jaga flash news

Monday 24 September 2012

ம் உடலுக்கு ஒரு நல்ல குணம் உண்டு. எப்போதுமே எச்சரிக்கை கொடுக்காமல் திடீர் என்று பிரேக் டவுன் ஆகி அது தவிக்கவிடுவது இல்லை. மாறாக நம்முடைய அலட்சியமும் சலிப்பும் அவநம்பிக்கையும்தான் பல உபாதைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.
நமது உடல்நலம் குறித்த விஷயத்தில் நாம் முக்கியமாக 6 தவறுகளைச் செய்கிறோம். அவற்றை விரிவாக - விளக்கமாக அலசுகிறார்கள் மருத்துவர்கள்.
1நோய் அறிகுறிகளைப் புறக்கணிப்பது
''45 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் தலைவலி தாங்க முடியவில்லை என்று எங்களிடம் வந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவருக்குத் தலைவலி. அதற்காகத் தலைவலி மாத்திரைகளை வாங்கித் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்ததால், கடைசியில் மன அழுத்தத்துக்கு ஆளாகிவிட்டார். அவருடைய தலைவலிக்கான காரணத்தை ஆராய்ந்தபோது, ஒரு வருடமாக அவரது உடலில், ஹார்மோன் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஆரம்ப நிலையிலேயே தலைவலி ஏன் வருகிறது என்று மருத்துவரிடம் ஆலோசனை செய்திருந்தால், அவருக்கு இந்தப் பிரச்னையே ஏற்பட்டிருக்காது' என்று ஆரம்பித்தார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் தேன்மொழி.
'நோய்க்கான அறிகுறிகளை எச்சரிக்கை மணிகளாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்தே நோய்கள் வரஇருப்பதைப் புரிந்துகொண்டு மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போய்விடுவதுதான் புத்திசாலித்தனம். நடுத்தர வயதைத் தாண்டிய நபர்களுக்கு அடிக்கடித் தலைசுற்றல் ஏற்பட்டால், உயர் ரத்த அழுத்தத்துக்கான சமிக்ஞையாக அது இருக்கக்கூடும்.
குழந்தைகளுக்கு விட்டுவிட்டுக் காய்ச்சல் வந்தால், காய்ச்சல் மருந்தை மட்டும் நாள் கணக்கில் கொடுப்பது தவறு. உடனடியாக மருத்துவரிடம் காட்டுவதுதான் நல்லது. மஞ்சள் காமாலை என்பது கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கும். அதிகப்படியான படபடப்பு, வியர்த்தல் போன்றவை இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கான அறிகுறிகள். ஒரு துளி நீரைப் பருகினாலும் குமட்டல் மற்றும் வாந்தி வந்தால், அது ஜீரணக் கோளாறு மற்றும் வயிறு இயல்பான நிலையில் இல்லாமல் இருப்பதற்கான அடையாளங்கள். விடாமல் தொடரும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை தவிர, தோல் நோய்க்கும் ஆளாகும் நபர்கள் ஹெச்..வி. பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இப்படி அறிகுறிகளை வைத்தே நோய் தீவிரத்தன்மையை எட்டுவதற்குள் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது பல்வேறு பிரச்னைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்'' என்று எச்சரிக்கிறார் மருத்துவர் தேன்மொழி.
 2 சுய மருத்துவம்
டாக்டர் ஃபீஸை மிச்சம் செய்கிறேன் பேர்வழி என்று பலர் தங்கள் உடம்பையே ஓர் ஆராய்ச்சிக் கூடமாக மாற்றிக்கொண்டு சுய வைத்தியம் செய்துகொள்வார்கள். இந்த மாதிரியான நபர்கள் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவது குறித்துப் பேசினார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் முத்தமிழ் வி.டி.ராஜேஷ்.
''எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதன் தன்மைக்கு ஏற்பவே மருத்துவர்கள் மருந்து கொடுப்பார்கள். நோய் தீவிரமாக இருந்தால், கூடுதல் அளவு கொடுப்போம்; இல்லாவிட்டால், குறைவாகக் கொடுப்போம். ஒரு சிலர், இன்றைக்கு கொடுத்த மருந்துகளைப் பல மாதங்கள் கழித்து மீண்டும் அதே அறிகுறிகள் தென்படும்போதும் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அது அந்த நோயைக் குணமாக்காது. என்னிடம் நாடித்துடிப்பு குறைந்த நிலையில் ஒரு குழந்தையைக் கொண்டுவந்தார்கள். விசாரித்தபோது அந்தக் குழந்தைக்குக் காய்ச்சல் வந்திருக்கிறது என்பதும் உடனே சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டைக் கொண்டுபோய்க் கொடுத்து அதே மருந்துகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது. மூன்று நாட்களாகியும் காய்ச்சல் குறையவில்லை. குழந்தை மிகவும் பலவீனமாகி நாடித்துடிப்பும் மிகக் குறைந்து ஆபத்தான நிலையில் இருந்தபோது என்னிடம் வந்தார்கள். உடனே அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்துப் பரிசோதித்துப் பார்த்ததில், அந்தக் குழந்தைக்கு நிமோனியா பாதிப்பு இருப்பதைக் கண்டறிய முடிந்தது. அதனால்தான் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்குக் கொடுத்திருந்த மாத்திரைகளை அவர்கள் கொடுத்தபோது, காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் நோயின் தன்மை தீவிரமாகி ஆபத்தான நிலைமைக்கு வந்துவிட்டது குழந்தை. இப்படிப் பல சமயங்களில் கடுமையான விளைவுகளை உருவாக்கிவிடக் கூடியது சுய மருத்துவம்.''  
3 பாதி வைத்தியம்
''இது நம் சமூகத்தில் ஏராளமானவர்கள் செய்யும் தவறு. ஒரு நோய் முழுமையாகக் குணம் அடையும் முன்பே மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துகளைப் பாதியில் நிறுத்திவிடுவது. நெல்லைக்கு அருகில் உள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தில் இருந்து ஒரு சிறுவனை என்னிடம் சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். அவனுக்கு டைஃபாய்ட் இருந்தது. உரிய மருந்துகளை எழுதிக் கொடுத்தேன். ஆனால், முழுமையாக அவனுக்கு மருந்தைக் கொடுக்காமல் பாதியிலேயே மருந்தை நிறுத்திவிட்டார்கள். சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் அதே சிறுவன் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு மறுபடியும் டைஃபாய்ட். அவனது பெற்றோரிடம் விசாரித்தேன். அவர்கள், 'பையனுக்குக் காய்ச்சல் குணமானதால் சில நாட்களிலேயே மாத்திரை கொடுப்பதை நிறுத்திட்டோம்என்றார்கள். அதனால்தான் அவனுக்கு மறுபடியும் அதே நோய் பாதித்து இருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னேன். தவிர, இந்த முறை நான் கொடுத்த மாத்திரைகள் எதுவுமே அவனுக்கு வேலை செய்யவில்லை. காரணம் முதல் முறை டைஃபாய்ட் வந்தபோது அவனுக்கு கொடுத்த மாத்திரைகளோடு எப்படிப் போரிடுவது என்பதை நோய்க் கிருமிகள் தெரிந்துகொண்டுவிட்டன. அதனால் நோய் குணமாகவில்லை. ஆகையால், அவனுக்குக் கூடுதல் சக்தி மிக்க மருந்துகளைக் கொடுக்க வேண்டி இருந்தது. இது வலிந்து நாமே உருவாக்கிக்கொள்ளும் ஆபத்து. இப்படிச் சிகிச்சை அளிக்கும்போது, சில நேரங்களில் பக்கவிளைவுகள் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. அதனால், மருத்துவர் சொல்லும் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்வது மட்டும்தான் இந்த மாதிரியான ஆபத்துகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி.
##~##

நாம் கொடுக்கிற மருந்தைச் சிலர் முழுமையாகச் சாப்பிடுவது இல்லை. மருத்துவர்கள் பத்து மாத்திரைகளும் இரண்டு பாட்டில் சிரப்பும் எழுதி இருந்தால், அதில் சரிபாதியை மட்டுமே மெடிக்கல் ஸ்டோரில் வாங்குபவர்கள், 'எப்படி இருக்குன்னு பார்த்துட்டு மீதியை வாங்கிக்கலாம்என்று சமாதானம் சொல்லிக்கொள்வார்கள். எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதனை முழுமையாகக் குணப்படுத்திவிட வேண்டும் என்பதற்காகவே மருத்துவர்கள் குறிப்பிட்ட அளவு மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்கள். அந்த மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கியதும் நோய்க்கான கிருமிகள் உடலுக்குள் பதுங்க ஆரம்பிக்கும். உடனே, 'நமக்குத்தான் நோய் குணமாகிடுச்சே... இனி எதுக்கு மருந்து மாத்திரை?’ என நினைத்து மருந்துகள் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டால் - நமது உடம்பிலேயே ஒரே ஒரு கிருமி தங்கிவிட்டாலும் - அது பல்கிப் பெருகி மீண்டும் நோயைக் கொண்டுவந்துவிடும். கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தினாலும்கூட கொசுக்கள் கடிக்கிறதே ஏன்? அதற்கான எதிர்ப்பு சக்தி அதிகமாகிவிட்டதுதான் காரணம். அதேபோல, நாம் கொடுத்த மருந்தின் தாக்குதலில் இருந்து தப்பிய கிருமிகள் முன்பைவிடவும் வேகமாகவும் தீவிரமாகவும் இருக்கும். அதனால் சாதாரண மருந்துக்குக் கட்டுப்படாது' என்றார் மருத்துவர் முத்தமிழ் வி.டி.ராஜேஷ்.
 4 மருத்துவரிடம் பேசத் தயங்குதல்
''தங்களுக்கு உள்ள பிரச்னைகளை ஒளிவு மறைவு இல்லாமல் மருத்துவரிடம் எடுத்துச்சொல்வது ஒரு நோயாளியின் கடமை. அதேபோல, தனது சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது ஒரு நோயாளியின் உரிமை. ஆனால், பெரும்பாலும், மருத்துவரை அணுகும்போது தன் உடல் குறைபாட்டைச் சொல்லக்கூட பல நோயாளிகள் பயப்படுவார்கள்'' என்கிறார் கரூரைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ். 'நம் உடலில் ஏதோ குறைபாடு... அதைச் சரிசெய்தால்தான் இயல்புநிலைக்குத் திரும்புவோம் என்ற கட்டாயத்துக்கு வந்துவிட்டோம். அப்படி இருக்கும்போது மருத்துவரை அணுகும் ஒருவர் தனது குறைகளை முழுமையாகச் சொல்ல வேண்டும். டாக்டரிடமும் வக்கீலிடமும் பொய் சொல்லக் கூடாது என்று இதற்காகத்தான் நமது பெரியவர்கள் சொல்லிவைத்தார்கள்.  
டாக்டரிடம் முழு உண்மையையும் சொன்னால்தான், உங்களை டாக்டரால் சரியான முறையில் பரிசோதனை செய்து பார்க்க முடியும். அதன் இறுதியில்தான் என்ன குறைபாடு என்று கண்டறிந்து அதைத் சரிசெய்வதற்கான வழிகளை அவரால் சொல்ல முடியும். உங்கள் உடலில் வியாதியின் தாக்கத்தை நீங்கள்தான் அனுபவிக்கிறீர்கள். எனவே உங்கள் உடலில் உள்ள பாதிப்புகளை வெளிப்படையாகச் சொல்ல பயமோ, கூச்சமோ, தயக்கமோ வேண்டாம். மறந்துபோகாமல் இருப்பதற்காகப் பரிசோதனைக்கு வரும்போது உங்களுடைய குறைகள், சந்தேகங்கள் முழுவதையும் ஒரு வெள்ளைத் தாளில் எழுதிக்கொண்டுவந்து மருத்துவரிடம் கேட்டீர்கள் என்றால் முழுத் தெளிவுடன் சொல்லலாம்'' என்கிறார் மருத்துவர் ரமேஷ்.
 5 மருத்துவ ஆவணங்களைப் பராமரிக்கத் தவறுதல்
''நீங்கள் மருத்துவரைச் சந்தித்தபோது அவர் எழுதிக்கொடுத்த மருந்து சீட்டு, எக்ஸ்-ரே ரிப்போர்ட் என ஒவ்வொரு மருத்துவ ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்களா? இல்லை எனில், எதிர்காலத்தில் சரியாக நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. 'சாதாரண மருந்துச் சீட்டு முதல், .சி.ஜி., ரத்த அழுத்தப் பரிசோதனை முடிவு வரை அனைத்தையும் பாதுகாத்து வைத்திருப்பது அவசியம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் சரவணன்.  ''மருத்துவ ஆவணங்களை வைத்திருக்கவில்லை எனில், அது உங்களைச் சிக்கலான சூழ்நிலையில் ஆழ்த்திவிடும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட .சி.ஜி. ரிப்போர்ட்டைக் கையில் வைத்திருக்கவில்லை எனில், தற்போது என்ன மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை எதைக்கொண்டும் மருத்துவரால் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. நீங்கள் தொடர் மருத்துவப் பரிசோதனைக்கு உங்களை உட்படுத்தவில்லை எனில், உங்களுக்கு உள்ள நோயும் எந்தத் தடையுமின்றி சுதந்திரமாக வளரும். எனவே, ஒவ்வொரு மருத்துவ ஆவணத்தையும் பாதுகாப்பது அவசியம். இது உங்களை நல்ல நோயாளி என்று சொல்வதற்காக அல்ல, உங்களுக்குச் சரியான சிகிச்சையைச் சரியான நேரத்தில் கிடைக்க உதவும்.''
 6 மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருத்தல்
''சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த பிரபல ஆஸ்துமா - அலர்ஜி மருத்துவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் கூறிய தகவல் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பெண்மணி தன்னுடைய குழந்தைக்கு மூச்சுத்திணறல் என்று சிகிச்சைக்காக வந்திருக்கிறார். மருத்துவரும் குழந்தையைப் பரிசோதனை செய்து ஆஸ்துமா இருப்பதைக் கண்டறிந்து இருக்கிறார். குழந்தையின் தாயால் இந்த செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 'வேறு மருத்துவரிடம் காண்பித்துக்கொள்கிறேன்என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார். இப்படி இரண்டு மருத்துவர்களை மாற்றி மாற்றிப் பார்த்ததில், கடைசியில் மூன்று விதமான சிகிச்சை, மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. இதனால் அந்தப் பெண்மணி குழம்பிப்போய், முதலில் பார்த்த டாக்டரிடமே மீண்டும் வந்திருக்கிறார். மெடிக்கல் விஷயத்தில் ஆல்டர்நேட் ஒப்பீனியன் பெறுவது தவறு இல்லை. ஆனால், அதற்காக மருத்துவரை மாற்றிக்கொண்டே இருப்பதும் சரியானது அல்ல. இப்படி மருத்துவரை மாற்றிக்கொண்டிருக்கும்போது, புதிய மருத்துவருக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது. இதைத் தவிர்க்க முதல் கட்டத்திலேயே உங்கள் மீது அக்கறையுள்ள, திறமையான, நல்ல மருத்துவரைத் தேர்ந்தெடுங்கள். அப்படி ஒருவரைக் கண்டறிந்தால், தொடர்ந்து அவரிடமே சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான் உங்கள் உடல் நலத்துக்கு ஆரோக்கியம்

No comments:

Post a Comment