jaga flash news

Thursday 26 November 2015

" பிரும்ம தத்துவம் "

" பிரும்ம தத்துவம் "
இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது நான்கு யுகங்களை பிரும்மா படைத்தாராம். ஒவ்வொரு யுகத்துக்கும் குறிப்பிட்ட அளவில் ஆயுள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றில் படைக்கப்பட்ட உயிரினங்கள் எத்தனை என்பது பற்றிய சரியான விளக்கங்கள் தரப்படவில்லை. பிரும்மா படைத்தது 84 லட்ஷ உயிரினங்கள் என்று கருட புராணத்தின் மூலமே அறிகிறோம். பிறக்கும் எதற்கும் அழிவும் உண்டு என்பதே பிரபஞ்சத்தின் தத்துவம். அதற்கேற்ப படைக்கப்பட்டவை அழிந்து கொண்டே இருக்க அதற்கு இணையாக புதுப் பிறவிகளும் அந்தந்த யுகங்களில் தோன்றிக் கொண்டே இருந்தன. அப்படி என்றால் இந்த பிரபஞ்சத்தில் எத்தனை பிறவிகள் படைக்கப்பட்டு இருந்திருக்கும்? தோன்றிக் கொண்டே இருக்கும் பிறவிகளுக்கு எல்லை என்பது கிடையாதா? இந்தக் கேள்வி பலரும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போன கேள்விதான். ஆனால் அதற்கான சரியான விளக்கம் நமக்கு இதுவரை கிடைக்கவே இல்லை.
தற்போது நடப்பது கலி யுகம் என்கிறார்கள். அதாவது நான்கு யுகங்களின் கடைசி யுகம் என்றும் இது முடிந்தப் பின் மீண்டும் முதலாவதாக படைக்கப்பட்ட யுகம் தோன்றும் என்று கூறுகிறார்கள். ஆகவே இந்த யுகங்கள், பிறவிகள் போன்றவைப் பற்றி நான் ஒரு பண்டிதரிடம் விளக்கம் கேட்டு விவாதம் செய்த போது அவற்றைப் பற்றி அவர் கொடுத்த விளக்கங்கள் சிறந்தவையாக மட்டும் அல்ல நம்மை சிந்திக்க வைக்கும் கருத்துக்களாகவும் இருந்தன. அவர் கூறியது என்ன? கீழே படியுங்கள்.
'' பரப்பிரும்மன் என்பவர் உலகைப் படிக்கத் துவங்கியபோது முதலில் மும்மூர்த்திகளைப் படைக்க அவர்களில் பிரும்மாவிற்கு படைக்கும் தொழில் தரப்பட்டது. பிரும்மாவும் உடனடியாக தனது படைப்புத் தொழிலைத் துவக்கினார். ஆரம்பத்தில் ரிஷி முனிவர்களைப் படைத்தார். அதைத் தொடர்ந்து மற்றப் பிறவிகளைப் படைத்தார். ஆனால் அவற்றைப் படைக்கும் முன்னர் தான் படைத்த ரிஷி முனிவர்களுடன் நீண்ட விவாதம் நடத்தியப் பின் சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு தமது படைப்பினைத் தொடர்ந்தார். பிரும்மாவின் படைப்பின் உண்மை நிலை என்ன? அந்த பிரும்மத் தத்துவம் என்ன?
தான் வகுத்துக் கொண்ட விதிமுறைக்கு ஏற்ப முதலில் அவரும் நான்கு யுகங்களைப் படைத்தார். அவற்றுக்கு சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலி யுகம் என பெயரிட்டார். ஒவ்வொரு யுகத்திற்கும் இத்தனை ஆண்டுகள்தான் ஆயுள் உண்டு என்றும் அவற்றில் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சார முறைப்படி எல்லா விதமான ஜீவ ராசிகளும் வாழ வேண்டும், முதலில் தான் படைக்கும் சத்ய யுகத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் அந்த யுகம் முடியும் போது அடுத்த யுகத்திற்குச் செல்லாது, அவற்றில் ஒரு பகுதி மட்டுமே அடுத்த யுகத்திற்கு தனது பிறப்பை எடுக்கச் செல்லும். அப்படி செல்லும் உயிரினங்கள் அடுத்தடுத்துச் செல்லும் அந்தந்த யுகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள உயிரினங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்து விட்டால், அந்த அதிக உயிரினங்கள் ஆத்மாக்களாகாவே அகண்டத்தில் சுற்றித் திரியும். பிறப்பு எடுக்கச் செல்லும் உயிரினங்கள் அடுத்த யுகத்தில் நிகழும் பிறப்பிலும் இறப்பிலும் அதனதன் கர்மாக்களுக்கு ஏற்ப அகண்டத்தில் உள்ள ஆத்மாக்களுடன் சேர்ந்து அந்த யுகத்திற்கான அளவில் பிறப்பை எடுத்தவண்ணம் இருக்கும் .
சத்ய யுகத்தில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அந்த யுகத்தின் முடிவில்தான் அடுத்த யுகத்துக்குள் நுழையத் துவங்கும். அதாவது அந்தந்த யுகங்களின் வரையுறுக்கப்பட்ட எண்ணிக்கையின் கடைசி கட்டத்தைத் எட்டத் துவங்கும் போது இந்த புதிய நிலைமை உருவாகும்.
ஒரு யுகத்தில் இருந்து அடுத்த யுகத்தின் பரப்பிற்குள் நுழையும் உயிரினங்கள் அங்கு நுழைந்த உடனேயே பிறப்பு எடுக்காது. அதற்கு முந்தைய யுகம் முடியும் தருவாயில் அதே சமயம் புது யுகத்தின் பரப்பு உருவாகத் துவங்கும் வேளையில், இரண்டு யுகங்களும் இணையும் பகுதியில் தமது பிறப்பை எடுக்கத் துவங்கும். அதே நேரத்தில் அகண்டத்தில் ஆவிகளாக சுற்றித் திரிந்து கொண்டு இருக்கும் உயிரினங்கள் புதிய யுகத்தின் அண்ட வெளியில் சென்று சுற்றியவாறு தமக்கு அங்கு பிறப்பு எடுக்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய்ந்தவண்ணம் சுற்றிக் கொண்டு இருக்கும். முந்தய யுகத்தின் ஆயுள் முடிவடையும் அதே நேரத்தில் ஒரு இமை நொடியும் பிழறாமல் புதிய யுகம் மலரும். அதில் உள்ள மக்களுக்கு அந்த யுகத்தின் எழுச்சி கூடத் தெரியாத அளவில் அது இருக்கும். தாம் இன்ன யுகத்தில் இருக்கின்றோம் என்பதை அங்குள்ள ஜீவ ராசிகள் மெல்ல மெல்லத்தான் நடப்பு நிலைகளை பார்த்தப் பின் அந்த புதிய யுகத்தின் நிலையை உணரத் துவங்குவார்கள்.
சத்ய யுகத்தில் பிரும்மா படைத்த உயிரினங்களின் எண்ணிக்கை நிரந்தரமானது. அவை கூடவோ அல்லது குறைவதோ இல்லை. அதற்கு அடுத்தடுத்துப் வரும் யுகங்களில் பிரும்மா புதிய உயிரினங்களைப் படைக்க மாட்டார். சத்ய யுகத்தில் படைக்கப்பட்டுள்ள உயிரினங்களே அந்த புது யுகங்களில் நுழைகின்றன. அவற்றில் எந்த எண்ணிக்கையில் உயிரினங்கள் இருக்க முடியும் என்பதை ஏற்கனவே பிரும்மா நிர்ணயித்து விட்ட அளவிற்கு ஏற்ப சத்ய யுகத்தின் உயிர்கள் அங்கு புதுப் பிறவி எடுத்துச் செல்கின்றன. அந்த புதுப் புது யுகங்களில் உயிரினங்கள் செல்லும்போது அந்தந்த யுகங்களுக்கு வகுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விட அதிகமான உயிர் இனங்கள் இருந்தால் அவை ஆவிகளாக அந்த யுகங்களின் மேல் உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும். பிரும்மாவின் விதிமுறைக்கு ஏற்ப நான்கு யுகமும் முடிந்தவுடன் அவர் மீண்டும் சத்ய யுகத்தினை தொடர்வார். அதில் எத்தனை உயிரினங்கள் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் புதியதாக நிர்ணயிப்பார்.
படைப்பின் துவக்கத்தில் பிரும்மா எண்ணினார் 'அகண்டத்தில் பரப்பிரும்மனை சுற்றிக் கொண்டு இருந்த எதோ சில லட்ஷ அணுக்களுக்கு உயிர் கொடுத்து பூமிக்கு அனுப்பினால் மெல்ல மெல்ல படைக்கப்படும் ஒவ்வொரு உயிரும் வெவ்வேறு நிலைகளை எடுக்குமே, அந்த மாற்றங்கள் எத்தனை வருடங்களில் நடைபெறும். அது அந்தந்த யுகங்களுக்கு நன்மை தரக் கூடிய அளவில் இருக்குமா ?'. இப்படியாக எண்ணியவர் அனைத்தையும் தீர ஆராய்ந்தப் பின் விளைவுகளை விவரமாக அறிந்து கொண்டார். அதனால்தான் அந்த மாற்றங்களின் பரிமாண வளர்ச்சிக்கு ஏற்ப அவர் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்து அதற்கான ஆயுளையும் உயிர் இனங்களின் எண்ணிக்கையையும் வகுத்தார். தான் எத்தனை உயிர் இனங்களை எந்த விதத்தில் படைக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துக் கொண்டார். ஒவ்வொரு யுகத்திலும் எத்தனை உயிரினங்கள் இருக்க வேண்டுமோ அத்தனைப் பிறவிகள் மட்டுமே அந்த யுகத்தில் இறந்தும் பிறந்து கொண்டும் இருக்கும். ஆனால் அதற்கு அதிகமாக உள்ள உயிரினங்கள் சூழ்மத்தில் ஆவிகளாக சுற்றிக் கொண்டு இருந்தவாறு, மீண்டும் சத்ய யுகத்தில் பிறப்பு எடுக்கும் என்பதை பிரம்ம தத்துவமாக அமைத்தார்.
இந்த அகண்டத்தில் பல கோடி உயிர் இனங்கள் சுற்றித் திரிகின்றன . அவை மனித வடிவத்திலும், மிருகங்கள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளாக,பூ, பழங்களாக, காய்களாக, விதைகளாக, கடல்களாக, பூச்சிகளாக பல்வேறு ரூபங்களில் உள்ளன. அவை அனைத்திற்குமே அழிவு உண்டு. ஆனால் அவை அனைத்துமே பிரும்மாவினால் உயிரினமாகக் கருதப்படுகின்றனவா?
கருடபுராணத்தில் விஷ்ணு பகவான் கருடருக்கு கூறியதான ஒரு செய்தி புராணங்களில் உள்ளது. 'அதன்படி அகண்டத்தில் பிரும்மா படைத்த உயிரினம் 84 லட்சம் என்றும் அதில் 21 லட்சம் முட்டைகளில் இருந்து வந்தன, 21 லட்சம் மரம், செடி கொடிகளில் இருந்து வந்துள்ளன, 21 லட்சம் மனிதர்கள் மற்றும் மார்பில் இருந்து பால் கொடுக்கும் விலங்குகளினாலும், மீதி 21 லட்சம் வேர்வைகளில் இருந்து வெளியாகும் பூச்சிகள், புழுக்களினால் ஏற்படுத்தப்பட்டவை' என்று கூறுகிறார்கள். ஆகவே இந்த அகண்டத்தில் மொத்தம் 84 லட்சம் உயிரினங்கள் மட்டுமா படைக்கப்பட்டு இருக்கும் என்பது பெரிய கேள்வி.
பிரும்மாவின் படைப்பில் மனிதர்களும் குழந்தைக்கு மார்பில் பால் கொடுத்து வளர்க்கும் குரங்குகள் போன்ற பிராணிகளும் ஒரு பிரிவாக இருப்பதினால் தனியாக மனிதர்கள் மட்டும் எத்தனை எண்ணிக்கையில் படைக்கப்பட்டு உள்ளார்கள் என்பது விளக்கப்படவில்லை. அதனால்தான் ஒவ்வொரு யுகங்களிலும் அதன் ஆரம்பத்தில் அந்த யுகத்தின் விகிதத்துக்கு ஏற்ப மனிதர்களாகப் பிறவி எடுத்தாலும் அவரவர்கள் செய்யும் கர்மாக்களினால் அவரவர்கள் பல்வேறு மற்ற பிறவிகளாக பிறப்பு எடுத்து தண்டனையை அனுபவிக்க வேண்டி இருப்பதினால் அந்தந்த யுகங்களில் முதலில் படைக்கப்பட்டுள்ள அளவிலேயே எப்போதும் மனிதர்களின் எண்ணிக்கை இருக்காது என்று நம்ப முடிகின்றது.
ஆகவே ஒரு யுகத்தின் ஆரம்பத்தில் அந்த யுகத்தின் எண்ணிக்கையில் கால் பாகம் மனிதர்களும் ( நான் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எழுதி இருந்த மறு பிறவி என்றக் கட்டுரையில் உலகின் மனிதர்கள் மூன்றில் ஒரு பாகம் அதாவது 33% இருக்கலாம் என்று கூறி இருந்தேன். ஆனால் கருட புராணக் கூற்றின்படி அது நான்கில் ஒரு பாகம் அதாவது 25 % என்று தெரிகின்றது. அப்படி இருந்தாலும் இந்தக் கட்டுரையில் உள்ள கணக்கில் அது பெரிய மாறுதலை ஏற்படுத்தவில்லை), பால் ஊட்டி வளர்க்கும் பிராணிகளும் இருந்தால் கூட அந்த யுகத்தின் ஒரு சில கால கட்டத்தில் அந்த விகிதம் மாறுபடலாம். ஆனால் அந்தந்த யுகங்களின் அனைத்து உயிரினங்களின் மொத்த கூட்டு எண்ணிக்கை மாறாது.
உதாரணமாக ஒரு யுகத்தில் 100 லட்சம் மனிதர்கள் பிறக்க வேண்டும் என்ற விதி உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அதற்கேற்ப அந்த யுகத்தின் துவக்கத்தில் 100 லட்ஷ மனித ஜீவன்கள் பிறப்பு எடுத்து உள்ளது என்றும் வைத்துக் கொள்வோம். அப்படிப் பிறப்பு எடுத்த அந்தந்த மனித உயிரினங்களின் ஆயுள் ஒரு யுகத்தின் ஆயுளைப் போல 143200 வருடங்கள் அல்லது 100800 வருடங்கள் என்று இருக்காது. பிறப்பு எடுக்கும் மனித ஜீவன்கள் எண்பது, நூறு, நூற்றி இருபது என பல்வேறு ஆயுட்களைக் கொண்டு பிறந்து விட்டு மரணம் அடைந்தப் பின் அந்தந்த யுகங்களிலேயே மீண்டும் மீண்டும் புதுப் புது பிறவி எடுக்கும். அப்போது அவை மனித ஜென்மம் எடுக்கும் என்றோ, மிருக ஜென்மம் எடுக்கும் என்றோ கூற முடியாது. அவள் வேறு பிராணிகளாகவும் பிறப்பு எடுக்கலாம், அல்லது மனித ஜென்மமாகவும் பிறப்பு எடுக்கலாம்.
ஆகவே அந்தந்த யுகங்களின் சில கால கட்டங்களில் மனித ஜீவன்களின் எண்ணிக்கை 100 லட்சம் என்று இல்லாமல் அவை 80 லட்ஷமாகவோ, இல்லை 120 லட்ஷமாகவோ கூட மாறலாம். ஆனால் அதே சமயம் அந்த யுகம் முடியும் தருவாயில் அந்தந்த யுகங்களின் நிர்ணயிக்கப்பட்ட விகித அளவில் அனைத்து ஜீவராசிகளும் அமைந்து இருக்கும். தேவலோக கம்பியூட்டர் போன்ற துல்லியமான கணக்கை இப்படியாக பிரும்மா படைத்து வைத்து உள்ளார்!
இதற்கு இடையே ஒரு சுவாரஸ்யமான செய்தி. பிரும்மா படைத்த உயிரினங்களில் சுமார் நான்கில் ஒரு பாகம் மனிதர்களும் பால் ஊட்டி வளர்க்கும் மிருகங்களும் உள்ளதாக கூறினேன் அல்லவா. அந்த பால் ஊட்டி வளர்க்கும் மிருகங்களின் ஒரு பகுதியான குரங்குகளின் வம்சம் காலப்போக்கில் மனிதப் பிறப்பாக ஆகி இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. நாமெல்லாம் படித்து உள்ளோம் குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்று. அது ஓரளவிற்கு உண்மையாக இருக்கலாம் என்பதற்கு ஆதாரமாக ஒரு புராண ஆதாரம் இல்லாத ஒரு புராணக் கதை சில வடநாட்டு கிராமங்களில் கூறப்படுகின்றது.
ராமபிரான் இலங்கைக்கு சென்று சீதையை மீட்க உதவிய ஹனுமார் மற்றும் அவரை சார்ந்த குரங்கு இனங்களை யுத்தம் முடிந்து மீண்டதும் அனைவரும் மிருகங்கள் என்றே கருதி ஒதுக்கினார்கள். அதுவரை தம்மை போற்றி மதித்தவர்கள் காரியம் முடிந்ததும் இப்படி தம் இனத்தவரை ஒதுக்குகின்றார்களே என ஹனுமாருக்கு வருத்தம் ஏற்பட்டது. அவர் வருத்தத்துடன் அமர்ந்து இருந்ததைக் கண்ட ராமபிரான் ஒரு நாள் ஹனுமாரை அழைத்து 'நீ ஏன் சோகமாக இருக்கிறாய் ?' எனக் கேட்டார். அதற்க்கு பதில் அளித்த ஹனுமான் தம்முடைய இனத்தவரை கேலியாகப் பேசும் படையினரின் செயலை சுட்டிக் காட்டியப் பின் கூறினாராம், 'அனைத்துக் கடவுளுக்கும் அவரவர்களுடைய வாகனங்களாக மிருகங்களும் பட்ஷிகளாகவும் இருக்க என்னை அந்த நிலையிலாவது இருக்க வைத்துக் கொண்டு உங்களுக்கு பணி செய்ய அனுமதித்தால் நான் உங்களுக்கு குரங்கு வாகனமாக இருப்பேன். அப்போதுதான் நான் எப்போதும் உங்கள் பாதத்தில் கிடக்க முடியும், என் சந்ததியினருக்கும் ஒரு பெருமைக் கிடைக்கும்' என்றாராம்.
அதைக் கேட்ட ராமருக்கும் வருத்தம் ஆகி விட்டது. அவர் ஹனுமாரிடம் கூறினாராம் ' ஹனுமான், கவலைப் படாதே. இனி நீ என்றும் என்னுடன் மனித உருவில் இருப்பாய். நீ எனக்கு குரங்காக இருந்து உதவினாலும் மனிதர்களை விட மேலான உதவியை செய்து உள்ளாய். நான் சிலையாக இருந்தாலும் அங்கெல்லாம் நீயும் இருப்பாய். என்னை வணங்குபவர்கள் உன்னையும் சேர்த்தே என்னை வணங்குவார்கள் என்ற பெருமையை உனக்கு அளிக்கின்றேன். அது மட்டும் அல்ல தற்போது குரங்குகளாக உள்ள உன்னுடைய பாதிக்கும் மேலான உன்னுடைய சந்ததியினர் காலப்போக்கில் மெல்ல மெல்ல மனிதர்களாக மாறுவார்கள். நீயும் என்னுடன் மனித ரூபத்தில், ஆனால் வாலுடன் கூடிய மனிதராக என்றும் இருப்பாய் என ஹனுமாருக்கு ராமர் அருள் புரிந்தார் என்றும் அதனால்தான் காலப் போக்கில் குரங்குகளின் ஒரு பெரும் பாகம் மரணம் அடைய அடைய அவை மனிதர்களாக உரு எடுத்தது.
அப்படி நடக்க உள்ளது என்பதை தாம் படைத்த போதே அறிந்து கொண்ட பிரும்மா அதனால்தான் மனிதர்களின் எண்ணிக்கையை பால் தரும் பிராணிகளின் எண்ணிக்கையுடன் வைத்து இருந்துவிட்டு மனித உயிர்களை தனியாகக் காட்டவில்லை என்று ஒரு கூற்று உள்ளது. இது கிராமியக் கதைதான். இது உண்மையாகவும் இருக்கலாம், உண்மை இல்லாமலும் இருக்கலாம். இராமாயண காலத்தில் குரங்குகளாக இருந்தவை விஷ்ணுவின் அவதாரமான ராமனின் அருளினால் மறு ஜென்மத்தில் மானிடப் பிறவியை எடுத்து இருக்கலாம் என்பதினால்தான் குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்ற சொல் வந்து இருக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது.
சத்ய யுகத்தில் பிரும்மா 84 லட்ஷ (84,000 ,000) உயிரினங்களைப் படைத்ததாக கூறுகிறார்கள் அல்லவா. தற்போதைய நிலவரப்படி இந்த உலகில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் ஏழு பில்லியனை அதாவது ஏழாயிரம் லட்ஷங்களைத் தாண்டி உள்ளது எனும் போது பிரும்மாவின் கணக்கு தவறாக இல்லையா? அப்படி என்றால் 21 லட்ஷ மனித உயிரினங்களை மட்டுமே பிரும்மா படைக்கப்பட்டதாக கூறப்படும் கருட புராணத்தை எப்படி நம்புவது என்று சிலர் கேள்வி கேட்டார்கள். அதன் உண்மையானக் கணக்கை மேன்மையான ரிஷி முனிவர்கள் அறிந்து இருந்தாலும் அவை விளக்கப்படவில்லை. அது போலவே ஆன்மீக ஞானம் உள்ளவர்கள் அது குறித்து அறிந்து இருந்தாலும், படித்தப் பண்டிதர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றை காலம் காலமாக நம்பி வந்தாலும் அவற்றுக்கான முறையான விளக்கத்தை மக்களுக்கு தர வேண்டாமா? ஆனால் என்ன காரணத்தினாலோ அதற்கு சரியான முறையில் யாரும் விளக்கம் தரவில்லை.
முதலில் படைக்கப்பட்ட சத்ய யுகத்தின் ஆயுளுக்கேற்ப அதற்கான தேவ வருடங்களைக் கணக்கில் கொண்டு பிறவிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது. அந்த எண்ணிக்கைதான் பிரபஞ்சத்தின் படைக்கப்பட்ட மொத்த உயிரினம் என நிர்ணயிக்கப்பட்டப் பின் அடுத்தடுத்த யுகங்களின் ஆயுளும் நிர்ணயிகப்பட்டது. கருடப் புராணத்தில் கூறப்பட்டு உள்ளது போல பிரும்மா முதலில் படைத்தது 84 லட்ஷ உயிரினங்கள். அது உண்மைதான். அதில் 21 உயிரினங்கள் மனிதர்கள் மற்றும் பாலூட்டும் பிராணிகள். அதுவும் உண்மைதான். ஆனால் அந்தக் கணக்குப் பற்றிய ஒரு விளக்கத்தை சரியான முறையில் யாரும் கூறவில்லை.
பிரும்மா படைப்பைத் துவக்கியதும் முதல் தேவ வருடத்தில் அவர் படைத்தது 84 லட்ஷ உயிரினங்கள். ஒரு தேவ வருடம் என்பது 360 மனித ஆண்டுகள் என்கிறார்கள். முதல் தேவ வருடத்தில் பிறவிகளை படைக்கத் துவங்கியவர் அடுத்தடுத்து ஒவ்வொரு தேவ வருடத்திலும் படைத்தது 84 லட்ஷ உயிரினங்கள். இப்படியாக அவர் சத்ய யுகத்திற்குத் தான் நிர்ணயித்த அளவை எட்டும் வரை தனது படைப்பை தொடர்ந்து கொண்டே இருந்தார். தான் நிர்ணயித்து இருந்த அளவை எட்டியதும் மேலும் படைப்பதை நிறுத்தி விட்டு, தாம் முதலில் படைத்தவைகளையே மரணம் அடைந்தப் பின் மீண்டும் மீண்டும் மறு பிறவி எடுக்கும் வகையில் வழியை வகுத்தார் . ஆக அவர் படைத்தது ஒரு குறிப்பிட்ட அளவுதான். இனி அவர் படைத்த உயிரினங்கள் ஒவ்வொரு யுகத்திலும் எந்த விகிதத்தில் அமைந்து இருந்தன என்ற விவரங்களை பார்க்கலாம்.
சத்ய யுகம்
சத்ய யுகத்தின் மொத்த ஆயுள் 1,728 ,000 வருடங்கள். ஆகவே அந்த யுகத்தைப் முதலில் படைத்த பிரும்மா முதல் தேவ வருடத்தில் 84 லட்ஷ உயிர் இனங்களை படைத்து யுகத்தைத் துவக்கினார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு தேவ வருடத்திலும் 84 லட்ஷ ஜீவன்களைப் படைத்து வந்தார். இப்படியாக அவர் சத்ய யுகத்தில் படைத்த மொத்தப் பிறவிகள் எத்தனை தெரியுமா ?
1,728,000 வருடங்கள் ÷ 360 தேவ வருடங்கள்= 4800 தேவ வருடங்கள்.
ஒவ்வொரு தேவ வருடத்திலும் அவர் படைத்தது 84 லட்ஷ உயிரினங்கள் என்றால் 4800 தேவ வருடங்களில் அவர் படைத்தது 4800 x 84 = 403,200,000,000 பிறவிகள். அதாவது 403,200 மில்லியன் ஆகும். இதில் கருடப் புராணக் கணக்கின்படி மனிதர்களும் பாலூட்டும் பிராணிகளும் கால் பங்கு எனும்போது அந்தப் பிரிவின் எண்ணிக்கை 100,800 மில்லியன் ஆகின்றது .
ஆனால் படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதர்கள் மட்டும் எத்தனை என்பது தெரிவிக்கப்படவில்லை என்பதினால் அந்தப் பிரிவு உயிரினங்களில் மனிதர்கள் ஒன்பது பங்கும் பாலூட்டும் பிராணிகள் ஒரு பங்கும் இருக்கலாம், மனிதர்கள் எட்டும் பாலூட்டும் பிராணிகள் இரண்டு பங்கும் இருக்கலாம், இல்லை மனிதர்கள் பாதியும் பாலூட்டும் பிராணிகள் பாதியாகவும் இருக்கலாம். ஆனால் நடப்பு உலகக் கணக்குகளுக்கு ஏற்ப தோராயமாக மனிதர்களின் எண்ணிக்கை முக்கால் பங்கு** என ஏற்றுக் கொள்ள முடியும் .
ஆகவே சத்ய யுகத்தின் ஆரம்பத்தில் பிரும்மா படைக்கத் துவங்கிய 84 லட்ஷ உயிரினங்கள் மெல்ல மெல்ல 403,200 மில்லியன் என்ற அளவை எட்டியபோது அதில் மனித உயிரினம் தோராயமாக 75,600 மில்லியன்கள் என்ற கணக்கில் அதாவது 75.6 பில்லியன்கள் (403200 ÷ 4=10080 ÷ 4 x 3 = 75600**) இருக்கும் என நினைக்க இடம் உள்ளது .
அப்படி படைக்கப்பட்ட உயிரினங்களில் எத்தனை உயிரினங்கள் மீண்டும் பிறப்பு எடுத்து அடுத்த யுகத்திற்கு செல்கின்றன?
திரேதா யுகம்
சத்ய யுகத்தைத் தொடர்ந்து வருவது திரேதா யுகம். அதன் ஆயுள் 1,296,000 வருடங்கள். அதன் அடிப்படையில் அந்த யுகத்தில் எத்தனைப் பிறவிகள் உயிர் வாழ இயலும் ?
1,296,000 வருட ஆயுள் உள்ள இந்த யுகத்தில் உள்ள தேவ வருடங்களின் எண்ணிக்கை 1,296 ,000 ÷ 360 = 3600 என்று ஆகின்றது.
ஒவ்வொரு தேவ வருடத்திலும் பிரும்மா படைத்தது 84 லட்ஷ உயிரினங்கள் என்றால் 3600 தேவ வருடங்களில் அவர் திரேதா யுகத்தில் படைத்து இருக்க வேண்டிய உயிர்களின் அளவு 3600 x 84 = 302,400,000,000 பிறவிகள் அதாவது 302,400 மில்லியன் என ஆகின்றது. ஆகவே சத்ய யுகத்தில் ஏற்கனவே படைக்கப்பட்ட 403,200 மில்லியன் உயிரினங்கள் அனைத்தும் அங்கு எப்படி செல்ல முடியும்?
அதுதான் சூட்சமம். 403,200 மில்லியன் உயிர் இனங்களில் 302,400 மில்லியன் உயிர் இனங்கள் பிறப்பையும் இறப்பையும் வைத்துக் கொண்டு திரேதா யுகத்தின் அளவான 302,400 மில்லியன் எண்ணிக்கையில் திரேதா யுகத்திற்குள் நுழையும்போது சத்ய யுகத்தின் பிறப்பு எடுக்க முடியாமல் போன அதிகம் உள்ள 100,800 மில்லியன் உயிர் இனங்கள் மேல் உலக விண்ணிலே சென்று ஆவிகளாக சுற்றிக் கொண்டு அடுத்த சத்ய யுகத்தில் பிறப்பு எடுக்கும் வரை காற்றுப் போல சுற்றிக் கொண்டு இருக்கும் !!. இதுவே பிரும்ம தத்துவம்!!!!
இதில் மனித உயிரினம் தோராயமாக 56,700 மில்லியன்கள் என்ற கணக்கில் அதாவது 56.7 பில்லியன்கள் (302400 ÷ 4= 75600 ÷ 4 x 3 = 56700) இருக்கும் .
அப்படி படைக்கப்பட்ட உயிரினங்களில் எத்தனை உயிரினங்கள் மீண்டும் பிறப்பு எடுத்து அடுத்த யுகத்திற்கு செல்கின்றன?
துவாபர யுகம்
திரேதா யுகத்தைத் தொடர்ந்து வந்தது துவாபர யுகம். இதன் ஆயுள் 864,000 வருடங்கள். இதன் கணக்கு என்ன? இந்த யுகத்தில் படைத்த மொத்தப் பிறவிகள் எத்தனை இருக்க முடியும் ? திரேதா யுகத்தில் இருந்த மொத்த 302,400 மில்லியன் உயிரினங்களில் 201,600 மில்லியன் உயிரினங்களே துவாபர யுகத்தில் பிறப்பு எடுக்க முடியும் . அது எப்படி?
துவாபர யுகத்தின் ஆயுள் 864,000 வருடங்கள் எனும் போது அது அது எத்தனை தேவ வருடங்கள் ஆகும்? 864,000 ÷ 360 = 2400 தேவ வருடங்கள்.
ஒவ்வொரு தேவ வருடத்திலும் பிரும்மா படைத்தது 84 லட்ஷ உயிரினங்கள் என்றால் 2400 தேவ வருடங்களில் துவாபர யுகத்தில் அவர் படைத்து இருக்க வேண்டிய உயிர்களின் அளவு 2400 x 84 = 201,600,000,000 பிறவிகள் அதாவது 201,600 மில்லியன் என ஆகின்றது. ஆகவே திரேதா யுகத்தில் படைக்கப்பட்ட 302,400 மில்லியன் உயிரினங்கள் அனைத்தும் அங்கு செல்ல முடியாது.
அப்படி என்றால் எத்தனை உயிர் அங்கு செல்லும்? அதுதான் சூட்சமம் என்று முன்னர் கூறினேன் அல்லவா. திரேதா யுகத்தில் இருந்த 302,400 மில்லியன் உயிர் இனங்களில் 201,600 மில்லியன் உயிர் இனங்கள் பிறப்பையும் இறப்பையும் வைத்துக் கொண்டு துவாபர யுகத்தின் எண்ணிக்கையான 201,600 மில்லியன் அளவில் துவாபர யுகத்திற்குள் நுழையும்போது சத்ய யுகத்தில் இருந்து திரேதா யுகத்தில் நுழையும்போது பிறப்பு எடுக்க முடியாமல் அதிகம் இருந்து ஏற்கனவே ஆவிகளாக சுற்றித் திரியும் 100,800 மில்லியன் உயிர் இனங்களுடன், திரேதா யுகத்தில் இருந்து துவாபர யுகத்தில் நுழையும் போது உயிர் எடுக்க இயலாமல் போன 100,800 மில்லியன் உயிர் இனங்களும் ஒன்று சேர்ந்து கொண்டு மேல் உலக விண்ணிலே சென்று ஆவிகளாக சுற்றிக் கொண்டு அடுத்த சத்ய யுகத்தில் பிறப்பு எடுக்கும் வரை காற்றுப் போல சுற்றிக் கொண்டு இருக்கும். அவற்றின் மொத்த எண்ணிக்கை 201,600 (100,800 + 100,800 + 201,600 ) உயிர் இனங்கள் .
இதில் மனித உயிரினம் தோராயமாக 37,800 மில்லியன்கள் என்ற கணக்கில் அதாவது 37.8 பில்லியன்கள் (201600 ÷ 4= 50400 ÷ 4 x 3 = 37800) என்ற அளவில் இருக்கும் .
அப்படி படைக்கப்பட்ட உயிரினங்களில் எத்தனை உயிரினங்கள் மீண்டும் பிறப்பு எடுத்து அடுத்த யுகத்திற்கு செல்கின்றன?
கலி யுகம்
துவாபர யுகத்தைத் தொடர்ந்து வந்தது கடைசி யுகமான கலி யுகம். அதன் ஆயுள் 432,000 வருடங்கள். இதன் கணக்கு என்ன? துவாபர யுகத்தில் இருந்த மொத்த 302,400 மில்லியன் உயிரினங்களில் 100,800 மில்லியன் உயிரினங்களே கலி யுகத்தில் பிறப்பு எடுக்க முடியும் . அது எப்படி?
கலி யுகத்தின் ஆயுள் 432,000 வருடங்கள் என்றால் அது எத்தனை தேவ வருடங்கள் ஆகும்?
432,000 ÷ 360 = 1200 தேவ வருடங்கள்.
ஒவ்வொரு தேவ வருடத்திலும் பிரும்மா படைத்தது 84 லட்ஷ உயிரினங்கள் என்றால் 1200 தேவ வருடங்களில் கலி யுகத்தில் அவர் படைத்து இருக்க வேண்டிய உயிர்களின் அளவு 1200 x x 84 = 100,800,000,000 பிறவிகள் அதாவது 100,800 மில்லியன் என ஆகின்றது. ஆகவே துவாபர யுகத்தில் இருந்த 201,600 மில்லியன் உயிரினங்கள் அனைத்தும் அங்கு செல்லமுடியாது என்பதே உண்மை.
துவாபர யுகத்தில் இருந்த 201,600 மில்லியன் உயிர் இனங்களில் 100,800 மில்லியன் உயிர் இனங்கள் மட்டும் பிறப்பையும் இறப்பையும் வைத்துக் கொண்டு கலி யுகத்திற்குள் நுழையும். அப்போது சத்ய யுகத்தின் 100,800 மில்லியன் ஆவிகள், திரேதா யுகத்தின் 100,800 மில்லியன் மற்றும் துவாபர யுகத்தின் 100,800 என மூன்று யுகங்களின் பிறப்பு எடுக்க முடியாத 302,400 (100,800 + 100,800 + 100 ,800 = 302,400 ) உயிர் இனங்கள் மேல் உலக விண்ணிலே சென்று ஆவிகளாக சுற்றிக் கொண்டு அடுத்த சத்ய யுகத்தில் பிறப்பு எடுக்கும் வரை காற்றுப் போல சுற்றிக் கொண்டு இருக்கும்.
கருடப் புராணக் கணக்கின்படி மனிதர்களும் பாலூட்டும் பிராணிகளும் கால் பங்கு எனும்போது கலி யுகத்தில் உள்ள மனித-பாலூட்டும் பிராணிகளின் ஜீவன்களின் எண்ணிக்கை 18,900 மில்லியன் (100800 ÷ 4 =25200 ÷ 4 x 3 = 18900 ) என்ற அளவில் இருக்கும். மனிதர்களின் எண்ணிக்கை சத்ய யுகத்தில் கூறப்பட்டு உள்ளதைப் போன்றக் கணக்கின்படி கலி உலக முடிவில் மக்களின் எண்ணிக்கை 18 அல்லது 19 பில்லியன் என்ற அளவில் இருக்க வேண்டும்.
தற்போதைய கணக்கின்படி உலகின் மொத்த ஜனத்தொகை 7 அல்லது 8 பில்லியன் என்ற அளவை எட்டி உள்ளது என்கிறார்கள். அடுத்த நூறு ஆண்டுகளில் அது 18 அல்லது 19 பில்லியன் அளவை எட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணக்கு போட்டு உள்ளார்கள். இந்தக் கணக்கை தற்போது ஏன் கூற வேண்டி உள்ளது என்றால் பிரும்மனின் கணக்கும் நடப்பு நிலைக் கணக்கும் அநேகமாக ஒன்றாகவே உள்ளது என்பதைக் காட்டத்தான்.
ஆகவே கலி யுகத்தின் நிர்ணயிக்கப்பட்ட அளவான 19 பில்லியன் அளவை எட்டும்போது புராண நம்பிக்கைகளின்படி கலிகாலம் முடிந்து (உலகம் அழிவு ) மற்றொரு சத்ய யுகம் மீண்டும் பிறக்குமா ? அது நடக்காது. காரணம் முதலிலேயே கூறப்பட்டு உள்ளது போல கலி யுகத்திலும் பிறப்பு எடுக்கும் மனித ஜீவன்கள் எண்பது, நூறு, நூற்றி இருபது என பல்வேறு ஆயுட்களைக் கொண்டு பிறந்து விட்டு மரணம் அடைந்தப் பின் அந்தந்த யுகங்களிலேயே மீண்டும் மீண்டும் புதுப் புது பிறவி எடுக்கும். அப்போது அவை மனித ஜென்மம் எடுக்கும் என்றோ, மிருக ஜென்மம் எடுக்கும் என்றோ கூற முடியாது. அவை வேறு பிராணிகளாகவும் பிறப்பு எடுக்கலாம், அல்லது மனித ஜென்மமாகவும் பிறப்பு எடுக்கலாம். ஆகவே கலியுகத்தின் நிர்ணயிக்கப்பட்டுள்ள மனிதர்களின் அளவை மட்டுமே மனதில் கொண்டு யுகத்தின் முடிவை எதிர்பார்க்க முடியாது. அனைத்து உயிரினங்களின் அளவையும் எட்டும்போதுதான் கலி யுகம் முடிவுக்கு வரும்.
தற்போது உள்ள மனித உயிர்களின் கணக்கின்படி கலி யுகத்தின் மொத்த மனித உயிர்களின் 19 மில்லியன் எண்ணிக்கையில் நாம் தற்போது ஏழு அல்லது எட்டு பில்லியனை மட்டுமே எட்டி உள்ளோம். ஆகவே இதைக் கொண்டே நாம் பாதி கலி யுகத்தைதான் கடந்து உள்ளோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆகவே புராணக் கணக்கின்படி கலி யுகம் முடிய இன்னும் 201,000 வருடங்கள் உள்ளன.
உண்மையிலேயே நடப்பது கலி யுகமா என்று கூட கூற முடியாத நிலைமை. மகாபாரத யுத்தம் நடந்தது துவாபர யுகம் என்றும் அது முடிந்து கிருஷ்ணரும் மரணம் அடைந்தப் பின் அவர் குலத்தினரும் மடிய அதனுடன் துவாபர யுகம் முடிந்து விட்டதாகவும் நம்புகிறார்கள். மகாபாரத யுத்தம் நடந்தது பத்து அல்லது இருபதாயிரம் வருடங்களுக்கு முன்னர் என்றால் அதற்குப் பின் வந்துள்ள கலி யுகத்தின் ஆயுளில் பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் வருடங்கள் மட்டுமே கழிந்து இருக்க முடியும். அதன்படிப் பார்த்தாலும் கூட கலி யுகம் முடிய இன்னமும் பாதி ஆயுள் உள்ளது.
ஆகவே இப்போதைக்கு உலகம் அழிய வாய்ப்பே இல்லை.பிரும்மனின் படைப்பின் தத்துவம்தான் என்னே!!

No comments:

Post a Comment