jaga flash news

Monday 18 May 2015

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை

தமிழ்நாட்டில் பழமையான ஆலயங்கள் 39,000 இருக்கின்றன;இதில் சரிபாதி சிவாலயங்களாக இருக்கின்றன;1990 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இருக்கும் 220 நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் வணிகம்,உற்பத்தி,சேவைத் தொழில்கள் அனைத்தும் சர்வதேசமயமாகத் துவங்கின; நமது பாரததேசம் உலகமயமாக்கல் என்ற ஒப்பந்தத்தில் 1.1.1995 அன்று கையெழுத்திட்டது;அதன் விளைவாக,குடும்பம் என்ற அமைப்பு வலுவிழக்கத் துவங்கியது;ஏனெனில்,ஒவ்வொருவருமே பேச்சு,மூச்சு,சிந்தனை முழுவதும் எப்படியெல்லாம் பணம் சம்பாதிப்பது? என்ற நோக்கத்தின்படியே செயல்படத் துவங்கிவிட்டனர்;விளைவு? நமது எதிர்கால சந்ததியினருக்கு நமது பண்பாடு பற்றிய அடிப்படை ஞானம் கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கிறது;இணையமும்,கணினிபற்றிய அடிப்படை ஞானம் இல்லாதவர்களை கற்காலத்தைச் சேர்ந்தவரைப் போல எண்ணத் துவங்கிவிட்டனர்;அப்பா 40 வருடம் அரசுப்பணி புரிந்து தனது 58 வயதில் பெற்ற சம்பளத்தை அவரது மகன்/ள் 21 வயதில் பெறத் துவங்கினான்/ள்.
சிறு சிறு நகரங்களும் செல்வச் செழிப்பைப் பெறத் துவங்கின;ஆனால்,அதே சமயம் செல்வ வளம் மிக்கவர்களுக்கும்,வறியவர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கத் துவங்கியது;ஜனநாயக நாடான நமது நாடு முதலாளித்துவ வடிவம் எடுக்கத் துவங்கியது;அன்பு,பாசம்,விட்டுகொடுத்தல்,குடும்ப ஒற்றுமைக்கு தன்னையே தியாகம் செய்தல்,குழந்தைகளோடு நேரம் செலழித்து அவர்களின் ஆளுமைத் திறனை வளர்த்தல்,அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்த்தல்,அவர்களது நட்பு வட்டத்தைக் கண்காணித்தல் போன்றவை குறையத் துவங்கின;அவர்களது மனம் சார்ந்த சிக்கல்களை காது கொடுத்து கேட்க பெற்றோர்களுக்கே நேரம் இல்லை; ஆனால்,ஓடி ஓடி சம்பாதிப்பது அவர்களுக்காகவே!!!
தனது முதுமைக் காலத்தில் தன்னையும்,குடும்ப அமைப்பையும் நிர்வகிக்கும் விதமாக அவர்களுக்குப் பயிற்றுவிக்க நேரம் இல்லை;
இதனால்,இந்த 19 ஆண்டுகளில்(1995 முதல் 2014 வரை) “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; எனக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிட்டன;இனி எனக்கு எதுவும் வேண்டாம்” என்று நம்மில் எத்தனை பேர்கள் சொல்லியிருக்கிறார்கள்?
இதற்கு முதல் காரணம் நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய பாரம்பரிய நடைமுறைகளை இறுதிவரையிலும் பின்பற்றாததே காரணம்;ஏழு வயதிற்குள் நமது குழந்தைகளை அடிக்கடி பழமையான ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லாவிட்டால்,அதன்பிறகு அவர்களுக்கு பக்தி உணர்வை ஊட்டுவது முடியாத காரியமாகிவிடுகிறது.
பெற்றோர்,குரு,குழந்தைகள்,இறைவன்=இவர்களில் யாராவது ஒருவரை சந்திக்கச் சென்றாலும் வெறும் கையோடு போய் பார்க்கக் கூடாது என்பது நமது இந்து தர்மத்தின் சம்பிரதாயம்;
பெரும்பாலான சிவாலயங்களுக்குள் பசுமடம் அமைக்கப்பட்டிருக்கிறது;எனவே,வாழைப்பழங்கள் அல்லது அகத்திக்கீரை வாங்கிச் செல்வது அவசியம்;ஆண்கள் எனில்,மேலாடையைத் தவிர்த்துவிட்டு,சிவாலயத்தினுள் நுழைவது அவசியம்;ஒவ்வொரு நாளுமே மஞ்சள் நிற வேட்டியை அணிந்து கொண்டு செல்வது நன்று;
கோவில் வாசலில் துவார(வாசல்) பாலகராக விநாயகர் அருள்பாலித்துக் கொண்டு இருப்பார்;அவரை மனப்பூர்வமாக வழிபட்டுவிட்டு,கோவிலினுள் நுழைவது முறை;
விநாயகரை வழிபடும் போது,மனதினுள் அவரது காயத்ரி மந்திரத்தையோ அல்லது அகவலையோ மனதிற்குள் பாடுவது அவசியம்;
ஓம் ஏக தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோஹ் தந்தி ப்ரதோசதயாத்
என்பது விநாயகர் காயத்ரி மந்திரம் ஆகும்;
ஓம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
என்பது விநாயகர் அகவல் ஆகும்;
இதுவும் ஜபிக்க இயலாதவர்கள் ஓம் கணபதியே போற்றி என்று ஒன்பது முறை ஜபித்தாலும் போதுமானது;
கோவிலின் கோபுரத்திற்கு நேர் கீழாக வரும் போது,அங்கிருந்து மூலவரின் உருவம் தெரியும்;அந்த கணத்தில் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை பனிரெண்டுமுறை ஜபித்துவிட்டு,கொடிமரத்தின் அருகில் வரவேண்டும்;கொடி மரத்துக்கு அருகில் இருக்கும் பலிபீடத்தை வந்தடைய வேண்டும்;அங்கே வடக்கு நோக்கி விழுந்து கும்பிட வேண்டும்;இப்படிச் செய்வதால் நம்மிடம் அதுவரை இருந்து வந்த அனைத்து தீய எண்ணங்களையும் அந்த பலிபீடத்தில் பலியிடுவதாக ஐதீகம்;பலிபீடத்தில் விழுந்து வணங்கியப் பின்னர்,ஒருபோதும் கோவிலுக்குள்ளே எந்த இடத்திலும் விழுந்து வணங்கக் கூடாது;மேலும்,சிவாலயத்தினுள் இறைவனைத்தவிர,வேறு எவரையும் வணங்கக் கூடாது;அனாவசியமான பேச்சு,செல்போன் பேச்சு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;
சிவனை வழிபடுவதற்கு முறைப்படி நந்திபகவானிடம் அனுமதி கோர வேண்டும்;நந்தி பகவானை வழிபடுவதன் மூலமாக இந்த அனுமதி நமக்கு கிடைத்துவிட்டதாக அர்த்தம்;
ஓம் ஏகதத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோஹ் நந்தி ப்ரசோதயாத் என்பது நந்திபகவானின் காயத்ரி மந்திரம் ஆகும்;
பிறகு,மூலவராக இருக்கும் சிவனது இருப்பிடத்திற்குள் செல்ல வேண்டும்;ஏதாவது ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே நினைக்க வேண்டும்;நினைத்துவிட்டு,ஓம்சிவசக்திஓம்,ஓம்சிவசக்திஓம் என்ற சிவமந்திரத்தை இங்கிருந்து ஜபிக்கத் துவங்க வேண்டும்;சிவனை வழிபட்டுவிட்டு,பக்கவாட்டு வாசல் வழியாகவே அம்பாள் சன்னதிக்குச் செல்ல வேண்டும்;
இதே போல,அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்டிருக்கும் நந்திபகவானை வழிபட்டப் பின்னரே,அம்மனை தரிசிக்கச் செல்ல வேண்டும்;இங்கேயும் மனதிற்குள் ஓம்சிவசக்திஓம்,ஓம்சிவசக்திஓம் என்று தொடர்ந்து ஜபித்துக் கொண்டே நமது கோரிக்கையை வேண்ட வேண்டும்;சிவனிடம் என்ன கோரிக்கையை வேண்டினோமோ,அதே கோரிக்கையை அம்பாளிடமும் வேண்ட வேண்டும்;
சிவன் சன்னதியில் தரப்படும் விபூதியையும்,அம்பாள் சன்னதியில் தரப்படும் குங்குமத்தையும் பத்திரமாக நமது வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்;பலர் சிவன் சொத்து குல நாசம் என்ற பழமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டு,அர்ச்சகர்/சிவாச்சாரியார் கொடுக்கும் விபூதி,குங்குமத்தை அங்கேயே கொட்டிவிட்டு வந்துவிடுகின்றனர்;இது தவறு மட்டுமல்ல;மகத்தான பாவமும் கூட!
பழமையான சிவாலயத்தில் தரப்படும் விபூதி,குங்குமத்தை விட்டுக் கொண்டு வந்து சேமித்துக் கொண்டே இருந்தால்,நமக்கும்,நமது குடும்பத்தாருக்கும் யாராலும் எந்த ஒரு மறைமுகத்தீங்கையும் செய்யமுடியாது;(நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தால்!)ஏனெனில்,இவைகளில் அளவற்ற தெய்வீக சக்தியும்,பாஸிடிவ் எனர்ஜியும் இருப்பதை இன்றைய நவீன அதீத உளவியில் விஞ்ஞானம் பலமுறை நிரூபித்திருக்கிறது;
மூலவர்களின் சன்னதிகளைக் கடந்து பக்கவாட்டுப்பகுதிக்கு வரும் போது சைவ அடியார்களின் 64 வரிசையைக் காணலாம்;இவர்கள் ஒவ்வொருவரின் முன்பாகவும் நின்று மூன்று முறை ஓம்சிவசக்திஓம் என்று ஜபிக்க வேண்டும்;இதன் முடிவில் அமைக்கப்பட்டிருக்கும் விநாயகரின் பெயர் செவிசாய்க்கும் விநாயகர் ஆகும்;இவர் முன்பாக ஒன்பது முறை தோப்புக் கரணம் போட்டுவிட்டு,இவரை ஒருமுறை வலம் வர வேண்டும்;
மூலவர் இருக்கும் சன்னதியின் பின்பக்கத்தைக் கடக்கும்போது,லிங்கோத்பவர் சன்னதி அமைக்கப்பட்டிருக்கும்;இந்த லிங்கோத்பவர் சன்னதிக்கு எதிரே அமைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கம் நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மிகவும் முக்கியமான சிவலிங்கம் ஆகும்.இந்த சிவலிங்கத்தை சில நிமிடங்கள் வரையிலும் வழிபட்டால் மட்டுமே நமக்கு கலியின் துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்;நமது மன அமைதி ஒவ்வொரு நாளும் வலுப்பெற்றுக் கொண்டே இருக்கும்;அதன் பிறகு,லிங்கோத்பவரை வழிபட வேண்டும்;படைக்கும் கடவுளான பிரம்மா அன்னப்பறவை வடிவில் சிவனின் முடியைத் தேடி பறப்பதை இந்த லிங்கோத்பவரின் மேல்பகுதியிலும்,காக்கும் கடவுளான மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து,சிவனின் அடியைத் தேடிச் செல்வதை இந்த லிங்கோத்பவரின் கீழ்ப்பகுதியிலும் செதுக்கியிருப்பதைக் காணலாம்;இந்த சம்பவம் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு,அண்ணாமலையில் நிகழ்ந்திருக்கிறது;அயன்,மால் இருவருக்குமே இறைவன் அந்த அண்ணாமலையாரே என்பதை இந்த லிங்கோத்பவர் சிற்பம் உணர்த்துகிறது;
கோவிலின் உட்பகுதிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் சண்டேஸ்வரர் சன்னதிக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும்;அவரது சன்னதியில் நின்று கொண்டு மெதுவாக கை தட்ட வேண்டும்;சிவாலயத்திற்கு வந்தமைக்கான பலன்களைத் தரும் பொறுப்பு இவரையேச் சேரும்;இப்படிக் கைத்தட்டினால் தான்,சிவாலயத்திற்கு நாம் வந்திருப்பதை சண்டேசுவரர் பதிவு செய்வார்;க்ஷேத்திரபாலகராகிய பைரவர் சன்னதிக்கு வரும் வரை இந்த மந்திரத்தை மட்டுமே ஜபிக்க வேண்டும்;
மூலவ சன்னதிகளின் பின்புறத்தைக் கடக்கும் போது சிறிதும் பெரிதுமாக ஏராளமான சிவலிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன;அவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்தர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டவை;
சிவசக்தியின் கலப்பாக நாம் வாழ்ந்து வரும் உலகம் இயங்கிவருவதால்,ஓம்சிவசக்திஓம் ஜபிப்பதன் மூலமாக தம்பதியரின் மனக்கசப்பு அடியோடு நீங்கிவிடும்;ஒற்றுமை ஏற்படும்;
பைரவப் பெருமானின் சன்னதிக்கு வந்தடைந்ததும்,பைரவப் பெருமானின் காயத்ரி மந்திரம் அல்லது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ 8 முறை ஜபிக்க வேண்டும்;
பிறகு,உள்பிரகாரத்தைச் சுற்றி வர வேண்டும்;அப்போதும் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;பெரும்பாலான ஆலயங்களில் உள்பிரகாரத்திலோ அல்லது வெளிப்பிரகாரத்திலோ ஸ்தல விருட்சம் வளர்ந்திருக்கும்;அதன் அருகில் வரும் போது நமது கோரிக்கையை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்;இதன் மூலமாக நமது கோரிக்கை விரைவில் நிறைவேறும்.கோவிலை விட்டு வெளியேறும் முன்பு கோவிலின் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகே செல்ல வேண்டும்;ஏனெனில்,பல கோடி ஆண்டுகளாக சிவ வழிபாடு செய்து வரும் பல சிவபக்தர்கள் கோவிலுக்குள் சூட்சுமமாக இருப்பார்கள்;கோவிலின் அனைத்துப் பிரகாரங்களையும் சுற்றிவிட்டு,கோவிலுக்குள் உட்காராமல் வீட்டுக்குப் புறப்பட்டால் அவர்களும் நம்மோடு நமது வீட்டுக்கு சூட்சுமமாக வரத் துவங்குவர்;அது முறையல்ல;
கோவில் பசுமடத்தில் இருக்கும் பசுக்களுக்கு கையோடு கொண்டு சென்ற பழங்களை அதற்குத் தானமாகத் தர வேண்டும்;மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்ற ஒரு சில கோவில்களில் பசுமடத்தின் வாசலிலேயே அகத்திக்கீரை விற்பனை செய்து வருகிறார்கள்;ஒவ்வொரு முறை செல்லும் போதும் அகத்திக்கீரை வாங்கி பசுக்களுக்குத் தருவது நமது சோகங்களை நீக்கிடக் காரணமாக அமையும்;
அதே போல,நமது வீட்டில் இருந்து மூன்று கி.மீ.தூரத்திற்குள் பழமையான சிவாலயம் இருந்தால்,தினமும் அல்லது வாரம் ஒருமுறை அல்லது நமக்கு எப்போதெல்லாம் ஓய்வு நேரம் இருக்குமோ அப்போதெல்லாம் நடந்தே இந்த சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும்;தனியாகப் புறப்பட்டு,சிவவழிபாடு செய்துவிட்டு தனியாகவே வீடு திரும்புவதால் முழு சிவநிறைவு கிடைக்கும்;
அதே போல,நமது வீட்டில் இருந்து புறப்பட்டு சிவாலயம் சென்றுவிட்டு,வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும் நேராக நமது வீட்டை வந்தடைய வேண்டும்;ஒவ்வொரு பழமையான சிவாலயமும் நமக்கு அளவற்ற ஆத்ம சக்தியைத் தரக்கூடியவை;நமது கர்மவினைகளை படிப்படியாகவும்,முழுமையாகவும் நீக்கக் கூடியவை;
சிவாலயத்தினுள் அல்லது சிவாலயத்தின் வாசலில் நாம் செய்யும் ஒவ்வொரு தானமும் ஏராளமான புண்ணியத்தை நமக்கு அருளக் கூடியவை;
தொடர்ந்து 45 நாட்கள் சிவாலயம் சென்று வந்தாலே சிவனம்சமாகவே நாம் மாறிவிடுவோம்;தொடர்ந்து பத்து ஆண்டுகள் தினமும் சிவாலயம் சென்று வந்தால் குருவின் வடிவில் சிவ தரிசனம் நமக்குக் கிட்டும்;
ஒரே ஒரு சனிப்பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;
ஒரே ஒரு திங்கட்கிழமை பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து நான்கு தலைமுறையாக நமது வீட்டு பெண்மணிகளின் சோகங்கள் படிப்படியாக நீங்கும்;நமது மனதினுள் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் நீங்கும்;மன உறுதி பலப்படும்;நமது சிந்தனைத் திறன் பல மடங்கு அதிகரிக்கும்;நமது சுபாவத்துக்கு ஏற்ற ஆன்மீக குருவை நாம் சந்திக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;
ஒரே ஒரு சாதாரண பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து ஓராண்டு சிவாலயம் சென்று வந்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;
இன்றும் பல சிவாலயங்களில் சாதாரண ஊழியர்கள் வடிவில் அந்தக் கோவிலின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் பணிபுரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்;தொடர்ந்து ஓராண்டு வரை சிவாலயம் செல்பவர்களுக்கு அந்த ஆலயத்தின் மகிமையை உணரும் சந்தர்ப்பம் அமையும்.
உலகில் எப்போதெல்லாம் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைகிறதோ,அப்போதெல்லாம் பூமியில் தண்ணீர்ப்பஞ்சம் குறிப்பாக குடிநீர்ப்பஞ்சம் உண்டாகும் என்பது சிவனடியார்களின் அனுபவ உண்மை;

No comments:

Post a Comment