jaga flash news

Friday 27 November 2015

மூன்று முகங்கள்

திலோத்தமையால் சிவனுக்கு வந்த மூன்று முகங்கள்
அசுரச் சகோதரர்களுக்கு {சுந்தனுக்கும் உபசுந்தனுக்கும்} அழிவை ஏற்படுத்த ஒரு தீர்மானம் செய்து, விஸ்வகர்மனை {Viswakarman-தேவலோக தச்சன்} அழைத்தார். விஸ்வகர்மனைத் தன் முன் கண்ட பெரும் ஆன்மத் தகுதி கொண்ட பெருந்தகப்பன் {பிரம்மன்} அவனிடம் {விஸ்வகர்மனிடம்}, "அனைத்து இதயங்களையும் கொள்ளை கொள்ளும் தகுதி கொண்ட ஒரு மங்கையைப் படை {உற்பத்தி செய்}. பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கி அவரது உத்தரவை மரியாதையுடன் பெற்றுக் கொண்டு, அண்டத்தின் பெரும் தச்சன் {விஸ்வகர்மா} மிகுந்த கவனத்துடன் ஒரு மங்கையைப் படைத்தான். விஸ்வகிரீத் {Viswakrit} முதலில் அனைத்து அழகு குணங்களையும் தொகுத்து அந்த மங்கையின் மேனியில் சேர்த்து படைத்தான். நிச்சயமாக, அந்த தெய்வீக மங்கை, பெரும் ரத்தினக் குவியல்களால் படைக்கப்பட்டாள். விஸ்வகர்மனால் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த மங்கை, மூவுலகில் உள்ள பெண்களிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதிருந்தாள். பார்வையாளர்கள் பார்த்து ஸ்தம்பிக்காத ஒரு சிறு பகுதியேனும் அவளது உடலில் இல்லாதிருந்தது. இயல்புக்கு மிக்க தனது அழகால், தெய்வீக ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல இருந்து அனைத்து உயிர்களின் இதயங்களையும் கண்களையும் கொள்ளை கொண்டாள். அனைத்து ரத்தினங்களில் இருந்தும் சிறு பகுதிகளை எடுத்து அவள் உருவாக்கப்பட்டதால், பெருந்தகப்பன் அவளுக்கு திலோத்தமை {Tilottama} என்ற பெயரைக் கொடுத்தார். அதற்கு உயிர் கொடுத்து, அதன் வாழ்க்கை துவங்கிய போது, அந்த மங்கை {திலோத்தமை} பிரம்மனிடம் தலை வணங்கி, கரங்கள் கூப்பி, "படைக்கப்பட்ட அனைத்து பொருளுக்கும் தலைவா {பிரம்மா}, நான் என்ன பணியைச் சாதிக்க வேண்டும். நான் எதற்காகப் படைக்கப் பட்டேன்?" என்று கேட்டாள். அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, "ஓ திலோத்தமா, அசுரர்களான சுந்தன் மற்றும் உபசுந்தனிடம் செல். ஓ இனிமையானவளே, உனது கொள்ளை கொள்ளும் அழகால் அவர்களை மயக்கு. ஓ மங்கையே, அங்கே சென்று, அந்த அசுரச் சகோதரர்களின் {சுந்தன் உபசுந்தனின்} பார்வை உன் மீது பட்டவுடன், உனது அழகு என்ற செல்வத்தை அடைய எண்ணம் கொண்டு, ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளும்படி நீ நடந்து கொள்" என்றார் {பிரம்மன்}.
நாரதர் தொடர்ந்தார், "அந்த மங்கை {திலோத்தமை}, பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, தேவர்கள் சூழ்ந்த அந்தச் சபையைச் சுற்றி நடந்தாள். அந்த சிறப்பு மிகுந்த பிரம்மன் அப்போது தனது முகத்தை கிழக்கு நோக்கி வைத்து அமர்ந்திருந்தார். மகாதேவனும் கிழக்கு நோக்கியே அமர்ந்திருந்தான். மற்ற தேவர்கள் அனைவரும் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தார்கள். மற்ற முனிவர்கள் அனைவரும் எல்லா திசைகளையும் பார்த்து அமர்ந்திருந்தார்கள். தேவர்கள் அமர்ந்திருந்த அந்த சபையை வலம் வந்த அந்த திலோத்தமையை, இந்திரனும் அந்தச் சிறப்புமிக்க ஸ்தானுவும் (மகாதேவனும் {சிவனும்}) மட்டும்தான் தங்கள் மன அமைதியை இழக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அந்த மங்கை{திலோத்தமை} தனது அருகில் வந்தபோது மிகுந்த ஆசைக்குள்ளான மகாதேவனின் {சிவனின்} உடலில் (திலோத்தமைக் கண்டு) தென்புறத்தில் முழுவதும் மலர்ந்த தாமரையைப் போல ஒரு முகம் தோன்றியது. அவள் {திலோத்தமை} அவனுக்குப் {சிவனுக்குப்} பின்புறம் சென்றதும் மேற்கில் ஒரு முகம் தோன்றியது. அந்த மங்கை அந்தப் பெரும் தேவனுக்கு {சிவனுக்கு} வடக்கு புறத்தில் சென்றதும், நான்காவதாக அவனது உடலில் வடக்கு பக்கம் ஒரு முகம் தோன்றியது.
(அந்த மங்கையைக் காண ஆவலுடன் இருந்த) தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} ஒவ்வொன்றும் அகலமாகவும், சிவந்தும் முன்பும் பின்பும், இடுப்பிலுமாக ஆயிரம் கண்கள் தோன்றியன. இப்படியே பெரும் தேவன் ஸ்தானுவுக்கு {சிவனுக்கு} நான்கு முகங்களும், பலனைக் கொன்றவனுக்கு {இந்திரனுக்கு} ஆயிரம் கண்களும் உண்டாயிற்று. இதன் நிமித்தமாக அனைத்து தேவர்களும் முனிவர்களும், தங்களை வலம் வந்த திலோத்தமை சென்ற திசைகளில் எல்லாம் தங்கள் முகத்தைத் திருப்பினர். தெய்வீகமான பெரும்பாட்டனை {பிரம்மனைத} தவிர அங்கிருந்த சிறப்பு வாய்ந்த அனைவரின் பார்வையும் {திருஷ்டியும்} திலோத்தமையின் உடல் மீது விழுந்தது. திலோத்தமை (அசுரர் நகரத்திற்குக்) கிளம்பியதும், அவளது அழகின் செல்வத்தின் மீது இருந்த மதிப்பால் அனைவரும் அந்தப் பணி முடிந்ததாகவே நினைத்தனர். அப்படி அந்த திலோத்தமை சென்றதும், அண்டத்தின் முதல் காரணமான அந்தப் பெரும் தலைவன் {பிரம்மன்} தேவர்களையும் முனிவர்களையும் விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

No comments:

Post a Comment