ரீ விஷ்ணு அவர்கள் வாமன தேவராக  தோன்றியதால் "வாமன ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது.

இது "பார்ஸ்வ பரிவர்த்தினி ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது... ( "பகவான் ஸ்ரீ விஷ்ணு தனது ஸயனத்தில் ஒரு புறத்தில் இருந்து மறு புறம் திரும்பும் கால கட்டம் இந்த ஏகாதசி தினம் தான்." [Changing Sides - ஸமஸ்க்ருதத்தில் "பரிவர்தினி" ])

{தற்போது நாம் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் "ஜாதகப் பரிவர்த்தனை" செய்து கொண்டனர் என்று சொல்கிறோமே அது போல Changing Sides}

மேலும், ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகையில்;
என் அன்பான யுதிஷ்டிரா, திரேதா-யுகத்தில் 'பலி மஹாராஜ்' என்று அழைக்கப்படும் ஒரு பெரிய பக்தர் இருந்தார், அவர் ஒரு அசுர குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பகவான் விஷ்ணுவை வணங்குவதில் மிக உயர்ந்த பக்தராக இருந்தார்.  அதன் மூலம் பகவான் விஷ்ணு மிகவும் திருப்தி அடைந்திருந்தார்.

பலி மஹராஜ், நல்ல முறையில் ஆட்சி செய்தும், பல பிராமணர்களை வணங்கி அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கியும், மற்ற அனைத்து மக்களுக்கும் தேவையான உதவி செய்தும், யாகங்கள் மற்றும் தான, தர்மங்களும்  செய்தார். இதனால், அவர் இந்திரனையே, தோற்கடிக்கும் வல்லமை பெற்று இந்திர லோகம், மற்றும்  பாதாள லோகத்தையும்  வென்றார்.

பின்னர் இந்திரன் மற்றும் சகல தேவர்கள் பகவான் ஸ்ரீ ஹரியை அணுகி, செய்த வேண்டுதலின் படியும், பலி மஹாராஜாவின் உண்மையான பக்தியினை பிறர் அறியச் செய்யும் பொருட்டும்,  பகவான் ஸ்ரீ விஷ்ணு ஒரு குள்ளமான (வாமனன்) வடிவ பிரம்மச்சாரியாக பலியின் யாக வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்றார்.

தசாவதாரத்தில் வாமன அவதாரமாக ஸ்ரீ விஷ்ணு:
பலி மஹாராஜா உலகையே தனது குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கில், அஸ்வமேத யாகம் தொடங்கி மிக சிறப்பாக நடத்தி வர, "பலி" யிடம்  வாமனதேவ ரூபத்தில் வந்த பகவான் ஸ்ரீ விஷ்ணு,  மூன்று அடிகள் நிலம் தானமாக கேட்டார். 

அதற்கு பலி சம்மதித்த உடன், வாமன தேவர் தனது உடலை மிகவும் பிரம்மாண்டமாக விரிக்கத் தொடங்கி, மூன்று அடிகளை வைக்கத்  தொடங்கினார்.  

அவரது முதல் அடியானது முழு பூமியையும் (உலகையும்) மறைக்கும் வண்ணம் அமைந்தது, இரண்டாவது அடியில், புவலோகம் அவரது தொடைகள் மூலமும், ஸ்வர்க்கலோகம் எனப்படும் இந்திரலோகம்  அவரது இடுப்பு பகுதி மூலமும், மகர லோகம் அவரது வயிற்று பகுதி மூலமும், ஜனலோகம் அவரது மார்பு பகுதி மூலமும், தப லோகம் அவரது கழுத்துப் பகுதி மூலமும், சத்யலோகம் அவரது முகத்தின் மூலமும் முழுவதுமாக மறைந்தது. 

பலி மஹாராஜாவிடம், இப்பொழுது, மூன்றாவது அடியை எந்த இடத்தில் (நிலத்தில்) வைக்க? என்று புன்னகையுடன் பகவான் ஸ்ரீ விஷ்ணு கேட்ட பொழுது பலி மஹாராஜா மிகவும் மகிழ்ச்சியுடன் , தனது தலையில் வைக்கும் படி கேட்டுக்கொண்டு, பகவானது பாதார விந்தங்களை சரண் அடைந்தார். 

இதனைக்கண்ட பகவான் ஸ்ரீ விஷ்ணு மிகவும் பரவசமடைந்தார். உடனே பலி மஹாராஜாவின் தலையில் கால் வைத்து, அவரை அப்படியே பாதாள லோகத்திற்குள் செல்லும் படி செய்து விட்டார். (நமது பூலோகத்திற்கு கீழ் உள்ள நாகர்கள் வாழும் பாதாள லோகம்) 

மூன்றாவது அடியை, பலியின் தலை மேல் வைத்து பலி மஹராஜ்-க்கு  முக்தி அளித்தார் ஸ்ரீ விஷ்ணு பகவான். இந்த நிகழ்வினாலேயே அவர் "மஹா பலி" அல்லது "மா பலி" என்று அழைக்கப்படுகின்றார்... 


இதன் பின்னர், வளர்பிறையின் போது நிகழ்ந்த இந்த ஏகாதசி நாளில் தான், பலி மன்னர் ஆட்சி புரிந்த இடத்தில் வாமன தேவரின் அழகிய திருவுருவ சிலை நிறுவப்பட்டது.
தற்பொழுது, ஸ்ரீ வாமன தேவர் திருக்கோவில்,  "ஸ்ரீ திருக்காகரை திருக்கோவில் என்ற பெயரில், கேரள மாநிலம், கொச்சியில் உள்ளது". திருச்சூர் - எர்ணாகுளம் செல்லும் சாலையில் 10 KM தொலைவில் உள்ளது. 

Editor's Note:

வாமன ஏகாதசியின் தாத்பர்யமாக இந்த 'சிறியவன் ' புரிந்து கொள்ள முயற்சிப்பது என்னவென்றால், பகவானிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து, மஹாராஜாவாக இருந்த போதிலும் இந்த மஹா பலி தனது தலையையே கொடுத்தது போல்...
நமது தலைக்கணத்தையும், நான் என்ற அகங்காரம்,  ஆணவம் ஆகியவற்றையும் பகவானிடம் பலியிட்டு வெறும் 60 - 70 வருட வாழ்க்கை வாழப்போகும் நாம் தலை, கால் புரியாமல் ஆடுவதை விட்டு, விட்டு வாழும் வரை அடுத்தவருக்கு நம்மால் முடிந்த சிறு உதவியை புரிந்து பகவான் அருள் பெற முயற்சிப்போமாக..... 


பலி மஹாராஜா முக்திக்கு பிறகு கேட்ட வரம் :

பலி மஹாராஜாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப, அவர் ஆட்சி புரிந்த மக்களையும் அங்கு பிரதிஷ்டை செய்த ஸ்ரீ விஷ்ணு-வை தரிசிப்பதற்காகவும் வருடம் தோறும் மஹா பலி வந்து பார்ப்பதற்கு ஸ்ரீ விஷ்ணு பகவான் ஆசி வழங்கினார். 
அதன் காரணமாகவே தற்பொழுதும் (கலியுகத்தில்) "ஓணம்" பண்டிகை கேரளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே தான், கேரள மக்கள் "மஹா பலியே" வருவதாக எண்ணி "திரு ஓணம்" பண்டிகையை மிகச் சிறப்பாக 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.. (ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை).

இதில் கடைசி நான்கு நாட்களை மிக விமரிசையாக கொண்டாடுவர்.  இந்த வருடம், (கடைசி நான்கு நாட்களில்)  முதல் நாள் ஓணம் 30-08-2020 அன்று ஆரம்பித்து 02-09-2020 அன்றுடன் நான்காவது  நாள் ஓணம் நிறைவு பெறுகிறது. 

31-08-2020 அன்று இரண்டாம் நாள் ஓணம், ஒட்டு மொத்த நாட்டு மக்களாலும் கொண்டாடப்படும் "திருவோணத்திருநாள்" திருவிழாவாக கொண்டாடப் படுகின்றது.  

அன்று கேரள மக்கள் 24 முதல் 28 வகை உணவு பதார்த்தங்கள் செய்து "வாமன தேவரை" நினைத்தும், "மஹா பலியை" நினைத்தும் மிக சிறப்பாக கொண்டாடுவார்கள்.  


அறிவோம் பல அரிய ஆன்மீக நிகழ்வுகளை... ஹரி ஓம்... 
மஹா பலி : - மஹா முனி  "காஷ்யப முனிவரின்" குலத்தோன்றலும், மஹா அசுரன் "ஹிரண்யகசிபுவின்" கொள்ளுப்பேரனும் மற்றும் மிகச் சிறந்த விஷ்ணு பக்தனான "ப்ரஹலாதனின்" பேரனும் ஆவார்...  


எவரொருவர்இந்நாளில் இந்த விரதத்தின்  மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை  கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது  பிறருக்குசொல்கிறாரோ அவர் அஸ்வமேத  யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீ கிருஷ்ணர், யுதிஷ்டிரனிடம் கூறினார்  என்று   "பிரம்ம வைவர்த்த புராணம்"  விவரிக்கின்றது.


ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'வாமன ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 
  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, தாமரை மலர் சாற்றி வழிபடலாம். 
  • (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...
  • இந்த ஏகாதசி மறுதினம் "வாமன துவாதசி" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் அன்னதானம் செய்வது மிகவும் புண்யமான விஷயம் ஆகும். மிகவும் எளிதாக சொல்லப்பட்ட விஷயம், உணவு தேவை உள்ள ஒரே ஒரு நபருக்கு (அல்லது உங்களால் முடிந்த அளவு நபர்களுக்கு) ஒரு தயிர்சாதம் வாங்கி கொடுத்தால் போதுமானது.  அதுவே அற்புத பலனைத்தரும். 
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலமும், அன்று பகவான் ஸ்ரீ ஹரி நினைவாகவே இருப்பதன் மூலமும், 'அஸ்வமேத யாகம்' செய்த புண்ணியம் பெறுகிறார்கள்

No comments:

Post a Comment