jaga flash news

Saturday 16 January 2021

பித்ரு தோஷம் நீக்க ஒரு அரிய வாய்ப்பு - 'யம தீபம்' ...

யம தீபம் என்றால் என்ன ?
யார், யாரெல்லாம் ஏற்ற வேண்டும் ?
எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் ?
எப்படி ஏற்ற வேண்டும் ?
அதனால் என்ன நன்மை ?



உலகிலேயே நமது சனாதன தர்மம் (ஹிந்து சாஸ்திரம்) மட்டும் தான் உயிர் பிரிவதை கூட மிகவும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.  நல்ல முறையில் அந்த ஆன்மா தனது கர்ம பலனுக்கு ஏற்ப மறுபிறவி எடுப்பதையும் அல்லது இறைவனின் பரமபத வாசலை (மீண்டும் பிறவா நிலை) அடைவதை பற்றியும் சொல்கிறது...


யம தீபம் என்றால் என்ன ?
நரக சதுர்த்திக்கு முன்பாக (தீபாவளிக்கு முன்பாக) வரக்கூடிய திரயோதசி திதியில், (திரயோதசி திதி முடியும் நேரம், சதுர்த்தி தொடங்கும் நேரம்...)

நமது குடும்பத்தில் அல்லது தெரிந்த / நெருங்கிய உறவினர் குடும்பத்தில் ஏதேனும் துர்மரணம் நிகழ்ந்திருந்தால், (எப்போதாவது) அந்த ஆன்மா முக்தியடைய வேண்டியும், அது போன்ற சம்பவங்கள் முடிந்து விட்டது, இனி எப்பொழுதும் நல்ல விஷயங்களே நடக்கட்டும் என்றும் / நடக்க வேண்டியும் 'யம தர்ம ராஜனை' மனதார வேண்டி ஏற்றப்படும் தீபமே "யம தீபம்" ஆகும். 


ஒருவேளை பகவான் அனுக்ரஹத்தில் நமது குடும்பத்திலோ அல்லது நமக்கு தெரிந்தவர்கள் குடும்பத்திலோ அவ்வாறு எந்த ஒரு நிகழ்வும் இல்லையெனினும் அதே நிலை தொடர வேண்டியும்  இந்த 'யம தீபம்' ஏற்றலாம்.. ஏனெனில் இந்த ஒரு நாள் மட்டும் தான் நாம் 'யம தர்ம ராஜனுக்கென்று' ஒரு விளக்கை ஏற்றி வைக்க முடியும். ஆகவே அனைவரும் ஏற்றலாம்.


யம தீபம் ஏற்றும் முறை:

சாதாரண நாட்களில் நாம் தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றவே கூடாது.

இந்த இடத்தில், மற்றுமொரு முக்கியமான விஷயத்தையும் பதிவு செய்ய நினைக்கின்றோம். நமது இல்லங்களில் குழந்தைகள், சிறுவர்கள் (அ) விவரம் அறியாதவர்கள் (35 வயது / 40 வயது குழந்தைகள் என்று கூறலாம்) ஒரு சில விஷயங்களை செய்யும் பொழுது பெற்றோர்கள் (அ) பெரியவர்கள்  அப்படி செய்யக்கூடாது என்று கண்டிப்பர். ஏன் அப்படி செய்யக்கூடாது என்று அவர்கள் திரும்பக்கேட்டால் பலரும் அதற்கு முறையான விளக்கம் கொடுக்காமல் செய்யக்கூடாது என்றால் செய்யக்கூடாது, அவ்வளவு தான் என்று அவர்களை அடக்கி விடுவார்கள். (அவர்களுக்கு விளக்கம் தெரிந்தும் இருக்கலாம் (அ) ஒரு சில நேரங்களில் விளக்கம் தெரியாமலும் இருக்கலாம்).

உதாரணத்திற்கு, பெண்கள் தலை விரி கோலமாக இருக்கக்கூடாது, பெண்கள் நெற்றியில் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது, என்பது போன்றவை... ஆனால், இன்று 'நாகரிகம்' (Modern Trend) என்ற பெயரில் நமது ஹிந்து கலாச்சாரம் முற்றிலும் 'மிகவும் திட்டமிடப்பட்டு' அழிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிறியவனின் தாழ்மையான வேண்டுகோள், இது போல சில விஷயங்களை செய்யும் பொழுது உங்கள் குழந்தைகளுக்கு (அது 35 வயது குழந்தையாக கூட இருக்கலாம், ஆம், விவரம் தெரிந்தும், புரியாதவர்களை அப்படி தானே அழைக்க முடியும்...??!!) ஒரு முறை அவர்கள் மனதில் பதியும் வண்ணம் தெளிவாக எடுத்து சொல்லுங்கள். இவையெல்லாம், ஒருவர் இறந்த வீடுகளில் மட்டுமே செய்யக்கூடிய நிகழ்வுகள், அதனை சாதாரணமாக இருக்கும் வீடுகளில் / சாதாரண நாள்களில் செய்தால் என்ன அர்த்தம் ??? அனர்த்தம் அல்லவா ??? நீங்களே யம தர்ம ராஜனை அழைப்பது போல் ஆகி விடாதா ??? 

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விஷயத்திற்கும் அறிவியல் பூர்வ விளக்கம் உள்ளது. இது பற்றி மிக நீண்ண்ண்ண்ட பதிவு (அறிவியல் பூர்வ விளக்கத்துடன்) இக்காலத்திற்கு தேவையாக உள்ளது.
இன்று நேரம் போதாது. ஆகவே, அதனை வேறு ஒரு நாளில் விரிவாக காண்போம். (உங்களது கருத்துக்களை / தேவையை பொறுத்து அதனை பதிவிடுவோம்...உங்கள் கருத்துக்களை கீழே உள்ள 'Comments' பகுதியில் பதிவிடுங்கள்...)

மேலே கூறியவை அனைத்தும் 'யம தர்ம ராஜனுடன்' சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இந்த இடத்தில் பதியப்பட்டது...


சரி, மீண்டும் முக்கியமான 'யம தீபம்' பற்றிய பகுதியை காண்போம்...

புராண விளக்கம் உள்ளதா ?

ஆம், யம தீபம் பற்றி 'ஸ்காந்த புராணத்தில்' கூறப்பட்டுள்ளது ? 

कार्तिकस्‍यासिते पक्षे त्रयोदश्‍यां निशामुखे ।
यमदीपं बहिर्दद्यादपमृत्युर्विनिश्यति ।। 
Kaarthikasyaasite Pakshe Thrayodashyaam Nishaamukhe|
Yamadeepam Bahirdadhyaath Apamruthyurvinashyathi ।।
பொருள் :
"கார்த்திகா மாதத்தில் (13ம் திதி) திரயோதசி திதியில் ஏற்றி வைக்கப்படும் யம தீபமானது துர்மரணங்களை தடுக்கும்" . (மரண பயம் போக்கும்)


எவ்வாறு ஏற்ற வேண்டும் ?

சாதாரண நாட்களில் நாம் தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றவே கூடாது.
ஆனால்  'தன்(ந்)திரயோதசி' அன்று ஒருநாள் மட்டும் யம தீபம், தெற்கு திசை நோக்கி தான் ஏற்ற வேண்டும்.  பெரிய கோலம் இடலாம். (ரங்கோலி போன்று) தீபம் ஏற்றி (தீபம் எரியும் திசை) தெற்கு திசை நோக்கி வீட்டிற்கு வெளியில் சற்று உயரத்தில் (ஒரு சிறிய பலகை அல்லது சிறிய நாற்காலி வைத்தோ ஏற்ற வேண்டும். வீட்டின் உள்பகுதியில் அல்ல. தற்பொழுது, வீட்டிற்கு வெளியில் வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டின் உள்பகுதியிலேயே வைக்கலாம் என்று சொல்லி பலர் சொல்வதையும்  / எழுதுவதையும் பார்க்க முடிகிறது. ஆனால், கண்டிப்பாக அப்படி இல்லை. அப்படி வாய்ப்பு இல்லாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று ஒரு விளக்கு ஏற்றி வைப்பது நல்லது.

குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருப்பினும் ஒரே ஒரு விளக்கு ஏற்றுவதே போதுமானது. 

கோதுமை மாவை பயன்படுத்தி அதில் சிறிது மஞ்சள் பொடியும் கலந்து கொண்டு அகல் விளக்கு போல தயார் செய்து அதில் பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றுவது உத்தமம்.

அதற்கு வாய்ப்பு இல்லையெனில் மண் அகல் விளக்கு உத்தமம்.  பசு நெய்யில் ஏற்ற வேண்டும். குறைந்த பட்சம் நாம் குறிப்பிட்டிருக்கும் கால அளவுக்கு அந்த விளக்கு எரிய வேண்டும். பின்பு அது எவ்வளவு நேரம் எரிகின்றதோ அது வரை எரிந்து தானாக குளிரட்டும். நீங்கள் அதனை குளிர்விக்க வேண்டாம். 

வீடுகளில் அந்த விளக்கை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்த்தல் உத்தமம். அதனை (மண் விளக்கோ / கோதுமை மாவு விளக்கோ) நீர்நிலைகளிலோ / கோவில் மரத்தடிகளில் மண்ணோடு மண்ணாக  மக்கும் படி போட்டு விடலாம். 

ப்ரார்த்தனை:
நமது (அ) நமக்கு தெரிந்த குடும்பத்தில் அகால மரணமடைந்த அத்தனை ஆன்மாக்களுக்கும் முக்தியை கொடு இறைவா என்றும் இந்த நிமிடம் வரை நாம் நலமாக இருப்பதற்கு நன்றி என்றும் மேலும் நாம் இருக்கும் வரை ஆண்டவனின் நினைவோடு எப்பொழுதும் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்து யம தர்ம ராஜனின் காயத்ரி மந்திரத்தை 11 முறை கூறி மனதார வேண்டிக்கொள்ளலாம்.

மிக முக்கியம்:
அன்று முதலில் சிவனையும், விஷ்ணுவின் அவதாரமான 'தன்வந்திரி' யையும் மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு அதன் பின்னரே 'யம தர்ம ராஜனை' நினைத்து ப்ரார்த்தனை செய்ய வேண்டும்...













யம தீபம் ஏற்றும் நாள் மற்றும் நேரம்:
13-11-2020, வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணி முதல் 06:00 மணி வரை.

முக்கிய குறிப்பு: 
செல்வ வளங்களை அள்ளித்தரும் தன்தேரஸ் பூஜை நேரம் மற்றும் யம தீபம் பூஜை நேரம் ஒரே நேரத்தில் வராது. இந்த வருடம்  (2020) அது போல வந்துள்ளது. 

எனவே, அன்பர்கள் முதலில், தந்தேரஸ் பூஜையை முடித்து விட்டு அதன் பின்னர் யம தீபம் ஏற்றும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...



யம தர்ம ராஜன் காயத்ரி மந்த்ரம்:

ஓம் சூர்ய புத்ராய வித்மஹே மஹாகாலாய தீமஹி |
தந்நோ யம: ப்ரசோதயாத் ||

ऊँ सूर्याय पुत्राय विद्महे महाकालाय धीमहि | 
तन्नो: यमः प्रचोदयात ||

Aum Surya Putraya Vidhmahe Mahakalaya Dhimahi |
Thanno Yama: Prachodayaadh ||




ஆகவே அன்பர்களே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நமது முன்னோர்கள் ஆன்மா ஷாந்தி அடைய பிரார்த்திப்போம்...

முன்னோர்களின் ஆன்மா ஷாந்தி அடைந்தாலே , பித்ரு தோஷம் நிவர்த்தியாகி நமது வாழ்வில் தடைபட்டு வரும் அனைத்து நல்ல  விஷயங்களும் விரைவாக நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும், செல்வ வளம் பெருகும்...  

யம தீபம் பற்றிய காணொளி தொகுப்பை காண இங்கு கிளிக் செய்யவும்... 


ஓம் ஷிவாய நமஹ...

No comments:

Post a Comment