jaga flash news

Saturday 16 January 2021

அக்னிஸ்தோமா' யாகம் செய்த பலன் கொடுக்கும் ஜெய ஏகாதசி...

அக்னிஸ்தோமா' யாகம் செய்த பலன் கொடுக்கும் ஜெய ஏகாதசி...

பைமி ஏகாதசி / ஜெய ஏகாதசி...

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 

'மக' மாதம், (மகர / மக மாதம்- Makara  - January  / February) வளர் பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "பைம ஏகாதசி அல்லது ஜெய ஏகாதசி" (Bhaimi Ekadasi / Jaya Ekadasi ) என்று   அழைக்கப் படுகின்றது.  

பைமி ஏகாதசி / ஜெய ஏகாதசி பற்றி 'பவிஷ்ய-உத்தர' புராண விளக்கம்: 
யுதிர்ஷ்ட மஹராஜா, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்கிறார், 'ஓ பகவானே, மக மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி 'திலா ஏகாதசி' என்றும் அதன் பெருமைகளையும் கூறினீர்கள், ஓ வாசுதேவா, அதே மக மாதத்தில் 'சுக்ல பட்சத்தில்' வரக்கூடிய 'ஏகாதசி'யின் பெயரையும் அதன் பெருமைகளையும் பற்றி கூறுங்கள் என்று கேட்கிறார்...

ஓ யுதிர்ஷ்டிர மஹராஜ், 
செய்த பாவங்களையும் / பெற்ற சாபங்களையும் மிக விரைவாக நிவர்த்தி செய்யும், மக மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும்  'ஜெய ஏகாதசி' பற்றி விரிவாக கூறுகிறேன் கேள் என்று கிருஷ்ண பகவான் கூறியதை, நாம் இங்கு விவரிக்கிறோம்.

முன்பொரு காலத்தில், இந்திர லோகத்தில், பாரிஜாத மலர்கள் நிறைந்த நந்தனம் எனும் வனத்தில், பல லட்சம் பணிப்பெண்களுடன், பல ஆயிரம் 'அப்சரஸ்' எனும் அழகிய தேவதைகளும் மற்றும் பல இசைக்கலைஞர்களும் இந்திரனை ஆடல், பாடல் மூலம் மகிழ்வித்து கொண்டிருந்தனர். 'சித்ரசேனா' எனும் இந்திரனின் தலைமை இசை வித்தகர் தலைமையில், அனைத்து பாடல் இசை கலைஞர்களையும் 'புஷ்பதந்தா' என்பவர் மேற்பார்வை செய்தார். சித்ரசேனா-வின் மனைவி 'மாலினி' யும் அவர்களது அழகிய மகன் 'மல்யவான்' அனைத்து  ஆடல், பாடல் நிகழ்ச்சியினையும் ரசித்துக்கொண்டிருந்தனர். 

அப்பொழுது, அப்சரஸ்களில் மிக, மிக அழகிய புருவங்களைக் கொண்ட, தாமரை மலர் போன்ற கண்களைக் கொண்ட, கண்கவரும் அணிகலன்களையும் அணிந்திருந்த, காண்போர்  அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகினைக் கொண்ட 'புஷ்பவதி' எனும் அப்சரஸைக் கண்டவுடனே 'மல்யவான்' தனது மனதை பறிகொடுத்தான். அதே போல 'மல்யவான்' அழகில் புஷ்பவதியும் மயங்கி, தான் பாடிக்கொண்டிருந்த பாடலிலும், ஆடலிலும் தவறிழைக்கத் தொடங்கினாள். 

'புஷ்பவதியின்' ஸ்ருதி விலகிய பாடலும், தாளம் தப்பிய நடனமும் அத்தனை பேர் நடுவிலும் தனியாகத்  தெரியும் அளவுக்கு இருந்த காரணத்தால், இந்திரனுக்கும் அந்த தவறு தெரிந்து அவன் புஷ்பவதியை நோக்கும் பொழுது, புஷ்பவதி, மல்யவானை நோக்கி கொண்டே ஆடல், பாடலில் தவறிழைப்பதையும் மல்யவானும் அவளையே ரசித்து கொண்டிருப்பதையும் கண்டு இருவர் மீதும்   கடுங்கோபம் கொண்டு இருவரும் 'பிசாசாக மாறக்கடவது' என்று சாபம் கொடுத்தார்.

இருவரும், எவ்வளவோ மன்றாடி கேட்டும், இந்திரன் தான் கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது என்று கூறவும், வேறு வழியின்றி இருவரும் 'பிசாசு' உருவோடு ஹிமாலய மலைக்கு அருகில் உள்ள ஒரு குகைக்கு வந்தனர்.  இருவரது அழகான உருவமும் இப்பொழுது இல்லை. சாபத்தின் காரணமாக அவர்கள் இருவரும் மிகுந்த மன வேதனை அடைந்தனர்.  அதனால், அவர்களுக்கு எதுவும் உண்ண தோன்றவில்லை. தான் செய்த தவறை எண்ணி வருந்தி இனி எந்த தவறும் செய்யக்கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டே அரச மரத்தடியில் அமர்ந்து பொழுதை கழித்தனர். மேலும் அன்று இரவு அவர்கள் உறங்கவும் இல்லை. 

ஆனால், அவர்கள் முன்பு செய்திருந்த புண்ணியம் காரணமாக, அவர்களை அறியாமலே உண்ணாமல் (விரதம்) இருந்த அந்த நாள் 'மக' மாத சுக்ல பட்ச 'ஜெய ஏகாதசி' ஆகும். 

அதனால், அடுத்த நாள் காலை, அவர்களை கூட்டி செல்ல ஒரு அழகிய விமானம் வந்து நின்றது. மேலும், அவர்கள் இருவரும், முன்பிருந்த அதே அழகிய உருவினையும் / விலை உயர்ந்த ஆடை , அணிகலன்களையும் பெற்றனர். இருவருக்கும் இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. 

அப்பொழுது வானில், ஒரு அசரீரி கேட்டது, நீங்கள் இருவரும் உங்களுக்கு தெரியாமலே / நீங்கள் அறியாமலே, எனக்கு மிகவும் ப்ரியமான 'ஜெய ஏகாதசி' விரதத்தை பின்பற்றி முழு விரதம் இருந்து, நீர் கூட அருந்தாமல் இருந்து, முழு இரவும் உறங்காமல் இருந்ததன் காரணமாக நீங்கள் மிகுந்த புண்ணியத்தைப் பெற்றீர்கள். அதன் காரணமாக உங்களது  சாபமும் நீங்கப்பெற்றது, நீங்கள் மீண்டும் இந்திரலோகம் செல்லலாம் என்று கூறியது. இதனைக் கேட்ட இருவரும் மிகுந்த  மகிழ்ச்சியுற்றனர்.  மகிழ்வுடன்,  மீண்டும் இந்திர லோகம் சென்றனர் . 

இந்திர லோகம் சென்று, இருவரும் முழுப்  பொலிவுடன்  இந்திரனை வணங்கி நிற்க, இவர்களைக் கண்ட இந்திரன்  ஆச்சர்யத்தில், இது எப்படி சாத்தியம்? நான் கொடுத்த சாபம் எப்படி விலகியது ? என்ன நேர்ந்தது என்று கேட்டார்? இருவரும், 'ஜெய ஏகாதசி' விரத மகிமையை கூறி, அதனாலேயே ஒரே நாளில் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றதாக கூறவும்,  இந்திரன், நீங்கள் இருவரும் பகவான் விஷ்ணுவையே மனம் குளிரச்செய்து விட்டீர்கள். அதனால், நீங்கள் இருவருமே வணங்கப்பட வேண்டியவர்கள் தான் என்று கூறி அவர்கள் இருவரையும் வணங்கினான். 

இவ்வாறு, 'ஜெய ஏகாதசி'யின் பெருமைகளைக் கூறிய  ஸ்ரீ கிருஷ்ண பகவான், மேலும் கூறுகையில், இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள், இந்த விரத பலனை படிப்பவர்கள் மற்றும் விரத பலனை பிறருக்கு தெரியப்படுத்துபவர்கள், என அனைவரும் 'அக்னிஸ்தோமா' எனும் யாகத்தை செய்த பலனைப் பெறுவார்கள் என்று கூறுகிறார்.   

'அக்னிஸ்தோமா' யாகம் எனும் 'ஸோம யாகம்' :
'அக்னிஸ்தோமா' யாகம் என்பது 'ஸோம யாகம்' என்பதாகும். 16 பண்டிதர்களைக் கொண்டும், ரிக், யஜுர், ஸாம வேத மந்திரங்களைக்கொண்டும், 'ஸோம பானம்' கொண்டும் செய்ய வேண்டிய, மனிதர்களின் வேண்டுதலை  கடவுளுக்கு அருகாமையில் கொண்டு செல்ல உகந்த யாகம் ஆகும். இங்கு, ஒரு முக்கியமான விஷயம் குறிப்பிட வேண்டியுள்ளது, 'ஸோம பானம்' என்றால், மது வகை (Liquor) என்று சமீப கால மேற்கத்திய சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் சிலராலும், தற்போதைய நவீன(?!) திரைப்படங்களிலும் கையாளப்பட்டது தான். 'ஸோம' என்பது புராணங்களில் பல பதங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவற்றில் ஒன்று 'ஸோம' என்றால் சந்திரன் அல்லது திங்கள்கிழமை. 

உண்மையில், வேதங்களில் ஸோம யாகத்திற்கு பயன்படுத்த கூடிய 'ஸோம ரசம்' என்பது 'ஸோம' எனும் ஒரு 'கொடி வகை தாவரத்தில்' இருந்து எடுக்கப்படக் கூடிய  'தாவரச்சாறு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   மேலும் அது உடலுக்கு நலம் பயக்கக்கூடிய சாறு மட்டுமே தவிர, மது வகை அல்ல. இதனை பயன்படுத்தி செய்யப்படும் யாகமானது அந்த யாகத்தை செய்தவர்களுக்கு  மிகுந்த பலனையும் / செல்வத்தையும்  அளித்துள்ளது... வேத காலத்திலேயே அந்த தாவரம் அரிதாக இருந்த காரணத்தால், அந்த கால கட்டத்திலேயே ஒருசில மாற்று தாவரங்களும் இந்த யாகம் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில், அப்பேற்பட்ட அரிதான யாகம் செய்த பலனை இந்த 'ஜெய ஏகாதசி' விரதம் இருந்தே நாம் எளிதாக பெறுவோம். 


ஆகவே, நமது சாபங்கள் விரைவாக நீங்கவும் (நமக்கு தெரியாமல் வேறு யாராவது நமக்கு கொடுத்திருப்பினும்)  மற்றும் நாம் செய்த பாவங்களை நீக்கும், சிறப்புகளும் கொண்ட இந்த 'ஜெய ஏகாதசி / பைமி ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அருகில் உள்ள பெருமாள் கோவில் சென்று பெருமாளை ஸேவிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் மற்றும் சந்தனம்  கொண்டு  பெருமாளை வழிபடலாம். 
  • இவை எல்லாவற்றையுமோ அல்லது முடிந்த ஏதேனும் ஒன்றையோ செய்யலாம். இதில் எதுவுமே முடியவில்லை என்றால், இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'அக்னிஸ்தோமா' எனும் 'ஸோம யாகம்' செய்த புண்ணியம் பெறுகிறார்கள்

No comments:

Post a Comment